Tuesday, April 23, 2013

சுடரை உங்களிடம் தருகிறேன்; இனி, நீங்கள் கொண்டு செல்லுங்கள்! -வைகோ

“சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” வைகோ நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட்டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து...

இந்தக் கரிய இரவு விரைந்து ஓடி மறைந்து விடும்.
புள்ளினங்கள் குரல் எழுப்புகின்ற
வைகறை மலர்கின்ற விடிகாலை வெளிச்சத்தில்
துப்பாக்கி ரவைகள் என் மார்பிலே பாயும்.
என் மேனியில் இருந்து சிதறுகின்ற இரத்தத்துளிகள்
காலை வானத்தைச் செக்கர் மயமாக்கட்டும்
நான் மடிந்ததற்குப் பின்னர்
என் உடல் மண்ணில் புதைக்கப்பட்ட இடத்தில்
எழுகின்ற எளிமையான கல்லறையின் மீது,
புற்கள் அடர்ந்து படரும்;
அங்கே ஒரு மலர் பூக்கும்
அந்த வழியாகப் போகின்ற வழிப்போக்கர்களே
அருகில் வாருங்கள்
அந்த மலரை உங்கள் நாசியால் முகருங்கள்
அப்போது,
என் ஆன்மாவை நீங்கள் வருடியது போல
உங்கள் மூச்சுக் காற்றின் வெப்பத்தை நான் உணர்வேன்



என்று நள்ளிரவுப் பொழுதிலே எழுதி வைத்த கவிதையை, சிமினி விளக்கின் திரியைச் சுற்றிப் படர்ந்து இருக்கின்ற தகரத்துக்கு உள்ளே வைத்து விட்டுப் படுத்தான்.

காலையில் அவனைக் கொண்டுபோய், பீரங்கி மேட்டில் நிறுத்தினர்; அவன் மார்புக்கு நேராகத்துப்பாக்கிகள் நீண்டன. அங்கே சூழ்ந்து நின்ற ஸ்பானிய வீரர் கள் கெக்கலி கொட்டிச் சிரித்தனர்.அதற்கு முன்பு இறுதியாக அவனது நாடித் துடிப்பைச் சோதித்துப்பார்த்த மருத்துவர்,“எந்தப் பதற்றமும் இவரிடம் இல்லை;  நாடித்துடிப்பு சீராக இருக்கிறது;இது எனக்கு வியப்பாக இருக்கிறது; திகைப்பாக
இருக்கிறது: நீங்கள் ஏளனம் செய்யாதீர்கள்” என்று அறிவித்தார்.

துப்பாக்கிக் குண்டுகள் சீறின. அவனது மார்பில் இருந்து பீறிட்டு எழுந்த இரத்தத் துளிகள், அந்தக் காலைச் செவ்வொளியில், மண்ணில் பட்டு, அதன் நிறத்தைச் சிவப்பாக ஆக்கின. அந்தக் கவிஞன் ஜோ ரிசோலின். அவனது கல்லறை பிலிப் பைன்ஸ் நாட்டில் இருக்கின்றது. பஞ்ச நதிகள் பாய்கின்ற பாஞ்சாலத்தில், பகத் சிங் கல்லறை இருக்கின்றது;

ஈழத்தில் இருந்த எங்கள் எல்லாளன் கல்லறை என்னஆயிற்று?

எங்கள் திலீபனின் கல்லறை என்ன ஆயிற்று?

எங்கள் மாவீரர்களின் கல்லறைகள் என்ன ஆயின?

உலகில் வேறு எந்த இனத்துக்கும் இப்படிக் கேடுகள் நேரவில்லை.
சிங்களவனே,
நீ எங்களை மண்ணில் புதைத்தாய்;
ஆனால், எங்கள் மண்ணை நீ எங்கே புதைப்பாய்?

