Sunday, April 21, 2013

தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்; வழிகாட்டி வைகோ !-திருமுருகன் காந்தி


சென்னையில் 13.04.2013 அன்று நடைபெற்ற “சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுவட்டு வெளியீட்டு நிகழ்வில்,திரு முருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து.........

வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களைத் தமிழ்ச் சமூகம் கடந்து கொண்டு இருக்கின்ற சூழலில், ‘தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும்’ என்பதை வலியுறுத்துகின்ற வகையில், ஒரு மிக முக்கிய நாளாகத்   தான், வைகோ அவர்களுடைய நூல் மற்றும் ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு விழா வை நான் கருதுகிறேன்.



நாங்கள் நடத்துகின்ற போராட்டங்கள் அனைத்திலுமே, ஒரு மிக முக்கிய, சீரிய
கவனத்தை எடுத்து, இந்தத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தலைமுறைகளும், மிக நுண்ணிய அளவில் வரலாறை, சமகால வரலாறைப் புரிந்து கொள்கின்ற வகையிலும், எங்களுக்கெல்லாம் உற்சாகம் அளிக்கக்கூடிய வகையிலும், எங்களுக்குப் பெருந்துணையாக இருக்கக்கூடிய ஐயா வைகோ அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயா வைகோ அவர்களைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக நான் இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன். அவரைப் பற்றி இது வரையிலும் விரிவாகத் தொகுத்துப் பேச இயலவில்லை.

ஒரு சமூகத்துக்கு, பல்வேறு அரசியல் களங்களில் நின்று பேசுவதற்கு, அதனு டைய பிரச்சினைகளை விரிவாக வாதிடுவதற்கு, அறிஞர்கள் தேவைப் படு கிறார்கள்; போராளிகள் தேவைப்படு கிறார்கள்; நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப் பினர்கள் தேவைப்படுகிறார்கள்; வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் தலை வர்கள் தேவைப்படுகிறார்கள்.இவை அனைத்தையுமே செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவராக, ஐயா வைகோ அவர்களை நான் பார்க்கின்றேன்.கடந்த மூன்று தலைமுறைகளாக, தமிழ் ஈழ விடுதலைக்கான நோக்கத்தை, அதன் அடிப்படை யான நியாயத்தை, மிகத் தெளிவாகவும், மிக ஆழமாகவும், எளிமையான சொற் களில் எடுத்துக் கூறி விளக்கி,தமிழகம் முழுமையும் கொண்டு சென்று இருக்கக் கூடிய ஐயா வைகோ அவர்களுக்கு, தமிழ் ஈழ விடுதலை என் கின்ற அந்தப் பெரும்பயணத்தில்,தமிழகத்தைச் சேர்த்ததில், பெரும்பங்கு இருக்கின்றது.

2009 க்குப் பிறகான காலகட்டத்தில்,தமிழ்ச் சமூகத்தில், போராட்டக் களத்தில்
இருந்து வரக்கூடிய கோரிக்கைகள் என்பதையும் தாண்டி,புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, தமிழ் ஈழத்தில் இருக்கக்கூடிய தமிழ்ச் சமூகமாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இருக்கின்ற தமிழ்ச்சமூகமாக இருந்தாலும் சரி, இவை அனைத்துமே எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்கின்ற ஒரு குழப்பம் இருந்தது.

அங்கே நடந்த படுகொலைகளை இனப்படுகொலை என்று அறிவிப்பதற்கே, இந்தச் சமூகம் தயக்கம் காட்டியது. இதை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக வே உலக நாடுகள் முன்வைத்தன. ஆனால், இது மனித உரிமைப் பிரச்சினை அல்ல.

இன்று, ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவு நாள் என்று, நண்பர் ஒருவர் சொன்னார். அது ஒரு மனித உரிமைகள் பிரச்சினை என்ற வகையில் பார்த்து இருந்தால், அதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு ஆணையத்தை அமைத்து, ஜெனரல் டயரை விசாரித்து,அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்தப் பிரச்சினையை முடித்து வைத்து விட்டு, ஆங்கிலேய ஆட்சி கடந்து சென்று இருக்கும். அதை விடுதலைப்போராட்டம் என்று பார்த்ததால்தான்,ஆங்கிலேயே ஆட்சியே தூக்கி எறியப் பட்டது.

விடுதலைப் போராட்டம், மனித உரிமைகள் பிரச்சினை என இரண்டு விதமாகப் பேசக்கூடிய அரசியல் சொல் ஆற்றலுக்கு நடுவே, கெட்டுப் போன விடுதலைப் போராட்டங்கள் உலகு எங்கிலும் வரலாறை இழந்து இருக்கின்றன.

