Saturday, June 15, 2013

அழிவின் விளிம்பில் விவசாயம் ! அச்சுறுத்தும் ஏற்திர்காலம் !

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை’

உழவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விட்டால் இந்நில உலகில் பற்றற்ற துறவி களும் வாழ முடியாது என உலகப் பொதுமறை நூலில் சொன்ன வள்ளுவப் பெருந்தகை, ‘உழவு’ எனும் அதிகாரத்தில் வேளாண்மையின் சிறப்புக்கு பத்து
குறட்பாக்களைத் தந்தார்.


மனிதகுல வாழ்வே விவசாயத்தால் இயங்குகிறது என்றார். உழுது விதைத்து பாடுபட்டு பயிர் வளர்த்து விவசாயி அறுவடை செய்து தரும் தானிய மணி களும், விளைவிக்கும் காய், கனி, கிழங்குகளும், கரும்பும் மனிதர்கள் உயிர் வாழ இன்றியமையாதனவாகும்.


தனது விவசாய நிலத்தை வாழ வைக்கும் தெய்வமாகக் கருதி அம்மண்ணை யும், இத்தனைக் காலமும் அவர்களுக்குத் தோள் கொடுத்த எருதுகளையும், ஆவினத்தையும் கால்நடைகளையும் போற்றி நன்றி கூறும் முகத்தான் ‘பொங் கல்’ வைத்து மகிழ்ந்து தைத் திங்களின் தலைநாளில் கொண்டாடி வந்தான்.

பசிப்பிணி மருத்துவனான விவசாயி, தமிழர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடிக் கும் பண்பாடான விருந்தோம்பும் பண்பை வாழ்வின் அன்றாட இயல்பாக்கி மகிழ்ந்தான்.

தன்னை விவசாயி என்று சொல்லும்போதே அவனது குரலில் ஒரு மிடுக்கு, தோற்றத்தில் தனிக்கம்பீரம். இது அன்றைய விவசாயியின் நிலைமை.

ஆனால், இன்றைய விவசாயிகளின் நிலைமையோ அதல பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட அவலமாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் புதல்விக்கு வரன் தேடும் பெற்றோர், தாங்கள் நாடும் இளைஞன் மாதச் சம்பளம் வாங்குகின்ற உத்தியோகம் பார்க் கின்றான் என்றால்கூட அதனைப் பெரியதாகக் கருதுவதில்லை.

ஏரும்-மாடும், நிலமும் கொண்ட விவசாயி என்றால், ஆவலோடு மகளுக்கு மணம் முடிக்க முன்வருவர். இன்று நிலைமை தலைகீழாய் விட்டது.

பையன் என்ன செய்கிறான்? என்று கேட்டால்,‘விவசாயம் பார்க்கிறான்’ என்று பதில் வருமானால், அக்கணமே நிராகரிப்பர். காரணம் என்ன? “விவசாயி என்றாலே துன்பப் படுகிறவன்”.அவனது வாழ்க்கையே கடுமையான பாரங் களைச் சுமக்கும் நுகத்தடியாகும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே மடியும் அவலம் ஏராள மான விவசாயிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. இதோ எதிர்காலத்தைக் குறித்த
ஒரு அபாய அறிவிப்பாகவே 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தகவல் களைத் தந்துள்ளது.

‘எனது இந்தியாவை கிராமங்களில் பார்க்கலாம்’ என்றார் அண்ணல் காந்தி யடிகள்.

அந்தக் கிராமங்களே காணாமல் போகும் ஆபத்து உருவாகிவிட்டது என்பதைத் தான் கணக்கெடுப்பின் புள்ளி விவரம் சொல்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 1971 ஆம் ஆண்டு மொத்த மக்கள் தொகையில் கிராமங் களில் வசித்தவர்கள் 73.3. விழுக்காடு பேர் ஆகும். நகர்ப்புறங்களில் வசித்தவர் கள் 26.7 விழுக்காடு ஆகும்.

20 ஆண்டுகளுக்குப் பின்னர், 1991 இல் கிராமங்களில் வாழும் மக்கள் தொகை 65.8 விழுக்காடு குறைந்து, நகர்ப்புறத்தில் 35.4 விழுக்காடாக உயர்ந்தது.

அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பின் 2011 இல் கிராமங்களில் வசிப்போர் எண்ணிக் கை மிகவும் குறைந்து 51.6 விழுக்காடாகிவிட்டது. நகர்ப்புறத்தில் வாழ்வோர் 48.4 விழுக்காடு என உயர்ந்து விட்டது.

அநேகமாக இன்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் நகர்ப்புறம் 50 சதவிகிதத் தைத் தாண்டியிருக்கும்.

பன்னெடுங்காலமாக தமிழர்கள் போற்றிப் பாதுகாத்து வந்த நாகரிகம், பண் பாடு பாதுகாக்கப்படும் கருவூலங்களாகத் திகழ்ந்த கிராமங்கள் இன்று களை யிழந்து, மக்கள் தொகை இழந்து வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இனி மாநகரங்கள், பெருநகரங்கள், சிறு நகரங்கள் அவற்றைச் சூழ்ந்து அமை யும் புறநகரங்கள், அங்கு உருவாகும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள்
மட்டுமல்ல, வேளாண்மை அடியோடு சிதைந்து பெரும் உணவுப் பஞ்சமும் ஏற்படும் விபரீதம் கண்ணுக்குத் தெரிகிறது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்களின் இடப்பெயர்ச்சிக்கு என்ன கார ணம்? விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தொழில்-வேலை வாய்ப்பின்றி வெளியேறுகிறார்கள்.

காரணம், விவசாய வேலையே நடைபெற முடியாமல் போவதுதான். வேளாண்மை என்பது ஆண்டுதோறும் பெரும் நட்டத்தில் வீழ்த்துவதாகும். சிறு, குறு விவசாயிகளும் வாழ வழியின்றி ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 70 விழுக்காடு மக்கள் விவசாயத்தையும் அதுசார்ந்த தொழில் களை யும் மேற்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் பயிரிடப்படும் நிலப்பரப்பு 144.38 இலட்சம் ஏக்கர் ஆகும். இதில் நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ள நிலம் 81.765 இலட்சம் ஏக்கர் ஆகும்.

பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பில் 57 விழுக்காடு பாசன வசதியைப் பெறு கிறது. மீதம் 43 விழுக்காடு வான்மழையை மட்டுமே நம்பி உள்ளது.

‘வான்பொய்ப்பினும் தான் பொய்யாது’ எனப் புகழ்பெற்ற காவிரியின் தண்ணீ ருக்கும் கர்நாடகத்தால் ஆபத்து வந்துவிட்டது. மத்திய அரசோ வஞ்சிக்கிறது.

பாலாற்றில் ஆந்திரம் அணைகட்டி, தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க முனைகிறது.கேரளமோ சகிக்க இயலாத அக்கிரமத்தைச்செய்கிறது. இரண் டரை இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யவும் ஏறத்தாழ ஒரு கோடி மக்களுக்கு
பருகுவதற்கு குடிநீரும் வழங்குகின்ற ‘முல்லைப் பெரியாறில்’ பென்னி குக் கட்டியுள்ள அணையை உடைத்து கேடு செய்ய முனைந்து நிற்கிறது.இதனால் தென்பாண்டி மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் பஞ்சப் பிரதேசங் களாகும்.

கொங்கு மண்டலம் அனுபவித்து வருகிற ஆதிபத்திய தண்ணீர் உரிமைக்கும் கேரளம் வேட்டு வைக்க முயல்கிறது.

நெல்லை மாவட்டத்தில் செண்பகவல்லி தடுப்பு அணை, குமரி மாவட்டத்தில் நொய்யாறு இடதுகரை சேனல் இவற்றில் தமிழகத்தின் உரிமைகளை கேரளம் மறுக்கிறது.

அண்டை மாநிலங்கள் அனைத்துலக சட்ட விதிகளுக்கு நேர் முரணாக தமிழ கத்து நதி நீர் உரிமைகளை மறுத்து, தடுத்து கேடு செய்துவரும் போக்கிற்கு கடிவாளமிட்டு நீதி வழங்க வேண்டிய மத்திய அரசு’ அதற்கு மாறாக அண்டை
மாநிலங்களின் அராஜகத்தை சட்ட ரீதியாகவே அங்கீகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசில் உள்ள கேரள அதிகாரிகள் தயாரித்துத் தந்துள்ள ‘அணைப் பாதுகாப்பு மசோதா’வை சட்டமாக்கத் துணிந்து விட்டது.

வரும்முன் காக்கும் எச்சரிக்கை உணர்வோடு தமிழ் நாட்டின் உரிமைகளை யும், விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்கும் விதத்தில் தமிழக மக்கள் செயல்படாவிட்டால், தமிழக உரிமைகள் காக்கும் போராளிகளாக நம் மாநிலத் திலிருந்து நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து மத்திய அரசை இயக்கா விட்டால், வளைத்து நிற்கும் ஆபத்துகளிலிருந்து மீள முடி யாத அவலம் நேரக்கூடும்.

தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 1960 இல் 40 விழுக்காடு ஆக இருந்தது.

கடந்த 50 ஆண்டுகளில் விவ சாயம் நலிந்து போனதால், 2010-2011 இல் அப்பங் களிப்பு வெறும் 12 விழுக்காடு ஆக குறைந்துவிட்டது.

மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் உணவு தானிய உற்பத்தியும் இல்லை.தமிழ்நாட்டில் விவசாயம் நலிந்து வருவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

விளை நிலங்கள் வெறும் ‘விலை’ நிலங்களாக மாற்றப்படுவது மிக முக்கியக் காரணமாகும்.

ரியல் எஸ்டேட் தொழில் தமிழக விவசாய நிலங்களை விழுங்கி ஏப்பமிட்டு விட்டது. ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் விவசாயிகளுடைய வறுமையைப் பயன்படுத்தி நிலங்களை சொற்ப விலைக்கு வாங்கி, வீட்டு மனைகளாக்கி கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்கள்.

விளைநிலங்கள் இல்லை. உணவு உற்பத்தியும் இல்லை.

மலை வளம், வன வளம், மருத நில வளம்,கடற்கரை சார்ந்த வளம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளும் ஒன்றிரண்டு இடங்களில் வெப்பமிக்க பாலைத் திணையாகவும் தமிழகம் பெற்றிருந்த வாழ்வை சங்க
இலங்கியங்கள் ஆயிரம் ஆயிரம் பாடல்களில் வர்ணிக்கின்றன.

மலையின் சரிவுகளில், குன்றங்களில் குறிஞ்சிப்பகுதியில் மரங்கள் அழிக்கப் பட்டு, முல்லைநிலப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, மருத நிலத்தைச் செழிக்கச் செய்த ஆற்றுப் படுகைகளில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மணற்படுகைகள் தோண்டப்பட்டு, மணல் எல்லாம் கொள்ளைப் பணத்திற்கு விலையாக்கப்பட்டு, மொத்தத் தமிழகமே இதேநிலை நீடித்தால் பாலைவன மாகும் தீமைக்கு ஆளாகியுள்ளது.

சங்ககால மன்னர்கள் தொடங்கி, ஆட்சி புரிந்தோர் அணைகள், ஏரிகள், குளங் கள் அமைத்து நீர் நிலைகளைப் பாதுகாத்து, வருங்காலச்சந்ததிகளின் நல் வாழ்வைக் குறிக்கோளாகக்கொண்டு அரசுகள் நடைபெற்றன. அதெல்லாம்
பழங்கதையாகிவிட்டது.

நெஞ்சை உலுக்குகின்ற விவசாயிகளின் விம்மல் ஒலி செவிகளில் தொடர்ந்து கேட்பதால், மனதில் படர்கின்ற கவலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இன்னும் சில செய்திகளைச் சொல்கிறேன்.

2005 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் 128.492 இலட்சம் ஏக்கர். (52 இலட்சம் ஹெக்டேர்) 2009 இல் இவை 118.608 இலட்சம் ஏக்கராக (48 இலட்சம் ஹெக்டேர்) குறைந்தது.

2010 இல் பயிரிடப்படும் நிலமும் 98.84 இலட்சம் ஏக்கராக (40 இலட்சம் ஹெக் டேர்) குறைந்து விட்டது.

2005 லிருந்து 2010 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டின் வேளாண் விளை நிலங்கள் சுமார் 29.652 இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் ஆக்கப் பட்டு, அவற்றில் பெரும் பங்கு ரியல் எஸ்டேட் வீட்டு மனைகள் ஆகிவிட்டன.

விவசாயத் துறையின் மூன்று முக்கியத் தூண்களாக நிலம், விவசாயத் தொழி லாளர் மற்றும் மூலதனம் ஆகியவற்றை (Land, Labour and capital) குறிப்பிடு வார் கள்.

இதில் நிலங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களாலும், அரசின் சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலை களுக்கும் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்படுகின்றன.

கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி படையெடுப் பதா லும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மாற்றுப் பணிகள் கிடைப்பதால் தொழிலாளர் பற்றாக்குறையால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகளால் போதிய அள விற்கு இல்லை. விவசாயிகளுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கிட வங்கிகள் முன் வராததால், கந்து வட்டி கொடுமைக்கு ஆளான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இயற்கையின் இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு இதன் மூலம் கிடைப்பது இல்லை.

தமிழகத்தின் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குப் போய்விட்டதால், விவசாயி கள் பாசனத்திற்கு மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுத்திட முடியாமல் தமிழ் நாட்டில் பலமணிநேரம் (14 மணி நேரம்) மின்வெட்டு இருக்கின்றது. இதுவும்
விவசாயம் அழிவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

எப்படியோ விவசாயிகள் சமாளித்து பயிர்த்தொழில் செய்ய முன்வந்தால், இரசாயன உரங்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது மட்டுமின்றி
உரங்களும் சரியாகக் கிடைப்பதும் இல்லை.

2009, 2010, 2011, 2012 ஆம் ஆண்டுகளில்,டி.ஏ.பி. 50 கிலோ ரூ.486, 507, 643, 1250 ஆகவும்; கலப்பு உரம் 50 கிலோ ரூ. 316, 347, 476, 857 ஆகவும்; பொட்டாஷ் 50 கிலோ ரூ. 206, 219, 299, 840 ஆகவும் விலை உயர்ந்தது மட்டுமல்ல, அனைத்து இடுபொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிப்போய்விட்டது.

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லை.நெல் கொள் முதல் விலையில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1500 என்றும்; கரும்பு ஒரு டன் னுக்கு ரூ.3,500 என்றும் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நிலையை மாநில அரசு ஏற்கவில்லை. மஞ்சள், தேயிலை போன்றவற்றிற்கு கட்டுப்படி யான விலை இல்லை.

மத்திய அரசின் வேளாண்கொள்கையும் விவசாயத்தொழிலைப் பாதிக்கின்றது. விவசாயத்துறை நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, மானியங்களையும் இரத்து செய்துவிட்டது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை இரத்து செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங் களின் ஏகபோகத்திற்கு அனுமதியளித்து மரபு அணுமாற்று விதைகளை அறி முகம் செய்தது.பி.டி. பருத்தியை விதைத்த விவசாயிகள் அழிவுக்கு ஆளானார்கள்.

இப்பொழுது கத்தரி போன்ற காய்கறிகளுக்கும் மரபு அணுமாற்று விதைகளை அறிமுகம் செய்து மத்திய அரசு வேளாண்மையை பன்னாட்டு நிறுவனங் களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல வழி வகுத்து வருகிறது.

மத்திய அரசின் கெயில் நிறுவனம் (Gas Authority of India -Gail)) எரிவாயு எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் ஏழு மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்களைப் பாழ்படுத்திவிட்டது.

“தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு-புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடி யின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எரிவாயுத் தேவைக்காக மீத்தேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட் ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடேட்” என்ற நிறுவனத்திற்கு 29 ஜூலை 2010 லேயே உரிமம் வழங்கி உள்ளது. மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிலப்பரப்பு பகுதிகளாக தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாப நாசம் ஆகிய வட்டங்களும், திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், வலங்கை மான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்களும் இதற்கு உட்பட்ட 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள நிலங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுநிலப்பகுதி பழுப்பு நிலக்கரி எடுப்ப தற்காக ஒதுக்கப்பட்டு, எஞ்சிய 667 சதுர கிலோ மீட்டர், அதாவது ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இருநூற்று பத்து ஏக்கர் நிலப்பரப்பு மீத்தேன் வாயு இரு நூற்று பத்து ஏக்கர் எடுக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மீத்தேன் வாயு எடுப்பது என்பது எளிதான முறையல்ல. சுற்றுச்சூழல் முற்றி லும் பாதிக்கப்படும். விளை நிலங்கள் பாழாகும். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குப் போய்விடும்.

தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன.

பூமிக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 500 அடி தொடங்கி 1650 அடி ஆழம் வரை நிலக்கரிப் படிமங்கள் காணப்படுகின்றன. தற்போதுள்ள நிலத்தடி நீர் இப்படிமங்களை அழுத்திக் கொண்டு உள்ளது.

இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீத்தேன் வாயு நிலக்கரிப் பாறைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. நிலக்கரி பாறை மீது உள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயுவை வெளிக்கொணர முடியும்.

அடுத்தகட்டமாக வெற்றிடம் உண்டாக்கும் இராட்சசக் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். அவ்வாறு 500 அடி முதல் 1650 அடி வரையுள்ள நிலத்தடி நீர் வெளியேற்றப்படும் போது காவிரி ஆற்றுப் படுகை யின் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கு கீழே சென்றுவிடும் பேரபாயம் நிகழும். நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிடுவதால் அப்பகுதி முற்றிலும் வறட்டு பாலைவனமாகப் போய்விடும் ஆபத்து உருவாகும்.

வங்கக்கடலோரப்பகுதிகளின் உப்பு கடல் நீர்,உள்ளுறை கிணறுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் கலந்து ஒட்டு மொத்த நிலமும் பயனற்ற தேரிக்காடுகளாக, உப்பளங்களாக மாறிவிடும் அவலம் நேரும். வளங்கொழிக் கும் காவிரியாற்றுப் பாசனப் பகுதிகள் பாழ்பட்டு பயனற்றுப்போகும் ஆபத்து
பெருந்தீங்காக நம்மைச் சூழ்ந்துவிட்டது.

மீத்தேன் வாயுவை எடுப்பதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் பாதுகாத்து வந்த தங்களின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நிலவளத் தைப் பறிகொடுத்து பரிதவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நொறுங்கிப் போய்விட்டார்கள்.தமிழ் நாட்டில் 13 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மடிந்து உள்ளனர். தமி ழக அரசின் ஊராட்சி நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. பாதிக்கப் பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் உதவித் தொகை வழங்கிட தமி ழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்ப்பாசன ஆறுகளைப் பாது காத்திட மணற் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்களை, உரிமைகளைப் பாதுகாத்திட நமது இயக்கம் தொடர்ந்து கடுமையாகப்போராடி வருகிறது.

மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளை தேசிய நதிகளாக்கிட வேண்டு மென்றும், தென்னக நதிகளை இணைக்கிற திட்டத்தை செயல் படுத்திட வேண் டும் என்றும் நான் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த தனி நபர் மசோதா மீது 5, மே, 2000 அன்று உரை ஆற்றினேன்.ஏறத்தாழ மூன்று மாத காலம் மக்களவையில் நடைபெற்ற நாட்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்ற விதத்தில் விவாதம் நடைபெற்று இந்தியாவில் உள்ள அனைத் துக் கட்சிகளும் எனது மசோதாவை ஆதரித்து அன்றைய மத்திய அமைச்சரும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 62 ஆண்டுகளில் இந்த எளியோனின் மசோ தா விவாதத்தைத் தவிர இதுகுறித்து வேறு நடந்ததில்லை என்பது நாம் பெரு மை கொள்ளும் சாதனையாகும்.

2004ஆம் ஆண்டு நெல்லை பொருநை ஆற்றங்கரையில் இருந்து 3000 சீருடைத் தொண்டர்களோடு நான் மேற்கொண்ட ‘நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பிரச் சார நடைப்பயணத்தில்’ தமிழகத்தின் இலட்சக் கணக்கான மக்களை நாள் தோறும் சந்தித்து நமது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினேன்.

2004 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல் திட்டத்தில் தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை இடம்பெறச் செய்தவனும் அடியேன் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

முல்லைப் பெரியாறில் தமிழக உரிமை காக்க எட்டு ஆண்டுகாலம் நாம் நடத் திய இடைவிடாத போராட்டங்கள், 680 கிராமங்களில் கம்பம் அப்பாஸ் அவர் களுடன் சென்று நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரம், மதுரையிலிருந்து கூடலூர் வரை மேற்கொண்ட பிரச்சார நடைப்பயணம், கேரளத்தின் அராஜகப் போக்கைத் தடுக்க அம்மாநிலத்திற்குச் செல்லும் 13 சாலைகளில் இரண்டு முறை நடத்திய முற்றுகைப் போராட்டம், தென்பெண்ணை ஆற்றில், பாலாற் றில் தமிழர் உரிமை காக்க நாம் மேற்கொண்ட அறப்போர், 

உரவிலை ஏற்றத் தைக் கண்டித்து தஞ்சையில் நடத்திய உண்ணாநிலை அறப் போர், அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க அண்மை யில் விருதுநகரில் நடத்திய உண்ணாநிலை அறப்போர் என விவசாயிகளுக் காகவே நாம் போராடி வந்துள்ளோம்.

‘விவசாயிகளே நிலங்களை விற்காதீர்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் பாகவே தொடர்ந்து வலியுறுத்தி கூறியதும் நாம் தாம்.

தலைமுறை தலைமுறையாக முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த விவசாயத் தொழில் நுணுக்கம் நிலத்தை உழுவது, சீர்படுத்துவது, விதைகளைத் தயாரிப் பது, பக்குவமாக விதைப்பது, குறித்த அளவு தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப் பது உள்ளிட்ட அனைத்தும் தொழில் நுணுக்கத்தோடு செய்யப்படுவதாகும்.

விவசாயிகள் தங்கள் பிள்ளைகளுக்கு, சந்ததிகளுக்குச் செவி வழிச் செய்தி யாகச் சொல்வதோடு மட்டுமன்றி, செயல்முறை திட்டத்தை உடனிருந்து விளக்கி, பயிற்றுவித்து பாதுகாக்கப் பட்டு வந்த வேளாண்மைத் தொழில் குறித்து பெரும்பாலும் கிராமங்களில் கூட இன்றைய தலைமுறையினர் அதன் அடிப்படைகூட அறியாதவர்களாய் விட்டனர்.

வரப்பு கட்டுவது, பாத்தி கட்டுவது,புழுதி உழவு, தொழி உழவு, பரம்பு அடிப்பது எந்தெந்த பருவ காலத்திற்கு ஏற்ப என்ன பயிரிடுவது? அதனைப் பராமரிப்பது எதுவுமே அறியாதவர்களாய் ஆகிவிட்டனர் இத்தலைமுறையினர்.இதனை நினைக்கும்போதே மனம் பாறையாய்க் கனக்கிறது.

சமுதாயத்தின் ஏதாவது ஒரு பகுதியினர் நலிவுற்றால், அவர்களை மீட்க,காப் பாற்ற அரசாங்கம் ஓடோடி உதவுகிறது.நிவாரணம் தருகிறது. அதனைத் தவறு என்று நாம் கூறவில்லை.

ஆனால், வியர்வை சிந்தி உழைத்து அல்லும் பகலும் பாடுபடுகின்ற விவசாயி கள் போட்ட முதலையும் இழந்து, பெருமளவில் கடன்பட்டு, தங்கள் வாழ்வை யே மாய்த்துக் கொள்ள தற்கொலையை நாடவும் முனைந்து விட்ட நிலையில், அந்த விவசாயிகளைக் காப்பதும் கரம் கொடுத்துத் தூக்கிவிட்டு, துன்பக் கேணி யிலிருந்து நிம்மதி கரை சேர்ப்பதும் அரசாங்கத்தின் தலையாயக் கடமை யாகும்.

அமெரிக்க நாட்டில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில் பெரும் பொரு ளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, மக்கள் தாங்க முடியாத இன்னலுக்கு ஆளானபோது ‘புதிய தீர்வு’ (நியூ டீல்) என்ற புனர்வாழ்வுத் திட்டத்தை அன்றைய அமெரிக்க
குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்செயல்படுத்தியது சரித்திரச் சாதனையாக அமைந்தது.

அதுபோல கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகளைக் காக்க, ஒரு புதிய தீர் வாக மாநில அரசும், மத்திய அரசும் செயல்திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

இருள் சூழ்ந்துள்ள விவசாயிகள் வாழ்வில் வெளிச்சம் காண நாமும் தொடர்ந் து கடமையாற்றுவோம்!

எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்
வைகோ

இந்த வார சங்கொலியில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து ...

No comments:

Post a Comment