என்று கேட்டார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.எங்கள் மாவீரர்கள் அந்த மண்ணுக்கு உள்ளே இருந்து வருவார்கள், வருகிறார்கள்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இறுதி மூச்சு அடங்குவதற்கு முன்பு இறுதி உரை ஆற்றிய இந்தத்தியாகராயர் நகரில், தனக்கு வந்த முதல்வர் பதவி யை வேண்டாம் என்று மறுதலித்த பிட்டி தியாகராயர் அரங்கில் நின்று பேசு கிறேன்.

சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று, உலகில் முதன்முதலாக இந்தக் கருத்தை, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் பதிவு செய்தவன் என்ற தகுதியோடு பேசுகிறேன்.

அடுத்த தலைமுறை வார்ப்பிக்கப்பட வேண்டுமே என, எத்தனை மாதங்களாக, எத்தனை ஆண்டுகளாக நான் ஏங்கிக்கிடந்தேனோ,அந்தப் புதிய வார்ப்புகள்,இனி இந்தப் போரை நாங்கள் முன்னெடுத்துச் செல்லுகிறோம் எனத் திரண்டு வரு கின்ற காலகட்டத்தில் பேசுகிறேன். (பலத்த கைதட்டல்).என் நெடுநாள் கனவு நனவாகிறது. இந்த எளியவன் தயாரித்து இங்கே கொடுத்து இருக்கின்ற கருத்து
ஆயுதங்கள், இனி உங்களுக்குப் பயன்படட்டும்.

தம்பிகளே,மாணவச் செல்வங்களே,

இங்கே கொளத்தூர் மணி அவர்கள் நினைவூட்டியது போல, நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.மாநிலக் கல்லூரி வாயிலில், லயோலா கல்லூரி
வாயிலில், சட்டக் கல்லூரி வாயிலில், கிறித்துவக்கல்லூரி வாயிலில் வந்து நின்று, இந்தச் சீருடை அணியாமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தின் அடையாளங்கள் தெரியாத அளவுக்கு,கல்லூரி மாணவனாக இருந்தது போன்ற உடை அணிந்து வந்து நின்று,இரவு பகலாக,நெடுநாள் நான்அர்பபணிப்பு உணர்வோடு தயாரித்த ‘ஈழத்தில்இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’ என்ற இனக்கொலை; இதயத்தில் இரத்தம்’குறுந்தட்டை, ஆயிரக்கணக்கான மாணவர் களுக்குக்கொடுத்தேன்.

அன்று அது எந்த விமர்சனத்துக்கும் இடம் அளிக்கவில்லை. தமிழகம் முழு வதும் என் தோழர்கள் அந்தக் குறுந்தட்டுகளை மாணவக் கண்மணிகளிடம்
வழங்கினார்கள். அதைத் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். அதைப் பார்த்தவர்கள்,எங்களால் உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை என்று தொலைபேசியில் என்னிடம் கூறினார்கள்.

அதே குறுந்தட்டுகளை, இலட்சக்கணக்கில் தயாரித்து, தமிழகத்தின் அரசு உயர் அதிகாரிகளுக்கும் வழங்கினோம்.அவர்களது உள்ளத்திலும் தமிழ் ஈழம் அமை ய வேண்டும் என்ற உணர்வு இருப்பதை நான் அறிவேன்.

அதேபோல, இன்று இந்தக் குறுந்தட்டையும் கல்லூரி வாயில்களில் கொடுக்க லாமா? என்று எண்ணினேன். 2010, 11 இல் நான் வந்தபோது அதற்கு எந்த விமர் சனமும் இல்லை.அன்றைக்கு அதை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.மாண வர்கள் வாங்கிக் கொண்டார்கள். ஆனால், எந்த ஒரு ஏடும் ஒரு வரி கூட அதைப் பற்றி எழுதவில்லை.ஆனால், அதேபோல இன்றைக்கு நான் கல்லூரி வாயில் களுக்குச் சென்று நின்றால், என்ன சொல்லுவார்கள்?

பிரளயமாகச் சீறி எழுகின்றதே மாணவர் போராட்டம்;எரிமலை சீறுமோ? புரட்சி வெடிக்குமோ?இந்திய வரலாறு காணாத மாற்றத்தைத் தமிழகம் ஏற்படுத்து மோ? இது எந்தத் திசையில் செல்லும்? இது ஒரு புதிய பரிமாணமாக இருக்கின் றதே? என்ற கவனம், தமிழகத்தில் மட்டும் அல்ல; இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து மாணவர்கள் பக்கம் திரும்பி இருக்கின்றது.

இந்த வேளையில், இந்த மாணவர் படையைத் தன் பக்கம் திருப்பலாம் என்று கல்லூரி வாயிலில் வந்து நிற்கிறானோ? என்று நினைக்கவும் தோன்றும்; அப்படிச் சிலருக்கு எழுதவும் தோன்றும்; அந்த மாணவர்களிடமே அப்படி ஒரு விஷத்தை விதைக்கவும் தோன்றும். எனக்கு அது தேவை இல்லை. ஏனெனில், அரசியல் கட்சிகளில் ஈடுபாடு இல்லாத மாணவர்களும், இந்தப் பிரச்சினையில் களம் காண்கிறார்கள். அவர்கள் இங்கேயும் வந்து இருக்கிறார்கள்.

நான் திட்டவட்டமாக ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்: இந்தப் பிரச்சினையில் ஒரு அணு அளவு அரசியல் ஆதாயத்தையும் நான் எதிர்பார்க்க வில்லை.(பலத்த கைதட்டல்.) உங்களுக்கு எந்தக் கட்சி மீது விருப்பமோ, அந்தக் கட்சியை ஆதரி யுங்கள். இன்னும் சொல்கிறேன், உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு ஓட்டுப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய துணிச்சல்,தேர்தலில் போட்டி இடுகின்ற கட்சிகளுள், எங்கள் இயக்கத்துக்கு மட்டும்தான் உண்டு.

ஒரு தொடர் ஓட்டத்தில் இன்றைக்கு நான் வந்து இருக்கின்றேன். அதில் நான்கு பேர் செல்ல வேண்டும். முதலாவதாக ஓடுகிறவன் கொஞ்சம் பிந்தி விட்டா லும், கடைசிக்கட்டத்தில் ஓடுகிறானே,அவன் திறமையாளனாக இருந்தால், ஈடுகட்டி,சுடரைக் கொண்டு போய்ச் சேர்ப்பான்; வெற்றிக் கோட்டை எட்டுவான். அப்படி முதலாவது சுற்றில் வருகிறவனாக நான் வருகிறேன். சுடரை, அடுத்து
ஓடுகிறவர்களின் கையில் கொடுத்து விடுவேன். நான் எல்லோரையும் முந்தி வருவேன் என்று சொல்ல வில்லை; என்னால் முடிந்த மட்டுக்கும் கொண்டு
வந்து இருக்கின்றேன்.

அந்தச் சுடரை உங்களிடம் தருகிறேன்; இனி நீங்கள் கொண்டு செல்லலாம். நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். இதைத்தான் நெடுநாட்களாக நான் விரும்பி னேன். இனி தமிழகத்துக்கு விடியல் ஏற்படும். அதை யாரும் தடுக்க முடியாது.
கொட்டப்பட்ட செங்குருதியும், தரப்பட்ட உயிர்களும்ஒருபோதும் வீண் போகாது.

தமிழ் ஈழ விடியலுக்கான போர் முரசம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. அதைக் கேட்டு, உலகம் திகைக்கின்றது, திரும்பிப் பார்க்கிறது தமிழகத்தை.இலக்கைத் துல்லியமாகத் தீர்மானித்துக் கொண்டு மாணவர்கள் போராடுகிறார்கள். இணை யதளங்களில், அலைபேசிகளில் நொடிப்பொழுதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுகிறார்கள்.ஏடுகளோ, ஊடகங்களோ ஆதரிக்க வேண்டும் என்று அவர் கள் எதிர்பார்க்கவில்லை. புரட்சியாக நீங்கள் வெடித்துக் கிளம்புகிறபோது, தானாக வந்து அவர்கள் ஆதரிப்பார்கள், ஆதரிக்கிறார்கள். உங்கள் போராட்டத் தை மக்களிடம் காட்டுகிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் இதுவரையிலும்,இலட்சக்கணக்கான மாணவர் கள் பங்கு ஏற்ற ஒரு போராட்டத்தில் இம்மி அளவும் வன்முறை இல்லை. ஒரு பேருந்துக்குச் சேதம் இல்லை. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு போராட் டம் நடைபெற்றது இல்லை. (பலத்த கைதட்டல்)

போராட்டம் இதே பாதையில் செல்லுமா? அல்லது தந்தை செல்வாவுக்குப் பிறகு தம்பி பிரபாகரன் வழியில் சென்றதுபோலச் செல்லுமா? என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். அமைதி வழியில்தான் போராடுவார்கள். அது நசுக்கப்பட்டால், அந்த உணர்வுகள் புறந்தள்ளப்படுமானால், அடுத்த களம் எது?நாம் எந்த ஆயுதத் தைக் கையாளுவது?என்பதை நமது எதிரிகள்தான் தீர்மானிக்கின்றார்கள்

தமிழ் ஈழத்துக்கான காரணங்கள் என்ன என்பதை, இங்கே பேசியவர்கள் குறிப் பிட்டார்கள். இன்று காலை ஐந்தரை மணிக்கு என்னுடைய அலைபேசி மணி
ஒலித்தது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போன ஒரு இளைஞன் பேசி னான். அண்ணா, நான் உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு உள்ளே இருந்து பேசுகிறேன். ஏ.கே. 47 துப்பாக்கியோடு வந்தவர்கள், அதிகாலை நான்கு மணிக்கு அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்து,தீ வைத்து விட்டார்கள்.இதோ, பக்கத் திலே நிற்கிறார் சரவண பவன்.யாழ் மாவட்டத்தில்,தமிழ் தேசியக்கூட்டு அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். உதயன் ஏட்டின் நிர்வாக இயக்குநர். அவரிடம் பேசுங்கள் என்றார்.அவர் பேசினார்.

“அண்ணா, 2006 ஆம் ஆண்டு இதேபோலத்தான் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, எங்கள் அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்து தாக்கினார்கள். எங்கள் ஊழியர்கள்
இருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆறு பேர் படுகாயம் அடைந்தார்கள். சிங்கள
இராணுவமே முன்னின்று அந்தத் தாக்குதலை நடத்தியது. 40 நாள்களுக்கு முன் னர், கிளிநொச்சியில் எங்கள் அலுவலகத்தைத் தாக்கினார்கள்.அதனால், இந்த அலுவலகத்துக்குப் பாதுகாப்புக் கேட்டோம்.இன்றுவரையிலும் தரவில்லை. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள், சிங்கள இராணுவத்தினராகத்தான் இருக்க
முடியும். அவர்களிடம்தான் ஏ.கே. 47 துப்பாக்கிகள் உண்டு. ஜெனரல் அதுல சிங்கா என்பவரது கட்டுப்பாட்டுக்கு உள்ளேதான், இன்றைக்கு யாழ் நகரம் இருக் கின்றது. அவன் ஒரு கூலிப்படையை வைத்து இருக்கிறான் என்று ரனில் விக்கி ரமசிங்கே குற்றம் சாட்டியதுடன், நேற்று நாடாளுமன்றத்திலும் அதைப் பேசி
இருக்கிறார். அவனது கட்டுப்பாட்டில்தான் நாங்கள் இருக்கின்றோம். எப்படிப் பட்ட சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள
வேண்டும்; நீங்கள் செய்தி தாருங்கள்”என்றார்.



2008, 2009 ஆம் ஆண்டுகளில், தமிழர் பகுதிக்கு உள்ளே தொண்டு நிறுவனங்கள் கூடச் செல்ல முடியாது. இது, 2013. ஜெனீவாவில் தீர்மானம் கொண்டு வந்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். 2009 ஆம் ஆண்டு,
இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில், இதே ஜெனீ வா மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை அரசுக்குப்பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வாக்குச் சேகரித்த
நாடுகள், இந்தியா, கியூபா, சீனா.

அன்றைக்கு அந்த விவரங்களை என்னிடம் கொண்டு வந்து தந்தவர் அன்புச் சகோதரர் கொளத்தூர் மணி.அவர் எப்போதுமே தன்னை முன்னிறுத்திக் கொள் வது இல்லை. அவருக்கு வந்து சேருகின்ற செய்திகளை, அண்ணா இதை நீங்கள் சொல்லுங்கள் என்று என்னிடம் தெரிவித்து விடுவார். அத்தகைய பரந்த மனம், இலட்சியவாதியான கொளத்தூர் மணி அவர்களிடம் இருக்கின்றது.

நூற்றுக்கணக்கான மேடைகளில், அடிவயிறு வலிக்கப் பேசினோம் நாங்கள். எங்கள் மக்களைக் கொன்று குவித்த இரத்தம்கூட உலரவில்லை;கொலைகாரச் சிங்களவனுக்கு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் பாராட்டுத் தீர்மானமா? இன்றும் அதுதானே நிலைமை?

பிப்ரவரி 26 ஆம் நாள், மனித உரிமைகள் கண்காணிப்பகம்  (Human Rights Watch)
வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையை, நொடிப்பொழுதில்,இணையதளங்களில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதைப் பாருங்கள்.இன்றைக்கு அங்கே இளைஞர் கள், இளம்பெண்கள்,எவ்வளவு கொடூரமான சித்திரவதைகளுக்கு அங்கே ஆளாக்கப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

இன்றைக்கு இளைஞர்கள், தமிழ் ஈழ வரைபடத்தைப் போட்டுக் கொண்டு, தலை வர் பிரபாகரன் படத்தைப் போட்டுக் கொண்டு உடை அணிந்து வருவதைப் பார்க் கும் போது; அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒன்று சேர்ந்து, சுதந் திரத் தமிழ் ஈழம் என முழங்கிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. இனி ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்கும்.

என்ன தீர்வு? எதிர்காலத்தில் நீங்கள் எந்தவிதத்தில் பணி ஆற்ற வேண்டும்? பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்து இருக்கின்றன. நீங்கள் பல முனைகளில்
போராடக்கூடியவர்கள். அந்தந்தத் தளங்களில் இருந்து போராடுங்கள். அதில்
தவறு ஒன்றும் இல்லை, கவலைப்பட வேண்டியதும் இல்லை. எப்படியாகிலும்
குரல் எழட்டும். அது எந்தவிதத்தில் எழுந்தாலும் சரி. அது ஓங்கிய குரலாக,சுதந் திரத் தமிழ் ஈழம் அமைவதற்கான குரலாக, பொது வாக்கெடுப்புக்கான குரலாக, கொலைகாரச் சிங்களவனைக் கூண்டில் நிறுத்துவதற்குப் பன்னாட்டு விசாரணை வேண்டும் என்ற குரலாக எழட்டும்.

அதற்கு உதவுவதற்காகத்தான்,என் சிற்றறிவுக்கு எட்டியவரையில்,நான் திரட் டிய தகவல்களை நூலாகவும்,குறுந்தட்டாகவும் ஆக்கி இங்கே உங்களிடம் தந்து இருக்கின்றேன். தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தில் ஆற்றிய முழு உரையும் தனி யாகத் தந்து இருக்கின்றேன்.அதில் இருந்து தொகுத்ததையும்,பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் ஆற்றிய உரையையும் சேர்த்தும் தந்து இருக்கின்றேன்.இதை நீங்களே கொண்டு போய்க் கல்லூரிகளில் கொடுங்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment