Wednesday, May 1, 2013

தமிழ் ஈழம் ,பொது வாக்கெடுப்பு -முதலில் உலகுக்கு சொன்ன வைகோ

பெல்ஜியம் ஆய்வரங்கத்தில் வைகோ பேசிய உரையின் சுருக்கம் .

“ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த இந்த ஆய்வு அரங்கத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் களே, அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, வணக்கம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழகத்தில் இருந்து நான் வந்து இருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும்,ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங் கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.



எங்கள் ஈழத்தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை,நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக்காலம் வந்தால், வசந்தகாலம் வராமலா போகும்? என்றான் ஒரு கவிஞன்.

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத் தமிழ்மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்[ல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.



ஈழத்தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத்தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளு மன் றம், 2009 மார்ச் 12 ஆம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் றேன்.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அதிகமாக இல்லாததால், நான் விரை வாகச் செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நா.வின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது.இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டியநிலையில்,
அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப் படும் பட்டாக்கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள்.

குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்த போது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல் களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது.தமிழ்ப் பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு,கொடுமைப்படுத்தப் பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட் டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நோர்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்து விட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா? ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழுசொல்லி விட்டது.

ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள்.

வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்து வமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திஅம்மையார்,  இந்திய நாடாளு மன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர்.1619 இல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638 இல் டச்சுக்காரர்கள் தமிடிந ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், 1796 இல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர் களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதி காரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956 இல், சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழி யில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறை யையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவி யது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957 இல் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தமும்,

1965 இல் சேனநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தமும்,

சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர் களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல் கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டை யில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில்,தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று.ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.யாழ் நூலகத் தைத் தீயிட்டுக் கொளுத்தியது.

1983 இல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும்,சுய நிர்ணய உரிமையையும்,சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர் முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர்.

போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24 ஆம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள் களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன்பின்னர் மேலும் 30 நாள் களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது.

பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார்.

2005 இல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில்,

2006 ஆகஸ்ட் 8 ஆம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக்கொல்லப் பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக்குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடிய வில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள இராணுவத் தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் இராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது.

எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக் குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009இல், மார்ச், ஏப்ரல்,மே மாதங்களில், இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக் கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன் றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித் ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை,கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27 இல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற் றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன.

அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என, தற்போது, ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன்.

சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே?

நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே?

இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படு கொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே?

ஏன், இராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது? (கைதட்டல்)

அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடிய வில்லை என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து விடுதலைப்போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான்.

வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை இராணுவத்துக்கும், விடு தலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது.

அங்கே பிரித்தானிய அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை
எதிர்த்து, யுத்தகளத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரலாற்றுக் கட்டாயமாயிற்று.

இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்லுகிறேன். ஒரே யொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே?

அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத் தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?

இசைப்பிரியா எனும் தமிழ் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள இராணுவத்தினர் கொன்றார்களோ?

அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே?

என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண் மையானது என்றும், இது கொடூரமான போர்க்குற்றங்கள் என்றும், ஐ.நா. மன் றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய் யும் ஐ.நா.வின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெடீநுன்ஸ் என்பவர், நேற்றை ய தினம், மே 31 ஆம் நாள், ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம்,

தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம்,

கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம்,

"தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா? "

ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும்,அந்தந்த நாடுகளிலேயே பங்கு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரஸ்ல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, இராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க
வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமும் காவல் துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள இராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

என் உரையை முடிக்கும்போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

கல்லறைகள் திறந்து கொண்டன
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள்
யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும்,
உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி
வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்

ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்”

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

நாள் :- 01.06.2011

No comments:

Post a Comment