Thursday, August 22, 2013

இருமொழியில் ஓர் இடிமுழக்கம்!

இளையராஜா இசையமைத்த திருவாசகத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழா. ‘திருவாசகம்’ பற்றி #வைகோ பேசுகிறார். பெருங்கூட்டம் தன்னை மறந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது. அன்று மேடையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் விசிலடித்து மகிழ்கிறார். அதன் பின்னர் பேசிய இளையராஜா, நீங்கள் ஏன் அரசியலில் இருக்கிறீர்கள். இவ்வளவு ஞானத்துடன் பேசும் நீங்கள் இலக்கியத் தின் பக்கம் வந்துவிடக்கூடாதா? என்று கேட்கிறார்.வைகோ அரசியலைத் தாண்டி எல்லா தரப்பையும் கவர்ந்த பேச்சாற்றல் படைத்தவர்.

திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணம் மேடை தான் என்பதை தமிழக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க., தமிழகத்தின் பட்டிதொட்டி பட்டினக்கரை யெல்லாம் கிளைபரப்பி வளர்ந்ததற்கு அண்ணாவின் பேச்சாற்றல்தான் காரணம்.

தன்னைப் போலவே மக்களை ஈர்த்த பேச்சாற்றல் கொண்ட தம்பியர் படை வரிசையை அண்ணா உருவாக்கி இருந்தார்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர்
அன்பழகன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், நாஞ்சில் கி.மனோகரன், தத்துவமேதை டி.கே.சீனிவாசன் போன்ற சொல்லாற்றல் மிக்க தலைவர்க ளால் திமுக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967 இல் ஆட்சிக்கு வந்தது.

திராவிட இயக்கத்தின் இந்தப் பாரம்பரியம் பட்டுப்போகாமல் அறிஞர் அண்ணா கலைஞருக்குப் பிறகு தலை சிறந்த சொற்பொழிவாளராகவும், மக்கள் கூட்டத் தை ஈர்க்கும் தலைவராகவும் வைகோ இருக்கிறார்.

கலிங்கப்பட்டியில் கால்சட்டைப் பருவத்தில் எட்டாவது வயதிலேயே மேடை ஏறியவர் வைகோ.

மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ண தாஸ்காந்தி, பூமிதான இயக்க சர்வோத யத் தலைவர் களுடன் கலிங்கப்பட்டி வந்தபோது, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வயலி மாணிக்கவாசகம், கவிஞர் சட்டமுத்தன் இருவரும் வைகோவை மேடை ஏற்றினர்.மக்கள் வெள்ளத்துக்கு முன்னால் கடையேழு வள்ளல்களின் ஈகை குறித்துப் பேசச் செய்தனர்.

பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் படிக்கும்போதும், சென்னை
மாநிலக்கல்லூரி, சட்டக்கல்லூரியில்மாணவராக இருக்கும்போதும் வைகோ
சிறந்த பேச்சாளராக உருவெடுத்தார்.

மாநிலக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலைப் படிக்கும்போது 1964 இல்
கோகலே மண்டபத்தில் சென்னை அனைத்துக் கல்லூரி தமிழ்மன்றத்தினர்
நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் அறிஞர் அண்ணாவுக்கு முன்னால் உரை ஆற்றினார். அவர் பாராட்டையும் பெற்றார்.

1968 இல் சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது நடந்த பேச்சுப் போட்டியில் Ends Justity the Means, முடிவுகள் வழிகளை நியாயப்படுத்து கின்றன என்ற தலைப் பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை வைகோவுக்கு முதல் பரிசைப் பெற்றுத் தந்தது.

வைகோவின் பேச்சு, கணீரென்ற குரலுடன் முரசு அறைவது போன்று இருக்
கும். கம்பீரமான தோற்றப் பொலிவு. கழுத்தில் தொங்கும் ட்ரேட் மார்க் கறுப்பு சால்வை. அதனை இழுந்து வைத்துக்கொண்டு அவர் பேசத் தொடங்கினால் வீறுகொண்ட முழக்கம்தான்.

எந்த ஊருக்குப் பேசச் சென்றாலும் அந்த ஊரைப் பற்றிய குறிப்புகள் வரலாற் றுச் செய்திகளை முதலில் அவர் அழகாக எடுத்துரைக்கும் போது சொந்த ஊரின் பெருமையை அறியாத மக்கள் தம் ஊரின் பெருமையைக் கேட்டும்
மகிழ்ந்து போவர். பேசத் தொடங்கும் போதே மக்களின் கவனத்தை ஈர்த்து
விடுவார். அடுத்து உரையாற்றுகின்ற தேதியில் நடந்த வரலாற்றுச் சம்பவங் களை நினைவூட்டுவார்.

வைகோவின் உரையில் உலக சரித்திர நிகழ்வுகள் இடையிடையே வந்து
கொண்டே இருக்கும். கேட்போர்க்கு கிளர்ச்சியூட்டக் கூடிய வகையில் வர லாற்றுச் செய்திகளை அவர் எடுத்து உரைப்பார். கிரேக்கத்து மகா அலெக்
சாண்டர், மாவீரன் நெப்போலியன், இத்தாலியின் கரிபால்டி, அடிமை விலங் கொடித்த ஆபிரகாம் லிங்கன் போன்றோர் வாழ்க்கையில் நடந்த சரித்திர முக் கியத்துவம் வாய்ந்த செய்திகளை அவர் மேடையில் எடுத்துரைக்கும் பாணி யே அலாதியானது.

ஸ்பார்ட்டாவின் வீரர்கள் களம் கண்டபாணியை விளக்கும்போது தொண்டர் கள் நாடி நரம்புகள் முறுக்கேறும். நேதாஜியின் வீர வரலாற்றை எடுத்துக்கூறி ஈழ விடுதலைப் போராட்டத்தையும், புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதப்
போராட்டத்தையும் இணைத்து அவர் வாதங்களை அடுக்குவார்.

1990 இல் திருச்சி மாநில மாநாட்டில் “உலகைக் குலுக்கிய புரட்சிகள்” என்ற
தலைப்பில் வைகோ ஆற்றிய உரை, அவரை திமுக தலைவர் கலைஞருக்கு
அடுத்த இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தது. அன்று அவர் பேசவந்தபோது,
உணவு இடைவேளைக்கு வெளியே வந்திருந்த தொண்டர்கள் அப்படியே
போட்டுவிட்டு மாநாட்டுத் திடலுக்குள் ஓடி வந்தார்கள்.

அதற்குப் பிறகு நடந்த திமுக மாநாடுகள் அனைத்திலும் வைகோவின் பேச்சு தான் கருணாநிதிக்கு அடுத்தபடியாக தொண்டர்களின் ஆரவார வரவேற்பைப்
பெற்றது. தமிழில் எப்படி ஓங்கிய குரலில் குமுறும் எரிமலை என முழங்கு கிறாரோ அது போலவே ஆங்கிலத்திலும் பேசும் ஆற்றல் வைகோவுக்கு உண்டு. திராவிட இயக்கத்தில் அண்ணா ஒருவருக்குத் தான் இருமொழி களி லும் மேடையில் அழகாகப்பேசும் ஆற்றல் இருந்தது.அண்ணாவின் இத்தகைய ஆற்றல் கைவரப் பெற்றவராக வைகோ இருப்பதால்தான் நாடாளுமன்றத்தில்
புகழ் பெற்றார்.

தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டிப் பேசும்போதும், சங்க இலக்கியப்
பாடல்களை எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் அவர் எடுத்து வைப்பார். பெரும் பாலும் ‘திருக்குறளை’ தமது பேச்சில் வைகோ அதிகம் எடுத்துக் காட்டுவார். பாவேந்தர் பாரதிதாசன், பாரதியின் பாடல்கள் அனைத்தும் வைகோவுக்கு அத்துப்படி.

சிதம்பரம் சேக்கிழார் விழாவிலும், சேலம் மார்கழி பெருவிழாவிலும் வைகோ
ஆற்றிய உரைகள் புகழ்பெற்றவை. ஈரோடு புத்தகக் கண்காட்சியில் “எழுத்து
எனும் கருவறை” என்ற தலைப்பிலும், சென்னை புத்தகக் கண்காட்சியில்
“சொல்லாற்றல்” என்ற தலைப்பிலும் வைகோ ஆற்றிய உரைகள் பெரும்
வரவேற்பைப் பெற்றன.

கோவை வழக்கறிஞர் மன்றத்திலும், தஞ்சை வழக்கறிஞர் மன்றத்திலும் ‘என்
பார்வையில் அண்ணல் அம்பேத்கர்’, ‘சுய நிர்ணய உரிமையும் பொது வாக்கெ டுப்பும்’ ஆகிய தலைப்புகளில் வைகோ ஆற்றிய உரைகள் வரலாற்றின் பக்கங் களில் எந்நாளும் நிலைத்து இருக்கும். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ புதினங்கள் பற்றிய வைகோவின் உரை களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

மேடைகளில் வைகோ ஒரு தேர்ந்த வாள்வீரர். அது அவருக்கு எதிரிகளை
எதிர்கொள்ளும் போர்க்களம்.

அந்திமழை- ஆகஸ்டு 1-31

மு.செந்திலதிபன்

No comments:

Post a Comment