Monday, May 13, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 1 தொடர்ச்சி ....

நான் குழந்தைகளைப் பற்றிக்கவலைப்படுகிறேன். மது எனும் கொடிய அரக் கனின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு ஏறத்தாழ 1130 கிலோ மீட் டர் தொலைவு இந்த மூன்று கட்ட நடைப்பயணத்தில் கோடிக்கணக்கான மக் களைச் சந்தித்திருக்கிறேன். அதில் பெரும் பாலும் தாய்மார்கள். கைக் குழந் தையோடு நெருப்பு வெயிலில் கால்களில் செருப்பு இல்லாமல் கால் கடுக்கக் காத்திருந்ததைக் கண்டு பதறிப்போனவனாக, தாயே நீங்கள் ஏன் இங்கு நிற் கிறீர்கள்? என்று கேட்ட போது, உங்களைப் பார்ப்பதற்காகத் தான் நிற்கிறோம். எங்கள் பிள்ளைகள், குழந்தைகள், எங்கள் குடும்பம் பத்திரமாக இருக்க வேண் டும். இந்த மதுவின் பிடியிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற மதுக்கடைகளை
மூட வேண்டும் என்பதற்காக நீங்கள் நடந்து வருவதைப் பார்ப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறோம் என்று அந்தத் தாய்மார்கள் சொன்னார்கள்.அந்த மதிய வேளை வெயிலில் களைப்பும் சோர்வும் என்னை ஆட்கொள்ள முயன்றாலும், அந்தப் பச்சிளங்குழந்தைகளுடன் அந்த தாய்மார்கள் வழிநெடுக நிற்பதைப் பார்க் கிறபோது, என் களைப்பெல்லாம் பறந்துபோய்விடும்.


குழந்தைகளுக்கு இப்போது மதிநுட்பம் மிகவும் அதிகமாக இருக்கிறது.இரண்டு, மூன்று வயது குழந்தைகள் கூட என்ன அறிவாக இருக்கிறார்கள். அந்தக் குழந் தை களின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவர்கள் பெரிய வர்கள் ஆகிறபோது நான் இருக்கப்போவது இல்லை. ஒரு நாள் மரணம் வந்து தான் தீரும். வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. நேற்றிருந்தார்,இன்றில்லை.இன் றிருப்பார் நாளை இல்லை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு. இந்தப் பிரபஞ்சத்தில் இந்த அண்டப் பெருவெ ளிக்கு முன்னால் கண் இமைக்கும் நேரத்தில் உடைந்து சிதைகிற நீர்க் குமிழி யைப் போன்றது தான் மனித வாழ்க்கை என்று கவியரசர் இவீரந்திரநாத் தாகூர் சொன்னார்.அதனால் வாழ்கிற காலத்தைப் பிறருடைய கண்ணீரைத் துடைப் பதற்கு பயன்படுத்துவதுதான் மனித நேயம் என்ற முறையில், நான் பிறந்த பொன்னாடு இந்த புண்ணிய பூமியாகிய தமிழ்நாடு மீண்டும் பிறந்து வரப்போ வதில்லை. பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் மீண்டும் மனித நேயத்தை மறவாமை வேண்டும் என்று இந்த மண்ணில் பிறக்கின்ற ஒரு பேறு கிடைத்து இருக்கிறது.

உலகத்தில் மூத்த தமிழ்க்குடி, உலகத்துக்கு அறமும் மறமும் சொன்ன தமிழ்க் குடி, நீதி நூல்களைத் தந்த தமிழ்க்குடி, நாகரிகத்தைப் பண்பாட்டைக் கற்றுத் தந்த தமிழ்க்குடி. அந்தத் தமிழ்க் குலம் தழைத்து ஓங்கிய பூமி இது. எதிர் காலத் தைப் பற்றி கவலைப்படு வதனால், நான் இதைப்பற்றிப் பேசுகிறேன். எனவே, மூன்று பக்கத்திலும் ஆபத்து சூழ்ந்திருக்கிற பொழுது, தமிழகத்தின் வாழ்வா தாரம் அழிகின்றபோது, நம் பிள்ளைகள் எப்படி வாழ்வது? பாலை நிலமாவதா?
பஞ்சப் பிரதேசமாவதா? தமிழகத்தின் கடந்தகால நிலை எங்கே? எவ்வளவு
செழித்துக்கிடந்த பகுதி இந்தப் பகுதி. எத்தனை இலக்கியக் காட்சிகளை நாம்
கண்டு களித்திருக்கிறோம். புலவர் செவந்தியப்பன், டாக்டர் சந்திரசேகரன் அவர்களும் சிலப்பதிகாரத்தைப் பற்றிப்பேசுவதற்காக என்னை அழைத்துக்
கொண்டு வந்தார்களே, அந்த நாள் எனக்கு நினைவுக்கு வருகிறது. எந்த அள வுக்கு செழித்துக்கிடந்தது சோழவள நாடு என்று, அன்று நான் சொன்னேன்,



கதிரவனின் கிரணங்கள் வானப்பெருவழியில் எழுவதற்கு முன், ஊர் உறங்கும் வேளையில் புறப்பட்டுச்சென்றுவிடுவோம் மதுரைக்கு என்று கண்ணகியை அழைத்துக்கொண்டு, மாசாத்துவன் மகன் கோவலன் புறப்பட்டபோது, எதிரில் சந்தித்த கவுந்தி அடிகளிடம் நாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும். பாதை யைக் காட்டுங்கள் என்று கேட்ட நேரத்தில், அருமை மகளே, என் அருமை மகனே, இதோ இந்த வழியாகப் போக வேண்டாம். கவன மாகப் போக வேண் டும். ஏனென்றால், இங்கே பலா மரங்கள் இருக்கின்றன. போகிற வழியெல் லாம் செழிப்பான மரங்கள் இருக்கின்றன. காற்று பலமாக வீசுகிறபோது, அந் தப் பலா மரங்களினுடைய பலா கனிகள், இந்தத் தளிர் மேனியாகிய கண்ணகி
முகத்தில் மோதி அறைந்துவிடக் கூடும். காயம் ஏற்பட்டுவிடும். பயந்து விடு வாள். எனவே, எச்சரிக்கையாகச் செல். போகிற பாதையில் தரையைக் கவனித் துச் செல். வள்ளிக் கொடிகள் இருக்கும். வள்ளிக் கிழங்குகள் தோண்டப்பட்ட குழிகள் இருக்கும். கண்ணகி அதில் கால் இடறி விழுந்து விடக்கூடாது. பசுந் தளிர்களில், பட்டு விரிப்புகளில் நடந்து பழகியவள் அல்லவா, மாநாய்கன் மகள் பத்தினி தெய்வம் கண்ணகி. கவனமாகப் போ.

மருத நிலத்தின் வாய்க்கால் வழியாகச் சென்றால் மிகவும் எச்சரிக்கையாகச்
செல்ல வேண்டும்.நெல் வயல்கள் செழித்து இருக்கக்கூடிய அந்த வயல்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வாளை மீன் சீறித் தாவும், அப்படி தாவுகிற நேரத்தில், கண்ணகி பயந்துவிடுவாள். எனவே இந்த இடங்களை எல் லாம் கவனத்தில் கொண்டு உங்கள் பயணத்தைத் தொடர்க என்று கவுந்தி அடி கள் சொன்னதாகப் படித்தேன். அந்தச் சோழவளநாட்டின் எதிர்காலம் என்ன
ஆவது?

எனவே, இப்படிப்பட்ட ஆபத்துகள் சூழ்ந்திருக்கக்கூடிய வேளையில்,மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தைக் கொண்டுவருகிறதே! இதற்கு என்ன மார்க்கம். கேள்விகளை மட்டும் எழுப்பிப் பயன் இல்லை. விடைகளையும் தர வேண்டும். பிரச்சினை களைப் பற்றி பேசுவது மட்டும் சரியாகாது. பிரச்சினைக்கு என்ன
தீர்வு? ஆபத்து இருக்கிறது என்று சொல்கிறாயே! இதற்கு என்ன தீர்வு? தீர்வு இருக்கிறது. வஞ்சகம் செய்கின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இனி கொலுமண்டபத்தில் ஒருபோதும் அமர அனுமதிக்கக்கூடாது. இந்திய நாட்டி னுடைய அரசியல் தட்ப வெப்ப நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண் டே வருகின்றன. அதில் மனதுக்கு சற்று நம்பிக்கை ஊட்டுவது, இனி ஏகபோக ஒரு கட்சி ஆட்சி என்பது இமயக் கொடுமுடி முதல் குமரி திருவடி வரை ஒரு போதும் நடக்காது.ஏற்கனவே மாற்றம் ஆரம்பமாகி விட்டது. 1970 களில் அதன் தோற்றம் இருந்தது. 1980 களில் அந்த மாற்றத்திற்கான அறிகுறிகள் இருந்தது.

காங்கிரஸ் தூக்கி எறியப்படும்!

இன்றைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு முன்பு போல அகில இந்திய அளவில் ஆட்சி நடத்தக் கூடி ய வாய்ப்பு கிடைக்காது.வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கி ரஸ் தூக்கி எறியப் பட்டுவிடும். அது ஆட்சி பீடத்திற்கு வர முடியாது. வரக் கூடாது. வர அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அனுமதிக்கக் கூடா து. இழைக்கப்பட்ட கொடுமைகள், பறிக்கப்பட்ட உயிர்கள், கொல்லப் பட்ட தமி ழர்கள், சிந்தப்பட்ட குருதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன் னிப் பே கிடையாது. இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் மரண பூமியில் வதைக்கப் பட்டார்கள். அந்த துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது.

எந்த அரசு வந்தாலும் சரி, ஒரு கட்சி ஆட்சி என்பது இனி இந்தியாவில் கிடை யாது. மாநிலக் கட்சிகளினுடைய கூட்டமைப்புதான் இந்திய அரசியலை இனி தீர்மானிக்கப்போகிறது.தீர்மானிக்க வேண்டும். கூட்டாட்சித் தத்துவம் மலரட் டும். கூட்டணி ஆட்சிக்கும், கூட்டாட்சிக்கும் வேறுபாடு இருக்கிறது. கூட்டாட் சித் தத்துவம் மலர வேண்டுமானால், குவிந்து கிடக்கக்கூடிய மத்திய அரசின்
அதிகாரங்கள், அனைத்தும் பரவலாக்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலைமை உருவாக வேண்டும்.

தமிழகத்துக்கு வஞ்சகம் செய்திருக்கக் கூடிய இந்த அரசு, இந்தச் சட்டத்தை
நிறைவேற்ற முயல்கிறதே, இந்த சட்டத்தினுடைய மசோதாவை வடிவமைத் துக் கொடுத்தவர்கள் டெல்லியில் இருக்கக்கூடிய கேரளத்தினுடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். நமக்கு எதிராக எந்தச் சட்டத்தை கேரளம் கொண்டுவந்ததோ, அதே சட்டத்தினுடைய வாசகங்களைக் கொண்டதாகவே அணை பாதுகாப்பு
மசோதா உருவாகி இருக்கிறது. இந்த மசோதாவின் உட்சரத்துகளைப் படித்து விட்டு, டிசம்பர் மாத குளிர்கால வேளையில் நான் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்தேன். தனிப் பட்ட முறையில் அவரிடத்தில் ஈழத் தமிழர் களுக்கு கேடு செய்யாதீர்கள் என்று 2004 ஆம் ஆண்டு முதல் பலமுறை அவ ரைச் சந்தித்து மன்றாடிக் கேட்டிருக்கிறேன். ஆபத்து வருகிறபோது, வேறு வழி யில்லாத காரணத்தினால், தலைமை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத் திருக்கிறேன். தஞ்சையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருக்கிற வழி யில் காரில் இருந்தவாறு தொலைபேசியில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, நான் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் அவச ர மாகப் பேச வேண்டும் என்றேன். அடுத்து அரை மணி நேரத்துக் குள்ளாக, பிர தமர் அலுவலகத்தில் இருந்து என்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

பிரதமரிடம் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தி அங்கயற்கண்ணி என் கின்ற கயல், இலங்கைத் தீவில் இராணுவத்தினரால் கைது செய்து கொண்டு போய் வைக்கப்பட்டு இருக்கிறார். உயிருக்கு ஆபத்து நேரலாம். அதைவிட பெரும் துன்பம் ஏற்படலாம். அவரை விடுவிப்பதற்கு உடனடியாக நீங்கள் ஏற் பாடு செய்ய வேண்டும். நான் மிகுந்த பதட்டத் தோடு உங்களிடம் பேசுகிறேன்
பிரதமர் அவர்களே என்று கூறிவிட்டு, இதற்காக உங்களைச் சந்திக்க நாளை
டெல்லிக்கு வருகிறேன் என்றேன். மறுநாள் டெல்லிக்குச் சென்றேன்.அவரது இல்லத்துக்குள் நுழைகிற போது, வாசலுக்கு வந்து நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண்ணை விடுவித்து பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு
செய்துவிட்டோம் என்று முதல் வார்த்தையாகச் சொன்னார். மிக்க நன்றி என் றேன். அந்த பிரதம அமைச்சரை சந்திக்கிற போது சொன்னேன், டாக்டர் மன் மோகன் சிங் அவர்களே, தனிப்பட்ட முறையில் உங்கள் மீது நான் மதிப்பு வைத்து இருக்கிறேன். ஆனால், இந்த நாட்டின் பிரதமரை கடுமையாகக் கண் டனம் செய்கிறேன் என்று முகத்திற்கு நேராகச் சொன்னேன்.

வேறொரு அரசியல் கட்சித்தலைவராக இருந்தால், உங்களுக்கான  சந்திப்பு நேரம் இரத்து செய்யப்பட்டு விட்டது, நீங்கள் போகலாம் என்று சொல்லியிருப் பார்கள். நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட முறை யில் உங்களிடம் நான் அன்பாக இருக்கிறேன். நான் உங்களைப் பாராட்டு கிறேன் வைகோ என்றார். நான் கூறுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று அவரிடம் சொன்னேன். அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கி னால், சோவியத் ரஷ்யா உடைந்ததைப்போல இந்தியா தனித் தனி நாடுகளாக
உடைந்து போகும் என்றேன். இதை பிரதமர் வீட்டு வாயிலில் பத்திரிகை யாளர் களிடம் தெரிவித்து, அன்று ஏடுகளில் கூட வந்திருக்கிறது.

ஒரு மாநிலம் தன் மாநில எல்லைக்குள் இருக்கிற அணைப் பற்றி முழு முடிவு
அந்த மாநிலம் எடுக்கலாம் என்றால், எங்களுக்கு பெரும் ஆபத்து அதனால்
நேரும் என்றால், அதற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய மாநி லத்துக்குள்ளே இருக்கக்கூடிய மத்திய அரசினுடைய நிறுவனங்களை தங்கள் மாநிலத்துக்குச் சொந்தம் என்று அறிவிக்க எவ்வளவு நேரம் ஆகும். இதுதான் உக்ரைனில், உஷ்பெக்கிஸ்தானில், கஜகஸ்தானில், லுத்வேனியாவில் நடந் தது, பதினைந்து தேசங்களாக ரஷ்யா சிதறியது.

1990 ஆம் ஆண்டு பிப்பரவரி 9 ஆம் தேதி காவிரி ஆற்றங்கரை இராணுவ மைதா னத்தில், ‘உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில் உரையாற்று கிற போது, கிரம்ளின் மாளிகைக்கு ஓர் எச்சரிக்கைக் குரலாக இருக்கிறது. ரஷ்யா பதினைந்து துண்டுகளாகப் போகும் என்று சொன்னோம். அதே போன்ற நிலை மை இந்தியாவில் ஏற்பட்டு விடக் கூடாது. ஒவ்வொரு மாநிலமும் தன் மாநி லத்துக்குள் இருக்கக் கூடிய அமைப்புகள் எங்களுக்குச் சொந்தம் என்று கூறும். கூடங்குளம் அணுஉலையா மூடி விடுவோம்.அணுஉலை எங்களுக்குத்தேவை யில்லை. துப்பாக்கித் தொழிற்சாலையா? அது இருக்கட்டும். டாங்கி தொழிற் சாலையா? இருக்கட்டும்.நெய்வேலி நிலக்கரி நிறுவனமா? அது எங்கள் சொத் து. எங்கள் மண்ணுக்குரியது. அது எங்கள் தமிழகத்துக்குரியது. ஐக்கிய முற் போக்குக் கூட்டணியினுடைய இந்தப் போக்கு தடுக்கப்படாவிட்டால், இனி வரப்போகிற அரசுகள் இதே பாதையைப் பின்பற்றினால், நான் இந்தப் புதுக் கோட்டை மண்ணில் இருந்து சொல்கிறேன், இந்தப் போக்கு மாறாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்காது.

அது கானல் நீராகி விடும்.எதிர்காலத்தில் அது ஏற்படும் என்ற எச்சரிக்கை யோடு சொல்கிறேன். அப்படியானால், தமிழ் நாட்டுக்கு வரக்கூடிய தண்ணீ ரைத் தடுத்து நிறுத்துகின்ற கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை நீங்கள் எப்படிக்
கட்டுப்படுத்த முடியும் என்று கேட்கலாம். இந்திய ஒருமைப்பாட்டைப் பாது காத்துக்கொள்வதற்கு ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்குச் செய்கிற வஞ்சகத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தட்டும். அது இல்லையேல் மத்திய அரசு எங்களுக்கு எதற்காக? கேரளத்தைப் பொறுத்தமட்டில், 13 சாலைகளில்
நாம் மறியல் போர் நடத்தினோம்.கேரளத்தில் நதிகள் உண்டு, ஆறுகள் உண்டு, அலைகள் கொந்தளிக்கும் கடல் உண்டு. ஆனால், நிலம் கிடையாது. இயற்கை சிலவற்றை சிலருக்கு அதற்காகவே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுக் கு நிலம் இல்லை. அரிசி, பருப்பு, பால் எதுவும் நாம் இன்றி அவர்களுக்குக்
கிடைக்காது. கர்நாடகத்தில் இருந்தும், ஆந்திரத்தில் இருந்தும் கடல் மார்க்க மாகக் கொண்டுவர முடியாது.எனவே நீங்கள் எங்களுக்கு கேடு செய்தால், உங் களுக்கு எந்தப் பொருளும் வராது.

கரிகாலன் கல்லணை

தமிழகத்தை ஒரு பக்கத்தில் இயற்கை வஞ்சிக்கிறது. நிலத்தடி நீர் பாழாகிப் போய்விட்டது. நிலங்களை, ஆறுகளை, பாதுகாத்து, ஏரிகள்,குளங்களை அமைத்த மன்னர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கல்லணை யைக் கட்டிய கரிகால் பெருவளத்தான். ஜெர்மனியப் பொறியாளர்கள் திகைக் கின்ற அளவுக்கு,தொழில் நுட்பத்தை அன்றைக்கு நிலை நாட்டிய சோழ மாமன் னர்கள் நீர் நிலைகளைப் பாதுகாத்தார்கள்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்பட்டு இருக்கிறதே? இன்றைக்கு தஞ்சைத் தரணியில் குமுறல் கேட்கிறது. ஆற்றுப்
படுகைகளில், நதிப்படுகைகளில் தமிழகத்தின் மணல் அள்ளப்பட்டு, சுரண்டப் பட்டு ஆங்காங்கு பாறை களாகத் தென்படுகின்றன. நான் அந்த வழியாகச் செல் கிறபோது, காளிங்க ராயன் கால்வாயையும், காவிரி ஆற்றையும் ஈரோட்டைக் கடக்கின்ற போது பார்த்தேன். இதில் ஈடுபட்டவர்கள் ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி அதனுடைய முக்கியப் பிரமுகர்கள் இந்த மணலைக் கொள்ளையடிக்கிற போது, அவர்கள் தங்கள் சந்ததிகளுக்குக் கேடு செய்கிறார்கள் என்பதை மறந்து
விட்டார்கள்.

அக்காலத்து மன்னர்கள், மக்களுக்காக வாழ்ந்தார்கள். இந்த மணலைத் தோண் டியதன் விளைவாக எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது.நிலத்தடி நீர் போய்விட்டது. குடிப்பதற்கு தண்ணீர் இருக்காது.இதற்கு மத்தியில் தேசிய நீர் கொள்கை என்று குடிதண்ணீருக்குக்கூட பன்னாட்டு கம்பெனிகளிடம் இருந்து
விலைக்கு வாங்க வேண்டிய ஒரு அக்கிரமமான திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர துடித்துக்கொண்டு இருக்கிறது.

மீத்தேன் வாயு

அனைத்துப் பக்கத்திலும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. போதாக்குறைக்கு 691 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தச் சோழவள நாட்டில், பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கப்போகிறோம், நிலக்கரி எடுக்கப்போகிறோம் என்று 500 அடி முதல் 1200 அடி வரை குழிதோண்டப் போகிறார்கள். கிணறுகள் அமைக்கப் போகிறார்கள். இந்தக் கிணறுகள் அமைக்கின்றபோது, நிலத்தடி நீர்
அடியோடு உறிஞ்சப்பட்டுவிடும்.கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். எல்லாம் உவர் தண்ணீராகிவிடும். பூமிக்குள்ளே இந்த ஆழ்குழாய் கிணறுகள் ஏற்படுத் தப் படுகிறபோது, நிலநடுக்கங்கள் ஏற்படும். பேராபத்து ஏற்படும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் நிலங்களை விற்காதீர்கள் என்று சொன் னேன். என் அன்புக்குரிய வேளாண் பெருமக்களே, என்ன பொருளாதர நெருக் கடி இருந்தாலும் இந்த மீத்தேன் வாயு எடுப்பதற்காக நிலங்களை எக்காரணத் தைக் கொண்டும் கொடுத்துவிடாதீர்கள்.நமது சந்ததிகள் வாழ்வு அழிந்து போகும். எனவே, இப்படிப்பட்ட துன்ப துயரங்களில் இருந்து தமிழகத்தைக்
காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நச்சு ஆலையை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இர வோ டு இரவாக காரில் பயணித்து நாளை மறுநாள் டெல்லி சென்று பசுமைத் தீர்ப் பாயத் தினுடைய தலைமை தீர்ப்பாயத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விட் ட தால், நாளை மறுநாள். புது டெல்லியில் இருக்கக்கூடிய தலைமை பசுமை தீர்ப் பாயத்தின் வழக்கு மன்றத்தில் போய் நான் நிற்க வேண்டும். 18 ஆண்டுகால மாகப் போராடிக்கொண்டு வருகிறோம். சுற்றுச் சூழலை நாசமாக்கி, விசப்புகை யைக் கக்கி மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, உழவர் வாழ் வை அழிக்கக்கூடிய, நிலங்களை பாழ் படுத்தக்கூடிய, மீனவர்களுடைய வாழ் வை சூறையாடக்கூடிய இந்த எமனைக் கொண்டுவந்து எங்கள் தலைமீது ஏன் திணிக்கிறீர்கள் என்று போராடினோம்.

என்னுடைய தோழர்களும் என்னுடன் வந்து போராடினார்கள். முற்றுகைப்
போராட்டம், உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டங்கள் நடத்தி னோம். கடைசியாக நடந்த முற்றுகைப் போராட்டத்தின் போது,அந்த நிகழ்ச்சி யை முடித்துக்கொண்டு தஞ்சையில் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்ல வேண் டும். நான் முற்றுகைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, விடுதலை
செய்யப்பட்டவுடன் இரவில் காரில் பயணித்து வருகிறேன். அப்பொழுது ஸ்டெர் லைட் நிர்வாகம் சொல்கிறது, இந்த தொழிற்சாலைக்குள்ளே இரண்டு பேர் விபத்தில் இறந்து போனார்கள். அதற்கு சதி வேலைதான் காரணம். விடு தலைப் புலிகள் உள்ளே புகுந்து சதி வேலை செய்து விட்டார்கள் என்று ஸ்டெர் லைட் நிர்வாகம் கூறியது. அன்றைக்கு அந்தப் போராட்டத்தை நான் தலைமை
தாங்கி நடத்தினேன்.அதனால், அது என்னைக் குறிவைத்து சொன்னது. ஆனால், விடுதலைப்புலிகள் எவரும் அங்கே வரவில்லை.

இது தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து. அதற்குப் பிறகுதான் நான் அறிவித் தேன், இவர்கள் நம் மீது பழி சுமத்த முனைகிறார்கள். நீதிமன்றத்தின் கதவு களைத் தட்டுவோம்.ரிட் மனு தாக்கல் செய்வோம். அதைப்போல் உயர்நீதி மன் றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துவிட்டு, கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் நான் வாதங்களை எழுப்பியிருக்கிறேன்.. எதிர்த் தரப்பில் கே.கே.வேணுகோபால் வந்து வாதாடினார். அட்டர்னி ஜெனரலாக இருந்த ஜி.இராமசாமி. அவர் ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்து, சென்னையில் தான் இருக்கிறீர் களா? என்றார். ஆம் என்றேன். நாளை உங்களைச் சந்திக்க வருகிறேன் என் றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்தியாவின் அரசு தலைமை வழக்கறி ஞராக இருந்தவர், எதற்கு என்னைச் சந்திக்க வேண்டும்? மறுநாள் காலை 11 மணிக்கு தாயகத்துக்கு வந்தார்.

அவரை வரவேற்று அமரச்சொல்லி தேநீர் தந்தேன்.அதற்குப் பிறகு அவர் குறிப் பிட்டார், இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டி ருக்கிறீர்கள். அது சுற்றுக் சூழலை நாசமாக்கும் என்ற கருத்தைக் கொண்டிருக் கிறீர்கள். அதுபற்றி விளக்கங்களைத் தருவதற்கு அந்த ஆலையினுடைய அதி பர் விரும்பு கிறார். எனவே அவரைச் சந்திப்பதற்கு நீங்கள் நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும். நீங்கள் குறிப்பிடுகிற எந்த இடத்திற்குச் சொன்னாலும் அவர்
வருவார் என்றார். நான் ஒருபோதும் அவரை சந்திக்கமாட்டேன் என்று சொல் லி விட்டேன். அவர் உலகக் கோடீசுவரனாக இருக்கலாம்.அவருடைய முகம் வாடியது. நான் சொன்னேன், எங்கள் கிராமப்புறங்களில் ஒரு பழமொழி இருக் கிறது.பனை மரத்துக்குக்கீழே நீங்கள் பருகுவது எது என்று மக்களுக்குத் தெரி யாது. அந்த சந்தேகத்திற்கு நான் ஆளாக நேரிடும் என்றேன். அவர் திரும்பப் போய்விட்டார்.

சில நாள் கழித்து டெல்லிக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலைய ஓய் வறையில் அமர்ந்திருந்த போது, ஒரு கணவனும் மனைவியும் வந்தார் கள். அவர்கள் உட்காரு வதற்காக நான் இருந்த இருக்கையை விட்டுவிட்டு அடுத்த இருக்கையில் போய் அமர்ந்தேன். உடனே அந்த நபர் என்னைப் பார்த்து திரு வைகோ அவர்களே நீங்கள் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி என்றார். அவர்
ஏதோ புகழ்கிறார் என்று நினைத்தேன். அடுத்துச் சொல்கிறார். இந்தத் தமிழ் நாடு முன்னேற வேண்டுமென்றால், உங்களைப் போன்றவர்கள் அதிகாரத் துக் கு வரவேண்டும் என்றார். அடுத்து அவர் சொன்னது எனக்குத்தூக்கி வாரிப் போட்டது. புகழ் போதை தரக்கூடியது. புகழ் மொழிகள் பள்ளத்தில் கொண்டு போய் வீழ்த்தக் கூடியது. மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான புகழுரையைத் தருகிறபோது, உன்னை நீயே கவனப்படுத்திக்கொள் ள வேண்டும். ஆபத்தான இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வதற்கான முயற்சி என்று நீ கருத வேண்டும். அந்த அளவுக்குத் தகுதியானவன் என்று தப்புக்கணக்குப் போட்டுவிடாதே என்று என் மனதுக்குள் என்றைக்கும் சொல் லிக் கொண்டு இருப்பவன் நான்.

எனவே என்னிடத்தில் எதற்காக நீ நாட்டுக்கு முதலமைச்சராக வர வேண்டும் என்று முன் பின் தெரியாத ஒருவர் சொல்கிறார். அதற்கான வாய்ப்பே கிடை யாதே. நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அவர் தன்னுடைய அறிமுகச் சீட் டை எடுத்துக்கொடுத்தார். அதைப் பார்த்து யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அனில் அகர்வால், சேர்மன் கம் மேனேஜிங் டைரக்டர் ஸ்டெர்லைட் இன்ட ஸ் ட் ரீஸ். ஓ... இதற்காகத்தான் இந்தப் பீடிகையா? ஏற்கனவே என்னைச் சந்திக்க விரும்பினார். எனவே நான் அவரிடம் எதுவும் பேசவில்லை. பதினைந்து நிமி டம் உங்களிடம் நான் தனிமையில் பேச வேண்டும். நீங்கள் சொல்கிற இடத் திற்கு வருகிறேன் என்றார்.அகவர்வால் அவர்களே உங்களை ஒருபோதும் சந்திக்க விரும்பவில்லை என்றேன். நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக் கிறோம், அங்கே நாம் சந்தித்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டேன்.

அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010 செப்டம்பர் 28 இல் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நீதியரசர் திலிபி தர்மாராவ் அமர்வு தீர்ப்பளித்தது. உட னே உச்ச நீதிமன்றத்தில் போய் தடை ஆணை பெற முயன்றபோது, கேவியட் தாக்கல் செய்தேன். உண்மைகளை மறைத்து தடை ஆணை பெற்றார்.உச்ச நீதி மன்றத்தினுடைய நீதிமன்றத்தில் இரண்டு வருட காலத்தில் 30 அமர்வுகள் அமர்ந் திருக்கிறோம் நானும், சகோதரர் தேவதாஸ் அவர்களும். காலை 10.30 மணிக்குத் தொடங்கினால், நண்பகல் ஒரு மணி நேர உணவு இடைவேளைக் குப் பிறகு மூன்றரை மணிக்குத்தான் எடுப்பார்கள். பத்து அல்லது பதினைந்து நிமிடம் ஒத்திவைத்து விடுவார்கள்.

இரண்டு வருட காலம் 30 அமர்வுகள் சென்று, கடைசியாக கடந்த வருடம் அக் டோபர் மாதத்தில் இறுதி வாதம் நடந்தது. ஒன்றரை மணி நேரம் மன நிறை வான வாதங்களை நான் எழுப்பியபோது, அந்த நீதிமன்றத்தில் நீதியரசர் களி டம் கேட்டேன். இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்று மகா ராஷ்டிராவில் அனுமதி கேட்டுப் பெற்றார்கள். லைசென்ஸ் வாங்கினார்கள். இந்த தொழிற்சாலை இரத்தினகிரி மாவட்டத்தில் அமைப்பதற்காக கட்டிடம் கட்டப்பட்டது. இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. அங்குதான் உலகப் புகழ் பெற் ற அல்போன்சா மாம்பழங்கள் விளைகின்றன. இந்த நச்சுப் புகை படிகின்ற கார ணத்தினால், அந்த அல்போன்சா மாம்பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தது என்று வெளிநாடுகளில் இனி இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்ற செய்தி பரவிய உடன், இரத்தினகிரி மாவட்டத்து விவசாயிகள் ஒரு அமைப்பை உருவாக்கி இந்த ஆலை இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராடினார்கள். தொடர் போராட்டங்கள் நடந்தது. குறிப்பிட்ட நாளில் ஆலை தொடங்குவதாக இருந்தது. விவசாயிகள் கடப்பாரை, சம்மட்டிகளோடு சென்று அந்த ஆலை யை உடைத்து நொறுக்கினார்கள். காவல்துறை தலையிட வில்லை.

மறுநாள் முதலமைச்சர் சரத்பவார் ஸ்டெர்லைட்டுக்குக் கொடுத்த லைசென் சை கேன்சல் செய்தார். குஜராத் மாநிலத்தில் போய் கேட்டார்கள். உள்ளே வரா தே என்று சொல்லிவிட்டார்கள். கோவாவில் அடியெடுத்து வைக்க முயன்றார் கள். அவர்களும் இங்கே நாங்கள் உள்ளே விடமாட்டோம் என்று கூறி விட்டார் கள். நாங்கள் தான் கிடைத்தோமா? என்று கேட்டேன். எங்கள் தென்னாடுதான் கிடைத்ததா? எங்களை அழிக்கின்ற எமனைக் கொண்டுவந்து திணிப்பதற்கு. அப் படியானால், இந்த உருட்டாலைகள் எங்கே தயாரிப்பது என்று கேட்டார்.
அதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? எங்கள் தமிழ்நாடுதான் கிடைத்ததா?
எங்கள் தலைமீதுதான் எமனைக் கொண்டுவந்து திணிக்க வேண்டுமா? என்று நான் நீதிபதியிடம் கேட்டேன்.

நான் அவரிடம் சொன்னேன், நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங் கள் என்ன பயந்தவர்களா? வீர சிதம்பரம் உலவிய பகுதிதானே? பாஞ்சாலங் குறிச்சி யுத்த முழக்கம் கேட்ட பகுதிதானே? தூத்துக்குடி வீரர்கள் உலவிய பகு திதானே? வன்முறையில் இதுவரை ஈடுபட்ட தில்லை. உச்ச நீதிமன்றத்தில்
கடைசியாக ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று தீர்ப்பு வந்தது. நீதிமன்றத்தில் அமர்ந்து
இருக்கிறோம். உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப்போட் ட உத்தரவை உச்ச நீதிமன்றம் இரத்து செய்தது.ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதர வான தீர்ப்பைக் கொடுத்தது. கொடுத்து விட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு
வாரியத்துக்கு இந்த ஆலையை பராமரிக்கவோ, மூடவோ,கண்காணிக்கவோ எல்லா அதிகாமும் உண்டு என்றது. அதை இந்தத் தீர்ப்புக் கட்டுப்படுத்தாது. இதுதான் அவர் கொடுத்தத் தீர்ப்பு.

நான் நிலைகுலைந்து போனேன்.இப்படிப்பட்ட தீர்ப்பு கொடுத்த பிறகு நான் நீதி பதியை விமர்சிக்க முடியாது. நான் எழுந்து, மாட்சிமை தங்கிய நீதிபதிகளே, எங்கள் பகுதி மக்களினுடைய சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்ப தற்காக, அவர்கள் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள்
தொடர்ந்து போராடியிருக்கிறோம் என்றேன். நீதி கிடைக்க வேண்டும் என்பதற் காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன். நீதிக்காக ஏங்கினேன் என்று சொல் லிவிட்டு நிறுத்திக்கொண்டேன். அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. உடனே உச்ச நீதிதமன்ற நீதிபதி, நீங்கள் இவ்வளவு பெரிய சக்திகளை எதிர்த் தெல்லாம் போராடியிருக்கிறீர்கள் என்று தீர்ப்பில் பாராட்டியிருக்கிறேனே என்றார். நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. வெளியே வந்து போராடி னோம்.மக்கள் மன்றம் மகத்தான சக்தி வாய்ந்தது. என்னைப் பொறுத்தட்டில் எதுவும் தோல்வி கிடையாது. போராடிக்கொண்டே இருப்போம். அந்தப் பகுதிவாழ் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறோம்.

என் அன்புக்குரிய வர்களே, எங்கள் நேர்மைக்கு இதைவிட என்ன சாட்சியம் வேண்டும். எங்க ளி டம் காசு இல்லை. எங்கள் நெஞ்சில் மாசு இல்லை. எங்கள் கையில் பணம் இல் லை. ஆனால், தமிழகத்துக்குப் போராடுகிற நல்லெண் ண மும், குணமும் இருக் கிறது. இதை நீங்கள் தானே பாதுகாக்க வேண்டும் தோழர்களே. நாங்கள் வலு வாக இருந்தால் தமிழகத்துக்குத் தானே நல்லது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காக போராடுகிற இவர்கள், நேர் மையான தன்னலமின்றி போராடுகிற இவர்கள் மேலும் வளர்ந்து வருவ தும், வலுப்பெறுவதும் நாட்டுக்கும், நம் பிள்ளைகளுக்கும் நல்லதுதானே என்று எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். எங்கள் குரல் நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம். பதவிக்காக அல்ல. இந்த மன்றத்தில் ஒலிக் கின்ற குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று விரும்புவதற்குக்
காரணம் சூழ்ந்து வரும் கேடுகளைத் தடுப்பதற்காக. அழிக்க முற்படுகின்ற
அராஜ சக்திகளின் கரங்களை முறிப்பதற்காக. தமிழர்களின் ஆவேசத்தணலை வெளிப்படுத்துவதற்காக. அதற்காகத் தானே கேட்கிறோம்.

                                                                                                                    தொடரும் ...............

No comments:

Post a Comment