Friday, April 19, 2013

மூன்றாம் கட்ட மதுவிலக்கு நடைபயணம் -10

மூன்றாம் கட்ட நடைபயணத்தில் நான்காம் நாள் பயணத்தில் 





உடுமலையில் நடை பயணத்தின் போது பள்ளி நுழைவு வாயில் முன்பு ரோட்டு ஓரம் தன்னை சந்தித்த மாணவிகள் மத்தியில் வைகோ பேசும் போது, ‘எனது பேத்திகள் போன்ற சிறுமிகள், மாணவிகள் பாதுகாப்பாக இருக்க மது ஒழிக்கப்பட வேண்டும்’ என்றார்.

4–வது நாளான இன்று (19.04.13 )காலை 8.15 மணிக்கு உடுமலையில் இருந்து வைகோ தனது நடைபயணத்தை தொடர்ந்தார். தளிரோடு, பஸ் நிலையம் பகுதி வழியாக கணியூரை நோக்கி பழனி ரோட்டில் சென்றார். காந்திநகர், அண்ணாகுடியிருப்பு உள்பட வழி நெடுகிலும் ஆங்காங்கு பெண்களும், ஆண்களும் திரண்டு நின்று வைகோவை வரவேற்றனர்.

உடுமலை–பழனி ரோட்டில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பள்ளிக்கு சென்று கொண்டி ருந்த மாணவிகள் வைகோவை பார்க்க திரண்டு நின்றனர். உடனே வைகோ நின்று கொண்டிருந்த மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் அரசியல் வாதியாக இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. மதுவால் பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். சாதி, மதம், கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். எனது பேத்திகள் போன்ற சிறுமிகள், மாணவிகள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க மது ஒழிக்கப்பட வேண்டும்.

.நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்து கிறேன். நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். உங்களை போன்ற பெண்களின் பாதுகாப்பிற்காக மது ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது பேச்சை மாணவிகள், ஆர்வத்துடன் கேட்டனர். இதைதொடர்ந்து சிறிது தூரம் சென்றதும் ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி பேராசிரியைகள் கல்லூரி நுழைவு வாயில் அருகே ரோட்டு ஓரம் நின்று கொண்டு வைகோவின் வருகைக்காக காத்து நின்றனர். அவர்களை கண்டதும் வைகோ அங்கு வந்து, ‘மது ஒழிக்கப்படாவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. மதுவால் பல குடும்பங்கள் சீரழிகிறது அதனால்தான் மதுவை ஒழிக்க வலியுறுத்தி நடைபயணம் செல்கிறேன்’ என்றார்.

அப்போது பேராசிரியைகள் மதுவை ஒழிக்க உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம் என்றனர். உடுமலை வெஞ்சமடை வாய்க்கால் பாலம் அருகே வைகோவிற்கு தாரை தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மதியம் கிருஷ்ணாபுரம் சென்றடைந்தார்.

நடை பயணத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், முன்னாள் எம்.பி.யான டாக்டர் சி.கிருஷ்ணன், நா.லோகநாதன், ம.காளிமுத்து, ஆர்.ஆர்.வேலாயுதசாமி, டபிள்யூ.என்.கே.ஈஸ்வரன், நோவா ஆர்.ராதாகிருஷ்ணன், இ.ப.மணிவண்ணன், அபிராமி ஸ்ரீஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment