Sunday, June 23, 2013

தண்ணீர்..தண்ணீர்.. தண்ணீர்.. பகுதி -3

தண்ணீர் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கொள்ளையாகும்.விவசாயிகளின் நிலத்தில் உள்ள கிணறுகளைக்கூட நீர்க் கொள்ளை நிறுவனங்கள் விட்டு வைக்க வில்லை.

ஆறுகளைத் தேசியமயமாக்க வேண்டும்...
தனியார் வசமாக்குவது ஆபத்தான முடிவாகும்!

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன.கட்சிகளின் அடிப்படை யில் மக்கள் மனம்போன போக்கில் சிதறிக்கிடக்கின்றனர். கொள்கை கோட் பா டுகள் சிறிதும் புரியாமலேயே கட்சித் தலைமையைப் போற்றுவது அறியாமை என்பதைவிட ஏதோ ஒருவிதமான எதிர்பார்ப்புகளால் ஆளும்கட்சித் தகுதி யுள் ளவர்களின் மீது துதி பாடித்திரிகின்றார்கள் என்பதே சரியான மதிப்பீடாகும்.
திராவிட இயக்கத்தின் போர்வாள் எனப் புகழ்பெற்ற வைகோ மட்டும் இல்லை யென்றால், முல்லைப் பெரியாறு அணையைக் கேரளத்தான் எப்போதோ உடைத்திருப்பான். அதைத் தடுத்து நிறுத்திய தலைவர் வைகோ என்பதனை சுரணையுள்ள தமிழர்கள் மறக்கவே முடியாது.

தமிழர்களின் ஒற்றுமை இன்மை, விழிப்புணர்ச்சியின்மை, போர்க்குணம் மழுங் கிய நிலை ஆகிய பலவீனங்களை நன்கறிந்த கேரளம், நாம் கட்டிய அணை ஒன்றை உடைத்துத் தள்ளிய வரலாற்றை நினைத்துப்பார்ப்பது இன்றையச் சூழ்நிலையில் மிக மிக அவசியமாகும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி அருகே சொக்கம்பட்டி பக்கத்தில் செண்பகவல்லி அணை ஒன்று கட்டப்பட்டது. அது வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அந்த அணையை கேரள அதிகாரிகள் உடைத்து நொறுக்கிவிட்டார்கள். இந்த அநீதி யைக் தட்டிக் கேட்கவோ, போர்க்குரல் எழுப்பவோ தமிழ்நாட்டில் எந்தத் தலை வரும் முன்வரவில்லை. இதற்குக் காரணம் என்ன? நாட்டைப் பற்றிய உணர்வு
மங்கிப் போனதே காரணமாகும்.

காமராசர் முதல் அமைச்சராக இருந்தபோது தான் இந்த அணை உடைக்கப்பட் டது. அந்த நேரத்தில் காமராசர் இருந்த இடத்தில் நம் தலைவர் வைகோ இருந் திருந்தால்... என்ன நடந்திருக்கும் என்பதனை எண்ணிப் பாருங்கள். இன்றை ய நிலையில் தமிழினத்தின் சார்பாக வைகோ அவர்கள் பொங்கி எழுந்து போர்க் குரல் எழுப்பி கேரள அரசின் கிரிமினல் புத்தியைத் தாக்கித் தடுக்க வில்லை என்றால், முல்லைப் பெரியாறு அணையும் அதைப்போலவே உடைக்கப்பட்டி ருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நீர் வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற உணர்வே காங்கிரஸ்காரர்களுக் கு இல்லை. தமிழ்நாட்டின் எல்லைக்கோடுகளில் முக்கியமான பகுதிகளை எல்லாம் அண்டை மாநிலங்களிடம் பறிகொடுத்து ஏமாந்ததன் விளைவுதான் இன்றைய நீராதார இழப்புக்குக் காரணமாகும்.

காவிரி நீரைத் தடுத்தவன் மீது போர் தொடுத்த தமிழ் மன்னர்

காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது இன்று நேற்றல்ல, வர லாறு நெடுகிலும் தடுக்கப்பட்ட நிலையைக் காண்கிறோம். கி.பி.1141 முதல் 1173 வரை கர்நாடகப் பகுதியை போசள நாட்டு மன்னன் முதலாம் நரசிம்மன் ஆண்டு வந்தான். அவன் காவிரியின் நீரைத் தடுக்கும் விதத்தில் செயற்கை யான மலைகளைக் காவிரியின் ஊடே உருவாக்கினான். அதனால் தமிழகத் திற்கு வரும் நீர் தடைபட்டுப்போனது. சோழ நாட்டில் வறட்சி ஏற்பட்டது. பயிர் கள் வாடி வதங்கின.

அவ்வேளையில் தமிழ்நாட்டை ஆண்ட இராசராச சோழன் பொங்கியெழுந் தான். காவிரி நீரைத் தடுத்த போசள நாட்டின் மீது போர் தொடுத்தான். தரணி யை வெல்லும் வீரம் பொருந்திய தமிழர் படையை எதிர்கொள்ள இயலாமல் போசள மன்னன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்.

காவிரி நீரைத் தடுத்த செயற்கை மலையைத் தகர்த்துத் தள்ளினான் சோழ மன் னன். காவிரி நீர் மீண்டும் சோழ மண்ணில் பாய்ந்து செழிப்புறச் செய்தது. இத னால் “காவிரி கண்ட சோழன்” என்று மக்களால் போற்றிப்புகழப்பட்ட வரலாறு படைத்தான்.

இதைப்பற்றி அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தன் பாடிய தக்கயாகப் பரணியில்,

“அவைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்
அடைகின்ற குன்றுடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னுக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாள்என்ன வந்தே”

என்று புகழ்மாலை சூடியுள்ளான். மன்னரின் மாட்சிமைகளைப் புகழ்வது அரச வைப் புலவர்களின் தலையாய கடமையாகும். மரபும் ஆகும்.

தமிழரின் நெடுங்கால நீராதார உரிமைகளை அண்டை மாநிலத்தவர் தடுக்கும் போதும், பறிக்கும்போதும் பதறி எழுந்து தமிழர் தம் வாழ்வாதார உரிமைகளை
வென்றெடுத்த வீரர் வைகோ என்பதனை நாடே அறியும்.

மக்கள் நலனுக்காகத் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்ட இரண்டாம் அண்ணா வைகோ அவர்கள் மீது, கழகக் கவிஞரான எனக்கு மட்டும் புகழ் மாலை சூடும் உரிமையும் கடமையும் மறந்து போகுமா?

“தமிழரின் வாழ்வான நீர்வளம் கொள்அணை
தகர்த்திடும் மலையாளி வெறித்தனம் முறித்தனன்
மலைகளுள் இமயமே பெரிதெனும் அதுபோலும்
மாந்தருள் ஓங்குநர் வேந்தராம் வைகோ.”

என்று வைகோ மீது புகழ்மலர் பொழிவது எனக்கு ஒன்றும் கடினமான செய லன்று.

ஏற்கனவே நான் எழுதியது “குமரி முதல் சென்னை வரை வைகோ பேருலா” எனும் உலாபிரபந்தம். அதிலிருந்து சிலவரிகளை மட்டும் இங்கே பார்ப்போம்.

வணங்கா முடிவேந்தன் வையாபுரி என்னும்
குணத்தால் சிறந்த குமணனுடன் -இணைந்த திரு

பொன்னார் மேனிக்குப் புகழ்சேர்த்த மாணிக்கப்
பெண்ணரசி மாரியம்மாள் பெற்ற மகன் -கண்மணியை

வைகோ வைகோ வைகோ எனத் தமிழ்உலகம்
மெய்க்கீர்த்தி பாடுவதைக் காணுகிறோம் -

தில்லிக் கொடுமுடியைத் திணறடித்த போர்வீரன்
வெல்லும் சொல்லுக்கு விளைநிலம் -வள்ளுவரின்

குறள்நெறியில் கொள்கைவளர் வைகோ வின்
அருள்நெஞ்சம் சுரக்கும் அமுதூற்று -அறிவில்

பேரறிஞர் அண்ணாவின் பிழையில்லா மறுபதிப்பு
நேர்மை இவர்கொண்ட உயிர்மூச்சு -சீர்மேவும்

தொண்டுக்குப் பெரியாரின் தொடர்பயணம், அணு
குண்டுக்கும் அஞ்சாத குடிப்பிறப்பு

என்று வைகோ அவர்களின் குடிப்பிறப்பு, தனித்திறன் ஆகிய உயர்பண்புகளை கவிமாலையாகத் தொகுத்து உள்ளேன்.

பண்டைக் காலத்தில் மக்கள் நலன் கருதும் மாமன்னர்கள் நில வளம்,நீர் வளம் காப்பதிலே எத்துணை கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்களோ அதைப் போல், தமிழக அரசியலில் நம் தலைவர் வைகோ ஒருவர் மட்டும் தான், மக்க ளுக்காக, மண்ணின் உரிமைகளைக் காக்க இமையாது செயல்பட்டு வருகின் றார்.

தமிழகத்தில் பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் நதிதான் (தாமிர வரு ணி) தாமிரபரணி. தொன்மைமிகும் இந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ள மருதூர் அணையின் நீரியல் தொழில்நுட்பமும் இன்றைய ஆய்வாளர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதுபோன்ற தடுப்பு அணைகள் தமிழரின் முற்போக் குச் சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

மருதூர் அணை சங்க காலத்திலிருந்து தொடர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதுபோன்று வைகை நதியிலும் பாண்டிய மன்னர்களால் 12க்கும் மேற்பட்ட
தடுப்பு அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கி.பி. 3 ஆம் நூற் றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டவை என்று ஆய்வுரை
கூறுகின்றது.

காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான வெண்ணாறு, இதில் அமைந்துள்ள கச்சமங்கலம் அணை குறித்த செய்தி ஒன்று உண்டு. ஆற்றின் குறுக்கே இருந்த மலையின் குன்றுகளை அறுத்து அல்லது உடைத்து அதனைத் தடுப்பு அணையாக மாற்றியிருக்கிறார்கள்.

கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் தோன்றிய சேந்தன் என்னும் சங்ககால மன்னனால் இது கட்டப் பட்டதாகக்கூறப்படுகிறது.இப்படி நீரும் நீர் சார்ந்தவை யும் தமிழர் வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் பெற்றிருந்தன என்ப தற்கு நிறைய ஆதாரங்கள் நமது பண்டைய இலக்கியங்களில் உள்ளன.

பாண்டிய நாட்டின் நீர்ப்பாசன முறையில், இருப்பைக்குடி கிழவனின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. இவன் ஒரு குறுநில மன்னன். கி.பி.815 க்கும் 860க்கும் இடையில் இவனது ஆட்சி நடந்துள்ளது. பாண்டிய நாட்டில் பல மதகு களை அமைத்த பெருமை இவனுக்கு உண்டு. கற்களையும் சுண்ணாம்பு காரை யும் இணைத்துக் கட்டுகின்ற முறை இவன் காலத்தில்தான் உருவாக்கப்பட்ட தாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

ஆச்சரியம் ஆனால் உண்மை

ஆறுகளின் நீர்வளம் மட்டுமே மனிதன் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது உலக ஆறுகளின் மொத்த நீர்வளம் என்பது, உலக நீர்வளத்தில் பத்து இலட்சத் தில் இரண்டு பங்கு மட்டுமே என்றுதான் நீர்வள ஆய்வு அறிக்கை கூறுகிறது.

உலகின் மொத்த நீர்வளத்தில் 97 விழுக்காடு உப்பு நீரான கடல் நீராகும்.3 விழுக் காடு மட்டுமே நல்ல நீ ஆகும். சுருக்கமாகச் சொல்லப்போனால், 2 சதவீதம் நீர்
பனிக்கட்டியாக உறைந்துவிடுகிறது. 1 சதவீதம் தண்ணீரைத்தான் மக்கள் குடி நீராகவும், விவசாயத் திற்கும், மற்ற வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

இதை நினைத்தால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. உலக மொத்தத் தண்ணீர் அளவு 140 கோடி கன கிலோ மீட்டர். (14 பில்லியன் க்யூபிக் கிலோ
மீட்டர்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் மொத்த நீரில் பத்து இலட்சத்தில் இரண்டு மடங்காக உள்ள இந்த ஆற்று நீரின் அளவு 48,000 கன கிலோ மீட்டர் ஆகும். உலக நீர் வளம் 48,000 கன கி.மீ. என்றால், தமிழ்நாட்டின் நீர்வளம் எவ்வளவு தெரியுமா? 4.8. கன கிலோ மீட்டர்தான். இந்த விவரங்களை எல்லாம் நம் கழகத் தோழர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்தான், தண்ணீர்ப் பற்றாக்குறையில் நம் தமிழ்நாடு எந்த நிலையில் தாழ்ந்து உள்ளது என்பதனை உணர முடியும். மக்களுக்கு எடுத்து ரைக்க முடியும்.

ஐ.நா. அறிக்கை உலக அளவில் மக்கள் தொகை அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டதாக எச்சரிக் கிறது. அதைவிட தண்ணீர்த் தேவைகள் எந்தெந்த
நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு பற்றாக்குறையாக இருந்து வருகிறது என்ப தை யும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆம்ஸ்டெர்டாமைச் சேர்ந்த அல்லெர்டு ஸ்டிக்கர் என்பவர் உலக மக்கள் தொகை ஆண்டு ஒன்றுக்கு 85 மில்லியன் அதிகரிக்கிறது என்று அச்சுறுத்து கிறார். இதுபோன்ற உலக விசயங்களைவிட, உள்நாட்டு நிலைமைகளை
விளக்கினாலே போதும் என்பதே பொதுவான கருத்தாகும்.

இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கை எவ்வளவு மோசமாகப் போய்க்கொண் டிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை இங்கே எடுத்துக்காட்டுவது அவசி
யமாகிறது.

அண்மைக்   காலத்தில் வட இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர்   மாநில      அரசு ஷினோத் ஆற்று நீரை ரேடியல் வாட்டர் லிமிடெட் (RWL)  என்ற தனியார்
நிறுவனத்திற்கு 22 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுத்திருக்கிறது. ஒரு நதியின் நீரையே தனியாருக்கு விற்றுவிடும் அநீதிக்கு இந்தியா உடந்தை என் றால், இந்த அநீதியை யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?

தண்ணீர் வணிகம் தனியார் மயமானது?
இயற்கை வளங்  களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இயற்கை வளங்கள் பொதுச் சொத்து எனக் கருதப்படுவதால், தனியாரிடம் ஒப் படைக்கக் கூடாது. பண்டைக்கால ரோம் நாட்டில் பொது அறக்கட்டளைக் கோட்பாடு என ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. அந்தக் கோட்பாட்டின் நோக்க மே, காற்று கடல் நீர், காடுகள் முதலியன மக்களுக்கு இன்றியமை யாதவை. எனவே, இயற்கை வளங்களைத் தனியார் வசமாக்கக்கூடாது என்று கூறப்பட் டுள்ளது.

பின்னர், ஆங்கிலேயரின் பொதுச் சட்டத்திலும் இதே கொள்கை இடம்பெற்றுள் ளது. ஆங்கிலேயரின் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான்
நமது பொதுச் சொத்து தொடர்பான சட்டங்கள். எனவே, இவற்றைத் தனியார் வசம் ஒப்படைப்பது மிகப்பெரும் அநீதி என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி
வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.

வடநாட்டில் கங்கையிலும், தமிழ்நாட்டில் காவிரி, பவானி, சிறுவாணி ஆகிய நமது ஆறுகள் மீதும் அந்நிய கம்பெனிகள் ஆக்கிரமித்துள்ளன.தமிழகத்தின் ஆறுகள், ஏரிகள், அணைகள் ஆகியவற்றின் நீர் வளத்தை உறிஞ்சி, பாட்டிலில்
அடைத்து, கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர். மத்திய மாநில அரசுகளின் ஆத ரவுடன்தான் இந்த நீர் வணிகம் நடைபெறுகிறது. “கங்கா ஜல் காம்” என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டு, கங்கையின் புனிதம் போதிக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் துணை நதியான பவானி ஆற்றை கோக்கக் கோலா கம்பெனிக்குச் சொந்தமான கின்லேக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடுமையான வறட்சியில் இருக்கும் போது, நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. 1000 அடிக்குக் கீழே இறக்கி நீர்க் கொள்ளை நடைபெறுகிறது. இந்தக்கொள்ளைக்குத் தமிழ்நாடு அரசு உடந்தையாகும்.அம்மா..சும்மா கொடுத் திருக்கிறார் என்று கூற முடியாது. இது பற்றி இப்பொழுது விரிவாகச் சொல் வது நல்லதன்று.

இதுமட்டுமல்ல, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீரா தாரமாக உள்ள பவானி ஆற்றை, கோவை அன்னபூரணா ஹோட்டல் குழுமத் தைச் சேர்ந்த “பூனம் பெவரேஜஸ்” என்ற நிறுவனத்தின் மூலம் கின்லேக்கு விற்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு (1,00,000) ஒரு இலட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப் படுகிறது. இதற்கு அரசுக்குச் செலுத்தும் தொகை வெறும் 5 இலட்சம் ரூபாய் மட்டும்தான்.

தண்ணீர் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கொள்ளையாகும்.விவசாயிகளின் நிலத்தில் உள்ள கிணறு களைக்கூட நீர்க் கொள்ளை நிறுவனங்கள் விட்டு வைக்க வில்லை. கிணற்று உரிமையாளர்களுக்கு 1,000 லிட்டருக்கு அளிக்கும் தொகை ரூ. 3.30 காசு என
வாங்கி,நீர் நிறுவனங்களுக்கு1,000 லிட்டருக்கு 35 ரூபாய் என விற்கப் படு கிறது.

பின்னர் அவை சுத்திகரிக்கப்பட்டு, பாட்டிலில் அடைக்கப்படுகிறது. அதன் விலை 1,000 லிட்டருக்கு ரூ.20,000 வரை விற்கப்படுகிறது. 250 மில்லி லிட்டர்
நீர் பிளாஸ்டிக் பையில் நிரப்பி அது ரூ.5 க்கு விற்கப் படுகிறது. இரயில் நிலை யங்களில் ஒரு லிட்டர் பாட்டில் நீர் இப்போது ரூ.15க்கு விற்கும் நிலையில், தனியார் கடைகளில் அதே தண்ணீர் ரூ.22 என்று விற்கின்றார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பாட்டில்களில் நீர் அடைத்து விற்பனை செய்யும் நிறுவ னங்கள் (ரூ. 10,000) பத்தாயிரம் கோடி வரை கொள்ளையடித்துள்ளனர் என்று எம்.ஐ.டி.எஸ். செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

குடிநீர்த் தேவையினைக்கணக்கிட்டு மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் குடி நீர் விநியோகம் குறித்து ஒரு கையேட்டினை வெளியிட்டிருக்கிறது. (Manual of
water supply)  இத்துறையினால் எந்தப் பயனும் இல்லை.

மனிதனின் உடலில் 55 முதல் 60 விழுக்காடு நீர் நிறைந்துள்ளது. மூளையில் 70 விழுக்காடு நீரும், தோல் மற்றும் இரத்தத்தில் 82 விழுக்காடும், நுரையீரலில் 90
விழுக்காடும் நீர் உள்ளது. நமது உடல் அளவிலேயே நீரின் முக்கியத்துவத்தை இயற்கை உணர்த்தியுள்ளதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் முதன் முதலாக பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் தான் நதி யைத் தனியாருக்கு விடப்பட்ட முன்மாதிரி நிகழ்ந்தது. ஷியோனத் திட்டம் (The
Sheonath River Project)  ஐ ரேடியல் வாட்டர் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விற்று விட்டது.போதிய நிதி இல்லாத காரணத்தால் விற்கப்பட்டதாம்.இந்த நிலை தொடரக்கூடாது.

இத்தகைய ஆபத்தான போக்கினைத் தடுத்து நிறுத்தும் விதத்தில் நாடாளுமன் றத்தில் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றைத்திருப்பிப் போடும் ஆற் றல் உள்ள உரையாகும். ஆறுகளைத் தேசிய மயமாக்க வேண்டும். அதற்கு மாறாக நதிநீரைத் தனியார் வசமாக்குவது மிகப்பெரும் ஆபத்தான முடிவா கும்.இதன் விளைவு இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் கேடு உண்டாக்கும் என்று வைகோ எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்....

(வைகோ அவர்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் கடமைகளும், தமிழக நீரா தார மறுமலர்ச்சிச் திட்டங்களும் யாவை என்பதை அடுத்து அறியலாம்)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே


நன்றிகள் 

கட்டுரையாளர் :- கவிஞர் தமிழ்மறவன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment