Sunday, June 16, 2013

கசக்கும் ‘சர்க்கரை’ -சங்கொலி தலையங்கம்

சர்க்கரை என்று சொன்னாலே இனிக்கும்; நாவில் இனிப்பு சுவை சுரக்கும். ஆனால், தற்போது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமு றையைப் பார்த்தால், இனி சர்க்கரை, என்றாலே கசந்துவிடும்; ஏனெனில் கட்டுப்பாடற்ற விலை நிர்ணயம் செய்ய, தனியார் கரும்பு ஆலைகளுக்கு 
மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் என்பதைக் காரணம் காட்டி, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள்
அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலைகளை விருப்பம்போல் நிர்ணயித்துக்
கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை
உயர்ந்து கொண்டே போவதும், அதனால் விலைவாசி கட்டுக்கடங்காமல்
வானில் பறப்பதும் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தற்போது அதே நிலையை
சர்க்கரைக்கும் உருவாக்கிவிட்டது மத்திய அரசு.
சர்க்கரை ஆலைகள் அவற்றின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தை பொது வினியோகத் திட்டத்திற்காக, மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கு வழங்கி வந்தன. சர்க்கரை விலை மீதான கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருந்தது. இந்த விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என சர்க்கரை ஆலைகள் கோரிக்கை வைத்தன. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, சர்க்கரை விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாட்டை ஏப்ரல் 4 ஆம் தேதி விலக்கிக் கொண்டது. மேலும் தற்போது சர்க்கரை ஆலைகள் உற்பத்தி செய்யும் சர்க்கரை முழுவதையும், வெளிச்சந்தையில் விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளிடம் இருந்து மாநில அரசுகள் ஒரு கிலோ சர்க்கரையை ரூ
34 முதல் ரூ 37 வரை கொள்முதல் செய்து, அவற்றை பொது வினியோகத்
திட்டத்தின் கீழ் கிலோ ரூ 13.50 க்கு மக்களுக்கு வழங்கி வருகின்றன. மாநில
அரசுகள் கொள்முதல் செய்யும் விலைக்கும், பொது வினியோகத் திட்டத்தில்
வழங்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு
மானியமாக அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வினியோகத்
திட்டத்தினால் சர்க்கரை வழங்கும் போது, தமிழக அரசு அதிக அளவு மானிய
சுமையை ஏற்றுக் கொண்டுள்ளது.

தற்போது மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய நடைமுறையில், மத்திய அரசு
ஒரு கிலோ லெவி சர்க்கரைக்கு ரூ 18.50 மட்டுமே மானியம் வழங்கும். அதே
சமயம் மத்திய அரசின் மானிய உதவி 2013-2014 மற்றும் 2014-2015 ஆம் ஆண்டிற் குப் பிறகு மாநில அரசுகளுக்கு இல்லை என்பதை மத்திய அரசு  தெளிவுபடுத்தி உள்ளது.

எனவே சர்க்கரை ஆலைகள் நிர்ணயிக்கும் விலையில் சர்க்கரையை வெளிச் சந்தை விலைக்கு வாங்கி அவற்றைப் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் குறைந்த விலைக்கு மாநில அரசுகள் மக்களுக்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள் ளது. மாநில அரசுகளின் நிதிச்சுமை அதிகரிப்பதுடன் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் சர்க்கரை வழங்குவதும் பாதிக்கப்படும்.

“சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தி உள்ளதால், ஜூன் மாதம் முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு, தேவை யான சர்க்கரையை மாநில அரசுகள் வெளிச்சந்தையில் வாங்கி, இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் மாநில அரசுகளுக்கு ஓர் அபாய அறிவிப்பை கடிதம் மூலம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 35 ஆயிரம்
டன் சர்க்கரை வினியோகிக்கப்படுகிறது. இதில் 10,830 டன் சர்க்கரை ஒரு கிலோ ரூ 18.50 என்ற விலையில் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீதமுள்ள சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ 34 முதல் 37 வரை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடமிருந்து வாங்கப்படுகிறது.

ஒரு பங்கீட்டு அட்டைக்கு, ஒரு கிலோ சர்க்கரை ரூ 13.50 என்ற விலையில்,
அரிசி பெற தகுதியுள்ள குடும்பங்களுக்கு 2 கிலோ வரை விற்பனை  செய்யப் படுகிறது. இதற்காக தமிழக அரசு ஒரு ஆண்டிற்கு 682 கோடி ரூபாய் மானிய மாக வழங்குகிறது. புதிய நடைமுறை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதை செயல்படுத்த உ.பி., ஒடிசா, மராட்டிய மாநிலங்கள் ஆறு மாதம் அவகாசம் கேட்டுள்ளன. மற்ற மாநிலங் களும் மத்திய அரசின் சர்க்கரை கொள்கையை ஏற்கத் தயங்கி வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப் படும் சர்க்கரையின் கையிருப்பு இரண்டு மாதங்களுக்கு தேவையான  60 ஆயி ரம் டன் மட்டுமே உள்ளது. இதனால் வரும் ஆகஸ்டு மாதம் முதல் பங்கீட்டுக் கடைகளில் சர்க்கரை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும்.மேலும், புதிய நடைமுறையால் தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்து சர்க்கரை கொள் முதல் செய்யும் பட்சத்தில் தமிழக அரசுக்கு, மானிய செலவினமும் அதிகரிக் கும் என்பதை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையில் 16 சர்க்கரை ஆலைகளும், தனியார் துறை யில் 25 ஆலைகளும், பொதுத்துறையில் 2 ஆலைகளும் ஆக மொத்தம் 43 சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன.

பொது வினியோகத் திட்டத்தின் மூலம் சர்க்கரை வழங்குவதற்கு இந்த ஆலை களிடம் வெளிச்சந்தை விலைக்கு சர்க்கரை கொள்முதல் செய்திட தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும். இதுபோன்ற சிக்கல்களால், சர்க் கரை பொது வினியோகத் திட்டத்தின்படி, ஒரே சீரான விலையில் மக்களுக்கு வழங்குவது பாதிக்கப்படும்.

ஏழை எளிய மக்களின் எளிய பானம் ‘தேநீர்’ அருந்துவதற்கு கூட வழியில்லா மல் மத்திய அரசு சர்க்கரை கொள்கையை உருவாக்கி உள்ளது. சாதாரண மக்களை இம்சிப்பதையே ஒரு கொள்கையாக வைத்திருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக புதிய நடைமுறை சர்க்கரை கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்; எளிய மக்களின் ‘இனிப்பில்’ கை வைத்தால் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரசுக்கு ‘கசப்பில்’ போய் முடியும்.

No comments:

Post a Comment