Wednesday, August 21, 2013

நேர்மையின் இமயம்! பகுதி 3

புலிகளைப் போன்றவர்களை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்றவர் ஜீவா!

யாரை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் தெரியுமா ஜீவா? புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

இங்கே சுருக்கு எழுத்தாளர்கள் வந்து இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஒற்றர் கள் வந்து இருக்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டுப் போகிறபோது ஜீவாவின் பெருமைகளில் மனமெல்லாம் பூரித்துத்தான் போவார்கள்.அவர்கள் நமது நண்பர்கள் தான். ஆனாலும் கடமை இருக்கிறது அல்லவா? வைகோ அல்லவா பேசுகிறான் பூதப்பாண்டியில்.

நேற்று சென்னையில் பேசியதற்கு இன்று என்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப் பட்டதாக மாலையில் செய்தி வந்தது.நேற்று அண்ணன் பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாசும், ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் தலைநகர்சென்னையில் உரையாற்றியதற்கு, எங்கள்மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக மாலை ஒரு செய்தி வந்தது.

அந்தச் செய்தியைச் செவியில் வாங்கி இதயத்தில் சுமந்துகொண்டுதான் நான் பூதப்பாண்டிக்கு வந்து இருக்கிறேன்.

பூதப்பாண்டியில் இவன் என்ன பேசப்போகிறான்? என்று பதிவு செய்கின்ற கடமையைச் செய்வதற்கு அவர்கள் வந்து இருக்கிறார்கள். பாருங்கள் பூதப் பாண்டியில் போய் விடுதலைப்புலிகளை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ள
வேண்டும் என்று வைகோ பேசினான் என்று சொல்லலாம். நான் சொல்ல வில்லை. ஜீவா சொல்கிறார்,புலிகளைத் தான் நண்பர்களாக ஏற்றுக்கொள் என்று.

அவர் எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் இயற்றிய கவிதையை எழுதுகிறார். யாரை நீ நண்பனாகக் கொள்ளவேண்டும் தெரியுமா?

வரப்பு ஓரங்களில் சின்னஞ்சிறு வளைகளில் பதுங்கிக் கிடக்கின்றதே எலிகள், அவை பிறர் பொருளைக் களவாடுகின்றவை. பிறர் உழைப்பிலே சேமித்து வைத்து இருக்கின்ற தானியங்களைத் திருடிக் கொண்டுபோய், விளைந்த கதிர்களைத் திருடிக்கொண்டுபோய், புதுமணப் பெண் போலத் தலைசாய்ந்து நிற்கக்கூடிய நெற்கதிர்களைத் திருடிக்கொண்டு போய் அவற்றின் பொந்தில் ஒளித்து வைத்துக் கொள்ளக்கூடிய திருட்டுக் குணம் படைத்த எலிகளை நீ நண்பனாகக் கொள்ளாதே.

அப்படியானால் யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்? அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்கு உள்ளே ஒரு குகை.அங்கே உறுமியவாறு வருகிறது ஒரு வேங்
கைப் புலி.அது பசியோடு வருகிறது. வேட்டையாடுவதற்காக வருகிறது. வேங்கைப் புலி எங்கே செல்லும்?வேட்டைக்குச் செல்லும். ஒரு தாய் வீட்டு வாசலில் நிற்கிறாள். புலவன் ஒருவன் வருகிறான். தாயே உன் பிள்ளை எங்கே அம்மா? உன் புதல்வன் எங்கே அம்மா? என்று தாயிடம் புலவன் கேட்கிறான்.

சிற்றினத் தூண்பற்றி நின்மகன்
யாண்டுளன் என வினவுதியாயின்
யாண்டுளன் என அறியேன் ஆயினும்
புலி சோர்ந்து யோயிய கல்வளைபோல
ஈன்றவயிறே இதுவே தோன்றுவன் மாதோ
போர்க்களத்தானே

அவன் எங்கே சென்றான் என்று எனக்குத் தெரியாது.அந்தத் தாய் சொல்கிறாள்.

என் பிள்ளை எங்கே சென்றான் என்று தெரியாது. ஆனால், புலி எங்குபோகும்? வேட்டைக்குப் போகும்.இந்தக் குகை என்று தன் வயிற்றைத் தொட்டுக் காண் பித்துக் கொண்டே சொல்லுகிறாள், அந்தப் புறநானூற்றுத்தாய். இந்தக் குகை யில்தான் அந்தப் புலி கிடந்தது. புலி வேட்டைக்குப் போவதைப்போல என்
பிள்ளை எங்காவது ஏதாவது யுத்தகளத்தில், வேலும் வாளும் உராய்கின்ற போர்க்களத்தில் போர் செய்து கொண்டு இருப்பான், அங்கே சென்று பார்’ என் கிறாள்.இதைச் சொன்னவள் ஒரு புறநானூற்றுத் தாய்.

அதைப்போல, இந்தப் புலி பசியோடு வருகிறபோது எதிரே ஒரு காட்டுப் பன்றி வருகிறது. இந்த வேங்கைப்புலி அடித்து வீழ்த்துகிறது. சரியான பசி. சாப்பிட வேண்டும் அல்லவா? மேலும் கீழும் பார்க்கிறது. வலது பக்கம் இடது பக்கம் பார்க்கிறது. சாப்பிடவில்லை. போய் விடுகிறது.என்ன காரணம்? ஜீவாதான் சொல்கிறார். இந்தப் புலி காட்டுப்பன்றியை அடித்தபோது அந்தக் காட்டுப் பன்றி,வலது பக்கத்தில் விழாமல் இடது பக்கத்தில் விழுந்து விட்டது.

இடதுபக்கத்தில் விழுந்த ஒரு விலங்கைப் புசிப்பது தன் வீரத்துக்கு இழுக்கு
என்று அந்தப் பசியோடும்,பட்டினியோடும் மீண்டும் குகைக்குப் போய்விட்டது.
மறுநாள் வரை காத்து இருக்கிறது. பொழுது விடிந்தது. காடு அதிர மீண்டும் முழங்கியது அந்தப் புலி. மதம்பிடித்த யானை எதிரே வருகிறது. யானையின் மீது பாய்கிறது இந்த வேங்கைப்புலி. மத்த கஜத்தைப் பிளக்கிறது அந்த யானை யை வலது பக்கத்தில் வீழ்த்துகிறது. வலது பக்கத்தில் விழுந்த யானையை அது புசிக்கிறது.

அப்படிப்பட்ட புலிகளைப் போன்றவர்களை மட்டுமே நீ நண்பனாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஜீவா.

அநேகமாக இதற்கு வழக்குப் போடுவது என்றால் ஜீவானந்தத்தின் மீதுதான் நீங்கள் வழக்குப் போடவேண்டும். ஒருவேளை ஜீவானந்தத்தையே அழைத்துக் கொண்டு வந்தாலும், ஜீவா அவர்கள் சொல்வார்கள். என்னைக் கைது செய்ய வேண்டாம்; சோழன் நல்லுருத்திரன் என்று ஒரு மன்னன் இருந்தான், அவ னைக் கைது செய்யுங்கள்’ என்பார்.

இலக்கியத்தை எடுத்துச் சொல்கிறபோதுகூட அவருடைய உள்ளத்தில் எப்ப டிப் பட்ட உணர்வுகள் இருந்தன என்பதை நான் பார்க்கிறேன். இலக்கியவாதி யினுடைய கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும்? அவர் சொல்கிறார். பொன்னீலன் அவர்களே, ஒரு வணிகனின் கண்ணோட்டம், ஒரு பொறியாள னின் கண்ணோட்டம், இப்படி ஒவ்வொருவரின் கண்ணோட்டம். ஒவ்வொன் றும் வேறுபட்டது.

அழகாகச் சொல்கிறார் ஜீவா. இன்றைக்கு வானத்தில் நிலவைப் பார்க்க முடி யாது. நட்சத்திரங்களையும் பார்க்க முடியாது. கரிய மேகங்கள் கூடி இருக் கின்றன.கருமஞ்சுக்கூட்டம் சூழ்ந்து இருக்கிறது.

ஒரு பெளர்ணமி நாளில் நிலவைப் பார்க்கிறபோது வானநூல் ஆராய்ச்சியாளர் கள், கிரகங்கள் சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சுற்றுகிறது. சந்திரன் இவ் வளவு தொலைவில் இருக்கிற நிலப்பரப்பு’ என்றெல்லாம் அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால், தாய் தன் பிள்ளையிடம் அம்புலி யைக் காட்டுகிறாள், கதை சொல்கிறாள். சின்னப்பிள்ளைகள் நிலவைப்
பார்த்தவாறு சாதத்தைச் சாப்பிடுகின்றன.

நல்ல நிலாக்காலம்; நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கின்றன.ஒரு கவிஞன் சொல் லுகிறான்.

வெள்ளித் தட்டில் சோற்றைக் கொண்டு வந்து தாய் பிள்ளைக்குத் தருகிறாள். அந்தப் பிள்ளை காலால் அந்தத் தட்டை எட்டி உதைக்கிறான். வெள்ளித்தட்டு
ஒருபக்கத்தில் விழுகிறது. பருக்கைகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த வெள்ளித் தட்டு தான் ஊர்ந்து வருகின்ற நிலவு. சிதறிய பருக்கைகள்தான் வானத்து நட் சத்திரங்கள்’ என்று வருணிக்கிறான்.

இன்னொரு கவிஞன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்,

மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம்
நாளும் புண்மீதில் அன்புபாய்ச்சும் புலையர்
செல்வராம்
இதைத்தன் கண்மீதில் பகலெல்லாம்
கண்டுகண்டு அந்திக்குப்பின் விண்மீனாய்க்
கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி

இது பாரதிதாசன்.

இந்த நாட்டில் நடைபெறும் கொடுமைகள்,முதலாளிகளின் கொடுமைகள், செல்வந்தர்களின் கொடுமைகள், பணம் படைத்தோர் கொடுமைகள். உழைக் கின்றவன் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன், ஏழை எளியவன், இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைக்கிறவன், அவனுடைய நிலைமையைக் கண்டு
கொதித்துப்போனதால், அவன் படும் துன்பத்தைக்கண்டு, அவரது உழைப்பை உறிஞ்சி, அவனை ஓடாகத் தேய்த்துவிட்ட அந்த உழைப்பை உறிஞ்சி உறிஞ் சிக் கொழுத்துப்போன முதலாளிகள் செழிக்கிறபோது, அந்தப் பாடுபடும் பாட் டாளி படுகின்ற துயரத்தைக் கண்டு ஏற்பட்ட வேதனை கொப்பளங்களாக வெடித்துவிட்டது வானத்தில்;அவைதான் அந்த விண்மீன்கள்; அவைதான் அந்த நட்சத்திரங்கள்.

என்ன அற்புதமான கற்பனை! என்ன அவனுடைய உணர்ச்சி! அவர்தான் பாவேந்தர் பாரதிதாசன்.

அதைப்போல ஜீவா எழுதுகிறார். ‘அம்புலியைக் காட்டியவாறு பிள்ளைக்கு அமுது ஊட்டுகிறாள்.வானநூல் ஆராய்ச்சியாளனுக்கு அது ஒரு கோளாகத்
தெரிகிறது. தாவர நூல் ஆராய்ச்சியாளன்,செடிகொடிகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து, மகரந்தம் எங்கே படருகிறது? வேர் எங்கே ஊன்றுகிறது?
என்று ஆராய்ந்து கொண்டு இருப்பான்.

ஆனால், வோர்ட்ஸ்வொர்த் சொல்கிறான்: என் தாயின் கல்லறையில் படர்ந்து உள்ள செடிகொடிகளை,தாவரநூல் ஆராய்ச்சி செய்வதற்காக என் மனம் இடம்
கொடுக்குமா? என்று கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் சொல்கிறான்.

அடுத்து பேசுகிறார்,

ஒரு உடற்கூறு வல்லார் குழந்தையை வர்ணிப்பது என்றால் என்ன சொல்ல வேண்டும்? குழந்தை என்பது என்ன? ‘ஒன்றரை அடி உயரம், 20 அங்குலம் சுற்றளவு, பதின்மூன்று ராத்தல் எடை உள்ள ஒரு சதைப்பிண்டம்’ இது தான் ஒரு உடம்பு என்று உடற்கூறு ஆராய்ச்சியாளன் கூறுவான்.

ஜீவா கூறுகிறார், பெற்ற தாய் எப்படி கூறுவாள்?

சீரங்கம் ஆடி திருப்பாற்கடலாடி
மாமாங்கம் ஆடி மாசிக் கடலாடி
தைப்பூசம் ஆடி தவம் செய்து பெற்ற கண்ணே!

என அன்பு சொரிந்து தாய் சொல்வாள்.

இப்படிக் குழந்தையைத் தாய் பார்ப்பதற்கும் உடற்கூறு வல்லுநர் பார்ப்பதற்கும் எப்படி இருக்கிறது? தாய்க்குப் பிள்ளை, அவள்தான் எல்லாம்.

ஜீவா கூறு வதைக் கேளுங்கள்.

சைக்கிள் வண்டியை ஒரு பொறிஞர் பார்த்தால், ஒரு சக்கரத்தின் பின் மற் றொரு சக்கரம் ஒழுங்காய்ச் சுழன்று செல்வதையும், அதன் அமைப்பையும் கண்டு ஆராயத் தொடங்குவார். ஆனால், கவிமணி அப்படியா செய்கிறார்?
அல்ல, அவர்

“அக்காளும் தங்கையும்போல் அவைபோகும் அழகைப் பார்”

என்று அதைப்பார்த்துக் கொண்டே சொக்கி நின்று விடுகிறார்.

சாதாரண நிலையில் ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது அவள் மானிடப் பிறப்பின் சின்னமாகத் தோன்றுகிறாள். ஆனால், மனம் உணர்ச்சிவசப்பட்டுக்
கிடக்கும்பொழுது அதேபெண்,

ஞானத் திருவடிவாய்
இன்ப மதுக்குடமாய்
கானமதுகரமாய்
கண்நிறைந்த பேரழகாய்

காட்சியளிக்கிறாள். எனவே, இலக்கியத்தின் உயிர் உணர்ச்சிதான்.

கலைஞன் ‘யான்’ ‘எனது’ என்ற அகங்காரத்தைக் கரைத்து, கலை உருவில் மயமாகி விடுகிறபொழுது, ஒரு துளி ஒரு கடலாகி விடுகிறது.ஒரு பாரசீகப் புலவனின் உவமானத்தால் இதை விளக்கிக் கூற விரும்புகிறேன்.

ஒரு நாள் இரவில் சில வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றுகூடின, அவை விளக்கின் ஒளி பொருந்திய,சுவாலையோடு ஐக்கியமாகிவிட வேட்கை கொண்டன.
ஆனால், தீக்கொழுந்தின் தன்மையை யாராவது சென்று பார்த்துவந்தால் நல் லது என்று முடிவு கட்டின. உடனே ஒரு வண்ணத்துப் பூச்சி, எதிர் வீட்டில் இருந்த விளக்கருகே சென்றுவிட்டுத் திரும்பி வந்தது. தான் கண்ட விளக்கின் ஒளியை அது விரித்துக் கூறத் தொடங்கிற்று. ஆனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளின் தலைவனான பூச்சி, ‘விளக்கின் சுவாலை பற்றிய உண்மையை ஞானத்தை அது பெறவில்லை’ என்று சொல்லிவிட்டது.

எனவே, மீண்டும் மற்றொரு பூச்சி சென்றது.அது விளக்குச் சுவாலையின் வெப் பம் தன் மீதுபடும் அளவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தது.அதனுடைய சுவாலையைப் பற்றிய விளக்கமும் திருப்தியற்றதாகவே இருந்தது.

ஆகவே, மூன்றாவதாக வேறொரு வண்ணத்துப் பூச்சி சென்றது. அது விளக் கின் சுடரின் உள்ளேயே நுழைந்துவிட்டது. அதனால் அதன் உடலும் எரிந்து
நெருப்பாக ஆயிற்று. அந்தப் பூச்சியும் நெருப்பும் ஒன்றாயின.

இதைக் கண்டதும், தலைவனான வண்ணத்துப் பூச்சி கூறிற்று. “அந்த வண் ணத்துப் பூச்சிதான், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டது. தன் வாழ் வை அறவே கரைத்துவிடுகிற பொழுதுதான், லட்சியத்தை அடைய முடியும். ‘யான்’, ‘எனது’ என்று செருக்கை கரைக்கும் வரையில் அன்பின் தகுதியை நீ அறிய முடியாது”

பரீதுத்தீன் அத்தார் மேற்கூறிய உவமானத்தில் காட்டியுள்ளபடி, தன்னைக் கரைத்துக் காணும் காட்சி பெறாவரையில், இலட்சிய வாழ்வில் வெற்றிபெற
முடியாது.

இந்தத் தியாக உணர்வுடன்தான் ஈழத்தமிழர் துயர்கண்டு நெஞ்சுவெடித்த தமி ழர்கள் 14 பேர் தீக்குளித்தார்கள். உயிர்களாக கொடுத்தார்கள்.நம் சொந்தத் தமிழ் ஈழ உறவுகள் மடிகிறபோது, பச்சிளங் குழந்தைகள் சாகிறபோது, அந்தக் கொடு மையைக் கண்டு மனம் கொதித்துப்போய், அதைத் தடுக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறபோது, நம் உயிரை இங்கே இந்த வேள்வியில் ஆகுதி செய்வோம் என்று தருகிறார்களே, ‘வண்ணத்துப் பூச்சியின் கதையைச் சொல் கின்ற ஜீவா, எந்த இலட்சியத்துக்காக வாழுகிறானோ அந்த இலட்சியத்துக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு ஒருவன் தயாராக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட ஜீவா அவர்கள், 1952 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர்.கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு மாபெரும் தலைவர். சட்ட மன்றத்தில் அவர் மிகச் சிறப்பாகப் பேசக்கூடியவர்.சட்டமன்றத்தில் உரை யாற்றுகின்ற நேரத்தில் ஒருநாள், சபையில் சுவாரஸ்யமான விவாதம். அப் பொழுது ராஜாஜி முதல் அமைச்சர்.

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.

No comments:

Post a Comment