Monday, October 28, 2013

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

சங்கொலி தலையங்கம் .

பிரதமரே! பதவியை உதறுங்கள்!

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளில்(?)சிகரம் தொட்ட ஊழல்கள் இரண்டு. ஒன்று அலைக்கற்றை ஊழல். மற்றொன்று நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல். நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு முன்பே மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG)நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டின் மூலம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்பலப்படுத்தினார்.

உச்சநீதிமன்றம் 2013, மார்ச் 12 இல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கள் நடந்துள்ளதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி, மத்திய புலனாய் வுத்துறை இந்த வழக்கை விசாரிப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பற்றிய விசாரணை குறித்த விபரங்களை மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டதாக சிபிஐ இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தந்தபோது, உச்சநீதிமன்றம் சிபிஐக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்தது.விசாரணை தொடர்பான எந்தத் தகவல்களையும் மத்திய அரசிற்கு அளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு நடை பெறுவதால் மத்திய அரசின் கைப்பாவையாக சிபிஐ இருந்தபோதும் ஆட்சியா ளர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி செயற்பட முடியவில்லை. எனவே சிபிஐ, விசாரணையை துரிதப்படுத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இது வரை இந்த வழக்கில் சிபிஐ 14 முதல் தகவல் அறிக்கையை ((FIR) பதிவு செய் துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., நவீன் ஜிந்தால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிலக்கரித் துறை முன்னாள் இணை அமைச்சர் தாசரி நாராயணராவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் 16 ஆம் தேதி, ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களின் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான குமார்மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒடிசா
மாநிலத்திலுள்ள இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களை 2005 இல் ஒதுக்கீடு செய் வ தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இருவர் மீதும் குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக், தம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது பற்றி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று தடாலடியாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உயர் பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி, நாட்டின் பிரதமர் மீது சிபிஐ ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? அவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கி றார்.

விடுதலைக்குப் பிந்திய வரலாற்றில் எந்தப் பிரதமரும் இவ்வளவு பெரிய குற் றச்சாட்டுக்கு ஆளானது இல்லை. பிரதமருக்குக் கீழே நிலக்கரித்துறையில்
பணியாற்றிய அதிகாரி,ஆட்காட்டி விரல் நீட்டி பிரதமரை குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், ஒட்டுமொத்தமாக தவறே நடக்கவில்லை என்று சாதிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் அலுவலகம் அக்டோபர் 19 ஆம் தேதி நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு
தொடர்பாக முதன் முதலில் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:

“ஒடிசா மாநிலத்தில் மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட், நெய்வேலி பழுப்பு நிலக் கரி நிறுவனம், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களுக்கு தலபிரா-2, தலபிரா-3 ஆகியநிலக்கரிச் சுரங்கங்களின் ஒதுக்கீடு, தேர்வுக்குழுவின் முந் தைய முடிவுகளுக்குச் சற்று மாறுபட்டது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் ஒன்றில் இருந்து(ஹிண்டால்கோ) பிரதமர் அலுவலகத்திற்கு வந்த மனு,நிலக் கரித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் பிறகு எடுக்கப் பட்ட முடிவு ஆகும்.

ஒடிசா சம்பல்பூரில் உள்ள ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தித் தொழிற் சாலைக்குத் தேவையான 650 மெகாவாட் மின் உற்பத்திக்காகவும், ஹிராகுட்
அலுமினியத் தொழிற்சாலையின் விரிவாக்கத்துக்குத் தேவையான 100 மெகா வாட் மின் உற்பத்திக்காகவும், ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு தலபிரா-2 மற்றும் தலபிரா-3 ஆகிய இரு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரி, 2005 மே 7 ஆம் தேதி குமார்மங்கலம் பிர்லா பிரதமருக்குக் கடிதம் எழுதி யிருந்தார். அதுபற்றிப் பரிசீலித்து அறிக்கை அனுப்புமாறு கோரி, அந்தக் கடிதத் தை, மே 25 ஆம் தேதி நிலக்கரித் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்தது. அதன் பிறகு 2005ஆம் ஆண்டு ஜூன் 17 இல் குமார்மங்கலம் பிர்லா பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் நிலக்க ரித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலபிரா-2 சுரங்கத்தை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்வது என்று தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறி, அது தொடர்பான கோப்புக்களை 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நிலக்கரித்துறை அமைச்ச கம்  பிரதமருக்கு அனுப்பி வைத்தது.

அந்தக் கோப்பு ஆய்வில் இருந்த நிலையில், தலபிரா-2 சுரங்கத்தை ஹிண் டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறு கோரி ஆகஸ்டு 17 ஆம் தேதி யிட்ட ஒடிசா முதல் அமைச்சர் நவீன்பட்நாயக் கடிதம் பிரதமருக்கு வந்தது.சுய மாக மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக நிலக்கரிச் சுரங்க ஒதுக் கீட்டில் அலுமினியம் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என் றும், இது வேலைவாய்ப்பைப் பெருக்க உதவுவதோடு, உற்பத்தித்துறை யின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் நவீன்பட்நாயக் கூறி இருந்தார்.

இது பற்றி நிலக்கரித்துறை அமைச்சகம் விரிவாக ஆலோசனை நடத்தியது.
அதன் பிறகு பல்வேறு அம்சங்களையும் கவனத்துடன் ஆய்வு செய்து, தல பிரா -2 மற்றும் தலபிரா-3 ஆகிய இரு சுரங்கங்களையும் மகாநதி கோல்பீல்ட்ஸ் லிமிடெட், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆகிய அரசுத்துறை நிறுவ னங்களுக்கும் ஹிண்டால்கோ தனியார் நிறுவனத்துக்கும் கூட்டாக வழங்கு வது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான இறுதி முடிவு 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 1 இல் எடுக்கப்பட்டது.

நிலக்கரிச் சுரங்கங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, முற்றிலும் சரியா ன து என்றும்,தனக்கு முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின்படி, தகுதியின் அடிப்ப டையிலேயே அந்த நிறுவனங்களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டது என்றும், பிரதமர் கருதுகிறார். நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் விதிமீறல் எது வும் இல்லை. விதிமுறைகளுக்குட்பட்டே சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன.முறை கேடுகள் எதுவும் நடைபெறவில்லை. நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு விவகா ரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இது தொடர்பான சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்”.

பிரதமர் அலுவலகத்தின் இந்த விளக்க அறிக்கை,ஆதித்யா பிர்லா குழும தலை வர் குமார்மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை மறுப்பதுபோல் இருக்கிறது.

குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்தி ருக்கின்றபோது பிரதமர் அலுவலகம் வெளிப்படையாகவே குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை காப்பாற்றும் வகையில் விளக்கம் அளித்திருப்பது விசித்தி ரமாக இருக்கிறது. பிரதமர் மீதும் சிபிஐ வழக்கு தொடுக்கவில்லையே ஏன்? என்று பி.சி.பரேக் கேட்டவுடன், பரேக் மீதும் தவறு இல்லை; சுரங்க ஒதுக்கீடு உரிமம் பெற்ற பிர்லா மீதும் தவறு இல்லை; எல்லாம் முறைப்படி நடந்துள்ள தால் பிரதமர் மீதும் தவறு இல்லை என்று தமக்குத் தாமே நற்சான்று அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். சிபிஐயின் விசாரணை எந்த லட்ச ணத்தில் இருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி.

விசுவரூபமெடுக்கும் பல வினாக்கணைகளுக்கு பிரதமர் பதில் சொல்லியாக
வேண்டும். பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. நிறுவனத்திற்கு சுரங்க ஒதுக்கீடு அளிப்பது என்று தேர்வுக்குழு திட்டவட்டமாக முடிவு செய்த பிறகு, எந்த அடிப்படையில் அதை நிலக்கரித்துறை அமைச்சகத்தின் பொறுப்பைக் கவனித்த பிரதமர் மாற்றினார்? நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பாக மத் திய அரசின் கொள்கை எதுவும் வரையறுக்கப்பட்டதா? அதன் அடிப்படையில் தான் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டனவா? தேர்வுக்குழுவின் அதிகார வரம்பை மீறியது யார்? இவையெல்லாம் உச்சநீதிமன்றம் நடத்துகிற விசாரணையின் போது நிச்சயமாக எழுப்பப்படும். அப்போது பிரதமரின் இந்த விளக்க அறிக்கை பயன்படாது.

இதுவரையில் பிரதமர் அலுவலகம் வாய்திறக்கவில்லை. பிர்லா நிறுவனம் பெற்ற ஒரு உரிமத்துக்கு மட்டுமே விளக்கம் தந்துள்ளது. ஆனால், உச்சநீதி மன்றம் கேட்டதே, நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு கோரி 2000 நிறுவனங் க ளின் விண்ணப்பங்கள் வந்ததில், 150 நிறுவனங்களை மட்டும் எந்த அடிப்படை யில் தேர்ந்து எடுத்தீர்கள்? எப்படி உரிமங்கள் வழங்கினீர்கள்? என்று. இப்போது ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட உரிமம் குறித்து நீண்ட விளக்கம் தந்துள்ள பிரதமர் அலுவலகம், மீதி 149 உரிமங்கள் வழங்கப்பட்டதற்கான காரணங்களை வெளியிட தயாரா?

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது. ஆனால், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விசாரணைக்காக நிலக்கரித்துறை அமைச்சகத்திடமிருந்து 225 ஆவணங் களை சிபிஐ கேட்டது. அதில் 68 ஆவணங்களை மட்டுமே நிலக்கரித்துறை அமைச்சகம் சிபிஐயிடம் கொடுத்தது.மேலும் இது தொடர்பான 200 கோப்புக்கள் மாயமாய் மறைந்துவிட்டன.

காணாமல்போன கோப்புக்களை தேடுகிறோம் என்று,ஆகஸ்டு 20 ல் மாநிலங் களவையில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் திருவாய் மலர்ந்தார். எங்கே போயின 200 கோப்புக்கள்? எதையும் மறைக்க வில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 2004 இல் அமைக்கப்பட்ட டி.எல்.ஷங்கர் குழுவின் பரிந்துரைகள் பற்றிய கோப்புக்களையும் காணவில் லை என்று நிலக்கரித்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

பிரதமர் பதவியைப் பயன்படுத்தி ‘ஒரு தம்பிடி’ காசுகூட சேர்க்காத ‘நேர்மை யாளர்’ மன்மோகன்சிங், யாரைக் காப்பாற்றுவதற்காக தனது நேர்மைக் கவசத் தைத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்? 2 ஜீ அலைக்கற்றை ஊழல் சேற் றில் விழுந்தும், நிலக்கரிச் சுரங்க ஊழல் கரியை முகத்தில் பூசிக்கொண்டும் தமக்குப் பதவி வழங்கிய “ஊழல் தேவதை(?)யின் முன்பு கூனிக்குறுகி நிற்பது பார்க்கச் சகிக்கவில்லை! பிரதமரே! பதவியை உதறுங்கள்! மக்கள் உருட்டித் தள்ளும் வரைக் காத்திருக்க வேண்டாம்!

No comments:

Post a Comment