Wednesday, May 22, 2013

தமிழ் ஈழத் தாயகம் வரலாற்றுக் கட்டாயம் என்ற உணர்வை உலகத் தமிழர்களின் உள்ளங்களில் தூண்டுவதற்கு புகழேந்தியின் ஓவியங்கள் துணை நிற்கும்!

ஓவியர் புகழேந்தியின் ஈழத்தின் துயர்கூறும் ஓவியக் கண்காட்சி நெல்லை யில் கடந்த 2009 ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து கழகப் பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய சிறப்பு உரை யில் இருந்து...

காலத்தால் அழியாத புகழையும்,நற்பெயரையும் தன்னுடைய தூரிகையிலும், தனக்குப்பெற்றோர் சூட்டி உள்ள பெயரிலும் ஏந்தி உள்ள தமிழ் இனத்தின் சொத் து களுள் ஒன்றாகப் பாதுகாக்கப்பட வேண்டிய எனது ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தி அவர்கள் தீட்டிய நெஞ்சை உலுக்கும் போர்முகங்கள் சித்திரங்களின்
காட்சிக்கூடத்தைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன்.
சாகித்ய அகடமி விருதுக்குப் பெருமை சேர்த்து இருக்கின்ற நமது மண்ணின்
தலைசிறந்த எழுத்தாளரும்,படைப்பாளியும், சிந்தனையாளருமான தி.க.சிவ சங்கரன் அவர்களும்,தமிழ்ப்பனுவல்களிலே நெஞ்சத்தைத்தோய்த்து,மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகத்தொண் டு ஆற்றி, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வாளராகத் திகழ்கின்ற மேன்மைக் குரிய பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை ஆற்றிச் சிறப்புச் சேர்த்து இருக்கிறார்கள்.


என்னுடைய மனதில் எழுகின்ற உணர்வுகளை, எண்ணங்களை, வெளியிடுவ தற்கான மேடையாக இதை நான் கருதுகிறேன். இங்கே ஏற்புரை ஆற்றிய ஓவி யர் புகழேந்தியின் பேச்சு, என்னைத் திகைக்க வைத்து விட்டது.அவர், பொது வாக நிகழ்ச்சிகளில் அதிகம் பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். நான் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறவன்.அகோர அடக்கு மு றைப் பசியோடு திரிகிற ஆட்சியாளர்களின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் இவர் சிக்கி விடக் கூடாது என்று, நான் அரசியல் விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்வேன். எப்பொழுதும் அமைதியாகப் பேசுகிற புகழேந்தி வெடிக்கிறார் என் றால், இந்த மண் அப்படிப்பட்டது. இந்தத் தாமிரபரணி மண் வீரம் செறிந்தது.

என் மீது எத்தனை அம்புகளைத் தொடுத்தாலும், அதைப்பற்றி நான் கவலைப் படுகிறவன் அல்ல. ஆனால், கட்சி எல்லைகளைக் கடந்த, தமிழ்ச் சமுதாயத் தின் கருவூலமான இவரைப் போன்றவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

நம்முடை தி.க.சி. அவர்கள், தமிழகத்தில் கருத்து உரிமைக்குப் பேராபத்து வந் து விட்டது என்று முழங்கி விட்டார். அவரே இப்படிப் பேசி விட்டார்; என வே , நாம் 16 அடி பாய வேண்டும் என்று பாய்ந்தால், நம்முடைய ஒற்றர்படையினர் அதைத் தம் கடமையாக அரசாங்கத்துக்குத் தெரிவித்து, அதனால், நம்முடைய புகழேந்திக்கு ஏதாவது சின்னத்தொல்லை வந்து விடக் கூடாது; எனவே, நாம் அவருடைய ஓவியங்களைப் பற்றி மட்டும் பேசி விட்டுச் செல்வோம் என்று தான் நான் முடிவு எடுத்து உட்கார்ந்து இருந்தேன். ஆனால், அந்தக் கலைஞன், தன்னுடைய உள்ளக்குமுறலை இங்கே கொட்டி விட்டார்.

என்னுடைய அருமைச் சகோதரர்களே, புகழேந்தி அவர்கள் படைத்து இருக் கின்ற இந்தப் போர்முகங்கள் என்னும் ஓவியங்கள், கணினிகளில் பதிவாக வேண்டும்.நெஞ்சைப் பிழிய வைக்கின்ற, குருதியைக் கொட்டச் செய்கின்ற, இந்தச் சித்திரங்கள், ஒளிநாடாக்களில் பதிவாக வேண்டும். அவை, தமிழர் இல் லமெல்லாம் செல்ல வேண்டும். இது புத்தகங்களாக ஆக்கப்பட்டு, அனைத்துத் தமிழர்களின் கைகளிலும் கிட்ட வேண்டும்.

புகழேந்தி அவர்களே, என் போன்றவர்கள் உரை ஆற்றுவதால் ஏற்படுகின்ற தாக்கத்தை விட, உங்கள் ஓவியம் தாக்கத்தை ஏற்படுத்தும். நான் கண்டதும், என்னைக் கண்டதும் என்று ஈழ மண்ணிலே மாதக் கணக்கில், காடுகளுக்கு உள்ளே பாசறைகளில், பாடி வீடுகளில், ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலி இளைஞர்களை வீராங்கனைகளை நேரில் கண்டு அவர்களோடு அளவளாவி, உரையாடி, அந்த ஈழத்து மக்களுடைய விருந்தோம்பலை ஏற்று, வரலாற்றில்
தமிழனுக்கு மகுடம் சூட்டிய மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு, நாள் கணக்கில் உடன் இருந்து, அங்கே உள்வாங்கியவற்றை எல்லாம் அவர் நூலா கவும் தந்து இருக்கிறார்.

அதைவிடவும், இந்தச் சித்திரங்களாகத் தருகிறாரே, அவர் குறிப்பிட்டதைப் போல, தலைசிறந்த சிற்பிதான் மைக்கேல் ஏஞ்செலோ. ஆனால், இன்றைக்கு
உலகத்தின் நினைவுகளில், தி லாஸ்ட் சப்பர், அவன் வரைந்த அந்த ஓவியம், வாட்டிகன் நகரத்தில் உலகக் கத்தோலிக் கர்களின் தலைமை மதகுரு உலவு கின்ற தேவாலயத்தின் மேற்கூரையில் வரையப்பட்டு இருக்கின்ற அந்தச் சித்திரம், ஒரு செய்தியை மக்களுக்குத் தந்துகொண்டே இருக்கிறது.

தன்னோடு இருந்தவர்களிடம், என் உடலையே நான் பிய்த்துத் தருகிறேன் என்று அப்பத்தைத் தந்தார். என் மேனியில் ஓடுகின்ற குருதியைத் திராட்சை ரசமாகத் தருகிறேன் என்று இயேசு பெருமான் சொன்னதாக,அந்த நிகழ்ச்சியை, ஒரு அற்புதமான சித்திரமாக வரைந்து இருக்கிறார்.

அதுபோலத்தான், ஸ்பெயின் நாட்டிலே இரத்தம் வெள்ளமாகப் பாய்ந்து, இரு
தரப்பும், ஒருவரையொருவர் சாய்த்துக் கொண்டபோது, கொல்லப்பட்ட மக்க ளின் துயரத்தைச் சித்திரமாக வடித்தவன்தான் ஸ்பெயினிலே பிறந்து, பிரான்சி லே வாழ்ந்த பிகாசோ. அந்தச்சித்திரம்.. கோர்னிகா... பல நூற்றாண்டு களைக் கடந்தும்கூட, மனித மனங்களில் அழியாத சித்திரமாகத் திகழ்கிறது. அதைப் போலத் தான், இன்றைக்கு நீங்கள் தீட்டுகிறீர்கள், ஓவியமாக வரைகிறீர்கள்.

அண்மையில் ஈரோடு புத்தகக்காட்சியில், எழுத்து எனும் கருவறை என்ற தலைப்பில் உரை ஆற்றியபோது, எழுத்துகள் தோன்றிய வரலாறைச் சொன் னேன். தொடக்கத்தில், படமாகவே வரைந்தார்கள். எகிப்திலே, சீனத்திலே ஓவி ய எழுத்துகள் இருந்தன.பிரமிடுகளிலே படங்களாக வரைந்து இருக்கிறார்கள். சுமேரிய நாகரிகத்திலே, கற்களும், பாறைகளும் இல்லாததால், அவர்கள் களி மண்ணைப் படிமங்களாக்கி, அதிலே படங்களை வரைந்து, அவற்றை நெருப்பி லே சுட்டு, கியூனி ஃபார்ம் என்ற எழுத்து வடிவமாக்கி னார்கள். ஆக, ஓவியமும் ஒரு எழுத்து தான். அது தமிழர்களுக்கும் தெரிந்து இருந்தது. அதனால் தான் அவர்கள் அதை அடையாள மொழியாக ஆக்கினார்கள்.

இங்கே உரை ஆற்றிய மே 17 இயக்கத்தின் தலைவர் அன்புக்குரிய குமார் அவர் கள் குறிப்பிட்டதைப்போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டு வந்து குவித்த ஆயுதபலத்தோடு, குண்டுகளை வீசியபோது, தீக்கங்குகள் மேனியில் பட்ட தால், ஆடைகள் இன்றி அம்மணமாக ஒரு சிறுமி ஓடிய காட்சி, படமாக வந்த போது, உலகத்தையே உலுக்கியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்தன. வியட்நாமில் இருந்து அமெரிக்கா பின் வாங்கியது. அப்படிப்பட்ட சக்தி, புகைப்படங்களுக்கு உண்டு.

அதைப்போல, என் சகோதரனே நீ வடித்து இருக்கிறாயே, உன் உள்ளத்துக்குமு றலை அப்படியே உன் தூரிகை வெளிப்படுத்துவதற்கு,தமிழர்கள் வகுத்து இருக் கின்ற பழமையான பண்பாட்டின் எல்லை உன்னைத் தடுத்து விட்டது. ஈழப் போர்க் களத்தில் கொல்லப் பட்ட நம்முடைய பெண் புலிகளை, இளந்தங்கை யரை, சீருடைகளைக்களைந்து அம்மணமாக்கி, மிருகங்கள் கூடச் செய்யத் துணியாத வன்புணர்ச்சி நடத்தினான். இதை, இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியது. இணையதளங்களில் வந்து விட்டது. நாங் கள் வெளியிட்ட, விழ விழ எழுவோம் என்ற குறும் படத்திலும் இடம் பெறச் செய்து இருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான பிரதிகளை நாங்கள் கொண்டு சேர்த்து இருக்கிறோம். 40 நிமிடங்கள் ஓடுகின்ற அந்தக் குறும்படத்தைப் பார்த் தால், கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது.

அந்தக் கொடுமைகளை, உன்னுடைய தூரிகையில் சித்திரமாக வரைந்து இருக் கிறாய் சகோதரனே. என்ன நடந்து இருக்கும் என்று ஊகிக்க வைக்கிறாய். மனி த குலத்தின் மனசாட்சி மெளனித்துப்போனதா என்ற கேள்வியை எழுப்பி இருக் கிறீர்கள். முள்ளிவாய்க்கால் முடிவு அல்ல; அது தொடக்கம் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆம்; சிங்களக் கொலைவெறியன் ராஜபக்சேயை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக்கூண்டிலே நிறுத்தித் தண்டிக்காத வரையிலும் நமக்கு ஓய்வு இல்லை. தமிழ் ஈழம் மலரத் தோள் கொடுக்க வேண்டிய கடமையில் இருந்து நாம் தவறி விடக் கூடாது.

இதைவிடச் செத்துப் போகலாமா? என்று தமிழ் அறிஞர் இங்கே கேட்டார். உண் மைதான். நான் என்னையும் சேர்த்தே சொல்லுகிறேன்,வருங்காலத்தமிழர்கள், இந்தக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களைப் பழிக்காமல் இருக்க மாட்டார்கள். பல் லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெருமை பெற்ற தமிழ் இனத்துக்கு, இந்தக்
காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும், எந்தக் காலத்திலும் ஏற்பட் டது இல்லை. நான் ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையிலே சொல்லு கிறேன்.வருங்காலத் தலைமுறையினர் பழிப்பார்கள். வீரமும், மானமும்,மடிந் தா போய்விட்டது இந்த மண்ணில்?

இந்த அழிவுக்கு என்ன காரணம்? ஏன் தடுக்க முடியாமல் போயிற்று?தமிழ் ஈழம்
மலரும். சிதறிச் சின்னாபின்னமாகி, உலகத்தின் பல நாடுகளில் வேட்டை யா டப் பட்ட யூதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நாட்டை அமைக்க முடியும் என்றா ல், உலகின் பல நாடுகளில் பரந்து கிடக்கின்ற பத்து கோடித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து ஏன் படைக்க முடியாது?

பாலஸ்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு உள் ளே நான் போக விரும்பவில்லை. ஆனால், ஈழத்தில் சர்ச்சையே கிடையாது. தமிழ் ஈழக்கோரிக்கைக்குச் சர்ச்சையே கிடையாது. வரலாற்றின் வைகறை யில் இருந்து அது தமிழனின் தாயகம். வாழ்ந்து, ஆண்டு, கொற்றம் அமைத்து கொடி ஏற்றி வாழ்ந்த மண்.அதை அபகரிப்பதற்காக, சிங்களர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகிறான். தமிழ் ஈழத் தாயகம் என்பது வரலாற்றுக் கட்டாயம். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுகளைத் துhண்டுவதற்கு, புகழேந்தியின் ஓவியங்கள் துணை நிற்கும்.

நீங்கள் எத்தனையோ அற்புதமான படைப்புகளைத் தந்து இருக்கிறீர்கள். உறங் கா நிறங்கள், சிதைந்த கூடு, பயணச்சுவடுகள் என்ற வகையில், போர்க்களத் தில் மடிகின்ற ஒரு வீர வேங்கைப்புலி, தன்னுடைய காலணிகளை, அடுத்த வீரனுக்குத் தரப்போகிறான் என்று எழுதி வைத்து, ஒரு ஓவியம் தீட்டி இருக்கி றீர் கள். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர், இந்திய அரசு செய்த துரோகத் தால், நச்சுக் குப்பிகளைக் கடித்து மடிந்தனர்.தீர்வில் மைதானத்தில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன.பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கண்ணீ ரும், கம்பலையுமாக அழுதுகொண்டு இருந்தபோது, பிரபாகரன் அங்கே வந் தார். அஞ்சலி செலுத்த வந்தார்; அவர் அழ மாட்டார், அழவில்லை, எதுவும் பேச வில்லை. அங்கே ஒலித்தது ஒரு பாடல்.

‘ஓ மரணித்த வீரனே, உன் சீருடைகளை எனக்குத் தா;
உன் காலணிகளை எனக்குத் தா, உன் ஆயுதங்களை எனக்குத் தா

என்ற அந்தப் பாடலைக் காட்சியாகத் தீட்டி இருக்கிறீர்கள்.

எனது அருமைச் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் புகழேந்தியின் உயிரோவியக் காட்சியை நீங் கள் நடத்த வேண்டும் என்று சொன்னவுடன், சிறப்பாகச் செய்து விடுவோம் என்று சொல்லி, இந்தக் காட்சியை ஏற்பாடு செய்கின்ற முழுப்பொறுப்பையும் தன் தோளிலே தூக்கிப் போட்டுக் கொண்டு செய்து இருக்கிறார். காவல்துறை அதிகாரிகளை நாங்கள் மதிக்கிறோம்.தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எங்களுக்குக் கோபம் இல்லை. அவர்களுடைய எஜமானர்கள் உத்தரவு போடு கிறார்கள். பாசிச ஆட்சி நடக்கிறது. காவல்துறையைப் பயன்படுத்தி, இந்தக் காட்சியை நடத்தக் கூடாது என்றார்கள். இது அரசை எதிர்த்து நடக்கின்ற காட் சி அல்ல. தமிழ் இனம் வதைத்து அழிக்கப்பட்டு விட்ட கொடுமையை மக்களுக் குத் தெரிவிப்பதற்காக வரைந்த ஓவியங்கள். இந்தக் காட்சியை நடத்துவதற்கு
எங்களுக்கு வாய்ப்பும் அனுமதியும் வழங்கிய இந்த இடத்தின் உரிமையாளருக் கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே இடத்தில்தான், 21 ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஈழத்துக்குச்சென்று திரும் பியதற்குப் பிறகு, இதே வளாகத்தில்தான், ஒரு கூட்டம் நடத்தினோம். கிட்டு
எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். நீங்கள், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றியும், அதில் உள்ள இந்திய அரசின் துரோகங்கள் குறித்தும், எங்களது நிலைப்பாடு குறித்தும் ஆங்கிலத்தில் உரை ஆற்றி, ஒரு ஒளிநாடாவில் பதிவு செய்து அனுப்புங்கள். ஐரோப்பிய நாடுகளுக்கும் உலகம் முழுமைக்கும் அதை நாங்கள் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக, இந்த வளாகத்தில்தான் ஒரு கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். அப்போது, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்னுடையஆருயிர்த் தம்பி குருநாதன் அவர்கள், அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அன்று இரவு, பாளையங்கோடை ஜவஹர் மைதானத்தில் பொதுக்கூட்டம்.

என் நெஞ்சிலே தனி இடத்தைப் பெற்று இருக்கின்ற தலைசிறந்த தமிழ்அறிஞர்,
தன்மானத் தமிழ் அறிஞர் அண்ணன் சி.சு. மணி அவர்கள் தலைமையில்தான்,
இதே சகுந்தலா இண்டர்நேஷனல் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் ஆங்கிலத்தில் உரை ஆற்றினேன். ஒன்றரை மணி நேரம் பேசினேன். அதில்,
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய எட்டுக் கடிதங்களை, தேதிவாரியாக நான் பதிவு செய்தேன். அந்த எட்டுக்கடிதங்களுக்கும் இந்திய அரசு பதில் எழுதவில்லை. இந்தியா செய்த
துரோகங்களைப் பட்டியல் இட்டேன்.

அன்று, புலி பாய்வது போல உலோகத்தால் ஆன ஒரு நினைவுப் பரிசை குரு நாதன் கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். அதை, இன்றைக்கும் வீட்டில் வைத்து இருக்கிறேன். அன்றைக்கு பேராசிரியர் ஆரோக்கியசாமி அவர்களும் கலந்து கொண்டார்கள். சவேரியார் கல்லூரியில் அவர் எனக்குப் பொருளியல் பேராசிரியர், பொது உடைமைச் சிந்தனையாளர். ஸ்ரீ பெரும்புதூரில் நடை
பெற் ற சம்பவத்துக்காக நடந்த வழக்கில் என்னைக்கொண்டு போய் சாட்சியாக நிறுத்தினார்கள்.அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனியல். நான் முதலிலேயே அவர் களிடம் சொன்னேன்.161 ஸ்டேட்மெண்ட் நீங்களாக எழுதிக் கொண்டது. அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். உண்மையைச் சொன்னேன்.கார்த்திகேயன் அவர்களே சொன்னார்: உங்களை இந்த வழக்கில் சாட்சியாகப் போட வேண்டாம் என்று சொன்னேன். கேட்கவில்லை. இப்போது மாட்டிக் கொண்டார்கள் என்றார். ஐந்து நாள்கள் என்னை விசாரித்தார்கள். அப் பொழுது, இங்கே நெல்லையில் நான் பேசிய வீடியோவைக் கொண்டு வந்து
போட்டார்கள். அந்த நினைவுகள் எல்லாம் வருகின்றன.

1989 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் நாள் காலை ஆறரை மணி அளவில்,மாவீரர்
திலகம் பிரபாகரனிடம் பிரியாவிடை பெற்றுத் திரும்பினேன். அதற்குப் பிறகு,
அவரை நான் பார்க்கவில்லை. திரும்ப சந்திப்பேன். சந்திக்கின்ற காலம் வரும்.
தமிழ் ஈழத்தின் உயிர்ச்சக்தியாக அவர் திகழுகிறார்.

இந்தச் சித்திரங்கள் குறித்த செய்திகளை, நெல்லையில் சிறப்பாக வெளியிட்டு
இருக்கிறார்கள். இது மக்கள் கவனத்துக்குப் போக வேண்டும். இங்கே வருகை தந்து இருக்கின்ற நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அனைத்துத் தரப்பினரும் இதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்போரிடம் எல்லாம், இந்த ஓவியங்கள் வீறு கொண்ட உணர்ச்சியை எழுப்பிக் கொண்டே இருக்கும். எப்படிக் கவிதைகளுக்கு அழிவு இல்லையோ, அதுபோலத்தான் ஓவியங் களுக்கும் அழிவு இல்லை. புகழேந்திக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர் கட்சிகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்; இந்த அரசுக்கு எதிரி அல்ல. தமிழர்கள் பாதுகாக்க வேண்டிய சொத்து. இந்த உயிரோவியக் காட்சி, உறங்கும் உள்ளங்களைத் தட்டி எழுப்பட்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment