Monday, June 3, 2013

தமிழ் ஈழம் கானல் நீரல்ல... இரத்தத்தால் தியாகத்தால் எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை! பகுதி 3

இன்றைக்குச் சொல்கிறேன். பதவிகளுக்காக அல்ல.எந்தத் தமிழ் ஈழத்துக்காக நீங்கள், உன் தம்பிமார்கள்,உன் சகோதரிகள் ரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தத் தமிழ் ஈழத்தைத் தட்டியெழுப்ப இந்தத் தாயகத்திலே தமிழர் தாயகத்தி லே எங்கள் தமிழ்நாட்டிலுள்ள வாலிபர்களை - இளைஞர்களைத் தயார்படுத்து வது என்னுடைய வேலை. அதற்குச் சூளுரைக்கிறேன்.-வைகோ (27.11.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.

கண்டிப்பாகப் போடக் கூடாது. இது பேராபத்தில் போய் முடியும் என்று நான்
சொன்னேன். ஐந்து கேபினட் மந்திரிகளைத் தனித்தனியே கூப்பிட்டு மன்மோ கன் சிங் கேட்டார். எனக்குத் தெரிய அந்த ஐந்து பேருமே ஒப்பந்தம் கூடாது என் றுதான் சொன்னார்கள்,”என்றார். அப்படியானால், மன்மோகன் சிங் அவர்களே! இந்த ஒப்பந்தத்தைப் போடாமலேயே இவ்வளவு ஆயுதங்களைக் கொடுக்க லாம் என்கின்ற ஏற்பாட்டைச் செய்ய உங்களைத் தூண்டியது யார்? இராஜபக் சே வுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆயுதம் கொடுக்கச் சொல்லி- ராடார் கொடுக்கச் சொல்லி -உங்களைத் தூண்டியது யார்? இந்தக் கேள்விகள் எல்லாம் இன்றைக்கு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டன.


ஆகவே, இவ்வளவு பெரிய ஆயுத பலத்தைக் கொலைகாரன் இராஜபக்சேவுக்கு உருவாக்கிக் கொடுத்தீர்கள்.அம்பன்தோட்டாவிலே இன்றைக்குச்சீனத் துறை முகம் மட்டுமல்ல; சீனர்கள் பக்கம் அவன் சாய்ந்து விட்டான். அது மட்டுமல்ல; இந்தியாவினுடைய கடல் எல்லைக்குள்ளே வந்து, நம்முடைய மீனவர்களைத் தினமும் அடிக்கிறான், கொல்கிறான். நம் மத்திய அமைச்சர் -உள்துறை மந்திரி பேசுகிறார். மீனவர்கள்பிரச்சினை ஒரு சச்சரவு. இலங்கைக் கடற்படைக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கிற ஒரு சச்சரவு. சுட்டுக் கொல்வது சச்சரவா? உள்துறை அமைச்சரைக் கேட்கிறேன்.நம்முடைய மீனவர்களை நம் கடல் எல் லைக்குள்ளேயே வந்து சுட்டுக் கொல்வது சச்சரவா? இன்னொரு பெரிய மோச டி செய்தார்கள் அவர்கள்.தமிழ்நாட்டு மீனவர் சங்கங்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு தமிழ் ஈழ மீனவர் அமைப்புகளும் வந்து பேசி இரண்டு தரப்பி னரும் கைகுலுக்கினார்கள் என்று மோசடித்தனமான ஒரு செய்தியை ஊடகங் களுக்குக் கசிய விட்டார்கள்.


நான் சொல்கிறேன்: தமிழ் ஈழ மீனவ அமைப்பிலிருந்து இலங்கையில் யாரும்
போகவில்லை. தமிழ் ஈழ மீனவர்கள் சொல்லி விட்டார்கள், “எங்களைச் சந்திக் க வைத்து, எங்களுக்குள்ளே பிரச்சினை இருப்பது மாதிரி சிண்டு முடியும் வேலையை இராஜபக்சேசெய்யப் பார்க்கிறான். இதற்கு நாங்கள் இரையாக மாட்டோம் என்று தமிழ் ஈழ மீனவர்கள் சொல்லி விட்டார்கள். எங்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.சிங்களக் கடற் படை அவர்களைப் பிடித்து அடிக்கிற காலங்களில் நாங்கள்தான் பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்,” என்று.

எனவே, இந்திய அரசு இவ்வளவும் செய்துவிட்டு, ஆயுதம் கொடுத்துவிட்டு மீள் குடியேற்றம் என்ற பெயரில் ஐம்பதாயிரம் வீடு கட்டித் தரப் போகிறீர்களா?அவர்கள் வீடு வாசல் எல்லாம் இழந்து, அவர்கள் தாயக உரிமைக்காகப் போரா டிக் கொண்டு இருக்கிறார்கள்.

“இலங்கைத் தீவின் வடக்கும் கிழக்கும் தமிழர்களின் பூர்வீகத் தாயகம்”. நான்
சொல்லவில்லை. இந்திய வரலாறு போற்றுகின்ற அம்மையார் இந்திராகாந்தி இந்திய நாட்டுப் பாராளுமன்றத்தில் சொன்னார். தன்னுடைய மெய்க்காப்பாளர் களால் சுட்டுக் கொல்லப் படுவதற்கு முன்பு அவர் பேசிய கடைசிப் பேச்சு. இந் திய நாட்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் இந்த எளியவன் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே பேசிய பேச்சுதான் அவர் பேசிய கடைசிப் பேச்சு.

அந்தப் பேச்சிலேதான் அவர் சொன்னார்.நான் மிகுந்த வேதனையோடு கேட் டேன். “வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்தீர்களே! கராச்சியின் பிடியிலி ருந்து டாக்காவை விடுவித்தீர்களே! மானெக்ஷாவின் இராணுவத்தை அனுப்பி வங்காள தேசம் என்கின்ற ஒரு நாட்டை உதயமாக்கி உலக வரைபடத்திலே உருவாக்கிக் கொடுத்தீர்களே! நீங்கள் வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுத்து விட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது,பிரதமர் அவர்களே! உங்களுக்கு நேர் எதிராக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் ஜனசங்கத்தின் தலைவர் வாஜ்பாய் ‘துர்க்கையே வருக!’ என்று வரவேற்றார். ‘துர்க்கா தேவியே வருக!’ என்று உங்களை வரவேற்றார்.பிரதமர் அவர்களே! தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுங்கள். எங்களது சந்ததிகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு உங்களைப் பராசக்தி என்று போற்றுவார்கள்,” (கைதட்டல்) அந்த உரை நிகழ்த்தப்பட்ட அன்று அவர் வெளியே வரும்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

1983-ஆம் ஆண்டு அவ்வளவு பெரிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது, 1983-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ஆம் தேதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறபோது, இலங்கையில் நடப் பது தமிழ் இனப்படுகொலை என்று சொன்னார். அதே இந்திரா காந்தி அம்மை யார் தான் 1984-இல் தான் மடிவதற்கு முன்பு பேசிய கடைசிப் பேச்சில் சொன் னார். அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்களே தமிழர்கள்தான்.

இதைச் சொன்னவர் யார்? உலக சரித்திரத்தைக் கடிதங்களாகத் தீட்டிய - உலக சரித்திரத்தைப் பல பேர் எழுதியிருக்கிறார்கள். நான் சரித்திரப் பாடத்தை விரும்பிப் படிக்கிறவன். எனக்குத் தெரிந்தமட்டில், உலக சரித்திரத்தை எழுதிய வர்களில் பண்டித நேருவுக்கு நிகராக எவரும் எழுதியதாக நான் நினைக்கவில் லை.அப்படிப்பட்ட முறையில் அவர் அகமது நகர் கோட்டைச் சிறையிலும், நைனி சிறையிலும் இருந்தபோது எழுதி இருக்கக் கூடிய சரித்திரத்தைப் போதித்தவரின் மகள் சொல்லுகிறார்.இலங்கையின் வடக்கு கிழக்கில் இருக் கக் கூடியவர்களின் பூர்வீகத் தாயகம். இராஜபக்சே சொல்கிறான்: தமிழர் தாய கமே கிடையாது என்று. மானங்கெட்டவர் களே! காமன்வெல்த் போட்டிக்கு
அவனை அழைத்து வந்தீர்களே! அவன் சிறப்பு விருந்தினரா? திருப்பதிக் கோவி லில் அந்தக் கொடியவனுக்குப் பூரண கும்ப வரவேற்பளித்தீர்கள். இவ்வளவு செய்தீர்களே அந்தக் கொலை பாதகனுக்கு! தமிழர் தாயகமே கிடையாது என் கிறான் அவன்.

தமிழர்கள் இருக்கும் பகுதிகளிலே சிங்களவரைக் குடியேற்றுகிறான்...மேற்குக் கரையிலே யூதர்களைக் குடியேற்றுகிறான் என்பதுதானே அங்கே பிரச்சினை. சிங்களக் குடியேற்றத்தை எதிர்த்துத்தானே திலீபன் உண்ணாவிரதம் இருந் தான். இன்றைக்குச் சிங்களக் குடியேற்றம் பகிரங்கமாக தமிழர் பகுதிகளில் நடக்கிறதே!

நாம் கேட்காமல் யார் கேட்பது? நாம் தலையிடாமல் யார் தலையிடுவது?அன் புக்குரியவர்களே! தமிழ் ஈழம் என்று கேட்பது வடக்கையும் கிழக்கையும் மட் டும்தான். ஆனால், விடுதலைப்புலிகளைத் தடை செய்வதற்காக அமைக்கப் பட்டிருக்கக் கூடிய தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம்ஜித் சென்னுக்கு தடைக்கான காரணங்களை அனுப்பினார்கள். அதில் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து; ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்றதோடு மட்டுமல்ல. எல்லாத் தமிழர் களுக்கும் சேர்த்து அவர்கள் தமிழ் ஈழம் அமைக்க கோரிக்கை வைத்திருக் கிறார்கள். தமிழ் நாட்டையும் சேர்த்து தமிழ் ஈழம் அமைக்கப் போகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டைத்தான் இந்திய அரசு வைக்கிறது. நான் அதை மறுத்தி ருக்கிறேன். அண்ணன் நெடுமாறன் மறுத்திருக்கிறார். நான் கூட சொன்னேன்: அவர்கள் நன்றாக இருக்கட்டும். இங்கு ரொம்பக் கெட்டுப்போய்க் கிடக்கிறது. இதுவும் போய் அங்கே கலப்படமாகி விடக்கூடாது. அவர்கள் நல்லபடியாகத் தமிழ் ஈழத்தை அமைக்கட்டும்.

தமிழ்நாட்டை அதனுடன் சேர்க்கச்சொல்லி அவர்கள் கேட்கவில்லை; தந்தை செல்வா கேட்கவில்லை. அப்படி யானால் இங்குள்ள இளைஞர்களுக்காகச்
சொல்கிறேன், வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

ஐரோப்பியர் வருகைக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு.
பிரிட்டிஷ்காரன் வெளியே போன பிறகு சிங்களவர்களின் கைகளில் நியாயம்
கிடைக்கும் என்று நினைத்தார்கள்.தமிழர்களுக்குப் பள்ளிகளில் நியாயம் இல் லை; கல்விச் சாலையில் நியாயம் இல்லை; இடம் இல்லை. வேலை வாய்ப் பில் இடம் இல்லை. பெளத்த மதமே அரசு மதம்; சிங்கள மொழியே அரசு மொழி. நீதி கேட்டுப்போராடினார்கள் தமிழர்கள். மகாத்மா காந்தி வழியில் போராடி னார்கள். அவர்களது தலை பிளக்கப்பட்டது.சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள்.பெண் கள் நாசப்படுத்தப்பட்டார்கள். தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். இந்தக்
கட்டத்துக்குப் பிறகு தந்தை செல்வா, காங்கேசன்துறை எம்.பி. பதவியை
இராஜினாமா செய்து விட்டு, சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு. இதை முன்வைத் துத் தேர்தலில் போட்டிபோடுகிறேன் என்றார். போட்டியிட்டு 80 சதவீதம் வாக் குகள் பெற்று வென்றார்.

1976, மே 14-இல் வட்டுக்கோட்டையிலே தீர்மானம் போட்டு,இனி சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றே நம்முடைய இலட்சியம்.இறையாண்மையுள்ள சுதந்திரத் தமிழ் ஈழ அரசே இலட்சியம். இதை 1976-இல் தீர்மானமாகப் போட் டார் கள். 1977-இல் தேர்தல்.90 சதவீதம் மக்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்து வெற்றி பெற வைத்தார்கள்.

நான் இந்திய சர்க்காரைக் கேட்கிறேன்.மொத்தத் தமிழ் மக்களும் தமிழ் ஈழம்
வேண்டும் என்றுதானே ஓட்டு போட்டார்கள்? 1979-இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வருகிறார்கள்! 1977-இல் மக்கள் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். அதன் பிறகு சிங்களவர்கள் பிரிவினைப் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வருகிறார்கள். யாழ்ப்பாணம் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்து கிறார்கள். வெளிக்கடைச் சிறைக்குள்ளே தமிழர்களை வெட்டிச் சாய்க்கிறார்கள்.குட்டிமணியின் கண்களை பூட்ஸ் கால்களால் போட்டு மிதிக் கிறார்கள்.இவ்வளவு கொடுமைகளும் நடக்கின்றன.

ஆயுதம் தாங்காமல் தமிழன் என்ன செய்வான்? வெள்ளைக்காரன் ஆட்சி நடத் தியதால் மகாத்மாவின் இராட்டை சுழன்றது. தக்ளி ஓடிற்று. இல்லை என்றால் - இந்த மாதிரி அக்கிரமக்காரர்கள் இருந்திருந்தால் தக்ளியும் இராட்டையும் வெற்றி தேடித் தந்திருக்க முடியாது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துதான் கடைசியில் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

ஆங் சான் சூகி 15 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பிள்ளைகளையும்,
பேரப் பிள்ளைகளையும்கூட பல வருடங்கள் பார்க்காமல் இருந்து -விடுதலை பெற்று விட்டார். அவருடைய தந்தை ஆங் சான் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட ஜப்பானுடன் சேர்ந்து போராடினார். முப்பது பேரைக்
கொண்ட வீரர்களுடன் இராணுவத்தில் சேர்ந்து இராணுவப் பயிற்சி பெற்றார்.
இராணுவப் பயிற்சி பெற்ற ஆங் சான், ஜப்பான்காரன் ஏமாற்றுகிறான் என்று
பிரிட்டிஷ்காரனுடன் சேர்ந்து கொண்டார்.

பின்னர் நமக்குச் சுதந்திரம் கிடைத்த அதே காலகட்டத்தில், அவர்களுக்கும் சுதந்திரம் கிடைக்க ஏற்பாடாகி, அதற்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டு
மந்திரிசபை கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, எந்திரத் துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் ஆங் சானையும் உடன் இருந்தவர்களையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். 32 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் தான் ஆங் சான் சூகி.

நமக்குப் பக்கத்தில் இருக்கும் பர்மா.இந்தியாவே! அந்த நாட்டு இராணுவ ஜென ரலுக்கு விருந்து வைத்தாயே! குரல் கொடுத்தாயா நீ? அதைத்தான் நன்றாகக் கேட்டார் இந்திய நாடாளுமன்றத்திலே பாரக் ஒபாமா.பக்கத்து நாடுகளில் மனி த உரிமைகள் மீறப்படும் போது இந்தியா வாய்மூடி இருக்கக் கூடாது. பர்மாவி லும் நடந்தது என்று கூறினார்.

நாங்கள் கேட்கிறோம். ஆங் சான் ஆயுதமேந்திப் போராடினாரே! நெல்சன் மண் டேலா உலகத்தின் மாபெரும் தலைவர். அவர் கோர்ட்டில் சொன்னார்: “எங்கள் மக்களை விடுவிக்க வெள்ளையரின் அடிமைத் தளைகளில் இருந்து விடுவிக் க, ஆயுதப் போராட்டம் தான் சரி என்று முடிவெடுத்து நான் ஆயுதம் ஏந்துவதற் காகப் பயிற்சி எடுத்தேன்.”அதைத்தானே பிரபாகரன் செய்தார்.

ஆனால், இந்திய அரசே! அன்றைக்கு ஒரு போஃபர்ஸ் பீரங்கிபேர ஊழலில் சிக் கியதன் காரணமாக அவர்களை வஞ்சகமாக அழைத்துக் கொண்டு வந்து, அவர் கள்மீது ஒப்பந்தத்தைத் திணித்து, இந்தியப் படைகளை அனுப்பி, உண்ணாவிர தம் இருந்த திலீபனை சாகவிட்டு, அதற்குப் பிறகு குமரப்பா -புலேந்திரன் உள் ளிட்ட 12 புலிகளின் தளபதிகள் சாவுக்குக் காரணமாக இருந்து, அன்றைக்கும் தமிழர்களை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தைப் பயன்படுத்தினீர்கள். அன் றைக்கு போஃபர்ஸ் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக - மக்கள் கவனத் தைத் திருப்புவதற்காக அந்த ஊழல்,இப்போது ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற் கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவர்கள் என்ன கொள்ளை அடித்தாலும் பரவாயில் லை; தமிழ்நாட்டில் கருணாநிதி கூட்டம் அமைதியாக இருந்தால் போதும் என்று சொல்லி இவ்வளவு பெரிய ஊழலைச் செய்ய அனுமதித்து விட்டீர்கள். போஃபர்ஸ் ஊழலுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கிறது; ஸ்பெக்ட்ரமுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் தொடர்பு இருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் டப்ளினில் கூடியது தீர்ப்பாயம்.தீர்ப்பாயத்தின் 12 நீதிபதி களில் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இராஜேந்திர சச்சார். அவர்கள் கொடுத்த தீர்ப்பில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றனர். இந்தோனேசியாவின்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருஸ்கி தரிஸ்மன்; அதைப்போல தென்னாப்பி ரிக்கா வின் மனித உரிமைக்காகப் போராடி வந்த அம்மையார் யாஸ்மின் சுகா; இன்னொருவர் அமெரிக்காவின் தலைசிறந்த வழக்கறிஞர் ஸ்டிவென்ராட்னர். இந்த மூன்று பேரும் கொண்ட குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்தார். இங்கிலாந்துக்கே இவன் போகவில்லையே இராஜ பக்சே. பிரச்சி னையாகி விடுமோ என்று சொல்லி.

இந்த வேளையில் நல்ல செய்தியொன்றை உங்களுக்குச்சொல்கிறேன். நல்ல செய்தியைக் கேட்க ஆவலாய் இருப்பீர்கள் அல்லவா? வெறும் கஷ்டமான
செய்திகளையே கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி? நீதி செத்து விடவில்லை தோழர்களே! நியூசிலாந்துக்கு இங்கேயிருந்து விடுதலைசெய்து அனுப்பப் பட்ட ஈழத்தமிழ் இளைஞன் ஒருவன் போனான். அவன் கிட்டுவுடன் கப்பலிலே பயணம் செய்தவன். கிட்டுவை 450-ஆவது கடல் மைலிலே இந்தியக் கடற் படை மறித்தது. அண்ணன் நெடுமாறன் வழக்கு தொடுத்தார்.கிட்டுவின் கப்பல் மீது இந்தியக் கப்பற்படை சுட்டது.அதன் விளைவாகத்தான் கடைசியில் இவர் கள் கப்பற்படையுடன் சென்று தாக்கியபோது அந்தச் சண்டையிலே கிட்டு எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.

இதை விசாகப்பட்டினம் நீதிமன்ற நீதிபதி செருப்பால் அடிப்பதுபோல் கேட் டார். இந்தியக் கடற்படையைப் பார்த்து, “உனக்கென்னடா வேலை 450-ஆவது
மைலிலே. நீ எப்படி அங்கே சென்று அவர்கள் கப்பலை மறிக்கலாம்?” என்று. அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்குப்போனார்கள். மூன்று வருடம் இருந்தார்கள். தைப் பொங்கலுக்குப் போக வேண்டிய கிட்டு இறந்து போனார்.ஆனால், அங் கிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட அந்தத் தமிழ் இளைஞன் பெயரைச் சொல்ல வில்லை -நியூசிலாந்து சுப்ரீம் கோர்ட்டிலேயே அவன் பெயரை எக்ஸ் என்று போட்டு ஸ்ரீ லங்கன் தமிழ் யூத் என்று போட்டிருக்கிறார்கள். அந்த இளைஞன், “எனக்கு அகதி அந்தஸ்து கொடுங்கள்,” என்று கேட்டான். அகதி அந்தஸ்தை வழங்கக் கூடிய அங்கே இருக்கக்கூடிய அந்த அமைப்பு,“உனக்கு அகதி அந்தஸ் து தர முடியாது. நீ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவன்,” என்று கூறி அவனது கோரிக்கையை நிராகரித்து விட்டது. அவன் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய் தான். அந்தக் கோர்ட்டும் அவனது கோரிக்கையை நிராகரித்து விட்டது. அவன்
நியூசிலாந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனான். நியூசிலாந்து சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து,இந்த வருடம் ஆகஸ்டு 10-ஆம் தேதி அவன் அகதி அந்தஸ்து பெறக் கூடிய எல்லாத் தகுதிகளும் கொண்டவன் என்று சொன்னது மட்டுமல்ல; எல்.டி.டி.இ., பொலிடிகல் மூவ்மெண்ட் - அரசியல் இயக்கம் என்றது. நீ என்ன டா இங்கே டெரரிஸ்ட் ஆர்கனைஸ் என்கிறாய்? பொலிடிகல் மூவ்மெண்ட் என்று வைகோ சொல்லவில்லை. நியூசிலாந்து நாட்டின் மூன்று நீதிபதிகள்
சொல்லியிருக்கிறார்கள். (கைதட்டல்) இப்படிப் பல நாடுகள் சொல்லும்.

தமிழர் பக்கம் நியாயம் இருக்கிறது அல்லவா? நியாயம் ஒருநாள் ஜெயிக்கத் தானே வேண்டும். சத்தியம் ஒருநாள் ஜெயித்துத்தானே ஆக வேண்டும். அந்த
நம்பிக்கையில்தானே இன்று மாவீரர் நாளில் நாம் இந்தச் சுடரை ஏற்றி சூளுரைத்திருக்கிறோம்.விடுதலைப்புலிகள் இயக்கம் அரசியல் இயக்கம் என
நியூசிலாந்து சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது. இங்கே டில்லி தீர்ப்பாயத்தில் செப்டம்பர் 21, 24 ஆகிய இரண்டு நாட்களும் போய் வாதாடும்போது நீதிபதி கேட்டார்.“நீங்கள் எல்.டி.டி.ஈ.யா?” என்றார். நான், “எல்.டி.டி.ஈ. இல்லை; எல்.டி. டி.ஈ. சப்போர்ட்டர்,” என்றேன். “அதில் ஏதாவது சிக்கல், பிரச்சினை வந்து விடக் கூடாது,” என்றார்.

அதன்பிறகு என்ன ஆச்சு? அங்கே நாங்கள் வாதாடினோம்; நியாயம் கேட் டோம். நெடுமாறன் அண்ணனும் வந்தார். சந்திரசேகரன் வக்கீலும் வந்தார்.
வழக்கறிஞர் புகழேந்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தார்கள். இங்கேயும் ஒரு இரண்டு நாள் விசாரணை நடந்தது. ஊட்டியிலும் விசாரணை நடந்தது. சாட்சிக் கூண்டில் ஏற்றி ‘கியூ’ பிராஞ்ச் அதிகாரிகளைக் கூட நீங்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்றார்கள்.இந்தியாவின் உளவுத்துறை டைரக்டர் மிஸ்ரா என்பவரைச் சாட்சி சொல்ல கூண்டில் ஏற்றியவுடன், “நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைத்து விட்டார்கள்.இதெல்லாம் இந்தியாவுக்கு பெரிய ஆபத்து,” என்று சொன்னார்.

நான் அவரைக் குறுக்கு விசாரணை செய்வதற்கு தீர்ப்பாயத்தின் நீதிபதியிடம் கேட்டேன். “சரி! கேளுங்கள்! என் மூலமாகவே கேளுங்கள்!” என்றார். “உங்கள் மூலமாகவே கேட்கிறேன்,” என்றேன். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்கிறாரே,
விடுதலைப்புலிகளைத் தடைசெய்த நாடுகளில் அமெரிக்காவும் ஒரு நாடு என் பது அவருக்குத் தெரியுமா? அவர் சரியாகத் தெரியாது என்றார். சொன்னது யார்? இந்தியாவின் உளவுத்துறை டைரக்டர்.

“அமெரிக்காவின் பிலடெல்பியாவில்தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தொடக்க விழா நடந்தது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன். நீதி பதி அவரைப் பார்த்தார். அவர் தெரியாது என்றார். சரி! அந்த நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அவர்கள் அமைத்திருக்கக் கூடிய அந்தப் பிரகடனத்தில் ஒரு படம் போட்டிருக்கிறார்களே! தமிழ் ஈழத்தின் படம். அந்தப் படத்தை உங்களுக்குத்
தந்திருக்கும் அபிடவிட்டின் 67-ஆவது பக்கத்தில் நான் வைத்திருக்கிறேன். எங் கள் வழக்கறிஞர் தேவதாஸ் முன்யோசனையுடன் அதை வைத்து விட்டார். அவரே நீதிபதியிடம் படம் இருக்கிறது என்றார். நான் சொன்னேன்:“நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கிறதா? கோயமுத்தூர் இருக் கிறதா? தஞ்சாவூர் இருக்கிறதா? சென்னை இருக்கிறதா? வடக்கும் கிழக்கும் தான் இருக்கிறது!” நான் சொன்னவற்றை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

நான் கேட்டேன்: இராமேஸ்வரத்தில் சீமான் பேசினார்;ஈழத் தமிழர்களுக்காகப் பேசினார்; நியாயமான ஆக்ரோஷத்துடன் பேசினார்; அதற்காக அவரைச்சிறை யில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.இதற்கு முன் சிறையில் அடைத்து வைத் த போது, உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும் அவர் சிறையில் தான் இருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். உடனே ‘கியூ’ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்,“ஆமாம்... ஜெயிலில்தான் இருக்கிறார்,” என்றார்.

உடனே நீதிபதி,“அப்படியா? இப்போது எதற்காக சிறையில் இருக்கிறார்?” என்று கேட்டார். “அதே பேச்சைப் பேசியதற்காகத்தான் உள்ளே இருக்கிறார்,” என் றேன்.

டில்லி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்தின் கடைசி நாள் வாதத்தில் கேட்டேன். கொளத்தூர் மணியின் மீது வழக்கு போட்டார்கள். அவர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர். அவரை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உள்ளே வைத்தார் கள். பாதுகாப்புச்சட்டப்படி கொளத்தூர் மணியைக் கைது செய்தது தவறு என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்திய இராணுவ வாகனங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும், பெரியார் திராவிடர் கழகத் தொண்டனும் மறித்தானே! அதற்கும் பாதுகாப்புச் சட்டத்தில் அவர்களை வைத்தார்களே! ஜனாதிபதிக்கு அங்கிருந்து தபால் அனுப்பினார்கள். நீங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் வைத்தது சரியில்லை என்று கன்னத்தில்அறைந்ததுபோல் - இந்த முதலமைச்சருக்குச் சொல்கிறேன் - கன்னத்தில் அறைந்ததுபோல ஆர்டர் அனுப்பினார்கள். இதற்குப் பிறகும் கூட நீங்கள் இன்னும் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துகிறீர்களே! திருவாளர் தேசியம் பிள்ளையாகிவிட்டார் அவர்.அதனால்தான் சீமானை உள்ளே வைத்தி ருக்கிறார்.

நான் அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விடுதலைப்புலிகள் மீதான தடையை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். இந்திய அரசுக்கு நாங்கள் விரோதி இல்லையே! இந்தி யாவுக்கு நாங்கள் விரோதி இல்லையே! இந்திய ஒருமைப்பாட்டுக்கு நாங்கள்
விரோதி இல்லையே! அவர்களது தாயகத்தை அமைப்பதற்கு அவர்கள் போரா டுகிறார்கள். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். என்னென்ன வழி என்று இங்கே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் ஒரு வழி வைத்திருக்கிறோம்.

நியாயங்கள்தான் ஜெயிக்கும். தமிழனின் பக்கம் இருக்கக்  கூடிய அறம்தான் வெல்லும். அக்கிரமமும் துரோகமும் அழிந்தே போகும். மாவீரர் நாளில் இத னைச் சொல்லுகிறேன். தமிழ் ஈழத்தை அழிப்பதற்கு ஆயுதங்களைக் கொடுத் தீர்களே, பாவிகளே! எங்கள்எட்டுத் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கிக்
கொன்றானே! மன்னிப்பு உண்டா அதற்கு? தாயையும் கற்பழித்து - மகளையும் கற்பழித்துக் கொன்றானே! கொடுமை! கொடுமை! இவ்வளவு அக்கிரமங்களை யும் இலங்கை செய்வதற்கு, நீங்கள்தானே இங்கிருந்து எல்லா ஏற்பாடுகளை யும் செய்தீர்கள்?

மன்மோகன் சிங் அரசுக்குச் சொல்லுகிறேன். நான் வைதீகத்திலும், ஐதீகத்தி லும் நம்பிக்கை இல்லாதவன்.ஆனால், அறம் வெல்லும்;வெற்றி பெறும். அறம் நின்று அக்கிரமக்காரர்களை அழிக்கும் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக் கை கொண்டவன். அவனோடு சேர்ந்துநீங்கள் செய்த பாவங்கள் இருக்கிறதே, அது உங்களை விடாது. உங்களுக்கு நன்றாக வந்து விடியும். பீகாருடன் முடிந் து விட்டது என்று நினைக்காதீர்கள். (ஆரவாரம்)

ஏகப்பட்ட ரூபாயைக் கட்டி வைத்துள்ளார்கள். பார்சலை இப்போதே கட்டி விட் டார்கள். வீட்டுக்கு இவ்வளவு என்று. இவ்வளவு பார்சலைப் போட்டு வரப் போ கும் தேர்தலில் விநியோகம் செய்து, வென்று விடலாம் என்று கருதிக் கொண் டிருக்கிறார்கள்.என்னய்யா சொத்து?எட்டடி மண்தானேயா மனுசனுக்கு? எலக் ட்ரிக் சுடுகாட்டில் பத்து நிமிடங்களில் முடிந்து போய்விடுகிறது என்கிறான். மனிதன் வாழ்க்கை அவ்வளவுதான்.நீ சம்பாதித்தது நினைவிருக்குமா உனக்கு? (ஆரவாரம்) எவ்வளவுதான்யா சம்பாதிப்பீர்கள்?எல்லா இடங்களையும் வாங்கு கிறார்களாம். தீவுகளைக்கூட வாங்குகிறார்களாம். இவ்வளவு அக்கிரமங்களை யும், பாவங்களையும் செய்வதற்கு ஒரு முடிவு வந்தே தீரும்.இந்திய அரசுக்குச் சொல்கிறேன். ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்ய ஆயுத உதவி செய்த உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. மான உணர்வுள்ள தமிழர்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

மன்மோகன் சிங் அவர்களே! இதற்கெல்லாம் உங்களை ஏவிவிட்ட சக்தி எது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.மக்கள் சொல்வார்கள் எந்த சக்தி என்று. எங்கள் இனத்தை அழித்துவிட்டு, பிள்ளைகளை அழித்துவிட்டு,பதவி பவிசோ டு இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? மகாபாரதத்தைப்பற்றி நீங்கள் தானே சொல்கிறீர்கள் பதின்மூன்று வருஷம் என்று? பதின்மூன்று வருஷம் கழித்துத் தான் வந்தது. பீஷ்மாச்சாரியார்தான் மன்மோகன் சிங் என்கிறார் ஒருவர். பீஷ் மாச்சாரியார்தான் என்றாலும் அவரது உடம்பு முழுக்க அம்புகள் பாய்ந்தன
அல்லவா? அர்ச்சுனன் எய்த அம்புகள் என்று அவரும் விழுந்தார் அல்லவா? பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் அல்லவா?

பீஷ்மாச்சாரியாரைத் தூக்கிக் கிரீடத்திலா வைத்தார்கள்? இல்லை. பீஷ்மரும் அக்கிரமத்துக்குத் துணைபோன காரணத்தினாலே அவரும் வீழ்த்தப்பட்டார். (கைதட்டல்) அதுபோல, மன்மோகன் சிங் அவர்களே! நீங்கள் தமிழர்களை இவ் வளவு ஆயுதங்களாலும் அழிக்கப் போகிறார்கள் என்று அன்றைக்கே நீங்கள் இராஜினாமா செய்து போயிருக்க வேண்டாமா? வேண்டாம். இந்தப் பாவம் வேண்டாம் என்று போக வேண்டாமா? ரிசர்வ் பாங்க் கவர்னர் என்ற பெயரோ டும், நல்ல மரியாதையோடும் இருந்தீர்கள். பாவம் செய்தீர்கள். ஒரு பாவம் செய்தால் இன்னொரு பாவம் செய்யச் சொல்லும்.ஒரு தப்பு செய்தால் இன் னொரு தப்பு என்று தொடர்ந்து செய்தீர்கள்.இவ்வளவும் செய்தீர்கள்.

இப்பொழுது ஸ்பெக்ட்ரம் வந்து விடிந்திருக்கிறது.ஸ்பெக்ட்ரத்துடன் நிற்க வில்லை; கார்கில் போர்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஒதுக்க வேண்டிய அந்த வீடுகளை மகாராஷ்டிராவின் காங்கிரஸ் முதலமைச்சர் தனது மாமன் - மச் சான் - மைத்துனி என்று ஒரு லிஸ்ட்டே போட்டு ஒதுக்கிக் கொண்டார்.

டெலிபோன் உரையாடலிலும் வருகிறது. வீர் சங்வீ சொல்கிறார். பெரிய குடும் பம். தமிழ்நாட்டு முதலமைச்சர் என்னதான் செய்வார்? ஏகப்பட்ட குடும்பம், (ஆரவாரம்) இன்றைக்கு எல்லா உரையாடல்களும் வெளியே வந்துவிட்டன.
உண்மைகள் வெளியே வந்து விட்டன.

மத்திய மந்திரி பதவியைத் தீர்மானிப்பது பிரதமரா? வேறு யாராவதா? இவர் களே அதையும் தீர்மானித்துக் கொள்கிறார்கள். இவருக்கு அந்த இலாகா கிடைக்குமா? டி.ஆர். பாலு இதிலே வர முடியாது. அழகிரி பெரிய மாஸ் லீடர். நான் அதைத்தான் சொன்னேன். பிக்பாக்கெட்....பிளேடு பக்கிரி.... (கைதட்டல்) முன்னாள் மாவட்டச் செயலாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் உள்ளே போக
வேண்டிய ஆள் மத்திய மந்திரி. அதற்குப் பிறகு எனக்கு என்ன இலாகா கிடைக் கும்? தயாநிதி மாறனை உள்ளே விட்டிருக்கவே கூடாது என்கிறார்கள் இவர் கள். அழகிரிக்கு இருக்கட்டும். யாருக்குக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டா லும் இராசாவுக்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். (ஆரவாரம்) அவர் இராசா ஆயிற்றே. (கைதட்டல் - ஆரவாரம்)

அவர் இராசா அல்லவா? (சிரிப்பு - ஆரவாரம்) அதில் ஒன்றும் பிரச்சினை கிடை யாது. அவருக்கு ஒதுக்கியாயிற்று. அழகிரிக்கு உண்டு. இன்னொன்று அதை மாறன் விடமாட்டாரு. தி.மு.க.வின் முகம் நான்தான் என்று அவர் எல்லோரிட மும் சொல்லிக்கிட்டிருக்காரு. அவருக்குக் கொடுத்து விட்டால் கனி மொழிக் கு? ஒரே குடும்பத்திலே இவ்வளவு பேருக்குக் கொடுப்பது என்றால் பிரச்சினை ஆகுமே! இதுக்கு நடுவிலே கேட்ட இலாகா கிடைக்காது என்கிற கோபத்தில் பதவிப் பிரமாணத்தைப் பார்க்க மாட்டேன் என்று இவர் வந்து விட்டார்.

முல்லைப் பெரியாறுக்காக வந்தாரா? காவிரிக்காக வந்தாரா? பாம்பாற்றுக்காக வந்தாரா? பாலாற்றுக்காக வந்தாரா? தமிழக மீனவர்களுக்காக வந்தாரா? ஈழத்
தமிழருக்காக வந்தாரா? பதவியேற்புக்கு இருக்காமல் இவர் கோபித்துக்கொண் டு வந்து விட்டாராம். கோபம் எல்லாம் கிடையாது.பயில்வான் சொல்லிப்பார்ப் பாரு. கிடைக்கவில்லை என்றால் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிடு வாரு. அவரு ரூட் நமக்குத் தெரியும். இன்னக்கி என்ன ஆச்சு? டெலிபோன் பேச்சு; ஊர் சிரிச்சுப் போச்சு. சுப்ரீம் கோர்ட்டில் அல்லவா ரிக்கார்டு ஆயிருக்கு?

தினமணியும் ஜூ.வி.யும் இதைப் போட்டால் உடனே பார்ப்பனர்கள் புறப்பட்டு விட்டார்கள், இந்த மாவீரருக்காக. பார்ப்பனர்கள் சூத்திரர்களை அழிப்பதற் காகப் புறப்பட்டு விட்டார்கள். என்னய்யா இது? சீஃப் செக்ரட்டரி - டி.ஜி.பி - எத் தனை அதிகாரிகள்? அப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் என்று தெரியவில்லை யா? இவரது குடும்பத்துக்கு ஆடிட்டர் மட்டும் பார்ப்பனர் வேண்டும். உங்களது பத்திரிகையை நடத்துவதற்கு பார்ப்பனர் வேண்டும். இவர்களை அந்தப் பத்திரி கைகள் பாராட்டி விட்டால் பெரிதாகப் போட்டுக் கொள்வார்கள். ஆனந்த விக டன் ஏதாவது அட்டாக் செய்து விட்டால் பார்ப்பனக் குடும்பம். இதையெல்லாம்
பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கு? நாள் -நட்சத்திரம் - ராகு - கேது - எமகண்டம் பார்த்துத்தானே எல்லாம் நடக்குது? புட்டபர்த்திக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார் துணை முதலமைச்சர். திராவிட இயக்கமா நீங்கள்? நாங்கள்தான் திராவிட இயக்கம்.மறுமலர்ச்சி தி.மு.க. -- திராவிட இயக்கம். (ஆரவாரம்)

பதவிகளைப் பங்குபோடும் விஷயம் பற்றி நம்ம ஊர் மீடியாவில்தான் அடக்கி வாசிக்கிறார்கள். வட இந்தியப் பத்திரிகைகளை - ஊடகங்களை நான் ஈழத் தமி ழர் பிரச்சினையில் துரோகம் செய்தார்கள் என்பதற்காகக் கடுமையாகச் சாடிய வன். கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளைக் காங்கிரஸ் அரசு கபளீகரம் செய்து கொண்டது. எல்.ஐ.சி.யில் ஊழல், காமன்வெல்த் போட்டியில் ஊழல் என வரிசையாக வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல். இவ்வளவு ஊழல்களி லும் சிக்கிக் கொண்டிருக்கும் அரசு - காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக் காது. நான் இன்றைக்குச் சொல்கிறேன்.இந்த அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு லைனில் போய்க் கொண்டிருக் கிறார்.

எனவே, இவ்வளவு பெரிய பிரச்சினைகளுக்கு மத்தியிலே இங்கு இருப்பவர் திடீரென்று சொல்கிறார் - “எங்களோடு உறவு வேண்டுமா என்பது தீதா நல்ல தா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் தமிழர்களுக்கு அரசியல் உரி மைகள் - அரசியல் பகிர்வு அந்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்று எங்க ளுக்கு ரொம்பக் கவலை அளிக்கிறது. கொடுத்தால் நாங்கள் நன்றியுடையவர் களாக இருப்போம்!” என்கிறார்.

கலைஞர் அவர்களே! இனியும் தமிழனை உங்களால் ஏமாற்ற முடியாது. முத் துக் குமார் தன் மரண சாசனத்தில் உங்களைப் பற்றித் தெளிவாய் எழுதிவிட்டுப்
போய்விட்டான். நான் தெருத் தெருவாகப் போய் பேசுவேன். மாவீரர் நாளில் சூளுரைப்பது என்பது என்ன?

தமிழ் ஈழம் என்பது கானல் நீரல்ல. இரத்தத்தால் -தியாகத்தால் - எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டை.

என் அருமைச் சகோதரனே! இப்போது சகோதரன் என்று சொல்லக் கூடாது. அன்று வரை சகோதரன். இப்போது நீ எனக்குத் தலைவன். (ஆரவாரம்) 1989 பிப் ரவரி 23-ஆம் தேதி காலையில் உன்னை விட்டுப் பிரிந்து வருகிறபோது,கிட் டு வும் நீயும் இருந்து அனுப்புகிறபோது என் கண்களில் இருந்து வடிந்த கண்ணீ ரைப் பார்த்து ஏன் வருத்தப்படுகிறீர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்த போது திரும்பவும் நான் என்று சந்திப்பேன்? எனக்குத் தெரியவில்லை என்று சொல்லி விட்டு வந்தேனே! 21 வருஷம் ஓடி விட்டது.அன்றைக்குக்காடுகளுக்குள் சுற்றி லும் தாக்கப்பட்டு ஓடுகின்றபோது நமது வாழ்க்கையும் எதிர்காலத்தில் இப்ப டித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

இன்றைக்குச் சொல்கிறேன். பதவிகளுக்காக அல்ல.எந்தத் தமிழ் ஈழத்துக்காக நீங்கள், உன் தம்பிமார்கள்,உன் சகோதரிகள் ரத்தம் சிந்திப் போராடினார்களோ
அந்தத் தமிழ் ஈழத்தைத் தட்டியெழுப்ப இந்தத் தாயகத்திலே தமிழர் தாயகத்தி லே எங்கள் தமிழ்நாட்டிலுள்ள வாலிபர்களை - இளைஞர்களைத் தயார்படுத்து வது என்னுடைய வேலை. அதற்குச் சூளுரைக்கிறேன்.

அண்ணன் நெடுமாறன் பக்கபலமாக இருந்து நாங்கள் எடுக்கிற முயற்சிகளுக் கு அவர் எங்களுக்கு உடனிருந்து வழிகாட்டிச் செல்வார். மாவீரர்கள் புகழ் வாழ்க! வெல்க தமிழ் ஈழம்!

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment