Tuesday, September 17, 2013

திராவிடம் காக்க..

திராவிடம் காக்க விருதுநகரில் கூடுவோம்!

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம் வான்தான் என்புகழ்!
முன்னாள் என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் திராவிடன் ஒளி செய்கின்றான்
அன்னோன் கால்வழியாகிய தொடர் கயிற்று
மறுமுனை நான்! என் வாழ்வின் கால் வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்காலத்தின் கடைசியோ டியைந்தது
சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
போர்த்திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர்நான்! என் உயிர் இனம் திராவிடம்!”


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் புகழ்ந்து பாடிய, திராவிடத்தின் நலன் காக்கும் திராவிடர் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று இயங்கும் நம் மறுமலர்ச்சி தி.மு.கழகம், வழமை போல அண்ணா பிறந்த மகிழ்ச்சித் திரு நாளில் மாநாடு கூட்டியுள்ளது!

பெரியார்-அண்ணா வார்ப்படமாய் காலம் நமக்கு வழங்கியுள்ள இலட்சியத் தலைவர் வைகோ,திராவிட இயக்கத் தீரர்கள் உலவிய விருதுநகர் மண்ணுக்கு
அண்ணாவின் தம்பியர் பட்டாளத்திற்கு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்!

1892 ஆம் ஆண்டில் ஆதி திராவிட மக்களின் விடுதலைக்காக தொடங்கப்பட்ட அமைப்பிற்கு திராவிட ஜன சபா என பெயர் சூட்டினர். பார்ப்பனர் அல்லாத மக் களின் உயர்விற்காக 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சென்னை ஐக்கிய சங்கமும் அடுத்த ஆண்டே சென்னை திராவிடர் சங்கமாக உருப்பெற்றது.

1916 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் சார்பில் டாக்டர் நடேசனார் நடத்திய மாணவர் விடுதி, திராவிடர் இல்லம் (Dravidian Home)  என்ற பெயரால் அமைக்கப் பட்டது.தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக் கட்சியாக இது வடிவெ டுத்தபோது, திராவிடன் என்ற தமிழ் நாளேட்டை நடத்தியது. திராவிடர் கழக மாக இந்த அமைப்பு பொலிவு பெறும் முன்பாகவே, அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு என்ற இதழினை நடத்தினார். காஞ்சி திராவிடர் நடிகர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.

திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா தலைமையில் திமுகழகம் உத யமானது.குத்தூசி குருசாமி,தந்தை பெரியார் காலத்திலும்; அய்யா மறைவுக் குப் பின்னர் திருவாரூர் தங்கராசு அவர்களும் பிரிந்து சென்று புதிய அமைப்பு களை ஏற்படுத்தினார்கள். பெரியார் சம உரிமைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் என்று காலம் தோறும் புதிய அமைப்புகள் திராவிடர் கழகத்திலிருந்து உருப்பெற்றது.

தி.மு.கழகத்தில் இருந்து அண்ணா தி.மு.க., மக்கள் தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு. க. ஆகிய கட்சிகள் தோன்றின. அண்ணா தி.மு.கழகத்தில் இருந்து நமது கழகம், எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. என்ற அமைப்புகளும் தோன்றின. இந்த அமைப் புகளிலும் சில உருமாறிவிட்டது. என்றாலும்கூட, மற்ற அமைப்புகளும் தனித் தனி அணுகுமுறைகளில் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

இத்தகைய திராவிட இயக்க அமைப்புகளில் நம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் திரா விட இயக்க அடிப்படைக் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக - தனித்தன் மையுடன் - முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பதற்காக நாம் பெருமைப் படலாம். நூற்றாண்டு பெருமை பேசும் திராவிட இயக்கத்தின் விழுதுகள் நாம்
என்ற உரிமையுடன் - உறவுடன் நம் வேர்களின் தனிச் சிறப்பை விருதுநகரில் அணிவகுக்கும் வேளையில்,எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.

“இந்திய வரலாற்றில் வியக்கத்தக்கபடி, சென்ற ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு புத்துணர்ச்சி வெள்ளம் இருகரையும் புரண்டு போய்க்கொண்டிருக்கிறது. அதா வது சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் சென்ற ஐந்தாறு ஆண்டு களுக்கு முன்பு சென்னை மாநிலத்தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங் காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த கருத்துகளுக்கும், நம்பிக்கைகளுக் கும் உணர்ச்சிகளுக்கும் அடிப்படையிலேயே ஆட்டம் ஏற்படும்படி செய்து விட் டது” என்ற சுயமரியாதை இயக்கத்தின் வீச்சினை தொடங்கப்பட்ட ஒருசில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து நாடு புகழ்ந்துரைத்தது. அங்கிருந்த Rationalist Press Association என்ற பகுத்தறிவாளர் அமைப்பு,வெளியிட்ட Littarary Guide என்ற அறிவுவிளக்க இதழின் 1931 ஆம் ஆண்டின் சனவரி மாத இதழ்தான் நமது இயக் கத்தின் சாதனையைக் கண்டு வியந்து புகழ்மாலை சூட்டியது!

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நார்வே நாட்டில் Internatioal Humanist Ethic Union என்ற பன்னாட்டுப் பகுத்தறிவாளர் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப் பின் தலைவரான லெவி.பிராகல் என்ற அறிஞர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தார்.பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பிய தந்தை பெரி யாரின் பெயரில் வீதிகளிலும், சாலைகளிலும் சிலைகளும், நினைவுச் சின்னங் களும் இருப்பதைக் கண்டு அவர் வியந்து போனார். அஞ்சல் தலையில் அய்யா வின் படத்தைக் கண்டு அதிசயித்துப் போனார்.

“பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஒரு பகுத்தறிவாளரோ, சமயச் சார்பற்ற வேரா, வெளிப்படையான மனித நேயக்காரரோ, அரசியல் பதவிகளில் தலை யாய ஒரு இடத்திற்கு வருவதற்கு கடுமையான சிக்கல்களைச் சந்திக்க வேண் டியிருக்கிறது.இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது தமிழகத்தில், திராவிடர் இயக்கத்தின் வெற்றி என்னை பிரமிக்கச் செய்கிறது” என்று அப்போது மனந் திறந்து பாராட்டினார், அந்தப் பெருந்தகையாளர்!

அதுமட்டுமல்ல, வி.எஸ்.நைபால் என்ற அறிஞரின்  ‘India a Million Mutinies now’ இந் தியா இப்போதுள்ள பல்லாயிரம் கிளர்ச்சிகள் என்ற நூலில் இருந்தும் நம் இயக் கத்தின் சிறப்புகளை அந்த அறிஞர் அப்போது நினைவுகூர்ந்தார். உலகம் முழு வதும் பெருமளவில் விற்பனையான அந்த வரலாற்று நூலில், 70 பக்கங்களில்
தந்தை பெரியாரைப் பற்றியும், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் பெரு மையுடன் குறிப்பிடப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுயமரியாதைக்கான - அடக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான -போராட்டம் தென்னிந்தியாவிற்கு மட்டும் தேவையான ஒன்று அல்ல என்றும் குறிப்பிட்டு, இழிவு அடக்குமுறை, மனிதனை மனிதன் சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து, உலகளாவிய அளவில் அணிதிரள்வோம் என்றும் அவர் அறை கூவல் விடுத்தபோது, நம் இயக்கத்தின்
தனிச்சிறப்பை நாடு அறிந்துகொண்டது.

தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று அறிஞரான பேராசிரியர்முனைவர் கார்த் திகேசு சிவத்தம்பி அவர்கள், 1995 ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு நூலினை எழுதி
வெளியிட்டார். திராவிடர் இயக்கத்தைப் புரிந்து கொள்ளல்-பிரச்சினைகளும், கண்ணோட்டங்களும் ((Understanding the Dravidian Movement - Problems and Perspectves) என்பது அந்த நூலின் பெயர்.

தந்தை பெரியார் அவர்களை ஒரு சகாப்தம், காலகட்டம்,வரலாறு என்றெல் லாம் அறிஞர் அண்ணா அவர்கள் வியந்து பாராட்டுவதைப் போலவே, பேராசி ரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களும் தம் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். தமிழ் நாட்டின் 20 ஆம் நூற்றாண்டின் வரலாறு என்பது பெரியார் ஈ.வெ.இராம சாமியின்,அவரது இயக்கத்தின் வரலாறு என்றே கூறுவது மிகையாகாது. அவர் ஒரு சமூக தொலைநோக்குப் பேரறிவாளர் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறும் அவர்,“பெரியார் மாபெரும் வீரனாக நடைபோட்டார், அவர் அளித்த கருத்துகள் தமிழ்நாட்டைக் கடந்த 75 ஆண்டுகளாக வழிநடத்தி, வடிவமைத்ததில் பெரும்
பங்காற்றியுள்ளன என்பதை எவரும் ஒப்புக்  கொள்ளத்தான் வேண்டும். அவ ரின் கொள்கைகளின் தாக்கம் இன்னமும், எதிர்காலத்திலும் இடையூறின்றி
தொடர்ந்து நீடித்தே இருக்கும்” என்று குறிப்பிடுவதை நோக்கும்போது நம் திரா விட இயக்கத்தின் சிறப்பு புலனாகிறது.

காதல் திருமணம், சாதி, மத மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம் முத லான முற்போக்கு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சண் டைகள், சச்சரவுகள், தீ வைப்பு,கொலைகள் நடைபெறுகின்றன என்பதை இன் றைக்கும் நேரில் கண்டு நெஞ்சம் பதை பதைக்கிறோம்.

ஆனால், எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, சுயமரியாதை இயக்கமாய் வீறுநடை போட்ட நம் திராவிடர் இயக்கம் இத்தகைய புரட்சிகரமான நடவடிக்கைகளை எழுச்சியுடன் நடத்திக்காட்டியது.அப்போது எழும் எதிர்நடவடிக்கைகளில் இருந்து மறுமலர்ச்சி மணம் செய்ய முன்வந்தவர்களை, கண்ணை இமை காப் பது போல காத்து உன்னதமான நம் இலட்சியம் செயல்வடிவம் பெற அரும் பாடுபட்டது நம் திராவிடர் இயக்கம்.

அந்தக் காலத்தில் நம் இயக்கம் நடத்திய அமைதிப்புரட்சியின் வீச்சினை அறிந் துகொள்ள 12.3.1929 குடியரசு இதழில் வெளியான ஒரு விளம்பரத்தை நாம் காண்போம். ‘மணமகன் தேவை’ என்ற பெயரில், கடித அளவில் வெளிவந்தி ருந்த செய்தி அதுதான்.

“நான் ஒரு திராவிடப் பெண், என் வயது 22. என் பெயர் சின்ன ராமாயி, என் ஊர் திண்டுக்கல் தாலுகாவில் வத்திலைத் தோப்பம்பட்டி கிராமம். எனக்கு சுமார் 3
வருடத்திற்கு முன் சிலுவத்தூரில் என் தாய் மாமனுடன் கல்யாணம் ஆயிற்று. அவருக்கு முதலில் இரண்டு பெண்ஜாதிகள் உண்டு. அவர் 50 வயதானவர். அவரை மணக்க நான் எவ்வளவோ மறுத்தும் பயன்படாமல் போய்விட்டதால், அவருடன் வாழ இஷ்டமில்லாமல், தாய் வீட்டில் வாழ்ந்து வந்தேன்.

இப்போது என்னை எப்படியாவது எங்கிருந்து கொண்டாவது வேறு யாருக்கா வது ஒரு குழந்தைப் பெற்று தங்களுக்குக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியோ போகும்படி என் தாய் வீட்டாரும், புருஷன் வீட்டாரும் சொல்கிறார்கள். இதன்
மத்தியில் என்னை விபச்சார முறையில் பெண்டாள பலபேர் பலவித துன்பத் துக்கு உள்ளாக்குகிறார்கள். சிலவற்றில் என் வீட்டாரும் இதற்கு உடந்தையாய் இருந்தார்கள்.

இவை ஒன்றுக்கும் இதுவரை இசையாத நான், சுயமரியாதைக் கொள்கைப்படி வேறு யாராவது கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று கருதி யாருக் கும் தெரியாமல் ஈரோட்டிற்கு வந்து தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் சத்தி ரத்தில் வசிக்கிறேன். எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது.

வீட்டுவேலை, தோட்ட வேலை செய்ய சக்தியும், அனுபவமும் உண்டு. நல்ல குணமும், சுயமரியாதைக் கொள்கையும் உடைய வாலிபர் ஒருவர் யாராக இருந்தாலும் அவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தத்
தயாராக இருக்கிறேன். ஆகையால் என்னை மணக்க இஷ்டமுள்ளவர்கள் உடனே கீழ்க்கண்ட விலாசத்திற்கு தெரியப்படுத்தக் கோருகிறேன்.

                                                                                                        இப்படிக்கு
                                                                                        தற்குறி சின்ன ராமாயம்மாள்

விலாசம்:              
சின்ன ராமாயி 
C/O. குடி அரசு, ஈரோடு.

-இதுதான் அந்தக் கடிதம், விளம்பரம், செய்தி!

நடந்தது கட்டாயத் திருமணம். கணவனுக்கு இரண்டு மனைவிகள், எப்படியா வது பிள்ளைப் பெற்று குடும்பத்திற்கு ஒரு வாரிசு கொடுக்குமாறு பிறந்த வீட்டி லும், புகுந்த வீட்டிலும் வற்புறுத்தும் கேவலம்; கவலையோடு பார்க்க வேண்டி ய சகோதரியை பெண்டாள நினைக்கும் வக்கிரபுத்தி கொண்ட கொடியோர்கள்;
இவ்வளவு கொடுமை களால் தாக்கப்பட்ட அபலைப் பெண்ணுக்கு தந்தை பெரி யார் அடைக்கலம் தந்து, தம் இல்லத்தில் தங்க வைத்தார்! ஏற்ற துணையைத் தேடும் அடுத்தகட்ட பணியிலும் தந்தையாகவே கடமை ஆற்றினார். புரட்சி மணத்திற்கு அழைப்பு விடுத்தார் என்றால், எத்தனை காட்டாறு களை நமது இயக்கம் கடந்து வந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இத்தகைய பெருமைக்குரிய நம் திராவிடர் இயக்கத்தின் மாண்பினை குடி அர சுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் அவர்கள் எடுத்துரைத்ததை நாம்
நினைவுகூர்ந்திட வேண்டும். “மனித உரிமைகள், சுயமரியாதை, சமூக நீதி,
கண்ணியம் ஆகியவற்றை மீட்பதற்காக ஒடுக்கப் பட்ட மக்கள் தங்களுடைய
துயரங்களை வெளிப் படுத்த, சமூக சீர்திருத்த இயக்கமாகத் தோன்றிய திரா விட இயக்கம், வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உருவாக்கி உள்ளது.

அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமூக ஏற்றத் தாழ்வு என்னும் இழிவி னை, வேரோடு சாய்த்திடும் வகையில், பாடுபடும் மாபெரும் அரசியல் சமூக அமைப்பாக,திராவிட இயக்கம் அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் அல்லா து நாடு முழுமையும் உள்ள மக்களின் கவலைகளையும், துன்பங்களையும் ஒழிக்க இந்த இயக்கம் பாடுபட்டு வருகிறது.”தம் கருத்துக்கு மேலும் வலுசேர்க் கும் வகையில்,“பல்லாயிரம் ஆண்டு காலமாக சமுதாயத்தில் நிலவிவந்த சாதிய அழுக்குகள் மீது நேரடிப் போர் தொடுத்து அவற்றை அழிக்கப் புறப்பட்ட இந்திய சமூகத்தின் ஓர் பேரெழுச்சி” என்று திராவிட இயக்கத்தைப் பற்றி, புகழ் பெற்ற சமூக விஞ்ஞானியும் பேராசிரியருமான கெயில் ஓம்வெட் என்பவர் குறிப்பிடுகிறார்” என்றும் மாண்புமிகு கே.ஆர். நாராயணன் அவர்கள் அயல் நாட்டு அறிஞர்களின் மதிப்பீட்டையும் அடையாளம் காட்டி திராவிட இயக்கத் தின் தனிச்சிறப்புகளை எடுத்துரைத்தார்.

உயிரனைய நம் திராவிட இயக்கத்தின் உயர்தனி மேன்மையினை எண்ணி மகிழ்ந்திடும் வேளையில், நம் இயக்கத்தின் மீது புழுதி வாரித் தூற்றப் புறப் பட்டு உள்ளவர்களின் சிறுமைப் பண்பும் நமக்குத் தெரிகிறது.திராவிடம் என்ற சொல்லே எட்டிக்காயாக அவர்களுக்கு கசக்கிறது.

தந்தை பெரியார் தெலுங்கு மொழிபேசுகிற கன்னடராம்.ஆராய்ச்சி செய்து கண் டறிந்த புதிய அறிவியல் கோட்பாடு இது என நம்மீது சேறு வாரி இறைக்கிறார் கள்.தமிழ் தேசிய முகமூடிக்குள் இருந்து,நமது இன எதிரிகளின் வசை புராணம் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருப்பதையும் நாம் காண்கிறோம்.

தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் குறிப்பிடும் சொல்லாகத்தான் திராவி டம் என்ற சொல் முதலில் பயன்பட்டது. திராவிட நல்திருநாடு என்ற சொல் லை மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை திராவிட மொழிகளின் தொகுப்புப் பெயராகக் குறிப்பிட்டார்.அவ்வாறே மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர் களும் திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டார்.ஆரியர் களுக்கு எதிரான நம் இனப்பெயராகவே திராவிடன் விளங்குகிறது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து கிருத்துவச் சமயத் தொண்டு ஆற்றிட ஈராசு பாதிரி யார் தமிழகம் வந்திருந்தார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் அவர்கள் பி.ஏ., ஆனர்ஸ் வகுப்பில் பயின்று கொண்டி ருந்த போது, சிந்துவெளி நாகரிகம் பற்றி தொடர் சொற்பொழிவாற்றினார்.

சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கிய அவர்,இந்த திராவிட நாகரி கம் அரேபியா, எகிப்து, கிரீஸ்,பாபிலோனியா, ரோம், மெசபடோமியா, ஸ்பெ யின் ஆகிய நாடுகளிலும் பரவியது என்று அப்போது குறிப்பிட்டார். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்துள்ள ஒரு திராவிடன் என்று தம்மைப்பற்றி பெருமை யுடன் அவர் குறிப்பிட்டார். நாவலரின் சங்க இலக்கியத் தொகுப்பு நூலின் முதல் பக்கத்திலும், கீழே கையொப்பம் இட்டுள்ள நான் ஸ்பெயின் நாட்டிலி ருந்து வந்துள்ள ஒரு திராவிடன் ( I, the under signed am a Dravidian from spain) என்று எழுதி கையொப்பம் இட்டுத் தந்தார்.

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில்,அறிஞர் அண்ணா அவர்கள் தம் கன் னிப் பேச்சில், “தற்பொழுது இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து, தனிப்பட்ட திராவிட இனத்திலிருந்து நான் இங்கு வந்து இருக்கிறேன். நான் ஒரு திராவி டன் என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக மற்றவர்கள் மீது வங்காளிகள்,மராட்டியர்கள், குஜராத்தியர்கள் யார் மீதும் எனக்கு வெறுப்போ விரோதமோ கிடையாது.

திராவிட இனத்தைச்சேர்ந்தவன் என்று நான் கூறிக்கொள்ளும்போது,எங்களின்
திராவிட நாகரிகம் நீண்ட வரலாற்றை நீடித்த பெருமையை இந்திய அமைப் பில் தனிப்பட்ட பங்கைப் பெற்றிருக்கிறது”என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் கருத்தாழம் மிக்க பேச்சால் கவரப்பட்ட அன்றைய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அப்போது தம்மையும் பீகாரிலிருந்து வந்துள்ள
திராவிடன் ( I am also Dravidian from Bihar) என்று குறிப்பிட்டு, அனைவரையும் வியப் பில் ஆழ்த்தினார்.

இத்தகைய பெருமைக்குரிய திராவிட இனத்தின் விடுதலைக்காகவே இயக்கம்
நடத்திய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் - விழா எடுக்க மறுமலர்ச்சி
தி.மு.கழகம் மாநாடு நடத்துகிறது! பதவி நாற்காலிக்காக பஞ்சமா பாதகங் களையும் செய்யத் தயங்காத வணிக வேட்டைத் தலைவர்கள் மலிந்து கிடக் கும் இன்றைய நிலையில், பெரியார்-அண்ணா கொள்கைகளை வென்றெடுக்க எதிர்ப்புகளையும்,ஏளனங்களையும் புறந்தள்ளிவிட்டு, கொள்கைச் சுடரேந்தி நம் பாசறையை இயக்கி வரும் நம் இலட்சியத் தலைவர் வைகோ அவர்களின் அழைப்பினை ஏற்று,விருதுநகரில் அணி திரள்வோம்!


முன்னேறிச் சென்று - அதிகாரங்களைக்கைப்பற்றி, தமிழகத்தை மறுமலர்ச்சிப்
பூங்காவாக மாற்றி அமைத்திடும் நம் தலைவரின் எண்ணம் ஈடேற, அர்ப்ப ணிப்பு உணர்வுடன் அரும்பணி ஆற்றுவோம்!

கட்டுரையாளர் :- திரு.ஆ.வந்தியத்தேவன் அவர்கள் -மதிமுக வெளியீட்டுச் செயலாளர்

No comments:

Post a Comment