Sunday, November 3, 2013

உத்தமர் நென்மேனி ஜெயராமன் மறைவு -வைகோவின் இரங்கல் உரை

மக்கள் மதிப்பைப் பெற்று இயக்கத்துக்கு மாண்பு சேர்த்த உயர்ந்த பண்பாளர் உத்தமர் நென்மேனி ஜெயராமன் என்று #மதிமுக் பொதுச்செயலாளர் #வைகோ
இரங்கல் உரையில் குற்றிட்டார். உரை வருமாறு...

எனது வாழ்க்கையின் துன்பமான தினங்களுள் இந்த நாளும் ஒன்று.இப்படிஒரு துயரம் வருமென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இந்தப் பகுதியில் செல் வமும், அனைத்துச் சமூக மக்களுடைய அளப்பரிய அன்பும், செல்வாக்கும் பெற்று இருந்த ஒரு பாரம்பரியமான குடும்பத்திலே வந்த எனது ஆருயிர்ச்
சகோதரன் நென்மேனி ஜெயராமன் உடலை, குழிக்குள் இறக்கி, மண்ணைப் போடுகின்ற இந்த நிகழ்வில், என் மனம் கலங்குகிறது. எனது உடன்பிறவாச்
சகோதரர்களுள் ஒருவராக அவர் இருந்தார்.

அவரது மூதாதையர்கள், இப்பகுதியில் மிக்க செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இங்கே உரை ஆற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலா ளரும், உயர்நிலைக் குழு உறுப்பினருமாகிய என்னுடைய அன்புச் சகோதரர் சுப.தங்கவேலன் அவர்கள்,தனது மாமன் மகன் ஜெயராமனின் நிலைமையைச் சொன்னார்.
சட்டக்கல்லூரி நண்பர் வாசு

ஜெயராமனுடைய தம்பி வாசு, என் உயிர் நண்பன்.சென்னை சட்டக் கல்லூரி யில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். கெல்லிஸ் மாணவர் விடுதியில், நான் தங்கி இருந்த அறைக்குப் பக்கத்து அறையில்தான், வாசுதேவன் இருந்தார். ஆறடி இரண்டு அங்குல உயரம். நல்ல தோற்றப்பொலிவு.சிறந்த விளையாட்டு வீரர்.கூடைப்பந்து ஆட்டத்தில், மாநில அணியில் விளையாடினார் என்று, சுப. தங்கவேலன் சொன்னார்.ஜெயராமனும் அவரது பள்ளி கூடைப்பந்து ஆட்ட
அணியில் இடம் பெற்று, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி இருக் கிறார். வாசு கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் சிறுசிறுமோதல்கள் வருவது உண்டு. ஆனால் சாதி மோதல் அல்ல. நான் படித்த நாள்களில், சாதி, மதம் என் றால் என்ன என்று யாருக்குமே தெரியாது. தன்னுடைய அறைத்தோழன் என்ன சாதி என்று யாரும் அறிந்து கொள்வதே இல்லை. அது ஒரு வசந்த காலம். சாதிகளை எல்லாம் கடந்த, பெரியார் கனவு கண்ட காலம் அது.ஆனால், சில வேளைகளில் அரசியல் கட்சி மோதல்கள் வருவது உண்டு.

நான் ஒருநாள் வாசுவிடம் விளையாட்டாகக் கேட்டேன்.என்ன வாசு, இராம நாத புரம் மறவர் வீட்டுப் பிள்ளை, நீங்கள் கோபப்பட்டு நான் பார்த்ததே இல் லையே? என்றேன். ஆனால், எல்லாக் களங்களிலும் எங்களோடு நிற்பார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நீண்ட நாள் கழித்து ஒரு கூட்டத்தில் நென்மேனி ஜெயராமனைப் பார்த்தேன். ‘நீங்கள் வாசு வின் சகோதரரா?’ என்று கேட்டேன். எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார். ‘முகச்சாடையை வைத்துத்தான் கேட்டேன்’ என்றேன். கடந்த
பத்தாம்தேதி, நானும், பூமிநாதனும் இங்கே வந்து அவரைப் பார்த்தோம். ஒன்ற ரை மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். குடும்பங்களுக்குப் பெருமையே,
வீடுகளில் இருக்கின்ற தாய்மார்களால்தான். அப்படி இந்தக் குடும்பத்துக்குப் பெருமை சேர்ப்பவர், ஜெயராமனின் துணைவியாரும், அவரது பிள்ளைகளும்.
‘அப்பா இன்றைக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று என்னிடம் சொன் னார் கள். சரியாகப் பேச முடியாமல் இருந்தார். ஆனால், நீங்கள் வரப்போகிறீர் கள் என்றவுடன் எழுந்து உட்கார்ந்து கொண்டு, தலைவர் வாறாரு, தலைவர் வாறாரு என்று எல்லோருக்கும் அலைபேசியில் தகவல் சொன்னார். எவ்வ ளவு சந்தோசமாக இருந்தார்? என்றார்கள்.

நான் அவரது கையைப் பிடித்துக்கொண்டு இருந்த போது, ‘எனக்குப் புத்துணர்ச் சி வந்து விட்டது அண்ணே; ஒரு தொண்டனைப் பார்க்க தலைவர் வருவது
எங்கண்ணே நடக்கும்? என்றார்.

‘நீங்கள் தொண்டர் அல்ல; நீங்கள் ஒரு தலைவர். இங்குள்ள அனைத்துத் தரப்பு மக்களாலும் நேசிக்கப் படுகின்ற, எல்லாக் கட்சியினரும் மதிக்கின்ற ஒரு
தலைவர் நீங்கள் என்றேன். உங்களைப் பார்க்க வருவதை விட எனக்கு வேறு என்ன கடமை இருக்கிறது? என்று கேட்டேன்.

நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.என்னை முதலில் சந்தித்தபோது, நீங் கள் வாசுவின் சகோதரரா? என்று பார்த்தவுடனே கேட்டீர்களே. வாசுவின் மர ணமும், இயற்கையின் படைப்பில் அதிர்ச்சி தருகின்ற ஒரு மரணம். அவர் என் னிடம் சொல்லி இருக்கின்றார்.அதை இப்போது, தங்கவேலனிடமும் கேட்டுக்
கொண்டேன்.


எதையும் எளிதாகக் கருதக் கூடாது;எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்து விடும்

வாசு வழக்கறிஞராகப் பணி ஆற்றினார். பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர் கள் ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம்
மாவட்டத்தின் இப்பகுதியில், ஏராளமான நிலபுலன் களைக் கொண்டு இருந்த பெரிய குடும்பம். ஒட்டன் சத்திரம் சந்தையில், மூன்று ஜோடி மாடுகளை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து இருக்கின்றார்கள். தொழுவில் கட்டி இருக் கின்றார்கள். வீட்டுக்கு வந்த வாசு, கருப்புக் கோட்டை கழற்றிவிட்டு, புது மாடு வந்து இருக்கிறதே என்று பார்க்கப் போயிருக்கிறார். ஏற்கனவே சொன்னேன்
அல்லவா அவர் நல்ல உயரம் என்று, அங்கே இருந்த பனங்கட்டை ஒன்றில் தலை முட்டி விட்டது. அதற்கு நம்ம கிராமங்களில் மஞ்சப்பற்றுப் போடுவார் கள்,அல்லது கிராமத்து மருத்துவரைப் பார்த்தால் டிஞ்சரைப்போட்டு விடுவார். அப்படி வைத்தியம் பார்த்து விட்டுப்பேசாமல் இருந்து கொண்டார்.

மறுநாளைக்கு மறுநாள், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்.அப்போது ஒரு கண் லேசாக உள்வாங்கியது போல இருக்கின்றதே என்று கூறி மருத்துவரிடம் அழைத்துப் போகிறார்கள். அங்கே சோதித்தது போதுதான் விஷக்கிருமிகளின் (டெட்டனஸ்) தாக்குதல் தெரிய வருகிறது. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கீழே விழும் போது லேசாக சிராய்ப்புக் காயம்தான் என்று விட்டுவிடக்கூடாது. அந்த மண் ணில், டெட்டனஸ் கிருமி இருந்தால், அது உடம்புக்குளே புகுந்து விடும்.லேசா ன சிராய்ப்புக் காயமாக இருந்தாலும் போதும். இரத்தம் வடிந்து இருக்க வேண் டும், இரத்தக் கோடுகளாகத் தெரிந்தாலே போதும். அதற்குள்ளேயும் அந்தக் கிருமி புகுந்து விடும். அதற்கு, முன்பு ஏ.டி. ஊசி போடுவார்கள்; இப்போது டி.டி. ஊசி போட வேண்டும். 24 மணி நேரத்துக்குள்ளாக, டெட்டனஸ் டாக்சாயிடு
ஊசியைப் போட்டுக்கொண்டால் ஒரு ஆபத்தும் இல்லை. தவறினால், டெட்ட னஸ் கிருமி உள்ளே போய் விட்டால், காப்பாற்ற முடியாது. அதற்கு வைத்தி யமே கிடையாது. இருட்டு அறைக்கு உள்ளேதான் வைத்து இருப்பார்கள். இவ ருக்கு அடிபட்டு மூன்று நாள்கள் ஆகிவிட்டதால், ஊசி போட முடியவில்லை. அடுத்த ஒரு மாதத்துக்குள்ளே வாசு இறந்து விட்டார்.பனங்கட்டைதானே, ஒன் றும் செய்யாது என்று கருதினார்; கடைசியில் உயிரே போய்விட்டது. எவ்வ ளவு பெரிய இடி?

பாரம்பரியப் பெருமை

செல்லச்சாமி, நாகசாமி, வேலுச்சாமி என மூன்று அண்ணன் தம்பிகள். தியாகச் சுடர் காமராசர் அவர்கள், தேடி வருகின்ற வீடுகளுள் ஒன்று செல்லச்சாமித் தேவர் வீடு. எஸ்.ஆர். நாயுடு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், அவ்வப்போது தேடி வருவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு உதவியாக இருந்த குடும்பம். அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிரமாக ஈடுபட்டார் ஜெயராமன்.

இங்கே அனைத்துக் கட்சியினரும் வருகை தந்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் தோழர் இராஜன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் சொற்பொழிவாளர் கண்ணியத்துக்குரிய ஜமால், காங் கிரஸ் கட்சியின் சார்பில் பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் முருகவேல் மற்றும் பல சமூக அமைப் புகள், இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் வந்து இருக்கின்றார்கள்.

இந்தப் பகுதியில் எவருக்கேனும் பிரச்சினைகள் என்றால், பஞ்சாயத்துப் பேச வருகின்ற இடம்,ஜெயராமனுடைய வீடுதான். இதை, பலர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன். அவர் மிகக் கடுமையான உழைப்பாளி என்றார் தங்கவேலன். அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, வயற்காட்டுப் பக்கம் போய், எல்லா
நிலங்களையும் ஒருசுற்றுப் பார்த்து விட்டு, பம்பு செட்டுக் கிணறுக்குப் போய்க் குளித்துவிட்டு, ஆறு மணிக்குள் வந்து ஆயத்தமாகி விடுவார். பிரச்சினை என் றால், காலையிலேயே வந்து விடுவார்கள்.குறிப்பிட்ட ஒரு சாதி என்று இல் லை; அனைத்துச் சாதிக்காரர்களும் இங்கேதான் வருவார்கள். அவர்களது
பிணக்குகளைக் கேட்டுப் பேசி, குறைகளைத் தீர்த்து சமாதானம் பண்ணி வைப் பாராம். அவரைப் போல ஒரு உழைப்பாளியைப் பார்க்க முடியாது என்றார்கள். அவர் நடுநிலை தவறாதவர் என்பதால்தான், பஞ்சாயத்துப் பேச அவரிடம் வந்து இருக்கின்றார்கள்.நீதிமன்றத்துக்குப் போவதைவிட, ஜெயராமனிடம்
போனால் நீதி கிடைக்கும் என்று இங்கே வருவார்கள்.

மருத்துவம்

அவரோடு பழகும்போது நான் ஒன்றைக் கண்டு பிடித்தேன். விசுவாசத்துக்கு அவரைப் போல யாரும் இருக்க முடியாது. எது தப்போ, எது சரியோ, தயவு
தாட்சண்யம் இல்லாமல் சொல்லுவார். ‘இன்னார், இப்படி இருக்கின்றார்கள்; இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்’ என்பார். அதில் அவரது விருப்பு வெறுப்பு என்பதே கிடையாது. எது உண்மையோ, எது நியாயமோ, அதைத்தான் பேசுவார். எத்தனையோ முறை நான் அதை கவனித்து இருக்கி றேன். அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார் என்ற தகவலை, கராத்தே பழனிச் சாமி சொன்னபோது, உடனே நான் அங்கே போய்ப் பார்த்தேன். ‘சென்னைக்கு
வாருங்கள்’ என்று கூறி அழைத்து வந்தேன்.

அந்தத் துறையில் புகழ்பெற்ற மருத்துவர் சந்திரசேகரனிடம் காண்பித்தேன். அவர் பார்த்து விட்டு, ஒன்றும் பிரச்சினை இல்லை; சில சோதனைகள் செய்ய
வேண்டும்; இதற்கு முன்பு மருத்துவம் பார்த்த அனைத்து அறிக்கைகளையும் கொண்டு வாருங்கள்’என்றார். சரி என்று வந்தோம். ஊருக்குத் திரும்பி வந் தார். அதற்குப் பிறகு நான் கேட்டபோது, ‘இப்போது பரவாயில்லை அண்ணே; எனக்கு ஒன்றும் இல்லை; சரியாகி விட்டது’ என்றார். வரவே இல்லை.

சில நாள்கள் கழித்து இப்பகுதிக்கு வந்த கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா என்னிடம், ‘ஜெயராமன் அண்ணனுக்கு இன்னும் உடல் நலம்
சரியாகவில்லை’என்றார்.அப்போதும் அலைபேசியில் தொடர்புகொண்டு கேட் டேன். ‘தொடர்ச்சியாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் காண்பித்துக் கொண்டு இருக்கின்றோம்’ என்றார்கள்.

இந்த வேளையில் கட்சிக்கு நிதி திரட்டுகின்ற பணியை மேற்கொண்டோம். ‘சிவகங்கையில் தொடங்குகிறேன்’ என்று, புலவர் செவந்தியப்பனிடம் சொன் னேன். சரி என்றார். ஜெயராமனோடு பேசினேன். ‘அண்ணே நாள்கள் குறை வாக இருக்கின்றன. வேறு மாவட்டங் களுக்குப் போய் வருவது கடினம். அதே நாள் மாலையில் நீங்கள் வைத்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டேன். மறுப் பே சொல்லவில்லை; அதற்கென்ன செய்து விடுகிறேன் என்றார். அந்த உடல் நலக்குறைவோடு அலைந்து திரிந்து, எங்கள் கட்சி வரலாற்றில் இந்த மாவட் டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிதியைத் திரட்டிக் கொடுத்தார். ஒவ் வொரு முறையும் பரமக்குடி எல்லையில், பார்த்திபனூரில் தோழர்களோடு வந்து நின்று வரவேற்பார். இனி என்றைக்கு நான் அவரைப் பார்க்கப் போகி றேன்?

பக்குவம் தெரிந்த பண்பாளர்

சிரித்த முகத்தோடு வந்து சால்வை அணிவிப்பார்.வண்டிக்குள் அளவளாவிக் கொண்டே வருவோம். இம்முறை இராமநாதபுரம் வரும்போதும், அவ்வளவு
மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு வந்தார். ‘இதைவிடக் கூடுதலாகக் கொடுத்து இருப்போமண்ணே’ என்றார்.‘இதுவே பெரிய தொகை. இதை நான் எதிர்பார்க்க
வில்லை’ என்றேன். அண்மைக்காலத்தில் இராமநாதபுரத்தில் இதுதான் பெரிய கூட்டம். சேதுபதி அரண்மனைக்குள்ளே ஒருமுறை போனோம்.

கட்ட பொம்மனும், ஜாக்சன் துரையும் வாக்குவாதம் செய்த இடத்தைப் பார்த் தோம். அண்ணே,இன்னாருடைய வீட்டில் சாப்பிட அழைக்கின்றார்கள். நல்ல ஆள். போகலாமாண்ணே? என்று கேட்பார். ஈழத்தமிழருக்காக ஒரு பிரச்சாரப் பயணத்தை இங்கே தொடங்கினோம். செல்லுகின்ற வழியில், அண்ணே இந்த ஊரில் ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா? என்று கேட்பார்.சத்திரக்குடியில் கூட்டம் நன்றாக இருக்கிறது;கூடுதலாக ஐந்து நிமிடங்கள் பேசுங்கள் என்பார்.

ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன் தேவர் குருபூசைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்கின்ற கூட்டத்தில் கலந்து கொண்டு,நமக்கு எந்த நேரத்தை ஒதுக்குகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கான ஏற்பாடுகளை ஒழுங் குபடுத்திக்கொண்டு வருவார்.அண்ணே நமக்கு ஒரு தொலைக்காட்சியாக இம யம் தொலைக்காட்சி கிடைத்து இருக்கிறது என்றார் மகிழ்ச்சியோடு. துன்ப மான நேரத்தில் துணையாக வந்தார் இமயம் ஜெபராஜ். நான் இங்கே அரசியல் பேச விரும்பவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த தீரர்களுள் ஒருவர் சுப. தங்க வேலன். மற்றொருவர் மண்ணுக்குள் போன காதர் பாட்சா என்ற வெள்ளைச் சாமித் தேவர். இவர்களோடு எத்தனையோ முறை பசும்பொன்னுக்கு நான் வந்து இருக்கின்றேன்.கமுதியில் பேசி இருக்கிறேன்.

2006 தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒரு மாவட்டச் செயலாளர் கூட்டம். நான் உள்ளே நுழைகிறேன்.ஜெயராமன் அழுதுகொண்டு இருந்தார். ‘என்ன இப்படிக்
கண்கலங்குகிறாரே?’ என்று பார்த்தேன். ‘உங்களை இப்படி என்னால் பார்க்க முடியவில்லை’ என்றார்.‘ஏண்ணே, நான் நல்லாத்தானே இருக்கேன். தோற் றால் என்ன? நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை’ என்றேன். அவர் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்; நான் வேறொரு தாய் வயிற்றில் பிறந்தேன். எங் களை இணைத்தது அண்ணா ஊட்டி வளர்த்த சகோதர பாசம்; குடும்ப பாசம். அதைத்தவிர வேறு சாதிகள் இல்லை. அது எனக்குத் தெரியாது.

இந்த இராமநாதபுரம் சீமையில் அவர் எனக்குப் பெரிய அரணாக இருந்தார். தனக்கென்று என்னிடம் எதையும் அவர் கேட்டது இல்லை. நான் சொல்வது தான் அவருக்கு வேத வாக்கு. நான் சொல்வது எல்லாமே சரி என்பது அல்ல; அது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அதுதான் அவருக்கு வேதவாக்கு. (ஆழ்ந்த வருத்தம்).நூறு பேர் வந்து நின்றாலும், அவருக்கு முன்னால் உட்கார யோசிப்பார்களே.. அவ்வளவு மதிப்புமிக்க குடும்பம். அந்தக் குடும்பத்தில் எனக் கு ஒரு சகோதரன் கிடைத்தது எனக்குப் பெருமை.

வாழ்வும் தாழ்வும் என்னோடு

1976 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி நீக்கப்பட்டு, நெருக்கடி நிலை பிர கடனம் செய்யப்பட்ட போது, நான் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக் கப்பட்டேன். பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப் பட்டேன். அண்ணன் தங்க வேலன் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நான் திருநெல்வேலி
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித்தலைவராக இருந்தேன்; சகோதரர் தங்க வேலன், இராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராக
இருந்தார்.சிறையில்,வாரத்தில் ஒரு நாள் நேர்காணல்.அரை மணி நேரம் தான். அது எந்தக் கிழமை என்று கேட்டு முடிவு செய்வார்கள். இவருக்கு வியாழக் கிழமை.இரத்த உறவுள்ள சொந்தக்காரர்கள் மட்டும்தான் பார்க்க முடியும்.எனக் கும் வியாழக்கிழமைதான் நேர்காணல்.

அந்த ஓராண்டு முழுவதும் வியாழக்கிழமை நேர்காணல் களில் என்னைக் காணத் தவறாமல் மதுரைச் சிறைக்கு வந்தார் ஜெயராமன் என்றார் அண்ணன் தங்கவேலன்.ஜெயராமனுக்கு இவர் அத்தை மகன்; தங்கவேலனுக்கு இவர் மாமன் மகன். நம் வீட்டுப் பிள்ளை சிறையில் இருக்கின்றானே என்று கருதி, வாரந்தவறாமல் போய்ப் பார்த்தார் ஜெயராமன்.

சகோதரர் தங்கவேலன், தி.மு.க.வில் அமைச்சர் ஆனார்.கட்சியின் முக்கிய மான தலைவர். ம.தி.மு.க. தோற்றுப் போய்விட்டது. இனி அது துளிர்விடாது என்று கருதிய சிலர் வெளியேறினார்கள். ஜெயராமன் நினைத்து இருந்தால், சொந்த அத்தை மகன், மாவட்டச் செயலாளர், அமைச்சர் என்று கருதி தி.மு.க. வுக்குப்போயிருந்தால்,மாலை போட்டு வரவேற்று மரியாதை கொடுத்து இருப் பார்கள். ஆனால், நான் கடைசி வரையில் வைகோவோடுதான் இருப்பேன் என் றார்.

துரியோதனன் தவறான வழியில் செல்பவன் என்று அவனது தாய் சொன்ன போது, உனக்கு எப்படியோ, ஊருக்கு எப்படியோ; ஆனால், எனக்குத் துரியோ தனன் வாழ்வு கொடுத்தவன். கடைசிவரையிலும் அவனோடு தான் இருப்பேன் என்று சொன்னான் கர்ணன். அவன் தான் மனிதன். சரியோ, தவறோ எடுத்த முடிவில் உறுதியாக நிற்க வேண்டும். ஜெயராமன் போகவும் இல்லை; அதை விடப் பண்பாட்டோடு, ‘எங்கள் கட்சிக்கு வா’ என்று தங்கவேலன் அவரை அழைக்கவும் இல்லை.

பசும்பொன் நினைவுகள்

ஒரு அரசியல் இயக்கத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஜெயராம னி டம் படிக்க வேண்டும். தன்முனைப்பு கூடாது. எனக்கு என்ன என்ற எதிர்பார்ப்பு
கூடாது. அவர் ஓடியாடி உழைக்க வேண்டும் என்பது இல்லை; அவரது பெயர் இருந்தால் போதும்; இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு உயிரோடு சும்மா இருந்தால் போதும். இந்த முறை பசும்பொன் போவதற்காக விண்ணப்பித்து விட்டார். அந்தத் தகவலையும் எனக்குத் தந்தார். நான் சிறைக்குச் செல்லாத அத்தனை ஆண்டு களிலும் இங்கே வந்து கொண்டு இருக்கின்றேன்.பிற்காலத் தில் பலர் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கலாம். நான் மாணவனாக இருந்த நாள் முதல் வருகிறேன். காரணம், பசும்பொன் தேவர் திருமகன் மீது நான் கொண்டு இருக்கின்ற மதிப்பு. நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்போதே அவரது தோற்றம் என்னைக் கவர்ந்தது. அவரு டைய நேர்மை, ஒழுக்கம் எனக்குப் பிடிக்கும்.

பிரபாகரனைப் போல, நேதாஜியை எனக்குப் பிடிக்கும்.பலத்த மழை வெள்ளத் தில், இடுப்பளவு தண்ணீரில் நீந்திக் கொண்டும் கூட இங்கே வந்து போயிருக் கிறேன்.இந்த ஆண்டு நான் வரும்போது, ஜெயராமனை நான் பார்க்க முடியாது. இங்கே கண்ணில்படுகின்ற காடுகள் எல்லாம் அவருடைய குடும்பச் சொத்து கள்.
இங்குள்ள மக்களுக்குச் சொல்லுகிறேன். சாதிச்சண்டை நம் எதிர்காலத் தலை முறையை அழித்து விடும் நமது பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கட்டும். இது எனது வேண்டுகோள். அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் நென்மேனி ஜெயராமன். ஒரு வீரனை நான் இழந்து விட்டேன். அக்டோபர் 10. நொச்சிப்பட்டி தண்டபாணி தீக்குளித்து இறந்த நாள். பிரபாகரன் இந்திய இராணுவத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்த நாள்.எங்களுக்கு அது சூளுரை நாள். அதே நாள் தான், ஜெயராமன் பிறந்த நாள்.

நான் இங்கே வந்து சென்ற போது, அதை அவர்கள் என்னிடம் சொல்லவில் லை. இப்போது சொன்னார்கள். அன்றைக்கே சொல்லி இருக்க வேண்டாமா? என்று அவரது பிள்ளைகளிடம் கேட்டேன். அப்பா பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை என்றார்கள். அவர் கொண்டாடாவிட்டால் என்ன; எனக்கு ஒரு தகவ லாவது சொல்லி இருக்கலாம் அல்லவா; வாழ்த்துச் சொல்லி இருப்பேனே என் றேன். ஆனாலும் பரவாயில்லை, அன்றைக்கு அவரோடு இருந்தேனே?

நாளை மருதுபாண்டியர்கள் தூக்கில் இடப்பட்ட நாள்.அவர்களோடு திருப்பத் தூரில் 500 பேர் தூக்கில் தொங்கினார்கள். அந்தச் சரித்திரம், இந்திய நாட்டுக்கு
எடுத்துச் சொல்லப்படவில்லை.இன்றைக்கு என் சகோதரனை, இந்த மண்ணுக் குள் இறக்கிவிட்டுப் போகிறேன். இந்தப் பனை மரங்களும், வேப்ப மரங்களும்
இதே இடத்தில் இருக்கும். காற்றில் இலைகள் சலசலக்கின்றபோதெல்லாம் ஜெயராமன் பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கள் தோழர்களின்
புதைகுழிகளில் மண் போட்டுச் செல்கின்றோம் என்ற ஈழத்து இளைஞர்களின் உணர்வோடு இங்கே மண்ணைப் போட்டு இருக்கின்றேன்.

விருதுநகர் மாநாட்டில், இந்தப் பகுதியின் மாவட்டச் செயலாளர் என்ற முறை யில், அவரை வைத்து திராவிட இயக்கத் தலைவர்களின் படத்தைத் திறக்கத்
திட்டமிட்டேன். உடல்நலம் இல்லை; வர முடியாது என்றார். அவர் அந்த மாநாட்டைப் பார்க்கவில்லையே என்பதுதான் என் கவலை. ‘ஆனால் எல்லோ ரும் மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது என்று என்னிடம் சொன்னார்கள் அண்ணே’ என்றார்.

இங்கே இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் கூறியதைப் போல,

நெருநல் உளனொருவன் இன்றில்லை யெனும்
பெருமை உடைத்திவ் வுலகு

பிறந்தவர்கள் மடிந்துதான் தீர வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டியவர்; புகழோடு சென்று விட்டார். அவரது துணைவியாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்? அன்றைக்குப் பார்த்தபோது, சாப்பிட மாட்டேங்கி றாகளே ஐயா என்றார். அந்தச் சகோதரிக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

ஆனால் அம்மா, உங்கள் கணவர் புகழோடு மறைந்தார்.உங்களுக்கு அருமை யான பிள்ளைகள், மருமக்கள், பேரன் பேத்திகள் இருக்கின்றார்கள். பேரனுக்கு
பொறியியல் கல்லூரியில் இடம் வேண்டும் என்றார்.செவல்பட்டி பி.எஸ்.ஆர். கல்லூரிக்கு அனுப்பினோம்.அவர்கள் இடம் கொடுத்தார்கள். அதை மகிழ்ச்சி யோடு சொன்னார். உங்களுக்குச் செய்ய வேண்டியது எங்கள் கடமை என் றேன்.

இந்தக் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.ஜெயராமன், வாசுதேவன் மட்டும் அல்ல, மற்றச் சகோதரர்களுக்கும் சொல்லுகிறேன். ஒற்றுமையாக
இருங்கள். அதுதான் உங்களுக்குப் பெருமை தரும். ஊராரை மதிக்கச் செய்யும்.

மணிமண்டபம் கட்டுவோம்

இந்த இடத்தில் ஜெயராமனைப் புதைத்து இருக்கின்றோம். அவரது குடும்பத்தி னரின் ஒப்புதலோடு, இங்கே ஒரு மணிமண்டபம் கட்ட நாங்கள் ஏற்பாடு செய் வோம்.

அன்புச் சகோதரனே, நீ என்னை விட்டுப் பிரியவில்லை.என் உள்ளத்தில் இருக் கின்றாய். நீ மறையவில்லை; என் இருதயத்தில் நிலைத்து இருக்கிறாய். என் தோழனே, நீ எந்த இலட்சியங்களுக்காக வாழ்ந்தாயோ, அவை ஈடேறும் காலம் கண்ணுக்குத் தெரிகிறது. அதை நீ பார்க்க முடியாமல் போயிற்றே என்றுதான் வருந்துகிறேன். துன்பப்பட்ட நாள்களில் எல்லாம் என்னோடு நீ இருந்தாய். இதைவிடச் சிறந்த ஒரு இடத்துக்கு கழகம் வரும்போது, அதை நீ இருந்து பார்த் து மகிழ வேண்டுமே என்று நான் நினைத்தேன்.

ஆயினும், நீ வானத்தில் இருந்து பார்ப்பாய். உன்னுடைய சொற்கள் இந்தப் பகுதியில் உலவிக்கொண்டு இருக்கும்.உன்னுடைய பார்வை இங்கே பதிந்து இருக்கும்.அவற்றின் மூலமாக, நீ என்னைப் பார்ப்பாய்; என் தோழர்களைப் பார்ப்பாய். இந்த இயக்கம் உனக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment