Saturday, June 22, 2013

தமிழ் இனம் உணர்வு பெறப் பாடும் கவிஞர்!

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின், “நறுக்குகள், பொழிச்சல், Fables Kasi Anandan” ஆகிய நூல்களின் வெளியீட்டுவிழா,சென்னையில் 10.11.2011அன்று பழ.நெடுமாறன் தலைமையில்,தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

சொல்
இருக்கின்றேனா?
என் இலக்கியத்தில்...

தேடாதே
என் இலக்கியத்தில்
தாகூரை
புஷ்கினை
பாரதியை

சொல்
இருக்கின்றேனா?
நான்..


என்ற தன்னம்பிக்கை தளராத தமிழ் ஈழ வேட்கை கொண்டு, கோடிக்கணக்கான தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சங்களில் நிலையாக, நிறைவான இடத்தைப் பெற்று இருக்கின்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய, பொழிச்சல், நறுக்குகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் இவற் றை வெளியிடுகின்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருக்கின்ற ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்களே, வணக்கம்.


பகைவனே
என்னை
என் மண்ணில்
புதைத்தாய்
எங்கள் மண்ணை
நீ எங்கே புதைப்பாய்?

திலீபன் அழைப்பது சாவையா?
இந்தச் சின்ன வயதில்
இது தேவையா?

என, காலத்தால் அழியாத, காலப்புயலால் அணைக்க முடியாத கவிதைச் சுடர் களைத் தந்த, தமிழ் ஈழ விடுதலைக் கவிஞனாகத் திகழ்கின்ற உணர்ச்சிக் கவி ஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய நூல்களை வெளியிடுகின்ற அரியதோர் வாய்ப்பை வழங்கியதற்காக, அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

பொழிச்சல் என்ற தலைப்பில், அவர் ஆழ்ந்து ஆய்வு செய்து, புதுப்பா என்பது எது? என்பதை வரையறுக்கின்றார். இன்றைக்குப் புதுக்கவிதைகள் என்று சொல்லப்படுபவை, புதுப்பாக்கள் அல்ல;உரைநடை இலக்கியத்தின் கூறுகளே! அவை ஆழ்ந்த விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

விருப்பு வெறுப்பு இல்லாமல், அவர் தம்முடைய கருத்துகளை, இந்த நூலில் பதிவு செய்து இருக்கின்றார்.கடுமையாகச் சாடி இருக்கின்றார். அவர் இங்கே
குறிப்பிட்டார் அல்லவா? வால்ட் விட்மனில் இருந்து, சர்வாதிகாரிகளுக்குப் பக்கத்துணையாக இருந்தவர்களையெல்லாம் இங்கே விமர்சித்ததோடு, அந்த நூலில் பாரதியைக் காட்டுகிறார்; பாரதிதாசன் தந்த கவிதைகளைச் சொல்லு கிறார்.

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே
இங்கு வேரில் பழுத்த பலா
கொடுமை என்றிடப்
பட்டதண்ணே
குளிர் வடிகின்ற
வட்ட நிலா

என, பாவேந்தரை எடுத்து உரைக்கின்றார்.

பாவலர் ஏறு அவர்களுடைய பாடல்கள், அவை தமிழா?என்று ஒருவன் கேட் டானே, அப்போது அவனுக்குக் கவிஞர் இன்குலாப் கொடுத்த சவுக்கடியை இங்கே கொண்டு வந்து காட்டுகிறார்.

நீ
மறைந்து விடவில்லை;
மண்ணில்
புதைந்து விடவில்லை;

உன் எழுத்தும், சொல்லும்
எங்களை நிமிர்த்தும்;

என, பொழிச்சல் என்கின்ற இந்த இலக்கிய ஆய்வு நூலை வழங்கி இருக்கின் றார். அரைப்பக்கம், ஒருபக்கம் என அவர் எழுதிய கதைகளைத் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றோம்; அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘Fables’ என்ற தலைப்பில் இங்கே வெளியிட்டு இருக்கின்றோம்.

ஈழத்தில், மட்டக்களப்பில் பிறந்த இவர், எப்படிக் கவிஞர் ஆனார்?அதை அவரே குறிப்பிடுகின்றார்.

சின்ன வயதில், ஓடித்திரிந்த பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லுகின் றார். அப்போது, கல்கி இதழ் எங்கள் வீட்டுக்கு வரும். அங்கே ஒரு சிலர் தான்
வாங்கினார்கள். அவர்களுள் ஒருவராக, இவருடைய தமக்கையும், கல்கி இதழ் களைப் பெற்று வந்தாராம்.

ஒருமுறை அவர் கல்கி இதழை வாசித்துக்கொண்டு இருந்தபோது, அவரது கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் உருண்டு ஓடினவாம். பத்து வயதுச் சிறுவனாக இருந்த இவர் அருகில் சென்று பார்த்தாராம். அந்த இதழ் கல்கி அட்டைப் படத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் உடல் மீது, தேசியக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் ஒரு படம் இருந்ததாம்.

தன் தமக்கையிடம் இவர் கேட்கின்றார். எதற்காக அழுகிறாய்? என்று. அவர் சொல்லுகின்றார், மகாத்மாகாந்தியைச் சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று.

அதைக் கேட்ட உடன், நான் என் கையில் கிடைத்த ஒருதாளை எடுத்து, அதில் சில வரிகளை எழுதினேன்.

காந்தித் தாத்தா
நல்ல தாத்தா
கருணை உள்ள தாத்தா
மாந்தரிலே பெரிய தாத்தா
மகாத்மா காந்தி தாத்தா

இதுதான் நான் எழுதிய முதல் கவிதை என்கிறார். இன்றைக்கு, நீங்கள் வெளி யிட்டு இருக்கின்ற நறுக்குகளிலும் காந்தியைப் பார்க்கின்றேன்.

குட்டிமணி,ஜெகன்,தங்கதுரை உள்ளிட்ட தமிழர்கள் வதைக்கப்பட்டு, கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டு, அவர்களது இரத்தம் அங்கே இருந்த
புத்தர் சிலைக்கு முன்னால் ஒரு அடி உயரத்துக்குத் தேங்கி நின்றதே, அங்கே, அந்த வெலிக்கடைச் சிறையில் அடைபட்டு, மனதிலும், உடலிலும் காயங்க ளோடு, உடன்பிறந்த தம்பி ஜெயத்தை, புலிப்படை வீரனாக மரணத்துக்குப் பரிசாகத் தந்து, வாழ்நாள் நெடுகிலும் சிலுவைப்பாடுகளையே சுமந்துகொண்டு இருக்கின்ற கவிஞனே, இன்றைக்கு மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் என்ன எழுதி இருக்கின்றீர்கள்?

மகாத்மா
கொல்லாதவன்
உனக்கு

கொன்றவனைக்
கொல்கிறவன்
எனக்கு

என்ன அருமையாகச் சொல்லுகின்றார்! இதில் ஒரு சரித்திரமே அடங்கி இருக் கின்றதே! ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றின் பிம்பமே இதில் அடங்கி
இருக்கின்றது. சீறி வருகின்ற துப்பாக்கிக் குண்டுகளை எதிர்த்து நின்று கள மாடிய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களுடைய படை அணிகளின் உணர்ச் சியே இந்த வரிகளுக்குள் அடங்கி விட்டதே?

அதனால்தான், தமிழ் உலகம் உன்னைப் போற்றுகின்றது. இன்றைக்கு நம்மி டையே பாவேந்தர் இல்லை; ஆனால், அவருடைய பாடல்கள் உள்ளன. உணர்ச்சிகரமான கவிதைகள் உலவுகின்றன.

கொலை வாளினை
எடடா
மிகு கொடியோர்
செயல் அறவே

என்ற வரிகளை எழுதிய அந்தப் புரட்சிக்கவிஞருக்கு, என்றைக்கும் மரணம் இல்லை. அதைப்போன்ற கவிதைகளை நீங்கள் தந்து இருக்கின்றீர்கள்; எவ்வ ளவு ஆழமாகச் சிந்தித்து எழுதி இருக்கின்றீர்கள்! நான்கே வரிகளில்,உழவனின் வாழ்க்கையைச் சொல்லி விட்டீர்களே?

மண்ணில்
வாழ்க்கை
உழவனுக்கு
அறுவடைக்கு முன்!

உழவனின்
வாழ்க்கையில்
மண்;
அறுவடைக்குப் பின்!

உழவன், கலப்பையைப் பிடித்து உழுகிறான்; இரத்தத்தை வியர்வையாக மண் ணில் கொட்டுகிறான். ஆனால், அவனுக்குக் கிடைப்பது என்ன?

காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்?

என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அது அந்தக் காலத்துப் பாடல்.இன் றைக்கு அதைத்தான், நான்கே வரிகளில் சொல்லுகின்றார் நமது உணர்ச்சிக் கவிஞர்.

ஒன்றேமுக்கால் அடியில் வள்ளுவப் பெருந்தகைகருத்துகளைத் தந்ததை, இங்கே மணியரசன் அவர்கள் சுட்டிக் காட்டினார்; சிலப்பதிகாரத்தைப் பற்றிய
விமர்சனங்களுக்குப் பதில் கொடுத்தார். உலகில், தமிழனுக்கு நிகராக, காலத் தால் அழியாத காவியங்களைப் படைத்தவர்கள் வேறு எவரும் இல்லை.

செருப்பு ஆண்ட நாள்
என்கிறாய்;
செருப்பைத் தைத்தவன்
ஆளும் நாள்
எப்போது?

என்று கேட்கிறார் உணர்ச்சிக் கவிஞர்.

போராடுகிறார்கள்
கொல்கிறோம்
என்கிறாய்;

திருத்தம்

கொல்கிறாய்
போராடுகிறோம்

அவருடைய படைப்புகளுள், இத்தகைய உணர்வுகளை, சின்னஞ்சிறு வரி
களில் செதுக்கிக்கொண்டே வருகிறார்.

எதிரிக்குத்
தெரியாமல்
சோறு போட்டாள்
போராளிக்குக்
கிழவி

நீ
நினைக்கிறாய்
அவனுக்கு
உயிரூட்டுகிறாள்
என

இல்லை;
அவன்
சாவிலே
பங்கு கேட்கிறாள்

ஈழமண்ணின் துயரங்களை, அவலங்களை, இந்த வரிகளில் காணலாம். கழுத் திலே நஞ்சுக் குப்பிகளைக் கட்டிக்கொண்டு, மரணத்துக்கு அழைப்பு விடுத்துக்
களத்திலே போராடுகின்ற புலிப்படை வீரனுக்கு,வீராங்கனைக்கு உணவு கொடுத்தாள் என்று தெரிந்தால், அவர்கள் தங்கிச் செல்ல இடம் அளித்தால்,
அவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதைத் தெரிந்தே கிழவி சோறு போடுகிறாள்; எனவே, அவள் சாவிலேதான் பங்கு கேட்கிறாள்.இப்படிப்பட்ட உணர்வுகொண்ட இனத்தை, எவன் அழிக்க முடியும்? ஏழு அணு வல்லரசுகள் கொடுத்த ஆயுத உதவிகளைக் கொண்டு, நீ புலிகளைக் களத்திலே தோற்கடித் தாய்.

கவிஞருடைய கவிதைகள் உணர்ச்சி ஊட்டும்; மண்ணில் இருந்து பீறிட்டுக் கொண்டு வெளிவரும்.மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்கள் எழுந்து வருவ தைப்போல, இவரது கவிதைகள், தமிழ் ஈழவிடுதலைக்கு உணர்ச்சியை ஊட் டிக்கொண்டே இருக்கும் இதை அழிக்க உன்னால் முடியாது.

கவிஞரின் கதைகளைத் தமிழில் வெளியிட்டபோது,அதைப் பற்றிச் சொன்னேன்.

ஒரு குருவிக்குஞ்சு தன் தாய்க்குருவியிடம் கேட்கிறது.அம்மா நமக்கெல்லாம் சிறகு முளைத்து இருக்கின்றது.அதோ, புல்லை மேய்ந்து கொண்டு இருக்கின் றதே எருது, அதற்கு ஏனம்மா சிறகு முளைக்கவில்லை? என்று கேட்கிறது.

அதற்குத் தாய்க்குருவி சொல்லுகிறது. ‘எருதுக்குச் சிறகுகள் தேவை இல்லை. ஒருவேளை வானத்தில் புல் முளைத்தால், எருதுக்குச் சிறகு முளைக்கும் என் கிறது.

அதையெல்லாம் இப்போது ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து இருக்கின்றார் கள்:

If the grass grows in the sky;
Even the bull will grow wings

அடுத்து ஒரு கவிதை. தெருவிலே கிடக்கின்ற குருணைக் கல்லுக்குக் கோபம் வந்து விட்டது.அதோ ஒரு அழகிய கண்ணாடிப்பேழையில் ஜொலிக்கிறது ஒரு வைரக்கல்.அது சுடர் விடுகின்றது, பளிச்சிடுகின்றது. அதை எத்தனை பேர் கண்டு மகிழ்கின்றார்கள்.அந்த வைரக்கல்லுக்கு எவ்வளவு மரியாதை!ஆனால்,
என்னை யாரும் கண்டு கொள்வதே இல்லையே என, குருணைக்கல்லுக்குக் கோபம் வந்துவிட்டது.

அப்போது, அதற்கு ஒரு பதில் கிடைக்கின்றது.

நீ இங்கே மண்ணுக்கு மேலே கிடக்கின்றாய்.ஆனால், எத்தனை ஆயிரம் ஆண் டுகளாக, மண்ணுக்கு உள்ளேயே இருந்து, மறைந்தே கிடந்து, நிறைவாகும் வரை மறைவாகவே இருந்து, இன்றைக்கு அது ஒளி பெற்று இருக்கின்றது. இதற்காக நீ ஏன் பொறாமைப்படுகின்றாய்? எனவே, நிறைவாகும் வரை, நீ மறைவாகவே இரு; பலம் வாய்ந்த பகைவர்களின் படை அணிகளை எதிர் கொள்ளுகின்ற அளவுக்குப் பலம் பெறுகின்றவரையிலும் மறைவாகவே இரு; இருப்பாய்.

remain hidden;
till you
attain completion

என ஆங்கிலத்தில் அழகாக மொழிபெயர்த்து இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் ஆங்கிலத்திலே உரையாடல்களா? என விமர்சிக்கின்ற கவிஞரின் நூல், இன் றைக்கு ஆங்கிலத்திலே வந்து இருக்கின்றது.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்

என்றான் பாரதி. அதேநேரத்தில், நம்மையும் உலகம் உணர்ந்து கொள்ள வேண் டும். திருக்குறளை ஜி.யு.போப், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.இன்றைக்கு உலகில் மத நூல்களுக்கு அடுத்தபடியாக, திருக்குறள்தான், அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றது. சிலப்பதிகாரம் மொழிபெயர்க்கப் படு கின்றது.

பாலஸ்தீன கவிஞனைப் பற்றி அழகாகச் சொன்னார்.அந்தக் கவிஞனின் உயிர் வரிகளை எழுதி இருக்கின்றார்.அவற்றைப் படிக்கின்ற இளைஞனுக்கு உணர்ச் சியை ஊட்டும். அதைப்போல, காசி ஆனந்தனுடைய கவிதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில்மொழிபெயர்க்கப்படும்போதுதான், அவர்களுக்கும் தமிழ் ஈழ விடுதலை உணர்வு பற்றிய செய்திகள் போய்ச் சேரும்.

காசி ஆனந்தன் அவர்கள், இளம்பருவத்தில் நுரையீரலில் காச நோய் ஏற்பட்டு, மிகுந்த வேதனைக்கு உள்ளானவர், துன்பங்களை அனுபவித்தவர். பல ஆண்டு கள் சிறையில் வாடியவர். இராணுவத்தால்,காவல்துறையால் வேட்டையாடப் பட்டவர். அவரது குடும்பம், எவ்வளவோ தியாகங்களைச் செய்து இருக்கின் றது, ஓவியர் வீர சந்தனம் சொன்னாரே.

என் தேசத்துப் பறவைகள்
என்னை விட உயர்ந்தவை;
அவை தம் சிறகுகளை விரிக்கவில்லை;
ஆனால், நாங்கள் அந்த மண்ணை விட்டுப்
புலம்பெயர்ந்து, ஏதிலிகளாய் வர நேர்ந்ததே?

என வருந்துகிறார்.

இப்படி, கவிஞரின் ஒவ்வொரு வரியையும் எடுத்து வைத்துக்கொண்டு விரி வாகப் பேசலாம். அத்தகைய படைப்புகள், அடுத்த தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும்.

பொதுவாக, படைப்பு ஆற்றல் என்பது, ஒரு கட்டத்துக்குப் பிறகு மங்கி விடும். சில பேர் எதிர்மறையாகவே எழுதி இருக்கின்றார்கள். அவர்களை நான் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை. இதுதான் அவரது உயிரான படைப்பு என்பார்கள்; பின்னாட்களில் அந்த உயிர்த்தன்மை சிலருக்குக் குறைந்து போயிருக்கின்றது. ஆனால், இந்தக் கவிஞனின் படைப்பு ஆற்றல் நாளுக்கு நாள் உரம் ஏறி, உயிர்ப்புத்தன்மை மென்மேலும் வலுக்கின்றது.அதுதான், இவருடைய சிறப்பு. அவருடைய நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியோட்டம், தமிழ் ஈழ விடுத லைக்காகவே துடிக்கின்றது.

இந்த வேளையில், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க, தமிழ் கூறும் நல்லு லகம் துடிக்கின்றது. மரணக்கயிறு அறுத்து எறியப்பட வேண்டும் என ஏங்கு கின்றது.அறுத்து எறியப்படும் என்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கி இருக்கின்றது.

பாவலர் ஏறு சொன்னார்;

எங்களுக்குத் திலீபன்கள் தேவை;
உண்டு செரித்து உறங்குவதற்கு அல்ல;
எதிரிகளைப் பந்தாடி மடிவதற்கு

என்றார். அப்படித்தான் செங்கொடி தன் ஆவியைத் தந்தாள். கூடங்குளத்தில், அப்படித்தான் மக்கள் போராடுகின்றார்கள். உயிரைக் கொடுப்பதற்கும் ஆயத்த மாக, உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றார் கள். ஆனால், அணு உலை பாதுகாப்பானது என நிபுணர்கள் அறிக்கை தந்து
இருக்கின்றார்கள் என்றும், போராட்டக்காரர்களை அயல்நாட்டுச் சக்திகள் பின் னால் இருந்து இயக்குகின்றார்கள் என்றும் அவர்களைக் கொச்சைப்படுத்தவும் முயல்கின்றார்களே, அவர்களைக் கேட்கின்றேன்.

பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை வலுவாகத்தான் இருக்கின் றது என, உச்சநீதிமன்றம் அமைத்த இரண்டு நிபுணர் குழுக்கள் அறிக்கைகள் தந்து விட்டன. அதற்குப்பின்னரும், அணையை உடைக்க 40 கோடி ஒதுக்கி இருக்கின்றதே கேரள அரசு, அதைக் கண்டிக்க நீங்கள் ஏன் முன்வரவில்லை?

விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு,கூடங்குளம் பாதுகாப்பா னது என பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளக்கம் தருகின்ற பெரிய மனிதர் கள், இதுவரை 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், சிங்களக் கடற்படை யால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்களே, இராமேஸ்வரத்தை அடுத்த கட லில், இது கொடுமை; தடுத்து நிறுத்த வேண்டும் இந்திய அரசு என்று வெளிப் படையாக இதுவரை சொல்லி இருக்கின்றார்களா?

அழிவு எங்களுக்கு... மின்சாரம் யாருக்கு?

இங்கே அணு உலை அமைத்து,எங்கள் தலையில் கொள்ளிக்கட்டையை வைக் க எத்தனிக்கின்றது இந்திய அரசு. கூடங்குளத்தில் அணுமின் நிலையத் தை
அமைத்து, அதில் உற்பத்தியாகின்ற மின்சாரத்தை எங்கே கொண்டு செல்லப் போகின்றாய்? பிற மாநிலங்களுக்கு மட்டும் அல்ல தோழர்களே,நாடாளுமன்ற மாநிலங்கள் அவையிலே, இந்திய அரசின் அமைச்சர் தந்து இருக்கின்ற ஒரு அறிக்கையில், ஒரு கேள்விக்குத் தந்த பதிலில் வெளிப்படையாகவே சொல்லி இருக்கின்றார்.

Power Grid Cororation of India Ltd entered into agreement, signed an MOU -Memorandum of Under standing with the Ceylon Electricity Board.

இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கப் போகின்றார்களாம்.அதற்காக,இந்திய மின் கழகம், இலங்கை மின்சார வாரியத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள் ளது என்கிறார். எப்போது? 2010 ஜூன் 9. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்ததற்குப் பிறகு, தமிழகமே கொதித் து எழுந்ததற்குப் பிறகு, எட்டுத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக இழுத்து வரப் பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்ட கொடுமை, உலகத்தின் கண்களுக்கு வந்ததற்குப் பிறகு, 19 தமிழர்கள் தீக்குளித்து மடிந்ததற்குப் பிறகு, தமிழர் நெஞ்சமெல்லாம் தணலாக எரிகின்ற வேளையில், 2010 ஜூன் மாதம், இவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

என்ன ஆணவமும், எங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந் தால், இந்திய அரசுக்கு இந்தத் துணிச்சல் வரும்? ஐரோப்பிய ஒன்றியம், இலங் கைக்குப் பொருளாதாரத் தடை விதித்ததற்குப்பிறகு, நீ அந்தக் கொலைகாரன் இராஜபக்சேவை இங்கே அழைத்துக்கொண்டு வந்து,சிவப்புக்கம்பளம் விரித்து,
திருப்பதியில் பூரண கும்ப மரியாதைகளோடு, வரவேற்புக் கொடுக்கின்றாய். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு அவன்தான் சிறப்பு விருந்தாளி. ஐரோப்பிய ஒன்றியம் எதிர்க்கின்ற வேளையில்,இந்தியா இதைச் செய்கின்றது.

அன்னை பார்வதியின் சிதையில், நாய்களைக் கொன்று எரித்தானே, அந்தக் காலகட்டத்தில் அவன் இங்கே வருகின்றான். இப்போது, இங்கே மின்சாரத்தை உற்பத்தி செய்து, கடலுக்கு அடியில் கம்பிகளைப் பதித்து, இலங்கைக்குக் கொண்டு போய்க் கொடுக்கப் போகின்றார்களாம். எதிர்காலத்தில், ஆழிப்பே ரலை தாக்கினால், பூமி அதிர்ந்தால், அழிவு எங்களுக்கு; மின்சாரம் அவனுக்கா? இந்திய அரசே பதில் சொல்.

எல்லா முனைகளிலும் தமிழகம் தாக்கப்படுகின்றது.இந்திய அரசு நமக்கு வஞ் சகம் இழைக்கின்றது. தமிழ் இனத்தைக் கரு அறுக்க முனைகின்றார்கள். திட்ட மிட்டு ஈழத்தில் தமிழர்களைப் படுகொலை செய்தார்கள்.

ஆடை என்ற தலைப்பில், கடைசியாக எழுதி இருக்கின்றார் கவிஞர் இசைப்பிரி யாவைப் பற்றி. பார்க்க முடியுமா அந்தக் கொடுமையை? நான் முதலில் வெளி யிட்ட ஒளிப்படக் குறுவட்டில் இருந்தது. இரண்டாம் பதிப்பில் மறைத்து விட் டேன். பார்த்தவர்கள் எல்லாம், எங்கள் குருதி கொதிக்கின்றது என்றார்கள்.

அத்தகைய உணர்ச்சியைத் தரக்கூடியவை, காசி ஆனந்தன் பாடல்கள். காலத் தால் அழியாத உயிர்க் காவியத்தை, குறுங்கதைகளாக, கவிதைகளாகத் தரு கின்ற இந்தக் கவிஞனின் ஆற்றல் மென்மேலும் வளரட்டும், தமிழ் ஈழ விடு தலைக்கு ஒளிச்சுடராக இருக்கும் என்பதால்.

“கவிஞனே நீ வாழ்வாயாக!

விடுதலை பெற்ற தமிழ் ஈழத்தின் அரசுக் கவிஞனாக அமர்வாயாக!”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment