Saturday, April 13, 2013

உசிலம்பட்டி-‘ஈகியர் நினைவு நாள் கூட்டத்தில் வைகோ’

பெருங்காமநல்லூரை, சிவகங்கைச் சீமையை,
தமிழ் மண்ணின் வீரத்தைப் பேசுவோம்!-வைகோ 

பெருங்காமநல்லூர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம், தமிழ்த்தேசிய விடு தலை இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம் சார்பில், 3.4.2013 அன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவரது உரையில் இருந்து...

கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியே உயர்குணமேவிய தமிழா

என்ற பாவேந்தரின் வீர வரிகளுக்கு இலக்கணம் தீட்டிய தியாகபூமியாம் பெருங் காமநல்லூரில், பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் துப்பாக்கிக் குண்டு   களுக்குத் தங்கள் மார்பு காட்டி செங்குருதி சிந்தி மடிந்த,காளப்பன்பட்டி நடையநேரி பெரிய
மாயத்தேவரின் மகள் மாயக்காள் உள்ளிட்ட 16 மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்த்தேசிய மக்கள் இயக்கமும் இணைந்து நடத்துகின்ற இந்தக் கூட்டத்தின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



மூலை முடுக்கெல்லாம் முழங்குகிறேன்

பாஞ்சாலத்தின் முதல் அமைச்சராக இன்றைக்கும் இருக்கின்ற,அகாலி தளத் தின் மதிப்புமிக்க தலைவர்,இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரு அரசியல் தலைவர், என் நேசத்துக்கும் மரியாதைக்கும் உரிய பர்காஷ்சிங் பாதல் அவர்கள், பகத்சிங் தூக்கில் இடப்பட்ட நாளில், அவன் பிறந்த
கட்கர் கலான் என்ற கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்.

என்னை அன்போடு அரவணைத்துக்கொண்டு, ‘இதுதான் பகத்சிங் பிறந்த ஊர்’ என்று சொன்னார். அன்றைக்கு,பகத்சிங்கின் சகோதரர் உயிரோடு இருந்தார். அவர் என் அருகில் வந்து,என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.அந்தத் தம்பிக் குத்தான்,பகத்சிங் சிறையில் இருந்து கடிதம் எழுதினான்.நான் அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன். அதற்குப் பிறகு,பாகிஸ்தான் எல்லைக்கு என்னை
அழைத்துக் கொண்டு போனார்.பகத்சிங், சுக்தேவ், இராஜகுரு ஆகியோரின் நினைவாக எழுப்பப்பட்டு இருக்கின்ற, அவர்கள் உருவம் செதுக்கப்பட்டு இருக் கின்ற கல் சுவருக்கு அருகில், பகத்சிங்கின் தாயார் கல்லறையும் அங்கேதான்
இருக்கின்றது.

நாங்கள் அந்த ஊரை நோக்கிப்போகின்றவழி நெடுகிலும்,இலட்சக்கணக்கான மக்கள் சாரை சாரையாகச் சென்று கொண்டே இருப்பதைப் பார்த்தேன்.எத்தனை
ஆண்டுகள் ஆகி விட்டன? இன்றைக்கும் அந்தப் பாஞ்சாலத்து மக்கள், வீரத்தை வணங்குவதைக் கண்டு திகைத்துப் போனேன்.

அதைப்போல, இரத்தத் துளிகளால் நனைந்து இருக்கின்ற பெருங்காமநல்லூர் மண்ணை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.இங்கே உசிலம்பட்டி யில் பேசுகின்ற போது, ஏதோ ஒலிபெருக்கியைக்கொடுத்து விட்டார்கள் என்று
ஒப்புக்குப் பேசாமல், ஒரு உணர்வோடு பேசுகிறேன், உண்மையைப்பேசுகிறேன், சத்தியத்தைப்பேசுகிறேன்.

தங்கள் உயிர்களை ஈந்த அந்தத்தியாகிகளை நினைக்கின்ற பொழுது,இந்த இளைய சமுதாயம்,வீரம் மிக்க இந்த வளரும் தலைமுறை, மாணவர் சமுதா யம், அவர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் ஈழ விடுதலையை, தமிழகத் தின் வாழ் வாதார விடுதலையை என்பதற்காகப்பேசுகிறேன்.

1920 ஆம் ஆண்டு, இதே ஏப்ரல் திங்கள் 3 ஆம் நாள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஏவி விட்ட போலீஸ் பட்டாளத்தின் துப்பாக்கிகள் சீறின,குண்டுகள் பாய்ந்து வந்தன.பீரங்கிக்கும் துப்பாக்கிக்கும் அஞ்சாத தென்னாட்டு வீரர்கள், எண்ணற்ற
களங்களில் போராடி இருக்கின்றார்கள் என்பதை,தமிழகத்தின் மூலை முடுக் கெல்லாம் ஆயிரக்கணக்கான மேடைகளில் நான் முழங்கி இருக்கின்றேன்.

வேலும் வாளும் தூக்கியவர்களாக,வளரியும் அரிவாளும் தூக்கியவர்களாக
ஆதிக்கத்தை எதிர்த்துப் போர் புரிந்தார்கள்.குண்டுகளை மார்பில் தாங்கிச் சுருண்டு விழுந்தார்கள். 93 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த உசிலம்பட்டிச்சீமை யிலே, அந்த மானமறவர்களுக்கு, கள்ளர் நாட்டின் தீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்து கின்ற கடமையை, என்னுடைய அருமைத் தோழர்கள் இந்த நிகழ்ச்சி யின் மூலமாக ஏற்பாடு செய்தமைக்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்கின்ற வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்த, ஆரு யிர்ச் சகோதரர் தியாகு அவர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஊக்கம் பெற்றேன்

தமிழகத்தின் வீரஞ்செறிந்த களங்களை, மேடைகள்தோறும் சொல்லுவது என் வழக்கம். அப்படி இந்தப் பெருங்காமநல்லூர் களத்தைப்பற்றியும், எத்தனையோ மேடைகளில் பேசி இருக்கின்றேன்.ஆனால்,இந்த ஏப்ரல் மூன்றாம் நாளில்,அந்த
மண்ணுக்குச்சென்று,செங்குருதி படிந்த அந்த நிலத்தில் நடந்து,எந்த மந்தையில் அன்றைக்கு மக்கள் கூடினார்களோ அந்தத் தெருவில் திரண்டு இருந்த தாய்மார் களை வணங்கி, அவர்கள் அன்போடு,பாசத்தோடு வாழ்த்தி என்னை வரவேற்ற தனால், இன்னும் எத்தனையோ யுத்தகளங்களுக்கு நான் செல்ல வேண்டுமே என்பதற்கு என் மனதில் ஒரு உறுதியும், நெஞ்சில் ஊக்கமும் பெற்றவனாக இந்த மேடையில் வந்து நிற்கிறேன்.

நமது நூல் ஆசிரியர் சுந்தர வந்தியத்தேவன் அவர்கள் இங்கே உரை ஆற்றுகை யில், ‘ஜாலியன் வாலாபாக் நினைவுக்கு வருகின்றதே? பெருங்காமநல்லூர் உங்கள் நினைவுக்கு வரவில்லையா? தென்னாட்டைச் சுட்டிக் காட்டுங்கள்’
என்று குறிப்பிட்டார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் நடந்ததும், இதே ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாளில் தான். 1919 ஆம் ஆண்டு,அங்கே ஜெனரல் டயரின் உத்தரவு பிறந்தது. 400 க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரத்தம் ஆறாக ஓடியது. அதே போலத்தான்,அதற்கு அடுத்த ஆண்டு, 1920 ஏப்ரல் 3 ஆம் நாளில், இங்கே இந்தப் பெருங்காமநல்லூரில், பிரமலைக்கள்ளர் இளைஞர்கள் 16 பேர் தங்கள்
உயிர்களைத் தந்து இருக்கின்றார்கள்.

அன்றைக்கு இங்கே வந்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவன் ஆய்வு நடத்தி விட்டு, ‘இந்தப்பிரமலைக் கள்ளர் மக்கள் ஆயுதம் ஏந்தக்கூடியவர்கள்; வீரம்
செறிந்தவர்கள்; அவர்களைக் குற்றப்பரம்பரையினர்களாக நான் கருதுகிறேன். இந்த மண்ணுக்கு ஒரு விமோசனம் வேண்டும் என்றால்,இங்கே கல்வி வளர வேண்டும்;பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும்; இவர்களுடைய பிள்ளை கள் படிக்க வேண்டும்;இவர்கள் விவசாயம் செய்வதற்கு நிலங்கள் வேண்டும்; அவர்களுக்குதொழில் வாய்ப்புகள் வேண்டும்;அதற்கு கள்ளர் சீரமைப்புத்திட்டம்
செயல்படுத்தப்பட வேண்டும்’என்றும் கூறினார்.

ஒரு பக்கத்தில் அடக்குமுறையைக்கட்டு அவிழ்த்து விட்டாலும்கூட, மறுபக்கத் தில் இத்தகைய மாற்று நடவடிக்கைகளையும் பரிந்துரை செய்தார்கள், நிறை வேற்ற வும் தொடங்கினார்கள். என்றைக்கோ அவர்கள் பள்ளிக்கூடம் செல்லத்
தொடங்கினார்கள். எண்ணற்றவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.
இந்தத் தென்னாட்டின் வரலாறை நாம் பார்க்கிறபோது, மதுரையைச் சுற்றிலும்
மட்டுமே பத்துக் கள்ளர் நாடுகள் இருந்தன. கீழ நாடு, மேல நாடு, நடு நாடு, 14 நாடு, சிறுகுடி நாடு, குன்றக்கோட்டை நாடு, கண்டரமாணிக்க நாடு, பாகனேரி நாடு, பட்டன்மலை நாடு, பிரான்மலை நாடு எனப் பத்துக் கள்ளர் நாடுகள் இருந்தன.
குற்றப் பரம்பரைச் சட்டம்

1871 இல் வந்தது குற்றப் பரம்பரைச்சட்டம். அதன்படி, பெயர், விலாசம் அங்க மச்ச அடையாளங்களைப் பதிவு செய்தார்கள். ஆயினும், வெள்ளையர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எந்தவொரு மாகாண அரசும், குற்றப்பரம்பரைச் சட்டத் தைக் கொண்டு வந்து நிறைவேற்றிவிட முடியாது.கவர்னர் ஜெனரலின் ஒப்பு தல் வேண்டும். இந்தச்சட்டம், 1911 இல் திருத்தப்பட்டது.அந்தந்த மாகாண அரசு களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி பத்துவிரல்களின் ரேகை பதிவு செய்ய வேண்டும்.

முதன்முதலாக, 1914 ஆம் ஆண்டு,மே 5 ஆம் தேதி,கீழக்குயில்குடியில்  தான் அந்தச் சட்டம் கொண்டு வந்து திணிக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சொரிக்கான்
பட்டி, மேல உரப்பனூர்,பூசலப்புரம் ஆகிய மூன்று ஊர்களிலும் திணிக்கப்பட்டது.

ஏற்க மாட்டோம்

1918 ஜூலை 6 ஆம் தேதி, இந்தப்பகுதியில் வாழுகின்ற கள்ளர் நாட்டு மக்கள், சென்னை மாகாண அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு ஒரு தந்தி
அனுப்பினார்கள். ஜார்ஜ் ஜோசப் அவர்கள்தாம்,அந்தத்தந்தியை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.அதில் ஒப்பம் இட்டவர் வெள்ளையத்தேவர்.அவர் சொல்லு கிறார்: ‘நாங்கள் 3000 ரூபாய் கிஸ்தி கொடுக்கக்கூடிய பட்டாதார்கள். நேர்மை யாக வாழ்கின்றவர்கள். நாங்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் அல்ல. எங்கள்
மீது இந்தச் சட்டம் பாயக்கூடாது’என்று,அந்தத் தந்தியில் அவர் குறிப்பிடுகிறார்.
செப்டெம்பர் 14 ஆம் தேதி ஒரு உத்தரவு வருகிறது, ‘உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது’ என்று. 

மீண்டும் சட்டம் திருத்தப்படுகிறது. 1918 ஆம் ஆண்டு, அது பாய்கிறது.1920. அது தான் மறக்க முடியாத ஆண்டு. சிந்துபட்டியில் இருந்து காவல்துறையினர் வரு வார்கள்; திருமங்கலத்தில் இருந்து காவல்துறையினர் வருவார்கள்; உசிலம்
பட்டியில் இருந்து வருவாய்த்துறைஅதிகாரிகள் வருவார்கள். இப்படி வரிசை யாக வந்தார்கள், அடக்குமுறை பாய்ந்தது.

‘குற்றப் பரம்பரைச் சட்டப்படி, இரண்டு பதிவு ஏடுகள். முதலாவது பதிவு ஏடு ரிஜிஸ்தர் 10-1.ஏ,இரண்டாவது பதிவு ஏடு ரிஜிஸ்தர் 11-1 பி, அவர்கள் அங்க மச்ச
அடையாளங்களோடு,பெயர்,தகப்பன் பெயர், வயது,முகவரியோடு எல்லாவற் றை யும் பதிவு செய்தார்கள்.அவர்கள், குற்றவாளி களாகப் பதிவு செய்யப் பட்டார்கள்.

பிறகு அடுத்த பதிவு ஏட்டுக்குக்கொண்டுவரப் படுவார்கள். அவர்கள்,இந்தியக் குற்றச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருப்பதைவிட,அதிகத் தண்டனை பெறுவார் கள். ஒரு குற்றத்துக்காக ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை என்றால்,
இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அதே குற்றத்தைச் செய்தால்,  அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் தண்டனை. இப்படி மூன்று முறை அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டால், அதற்குப்பிறகு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

எல்லோரும் இரண்டாம் தேதி அன்று,பெருங்காமநல்லூருக்கு வந்து கையெழுத் துப் போட்டு விடுங்கள்,கைரேகையைப் பதிவு செய்யுங்கள் என்று அறிவிக் கின் றார்கள். அப்போது அந்த மக்கள் ஒன்றுதிரண்டு, ‘நாங்கள் மானத்தோடு வாழு கிற வர்கள், இந்த மண்ணில் விவசாயம் செய்து வாழுகிறோம்; இதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்கிறார்கள். ‘சரி இன்னொரு நாளைக்கு வருகி றோம்’
என்று சொல்லிவிட்டு, அந்த அதிகாரிகள் பின்வாங்கிப் போய்விடுகிறார்கள்.
அடக்குமுறையை எதிர்த்து, இந்தக்கள்ளர் நாடுகளின் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. மார்ச் 24 ஆம் தேதி அன்று,தும்மக்குண்டு சந்தைத்திடலில்,கள்ளபட்டி, கட்டத் தேவன் பட்டி யைச்சேர்ந்த 12 கிராமத்துக் கள்ளர்கள், ஒன்றாகத் திரளுகிறார்கள். ‘நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது; எதிர்த்துப்போராட வேண்டும்’ என்று தீர்மானிக்கின்றார்கள்.

நான்கு நாள்கள் கழித்து,மார்ச் 28 ஆம் தேதி அன்று,அதிகாரிகள் மீண்டும் பெருங் காமநல்லூருக்கு உள்ளே வருகிறார்கள்.சாதிகளைப்பிளக்கலாமா? என்று பார்க் கிறார்கள்.கள்ளர்களுக்கு எதிராக மற்ற சாதியினரைத்தூண்டி விடலாமா?என்று பார்க்கிறார்கள். வடஇந்தியாவில் இந்து முஸ்லிம்களைப்  பிளந்ததைப் போல், இங்கே சாதிகளைப்பிளக்க முனைந்தார்கள்,அதில் குளிர் காயலாம் என்று கருதி னார்கள்.

மக்கள் அரிவாளைத் தூக்கிக்கொண்டு,ஒருவரையொருவர் வெட்டிச்சாய்க்கும் போது, அந்த இரத்தத்துளிகளில் அரசியல் ஆதாயம் பார்ப்பது மிலேச்சத்தனம். நான் எல்லோரையும் சமமாகக் கருதுபவன்.இந்தத்தெற்குச்சீமையில் எப்பொழு தெல்லாம் கலவரம் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் மன்றாடிக் கேட்டு
இருக்கின்றேன். ‘நம் நாடி நரம்புகளில் ஓடுகின்ற இரத்தம் சிவப்பு; நாம் அனை வரும் சகோதரர்கள்; அண்ணன் தம்பிகளாக வாழ்வோம்; அமைதி நிலவட்டும்; நம் பிள்ளைகள் படித்து முன்னேறட்டும்; நமக்குள் கலகம் வந்தால்,நம் குழந்தை களுக்குத்தான் துன்பம்; தாய்மார்களுக்குத்தான் துன்பம்; நோயாளிகள், வயது
முதிர்ந்தோருக்குத்துன்பம்; வாழ்க்கை அழிந்து போகும், குடும்பங்கள் அழிந்து போகும், ஒன்றாக இருப்போம்’ என்றுதான் நான் நேற்றும் கேட்டேன்,இன்றும் கேட்கிறேன், நாளையும் கேட்பேன்.

காவல் முறைமை

அன்றைக்கு ஒரு முறை இருந்தது.விசுவாசமான நம்பிக்கையான காவல் முறை இருந்தது. அந்தக்காவலை மீறி ஏதாவது திருடு போனால், ஆடு மாடுகள் காணாமல் போனால், அதைத் துப்புத்துலக்கி கண்டுபிடித்துக் கொண்டு வந்து
நிறுத்துவார்கள். அப்படிக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதற்கான இழப்பு ஈட்டுத் தொகையை, அந்தக்காவல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கின்ற மக்களே தருவார்கள்.இப்படி ஒரு முறை, அப்போதுஉலகத்தில் வேறு எங்குமே
கிடையாது.

ஆனால், வெள்ளைக்காரன்,பெருங்காமநல்லூரில் சாதிகளைப்பிளக்க முனைந் தான். அந்த ஊர் நாயக்கமார்களை அழைத்து, ‘நீங்கள் இங்கே இருப்பவர் களுக் குக் கட்டுக்காவல் தருகிறீர்களா? கட்டாயக் காவல் கூலி தருகிறீர்களா கள்ளர்
களுக்கு? அப்படியானால், எங்களிடம் புகார் கொடுத்துக் கையெழுத்துப் போடுங் கள்; அவர்கள் அத்தனை பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கி றோம்;உங்களுக்கு வேண்டியதைச்செய்கிறோம்’ என்றபோது, அந்தப் பெருங் காமநல்லூரில் இருக்கின்ற நாயக்கர் சமூக மக்கள் சொன்னார்கள்: ‘காலம் கால மாக, நாணயத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே முதலாகக் கொண்டு,இந்தக் கள்ளர் நாட்டு மக்கள் எங்களைப் பாதுகாத்து வருகிறார்கள்; எங்கள் ஆடு, மாடு களை, பயிர்களைப் பாதுகாக்கிறார்கள்’ என்று.

இப்படி நாயக்கர் சமூகத்து மக்கள் சாட்சியம் கொடுத்த உடனேயே, அவர்கள், பிள்ளைமார், செட்டியார் சமுதாய மக்களை அணுகினார்கள்.அவர்களும், இதே கருத்தையே சொன்னார்கள்.அடுத்து அவர்கள் கூளநாயக்கன்பட்டிக்குப்போனார் கள்.அங்கே இருந்த நாயக்கர் சமூகத்து மக்களும், கள்ளர்களுக்கு ஆதரவாகவே சாட்சியம் அளித்தார்கள். இவையெல்லாம் 28 ஆம் தேதி நடக்கிறது.

பெருங்காம நல்லூர் முற்றுகை 

அடுத்து,காவலர்கள் படை திரண்டு வருகிறது என்று தகவல் வருகிறது. இர வோடிரவாக,திருமங்கலத்தில் இருந்து போலீஸ் பட்டாளம்,2 ஆம் தேதி இரவு தும்மக்குண்டுக்கு வந்து முற்றுகை போடக் காத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்தச் செய்தி பரவுகின்றது.பெருங்காமநல்லூரில் மக்கள் கூடுகிறார்கள். காளப் பன்பட்டி, குமரம்பட்டி,போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர்,தும்மக்குண்டு ஆகிய ஐந்து கிராமங்களின் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. இவர்கள் தகவல் சொல் லுகிறார்கள். இந்த ஊர்களுக்கு இடையே, கொள்வினை,கொடுப்பினை இருக் கின்றது. மாமன்-மச்சான், அண்ணன்-தம்பி உறவு முறைகள் இருக்கின்றன. சொல்லி அனுப்புகிறார்கள். இளவட்டப்பிள்ளைகளுக்கு எல்லாம் தகவல் போ கிறது. அரிவாளைத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள்; வளைதடி களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்; எங்கள் ஊரில் இருந்து பிடாங்குச்சத்தம் கேட்டால், சண்டை மூண்டு விட்டது என்று, நீங்கள் உடனே புறப்பட்டு வந்து விடுங்கள்
என்று தகவல் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.

விட்டிபெருமாள் தேவர்,சிலம்பக்கூடம் வைத்து இருக்கிறார்.இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கிறார். அவர் திடகாத்திரமானவர், பெரிய வீரன்,பத்துப் பேரை அடித்துக்கீழே சாய்க்கின்ற பலம் உண்டு.அதேபோல, துணிச் சல்காரர். அவர் சொல்லுகிறார்: வெள்ளைக்காரன்ஏவிவிட்டு, இந்தப் போலீஸ் காரன் இங்கே உள்ளே நுழைந்தால், அந்தப் பயலுகளைப் பொங்கல் வைத்து விட
வேண்டும் என்று. காத்தாண்ட அம்மனுக்குப் பலி போட்டு விடணும் டா; ஒரு பயலையும் உயிரோடு திரும்பிப் போகவிடக் கூடாதுடா என்கிறார். அதைக் கேட்டு, இளைஞர்கள் ஆயத்தமாகி விட்டார்கள்.

3 ஆம் தேதி விடிகாலை 4.00 மணி.பெருங்காமநல்லூரைச் சுற்றிலும் போலீஸ் வளைத்து நிற்கிறது. சேவல் கூவி விட்டது, பறவைகள் புறப்பட்டு விட்டன. இன்னும் சிறிது நேரத்தில்,பொழுது விடியப் போகிறது. காலை ஆறு மணிக்கு, உசிலம்பட்டியில் இருந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வருகிறார்கள். ஊர் மந்தைக்கு வந்து, ஊர்ப் பெரியவர்களை அழைக்கிறார்கள். ‘குற்றப் பரம்பரைச்
சட்டப்படி, நீங்கள் உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். விரல் ரேகை பதிய வேண்டும்; அங்க மச்ச அடையாளங்களைத் தர வேண்டும்’ என்கிறார்கள். அதற்குப்பிறகு, இந்தப்பகுதியில் உள்ள இளைஞர்கள், காவல்துறையால் கண் காணிக்கப்படுவார்கள்.அவர்கள் சொல்லுகின்ற இடங்களில் தான் தங்க வேண் டும்; காவல் நிலையத் தாழ்வாரத்தில், கட்டாந்தரையில்தான் படுத்து உறங்க
வேண்டும். கல்யாணமான அன்று இரவுகூட புதுமாப்பிள்ளை,காவல்நிலையக் கட்டுப்பாட்டில்தான்படுத்துக்கிடக்க வேண்டும்.

இதேபோலத்தான், ஸ்காட்லாந்து மக்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன. பிரேவ் ஹார்ட் ஆங்கிலப்படத்தில் காட்டுகிறார்கள்.

ஊர்ப்பெரியவர்கள்,அதிகாரி கள்சொன்னதைக் கேட்டுக் கொதித்துப்போனார்கள். இதை ஏற்றுக் கொள்ள முடி யாது என்றார்கள். போராடிச் செத்தாலும் பரவா யில்லைடா என்ற முடிவுக்கு வருகிறார்கள்.வாக்குவாதம் நடக்கிறது. ஏழு மணி ஆகி விட்டது.ஊருக்கு வெளியே நின்று கொண்டு இருந்த போலீஸ் பட்டாளம், ஊர் மந்தைக்கு உள்ளே வந்து விட்டது.இளைஞர்கள் கொதிக்கிறார்கள்.ஆயுதங் களைக்கையில் தூக்கி விட்டார்கள்,சிலம்பக்கம்புகளைச்சுழற்றுகிறார்கள்.என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; ஒரே ஆரவாரம், கூச்சல்.

எட்டரை மணி அளவில் ஒரு சிறு மோதல் ஏற்பட்டது, பிரச்சினை வெடிக்கிறது. பிடாங்கைப் போட்டு விட்டார்கள். அந்தச் சத்தம் கேட்ட உடனேயே, சுற்றுப்பட்டி
கிராமங்களில் இருந்தெல்லாம் இளைஞர்களும், பெரியவர்களும் திரண்டு ஓடி வருகிறார்கள். காலையில் 750 பேர்களாக இருந்தவர்கள், இப்போது 3000 பேர் களாகி விட்டது. கூட்டம் கூடிவிட்டது.


அன்றே களம் கண்ட மாயக்காள்

காவல்துறையினர், வானத்தைப்பார்த்துத் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கின்றார் கள். அதைப் பார்த்த ஒரு அதிகாரி, ஏண்டா வானத்தைப் பார்த்துச் சுடுகிறாய்? கூட்டத்தைப் பார்த்துச் சுடுடா என்கிறான்.சுடுகிறான். குண்டுகள் பாய்கின்றன.
அப்போதும் அதை எதிர்த்து முன்னேறி வருகிறார்கள். இன்றைக்கு ஈழத்தில்
பிரபாகரன் படை செய்ததை,அன்றைக்குப் பெருங்காமநல்லூர் இளைஞர் படை செய்து இருக்கின்றது.அப்படிப்பட்ட வீர இரத்தம். குண்டுகள் பாய்ந்த நிலையில், 11 பேர் இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள். மற்ற வர்கள், இரத்தக் காயங்களோடு விழுந்து கிடக்கின்றார்கள். அப்பொழுது தான்,நடையநேரி பெரிய மாயத்தேவர் மகள் மாயக்காள், காளப்பன் பட்டியிலே
வாழ்க்கைப்பட்டவர், அங்கேயிருந்து கூடைகளில் கவண் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.இன்றைக்கு ஈழத்தில் இளம்பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்களே,அப்படித்தான் அன்றைக்கு மாயக்காள் அந்தக்களத்திலே போய் நின்றார்.அடிபட்டுக் கிடந்தவர்களுக்குத்தண்ணீர் கொண்டு வந்து கொடுத் தார்.அப்போது, மாயக்காள் மீதும் குண்டு பாய்கிறது. கீழே விழுந்தவரை,
பயனைட் கத்தியால் குத்துகிறான். பல இடங்களில் கொடூரமாகக்குத்துகிறான். மாயக்காள் இறந்தார்.

மருத்துவமனையில் மேலும் ஐந்து பேர்உயிர் இழந்தார்கள். முதலில் செத்த 11
பேர்களையும், ஒரே குழியில் போட்டுப் புதைத்தார்கள். 200 பேர்களைப் பிடித்து, அவர்களது கை, கால்களுக்கு விலங்குகளைப் பூட்டி, திருமங்கலம் வரையிலும் கட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். 68 பேர் மீது வழக்கு. 30 பேர்களுக்குக் கடுங்காவல் தண்டனை.இந்தக் கொடுமைகளை எல்லாம் எதிர்த்து, இந்தப்பகுதி மக்கள் பொங்கி எழுந்து, வீரஞ்செறிந்த போராட்டங் களை நடத்தினார்கள்.

பூலித்தேவன்-கட்டபொம்மன்

இந்தத் தென்னாட்டில், வெள்ளைக் காரனை எதிர்த்து, முதன்முதலில் வாள்
உயர்த்திப் போராடியவர், நெல்கட்டுஞ்செவல் மன்னர் பூலித்தேவன்.அவருக்கு முதன்முதலாகச் சிலை வைத்தவன் என்ற தகுதி எனக்கு உண்டு. நானும், என் தம்பி இரவிச்சந்திரனும் சேர்ந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, எங்கள் சொந்தச் செலவில் பூலித்தேவருக்கு, சிதம்பராபுரத்தில் சிலை அமைத்தோம்.
அதற்குப் பக்கத்திலேயே, தேவர் திருமகனார் சிலையையும்  அமைத்தோம். இரண்டு சிலைகள் இருக்கின்ற மண்டபத்தை, அண்மையில் புதுப்பித்துக் கொடுத்தும் இருக்கிறோம்.

அதற்குப் பிறகு, பாஞ்சாலங் குறிச்சியில் வீரபாண்டிய கட்ட பொம்மன் வாள் உயர்த்தினார்.மாவீரன் சுந்தரலிங்கமும், பகதூர் வெள்ளையத்தேவனும் உடன்
நின்றார்கள். கட்டக்கருப்பன் உடன் இருந்தான். நெல்கட்டுஞ்செவலில், ஒண்டி வீரன் தளபதியாக போரிட்டான்.பாஞ்சாலங்குறிச்சி வீழ்த்தப்பட்டது, கட்டபொம் மன் தூக்கில் இடப்பட்டான், ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டான். வல்லநாட்டு மறவர்கள் உதவியோடு அங்கிருந்து தப்பித்து
வெளியே வந்தான். மீண்டும் அந்தக்கோட்டையைக் கட்டி எழுப்பினான். ஒரு வெள்ளைக்காரத் துரையின் மனைவி வந்து கெஞ்சியபோது, எப்படி மாவீரர் திலகம் பிரபாகரன் பிடித்து வைத்து இருந்த சிங்கள வீரனை,அவனது கர்ப்பிணி மனைவி வந்து கேட்டுக் கொண்டபோது விடுவித்து அனுப்பினாரோ, அதைப் போல அனுப்பி வைத்தார் ஊமைத்துரை.அதற்குப்பிறகு, வெள்ளைக்காரனின்
பீரங்கிப்படை வந்து, அந்தக் கோட்டையைத் தகர்த்தது. அதைப் போலத்தான் இன்றைக்கு, ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் உதவியோடு, பிரபாகரன் கட்டி எழுப்பி இருந்த அரணைத் தகர்த்து இருக் கின்றார்கள். தமிழ் ஈழத்தை அழித்து வேட்டையாடி இருக்கின்றார்கள்.

சீறி எழுந்த சிவகங்கையின் வீரம்

அன்றைக்கு வெள்ளைக்காரனை எதிர்த்துப் போர்புரிந்த மான மறவர்கள் 500 பேர்களை, சிவகங்கையில் தூக்கில் போட்டுக் கொன்றார்கள். ஜாலியன் வாலா பாக்கிலே 400 பேர்களைச் சுட்டுக் கொன்றதாகப்பேசுகிறோமே, அதைவிடக்
கொடுமை, மருதுபாண்டியர்களின் படைவீரர்கள் சிந்திய இரத்தம்,திருப்பத்தூர் மண்ணை நனைத்தது,காளையார்கோவிலை நனைத்தது.அப்படிப்பட்ட வீரஞ் செறிந்தவரலாறைப் பேசுவோம்.

வடபுலத்தில் ஜான்சிராணி வாள் ஏந்திப் போராடினார். வெற்றி பெற முடிய வில்லை. நான் மதிக்கிறேன்.ஆனால், அதற்கு முன்பே, இங்கே இந்தத் தெற்குச் சீமையில் வாள் ஏந்திப் போராடினாளே வீரத்தாய் வேலு நாச்சியார்? அந்த மாதர் குல மாதரசி,இஸ்லாமியர்களை, யாதவர்களை,தேவேந்திர மக்களை அனைத் துச்சமூக மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, மருது பாண்டியர்களின் துணையோடு வெள்ளையரை எதிர்த்து விரட்டியடித் தாளே? வெள்ளைக்காரத் துரை பாஞ்சோருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தாள். அந்த மாதரசியின் காவியத் தை, எங்கள் செலவில் நாட்டிய நாடகமாகத் தயாரித்து அரங்கேற்றி இருக்கின் றோம். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் வெள்ளிவிழா மாநாட்டிலே நடத் திக் காண்பித்தார்கள். நியூ ஜெர்சி மாநில ஆளுநர், பட்டயமும் விருதும் கொடுத்து இருக்கின்றார். இப்போது,இது ஒரு சிறந்த நாடகம் ஐ.நா. வில் அரங் கேற்ற வேண்டும் என்று பரிந்துரையும் அனுப்பப்பட்டு இருக்கின்றது. கடந்த மாதம் மும்பையிலே, தில்லியிலே அரங்கேறி இருக்கிறது. இப்படிப்பட்ட வீர
வரலாறுகள் இந்தப் பகுதிக்கு உண்டு.இந்த மக்கள் வீரஞ்செறிந்தவர்கள்.இந்தப் பெருமைகளை நாம் பேசுவோம்.

1954 இல் என் ஊரில் என் பாட்டனார் கட்டிய இல்லத்தில் அன்றைய முதலமைச் சர் காமராசர் வந்து ஒருநாள் தங்கினார்.நான் அரைக்கால் சட்டை போட்ட பள்ளி மாணவன். அதன்பின் ஒருநாள், எங்கள் வீட்டுக்கு முன்னால்,பசும்பொன் ஐயா வாழ்க, தேவர் ஐயா வாழ்க என்ற குரல்கள் எழுந்தன. எங்கள் வீட்டுக்கு உள்ளே
வந்தவர்கள், என் தந்தையாரிடம்,தேவர் ஐயா உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்றார்கள். சற்று நேரத்தில் தேவர் திருமகனார் வந்தார்.நல்ல ஆஜானு பாகு வான தோற்றம், வீரஞ்செறித்த கண்கள். அவரைப்பார்த்தவுடன், என் தந்தை யார் எழுந்து கும்பிட்டார். நாற்காலியில் அமரச் சொன்னார். உங்கள் காலடிகள் எங்கள் வீட்டில் பதிந்தது நாங்கள் செய்த பாக்கியம். ஐயா, பசும்பால் சாப்பிட
வேண்டும்’ என்றார்.

அவர் ஒரே வார்த்தையில் சொன்னார்:‘ஐயா, நீங்கள் காங்கிரஸ்காரர். நானும்
காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தேன்.அந்தக் கட்சிக்காகப் பாடுபட்டேன்,சிறைக் குச் சென்றேன். ஆனால்,வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் குரலைக் கேட்டு, பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தேன். நீங்களும், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று சொல்வதற்காகத்தான் வந்தேன்’ என்றார்.

‘ஐயா அவர்களின் திருவுளப்படியே ஆகட்டும்’ என்றார் என் தந்தையார். அதற்குப் பிறகு, என் தந்தையாரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை.
தேவர் திருமகனார் நிறைந்த ஒழுக்கத்தோடு, விவேகானந்தரைப் போலப் பிரம்மச் சரியத்தைக் கடைப்பிடித்தவர்.தன்னுடைய சொந்த நிலங்களை ஒடுக்கப் பட்ட மக்களுக்குத் தந்தவர். அவர் மீது அபாண்டமான பழிகளைச்
சுமத்தினார்கள். அதில் இருந்து அவர் மீண்டு வந்தார்.

அதனால்தான், கடந்த 38 ஆண்டுகளாக நான் பசும்பொன் மண்ணுக்குச் சென்று, அவரது நினைவு இடத்தில் புகழ் அஞ்சலி செலுத்தி வருகிறேன்.அங்கே, முக்கு லத் தோர் சமூகத்து மக்களைத்தவிர வேறு சமூகத்தவர்கள் யாரும் வராத காலங்களில் இருந்து நான் அங்கே சென்று வருகிறேன். நானும், நேதாஜியை நெஞ்சில் மதித்துப் போற்றுகிறேன். மாவீரன் பிரபாகரனின் மானசீகமான தலை வரும் நேதாஜிதான்.

இந்த உசிலம்பட்டி பகுதியில் பாய்ந்த குற்றப் பரம்பரை ரேகைச் சட்டம்,1934 இல் ஆப்பநாட்டிலே கொண்டையங்கோட்டை மறவர்கள் மீதும் பாய்ந்தது. தேவர் பெரு மகனாரிடம் வந்து முறையிடுகிறார்கள்.அதைக் கேட்டு அவர் கொதித்து
எழுகிறார். இங்கே வந்து மாநாடு கூட்டுகிறார். வரதராஜூலு நாயுடுவைத் தலைமை தாங்க அழைத்துக் கொண்டு வருகிறார்.அவர்கள் திட்டமிடு கிறார் கள்.ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்கிறார்.கள்ளர் நாடுகளில் பிரச்சாரம்செய்கிறார்.
இந்தச் சட்டத்தை எதிர்க்கின்ற உணர்வைத் தூண்டுகிறார்.

1937 ஆம் ஆண்டு, ஆச்சாரியார் ராஜாஜி அரசு அமைந்தது. தேவர் திருமகனின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக் கின்றார் தேவர். தோழர் இராமமூர்த்தி, ஜீவா,ஜானகி அம்மாள், வீரத்தி யாகி விஸ்வநாத தாஸ் எல்லோரும் இங்கே வருகிறார்கள்.அவர்களைத்தேவர்
திருமகன் அழைத்து வருகிறார்.எங்கே? கம்பத்தில் இருந்து,உத்தமபாளையம், சின்னமனூர்,தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி,செக்கானூரணி வழியாக, லட்சக்
கணக்கான மக்களைத் திரட்டி மதுரை வரையிலும் சென்றார்கள். குற்றப்
பரம்பரைச் சட்டத்தை, கைரேகைச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தினார்கள்.

1939 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் தேதியன்று, திருமங்கலத்தில் கள்ளர் நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து,திருமலை சின்னத்தேவரின் வாரிசாக  வந்த தினகரசாமித் தேவர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கின்றார்கள். அடக்கு முறைச்சட்டத்தை எதிர்த்துப் போராட முடிவு எடுக்கின்றார்கள்.

1947 ஆம் ஆண்டு, சுப்பராயன் முதல் அமைச்சர் ஆனார். ஏப்ரல் 17 ஆம் தேதி, குற்றம் பரம்பரைச் சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிகிறார். அதை ஒரு சகோதரி எதிர்க்கிறார். அதைக் கேட்டு, ஆர்.வி.சுவாமிநாதன் கொதித்து எழுகிறார்.நாங்களா குற்றப் பரம்பரை? நாங்கள் இந்த மண்ணுக்காகக் போரடியவர்கள் என்கிறார். அதை, இராஜாராம் நாயுடு ஆதரிக்கிறார். தீர்மானம்
நிறைவேறுகிறது.

1947 ஜூன் 5 ஆம் தேதி சட்டமாக அறிவிக்கப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டம் ஒழிந்தது. இந்த வீர வரலாறு இங்கே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இப்படிப் பட்ட வீர மண்ணில், இரத்தத் துளிகள் நனைந்த மண்ணில், மானங் காக்கப் போராடிய மறவர்கள் நடமாடிய மண்ணிலே, உசிலம்பட்டியில் உங்களைச்
சந்தித்ததில் மகிழ்கிறேன். உங்கள் மண்ணின் பெருமையை ஊர் ஊராகப் பேசு வேன்.

இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத் தலைவர் மருதுபாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, அமைப்புக்குழு உறுப்பினர் குமரவேல், கம்பம் கே.எம்.அப்பாஸ், தமிழர் தேசிய வட்டத்தின் அமைப்பாளர் மானமிகு அறப்பாற்கடல்,மானுடவியல் ஆய்வாளர்,பிரமலைக்கள்ளர் வாழ்வும்
வரலாறும் என்ற நூலின் ஆசிரியர் சுந்தர வந்தியத்தேவன் ஆகியோருடன், மதிமுக கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், முன்னணியினர் பங்கு ஏற்றனர்.

நன்றி :- சங்கொலி 

No comments:

Post a Comment