Sunday, September 22, 2013

அணுமின் உலைகள் எதற்கு?

அணுமின் உலைகள் எதற்கு?


அலைகடலும் காற்றும் கதிரொளியும் இருக்கையிலே...


“மின்சாரமும் சோஷலிச சிந்தனையைக் கொண்ட அரசும் மனித இனத்தின்
வளர்ச்சிக்கு அவசியம்” என்று சோவியத் விடுதலையின்போது லெனின் குறிப் பிட்டார்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப்பயன்பாட்டிற்கும் தொழிற்சாலைகள்இயங் கவும், மின்சக்தி இன்றியமையாதது. வாழ்க்கைத் தரமும் தொழில்வளமும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதிகரிக்கும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய பல வழிகளில் மின் உற்பத்தியை அதிகமாக்க முயற்சிகள் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. வாகனங்களைக் கூடமின்சக்தியால் இயக்குவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாகி, சோதனை ஓட்டங்களும் வெற்றி பெற்று, சில நிறுவனங்கள் உற்பத்தியிலும்கூட இறங்கிவிட்டன.

நமது நாடு, விடுதலை பெற்ற ஆண்டில் 1500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே
உற்பத்தி செய்தது. தற்போது 65 ஆண்டுகள் கழித்து சுமார் 2,12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றது.

ஒரு நாடு பொருளாதார வல்லரசு வரிசையில் இடம்பெறுவதற்கு,அந்நாட்டின் மின் உற்பத்தியும், மின் நுகர்வும் அதிகமாக இருக்க வேண்டும்.நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு தனிநபர் மின்நுகர்வு 800 யூனிட்டு களாகும். ஆனால், அய் ரோப்பாவில் தனிநபர் மின்நுகர்வு 7,000 யூனிட்டு களாகவும், அமெரிக்காவில் 13,000 யூனிட்டுகளாகவும் உள்ளது. உயர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைக்கான மின் தேவையைப் பூர்த்தி செய்ய, அடுத்த 20 ஆண்டுகளில் 7.50 முதல் 8 இலட்சம் மெகா வாட் அளவிற்கு மின் உற்பத்தி
செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

நாட்டில் தற்பொழுது மொத்தம் உற்பத்தியாகும் 2.12 இலட்சம் மெகாவாட் மின் சாரத்தில், சுமார் 1,41,713 மெகாவாட் (66.92 சதம்) அனல் மின் நிலையங்கள் மூல மும்; சுமார் 39,416 மெகா வாட் (18.61 சதம்) புனல் மின் நிலையங்கள் மூலமும்; சுமார் 25.856 மெகாவாட் (12.21 சதம்) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலமும் பெறு கிறோம். அணுமின் நிலையங்கள் மூலம் கிடைப்பது வெறும் 4,780 மெகாவாட் அதாவது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 2.26 சதம் மட்டுமே.எனவே, மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அணுமின் நிலையங்கள் அவசியம் என்பது மிகத் தவறானதவிர்க்கப்பட வேண்டிய கருத்தாகும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நம் நாட்டில் ஏராளமாக இருக்கும்போது, அழிவைக்
கொண்டுவந்த செர்னோபில், மூன்று மைல் தீவு, புகுசிமா அணுஉலைகளின்
விபத்துகளையும் கொடுமையான விளைவுகளையும் கண்கூடாகப் பார்த்த
பின்பு, எதற்காக நாம் அணுமின் நிலையங்களை ஏற்க வேண்டும்?

காற்றிலும், கடல் அலைகளிலும்,கதிரொளிகளிலும் நம் கனவுகள் மெய்ப்படும் அளவிற்கு மின்சக்தியை உற்பத்தி செய்ய இயலும். புதுப்பிக்கத் தக்க எரிசக்திக் கான வளம் நம் நாட்டில் மண்டிக் கிடக்கின்றது.பல நாடுகள் இம்மாற்று முறை மின் உற்பத்தியில் புதுமைகள் பல படைத்துள்ளபோது,நம்மிடம் உள்ள வளத் தை நாம் பயன்படுத்தத் தவறிவிடக்கூடாது.

சூரிய சக்தி

சூரிய சக்தி, புதுப்பிக்கக் கூடிய ஆற்றலின் தாய் என அழைக்கப்படுகிறது. நம்
நாட்டில் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. ஆண்டு முழுவதும் தொடர்ந்து
கிடைக்கக் கூடிய, சுற்றுச் சூழலுக்கு உகந்த மின் ஆற்றலைத் தரவல்லது சூரிய ஒளி. 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய 20 முதல் 50 சதுர கி.மீ. நிலம் தேவைப்படுகிறது.சூரியனிலிருந்து ஒரு மணி நேரம் வெளிவரும் ஆற் றலானது, பூமியின் ஓராண்டிற்கான மின் தேவையைப்பூர்த்தி செய்ய வல்லது. நம் நாட்டில் மொத்தம் சுமார் 5000 டிரில்லியன் KWH சூரிய சக்தி ஆண்டொன் றுக்கு பூமியில் படுகின்றது. ஓராண்டில் வெயில் மூலம் நிலத்திற்குக் கிடைக் கும் ஆற்றலின்அளவு அனைத்து விதமான ஆற்றல்கள் மூலம் கிடைக்கும் அளவைவிட 15,000 மடங்கு அதிகம். அதுமட்டுமல்ல,இவ்வாற்றல் தொடர்ந்து 5 பில்லியன் ஆண்டுகளுக்குக் கிடைக்கும். ஒரு நாளில், நம் நாட்டில்ஒரு சதுர கி.மீ.பரப்பளவில் 5.8 Kwh மின்சக்தி பெற முடியும். இதில் ஒரு சிறு பகுதியைப்
பயன்படுத்தினாலே நாட்டின் தேவை பூர்த்தியாகிவிடுமாம்.

நம் நாட்டில் விடுதலைக்குப் பின், மின் தேவையைப் பற்றி திட்டமிட டி.டி. கோ சாம்பி மற்றும் ஹோமி பாபா ஆகிய இரு விஞ்ஞானிகளை பிரதமர் நேரு ஈடு படுத்தினார். நம் நாடு இயற்கையாக பூமத்திய ரேகையை ஒட்டி அமைந்திருப்ப தால் ஆண்டு முழுவதும் தடையின்றிக் கிடைக்கும் சூரிய ஒளியை மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் என்று கோசாம்பி தெரிவித்தார். ஆனால், ஹோமிபாபா மிக அதிக முதலீடு தேவைப்படும் ஆபத்து மிக்க அணு சக்தியைப் பயன்படுத்துவது தான் அதிகரிக்கும் மின் தேவைக்கு உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார். இறுதியில், பாபாவின் ஆலோசனைக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டது! பாபா, டாடா குடும்பத்தைச் சார்ந்தவராயிற்றே!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி
செய்யும் தொழில் நுட்பத்திற்கு மாறி வருகின்றன. கென்யா 2009 முதல் சூரிய
ஒளியைப் பயன்படுத்துகின்றது.பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் கட லோ ர மீனவர்களும், அர்ஜென்டினா மக்களும் பெருமளவில் சூரிய ஒளி மின்சக்தி யைப் பயன்படுத்துகின்றனர்.

புகுசிமா அணுஉலை விபத்துக்குப்பின் எட்டு அணுமின் நிலையங்களை மூடி
விட்டது மட்டுமின்றி, மீதமுள்ள வற்றையும் 2022 ஆம் ஆண்டிற்குள் மூடிவிட வும் திட்டமிட்டுள்ள ஜெர்மனி நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் மய்யத்தின் தலைவர் நார்பர்ட் அல்நோச், 20 அணுசக்தி நிலையங்கள் முழு வீச்சில் தயாரிக்கக் கூடிய 22 ஜிகா வாட் (ஜிகா வாட் 1000 மெகா வாட் ஆகும்) மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் 1 மணி நேரத்தில் தயாரித்து ஜெர்மனி உலக சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகில் வேறெந்த நாட்டிலும் சூரிய சக்தி மூலம் இவ்வளவு அதிகமான மின்சக்தி உற்பத்தி செய்யப்பட வில் லை. சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதில் ஜெர்மனிதான் முன்னிலை வகிக்கின்றது.

சகாரா பாலைவனத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு அய் ரோப்பா 450 பில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம்,ஜோத்பூருக்கு கிழக்கே 180 கி.மீ.தொலைவில் அமைந் துள்ள இடம் ஹானு. இந்தியாவிலேயே இப்பகுதியில் தான் அதிக அளவில் சூரிய வெப்பம் உள்ள இடம்.இதைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.75 கோடி செலவில் 6 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்து மராட்டிய மாநிலத்திற்கு
மின்சாரம் வழங்குகிறது. இங்கு நாள்தோறும் சராசரி சூரிய வெப்பம் 4 முதல் 7 Kwh கிடைக்கின்றது. மத்திய அரசு இங்கு கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது தனியார் நிறு வனங்களை யாவது ஊக்குவிக்க வேண்டும்.ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் உள்ள பிரம்ம குமாரிகள் தலைமையகத்தில் ஆயிரக் கணக்கான
மக்களுக்கு தினந்தோறும் சூரிய சக்தி மூலமே உணவு தயாரிக்கப் படுகிறதாம்.

2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தமிழகத்தின் மதுரைப் பகுதி
அதிக சூரிய வெப்பம் கிடைக்கும் நகரங்களில் ஒன்று எனக் கண்டறியப் பட் டுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரி நாள்
ஒன்றுக்கு 700 வாட் சக்தியும், அதிக பட்சமாக 1050 வாட் சக்தியும் கிடைப்ப தாகக் கண்டறியப் பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் எலசந் திரா கிராமத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் 2010 இல் அமைக்கப்பட்டது.3 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்த நிலையம் போன்று மதுரைப் பகுதியிலும் ஒரு நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால், மதுரைப் பகுதி பயனடையும்.

நம் நாடு பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் 8 மில்லியன் மெகாவாட் மின் சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

சூரியனிலிருந்து வெளிவரும் மொத்த ஆற்றலில் பூமி 1,73,000 பில்லியன் Kwh ஆற்றலைப் பெறுகின்றது.ஆனால், உலகம் பயன்படுத்திக்கொள்வது வெறும் 6 பில்லியன் Kwh மட்டுமே என்கிறது ஒரு செய்தி.

நியூயார்க், டோக்கியோ லண்டன் நகரங்களைப் பின்பற்றி நம் நாட்டிலும் 60 சூரிய ஒளி நகரங்கள் (Solar Cities)அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண் ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

காற்று

சூரிய ஒளியைப் போன்று காற்றும் நமக்கு இயற்கையின் அருட்கொடை ஆகும். இவை இரண்டிலிருந்தும் கிடைக்கும் மின்சார உற்பத்திக்கு தொடர் செலவுகள் இல்லை. பராமரிப்பு செலவுகள் மட்டுமே ஏற்படும்.

அமெரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸ் அண்ட் பெர்கிலி ஆய்வகம், இந்தியாவில் காற்று மின்சக்தி உற்பத்தித் திறன் 2 மில்லியன் மெகாவாட் எனத் தெரிவித்துள் ளது.இந்தியாவிலேயே அதிகமான காற்று கிடைக்கும் பகுதி மேற்குத் தொடர்ச் சிமலை, இந்துமாக் கடலைத் தொடும் கணவாய்ப் பகுதியாகும்.

ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள்அதிநவீன காற்றாலைகளைக் கண்டு பிடித்து
 உள்ளனர். குறைந்த பட்சம் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி னாலும் வருடத்திற்கு 18 ஆயிரம் முதல் 30 ஆயிரம் Kwh வரை மின்சாரம் தயா ரிக்க முடியும். இத்தகைய பசுமை மின்சாரத்தை முதன் முறையாக பாரத
வங்கி (State Bank of India) கோவையில் தனது பயன்பாட்டிற்கு அமைத்துள்ளது. இதே போன்று மேலும் பல நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

அண்மையில் இங்கிலாந்தில், கடற்கரை யோரக் காற்றாலைப் பண்ணை தொ டங்கப்பட்டது. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய காற்றாலைப் பண் ணை. 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து 5 இலட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் இப்பண்ணையை இங்கிலாந்து பிரதமர் மேவிட் கேமரூன் திறந்து வைத்தார். காற்றாலை மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வ தற்கு 50 முதல் 150 சதுர கிலோ மீட்டர் நிலம் தேவைப்படும்.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகள் காற்று மின்வாங்கி அமைத்து உதவிக்
கொள்கின்றன. காற்று அதிகமாக உள்ள காலத்தில் கூடுதலான காற்றாலை
மின்சாரத்தை டென்மார்க் நாடு, நார்வே,ஸ்வீடன் நாடுகளுக்கு வழங்குகிறது.
காற்று குறைவான காலத்தில் அந்நாடுகள் டென்மார்க் நாட்டிற்கு மின்சாரத் தைத் திருப்பி வழங்கு கின்றனவாம். டென்மார்க்கில் 1890 முதல் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்கா 1941 இல்தான் 1.25 மெகாவாட் உற்பத்தி செய்யும் காற்றாலையை ஒரு மலையில் அமைத்தது. ஜெர்மனி, டென்மார்க், ஸ்பெயின் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறிய நாடுகள். அவை இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது, நாம் ஏன் இதில் முறையான கவனம் செலுத்த வில்லை?

டென்மார்க் நாட்டில் 30,000க்கும் மேற்பட்டோர் காற்றாலை தொடர்பான தொழி லில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்,நம் நாட்டில் ஒரு மெகா வாட் காற்றாலை மின் சாரம் உற்பத்தி 80பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கக்கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசும் திட்டக்குழுவும் காற்றாலை மின்சார உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) எனும் பன் னாட்டு செய்தித் தாள் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் இந்துமாக் கடல் மற்றும் அரபிக்கடல் பரப்பிலிருந்து வீசும் காற்றின்வாட்டத்தில் அமைந்துள்ள 5 தெற்கு
மற்றும் மேற்கு மாநிலங்களில் 95 சத மின்திறனைப் பெற இயலும் என்கின் றனர் நிபுணர்கள். இப்பகுதி களில் கூடுதலாக காற்றாலைகள் அமைத்து இயற்கை வழங்கியுள்ள கொடையைப் பயன்படுத்தினால் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம். 

கடல்

நம் நாடு மூன்று பக்கமும் கடல்களால்சூழப்பட்டுள்ளது. கடல் அலை ஆற்றல்,
பொங்கு ஆற்றல், மேற்பகுதி வெப்ப ஆற்றல் ஆகியவற்றை எரிசக்தி ஆற்ற லாக மாற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நம் கடலில் காற்றாலை மூலம் 4,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய
முடியும். இராமேஸ்வரத்தின் வடக்குப் பகுதியில் கடலில் காற்றாலைகள் மூலம் 1000 மெகாவாட்டும், கன்னியாகுமரியின் தெற்குப் பகுதியில் 1000 மெகா வாட்டும் உற்பத்தி செய்ய முடியும் என ஸ்காட்லாந்து நிறுவனம் ஒன்று நடத் திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை முறையாக நிறைவேற்ற நட வடிக்கைகள் எடுத்தால், கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். தற் போது டென்மார்க்,இங்கிலாந்து நாடுகள் கடலுக்குள் காற்றாலைகள் அமைத் து மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. கடலின்கரைக்கு சில கி.மீ. தூரத்தில் ஆழ மான கடல் பகுதியில் காற்றாலைகள் அமைத்தும் அமெரிக்கா, ஜெர்மனி, வடக்கு ஐரோப்பிய நாடுகள் மின் உற்பத்தி செய்கின்றன.

நமது கடற்கரை நீளம் சுமார் 7,500 கிலோ மீட்டர்.ஆனால்,இம்முறைகளில் மின் சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை. முதன் முதலில் ஸ்வீடனில்தான் இத்தொழில் நுட்பத்தில் இயந்திரங்கள் 1990 இல் நிறுவப் பட்டன.

கடல் அலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் நார்வே,
போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜப்பான் நாடுகளில் உள்ளன. நம் நாட்டில் இத்தொ ழில் நுட்பம் மூலம் கிழக்கில் வங்கக் கடலில் சுந்தரவனக் கழிமுகப் பகுதி யிலும் மேற்கே காம்பே வளைகுடா மற்றும் கட்ச் பகுதிகளிலும் மின்சாரம்
தயாரிக்க இயலும் எனக் கண்டறியப் பட்டுள்ளது. சூரியன் மற்றும் நிலவின்
ஈர்ப்பு விசையில் கடல் மட்டத்தில் மாற்றங்கள் (Tides) ஏற்படுவதால், இதன் மூலமும் மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்களை ஆய்வு செய்ய வேண் டும்.

புவி வெப்ப ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் ஐஸ்லாந் து மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ளது.

கடல் வெப்பத்தை மின் சக்தியாக்குதல்,கடற்கரைக்கு சில மைல் தூரத்தில் கட லுக்குள் காற்றாலைகள் அமைத்தல்,கடல் அலைகளின் வேகத்தில் மின்சாரம்
தயாரித்தல் போன்ற தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கி இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கண்டு பிடிப்புகளுக்கு வழி காண வேண்டும்.

ஸ்காட்லாந்து நாட்டில்தான் தற்போது கடல் அலைகளிலிருந்து அதிகபட்ச மாக 240 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. சீனா, ரஷ்யா, பிரான்ஸ்,
இங்கிலாந்து, தென்கொரியா நாடுகளிடம் இத்திட்டம் உள்ளது.

போர்ச்சுகல், கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய அலை மின்
பூங்கா நிறுவியுள்ளது. பெலாமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அலைகளில்
மிதக்கும் கருவிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. குடுவைகள்
போன்ற கருவிகள் நீள வரிசையில் ஒன்றின்பின் ஒன்றாக இணைக்கப்பட்டு
கடலில் மிதக்க விடப்பட்டுள்ளன.

அலைகளின் ஏற்றத்தாழ்வு விசைக் கேற்ப, இக்கருவிகள் அசையும் போது
பாம்பு நகர்வது போன்று தோற்ற மளிக்கும். லத்தீன் மொழியில் பெலாமிஸ் என்றால் கடல் பாம்பு என்று பொருள். இக்கருவிகள் கடலில் பாம்புகள் போல் தோற்றமளிப்பதால் இப்பெயரை வைத்துள்ளனர்.போர்ச்சுகல் நாடு உலகத்தி லேயே மிகப் பெரிய காற்றாலைப் பண்ணைகளைக் கொண்டுள்ளது.

நீர் மின் உற்பத்தியை மும்மடங்காகவும், காற்று மின் உற்பத்தியை நான்கு
மடங்காகவும் உயர்த்தியுள்ளது. மெளரா எனும் நகரத்தின் அருகில் 45 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவவும் திட்டமிட்டுள் ளது.பின்லாந்து செல்லிடத் தொலைபேசி உற்பத்தியில் உலகிலேயே முதலி டம் வகிப்பது போல், போர்ச்சுகல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது என்கிறார், போர்ச்சுகல் பொருளாதார அமைச்சர் மனு வேல் பின்ஹோ.

கழிவுப் பொருட்கள் மூலம் மின்சாரம்

இயற்கை தரும் வளங்கள் மட்டுமல்ல,மனிதர்கள் மூலம் ஏற்படும் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகள், வீடுகள், கால்நடைகள் மூலம் கிடைக் கும் கழிவுகளை முறையாகப் பயன்படுத்த முயல வேண்டும். இந்தியாவின் நகர்ப்புறங்களில் 1.5 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுப் பொருள் சேர்கின்றது.
இதில் 10 சத திடக்கழிவுகளிலிருந்து மட்டும் எரிசக்தி உற்பத்தி செய்யப் படு கிறது. ஆனால், ஜப்பானில் 80 சதம்,சிங்கப்பூரில் 92 சதம் திடக்கழிவு எரிசக்தி
உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவில் டியான்ஜின் நகரத்தில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மிகப் பெரிய மின்நிலையம் நிறுவப்பட்டுள்ளது.தினமும் 2000 டன் கழிவுகளைப் பயன்படுத்தி 146 மில்லியன் Kwh  ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதே போல் நம் நாட்டிலும் போதுமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வில்
லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். 2020 ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டு,எரிபொருள் தேவைக்கு பெரும் நெருக்கடி உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி அமைச்சகம் 2002-2007 ஆம் ஆண்டு வரை நிதிநிலை அறிக்கைகளில் ஆராய்ச்சிக்காகவும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக வும் அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளில் ஆண்டுதோறும் 44 சதம் முதல் 76 சதம் வரை பயன்படுத்தாமலே திருப்பி அளித்துள்ளதாக தணிக்கை அறிக்கை தெரி விக்கின்றது. இந்த நிலை மாறி, ஒதுக்கப்படும் நிதியை ஆய்வுப்பணிகளுக்கும் புதிய கண்டுபிடிப்பு களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை (IT) 1980 களில் எவ்வாறு இருந்து தற்போது முன் னணியில் இடம் பெற்றுள்ளதோ அதேபோன்றுதான் புதுப்பிக்கத்தக்க எரிசக் தித் துறையும் குறிப்பாக சூரிய சக்தி மின் உற்பத்தித் துறையும் வளர்ந்து விரை வில் முதலிடத்தைப் பெறும் என்பது திண்ணம்.

ஆதித்யா பிர்லா, டாடா, ரிலையன்ஸ்,மகிந்திரா, வெல்ஸ்பன் போன்ற பெரிய
தொழில் நிறுவனங்கள் மரபுசாரா எரிசக்தித் துறையில் பல்லாயிரம் கோடி
ரூபாய் முதலீட்டில் இறங்கிவிட்டன என்பது இத்துறையின் எதிர்கால பெரும்
வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக உள்ளது.

இயற்கை அளிக்கும் சூரிய ஒளி, காற்று,கடல் அலைகள் மூலம் கிடைக்கும்
ஆற்றல்தான் நிலையான ஆற்றல், நீடித்த ஆற்றல். எனவே, வளர்ந்த நாடுகள் அணு ஆற்றலைத் தவிர்த்துவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து,தேவையைப் பூர்த்திசெய்ய முனைவது போல், நாமும் அலை கடலையும்,காற்றையும், கதிரொளியையும் முழுமையாகப் பயன்படுத்த
முயல்வோம்!

அணுமின் உலைகளை அகற்றுவோம்!!

கட்டுரையாளர் :- ஆர்.ஞானதாஸ் (மதிமுக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்)

No comments:

Post a Comment