அப்படியான ஒரு சூழலுக்கு, தமிழ் ஈழத்தைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்கின்ற முயற்சி,சர்வதேசஅளவிலே நடந்து கொண்டு இருக்கின்றது என்ப தை, 2009 இல் இருந்து நாம் பார்க்க முடிகின்றது.அதனால்தான், மனித உரிமை
அமைப்புகள்,அதை ஒரு மனித உரிமைகள் பிரச்சினையாகவே பேசத் தொடங் கின; இன்றுவரையிலும் அப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன.அந்தக் கட்டத்தில், தமிழகத்தில் இருந்து ஒரு குரல், தமிழ் ஈழ விடுதலையின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற அந்தக் கோரிக்கையை, யார் மனித உரிமையாக சித்தரிக்கின்றார்களோ, யார் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை பயங் கரவாதிகள் என்று அறிவித்து, அமைதிப் பேச்சுகளை முடக்கி, தமிழ் ஈழ விடு தலையை நோக்கிய பயணத்தை உடைக்க முயற்சி செய்தார்களோ, அந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாடாளுமன்றத்திலே, ‘இது மனித உரிமைகள்
பிரச்சினை அல்ல; மனித அவலம்; விடுதலைக்கான பயணம்;அவர்களுக்குத் தேவை விடுதலை;அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்று , வைகோ அவர்கள் வைத்த அந்தக் கோரிக்கை, அந்தத் தருணம், தமிழ் ஈழ வரலாற்றில் மட்டும் அல்ல, தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமானது. (பலத்த கைதட்டல்).

அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஒரு அரசியல் கட்சிக்கு எந்தவிதமான பொறுப்பு ஜனநாயகத்தில் இருக்கின்றதோ அந்தப் பொறுப்பை, ஒரு சமூகத்தில் போராளியாக, அரசியல் போராளியாக இருக்கக்கூடிய, நமக்கு எந்தவிதமான கடமை உணர்ச்சி இருக்க வேண்டுமோ அந்தக் கடமைஉணர்ச்சியும், ஒரு வழக்கறிஞருக்கு ஒரு வழக்கைப் பற்றி எந்த அளவுக்கு நுண்ணிய விவரங்கள் தெரிந்து இருக்குமோ, அந்த அடிப்படையில்
வாதங்களை முன்வைக்கக் கூடியவராக,அந்த பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வைகோ உரை ஆற்றியதை நாம் பார்த்து இருக்கிறோம்.

இது, எந்தச் சமூகத்துக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று அல்ல.
இப்படிப்பட்ட ஒருவர், தமிழ்ச்சமூகத்தின் நியாயத்தை, வாதங்களை எடுத்து உரைப்பதற்குத் தேவைப்படுகின்றார்.

சாஞ்சிப் போராட்டம்; இந்தியக் கூட்டு ஆட்சிக்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய போர்!

சாஞ்சியில் நடந்த போராட்டத்தை, நாம் ராஜபக்சேவை விரட்டுவதற்கான
போராட்டமாகவோ, தமிழர்களது எதிர்ப்புப் போராட்டமாகவோ மட்டுமே பார்த் துவிட முடியாது.

இந்திய நாடு என்பது, எந்த உறுதி மொழியின் அடிப்படையில் கட்டி அமைக்கப் பட்டது? இதை ஒரு கூட்டு ஆட்சி (Federal) என்று சொல்கிறார்கள்.அப்படியானால்,
அதில் வெளியுறவுக் கொள்கையும் சேர்ந்ததுதான் ஒரு கூட்டு ஆட்சி.ஆனால் இந்தியாவில், அப்படி ஒரு கூட்டு ஆட்சித் தத்துவத்தை வெளிஉறவுக் கொள்கை களில், இந்த அரசு ஒருபொழுதும் வைத்தது இல்லை.

வெளி உறவுக் கொள்கையில் ஒரு பிரச்சினையை, மத்திய இந்தியாவில் எழுப்ப வேண்டும் என்கின்ற தேவை,தமிழ்ச் சமூகத்துக்கு இருந்தது. 2009 க்குப் பிறகும் கூட, நீண்ட காலமாக,அந்த விவாதம் மத்திய இந்தியாவுக்கு வரவில்லை. இந்தி யா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் வாழுகின்ற மக்கள் இடையே, ஈழத் தமிழர் களின் அவலம், தமிழ் ஈழப் பிரச்சினை, ஒரு விவாதப் பொருளாகவே மாற்றப்பட வில்லை. வட இந்திய ஊடகங்கள் அதை மறுத்து வந்த காலத்தில், அதைமாற்றிய நிகழ்வாக, சாஞ்சிப்போராட்டத்தை, மிக முக்கியமான போராட் டமாக நாம் பதிவு செய்ய வேண்டும்.

அது ஏதோ ஒரு கட்சி நடத்திய போராட்டமாக மட்டுமே நாம் பார்த்து விட முடியாது. அது, இந்தியாவின் வெளி உறவுக் கொள்கையை எதிர்த்து,தமிழர்கள் ஒரு போர்க்களத்துக்குச் சென்று நடத்திய ஒரு போர். (பலத்தகைதட்டல்).


ஐயா வைகோ அவர்களுடைய அந்த முடிவு என்பது,‘உன்னுடைய வெளி உறவுக் கொள்கையைக் கேள்வி கேட்பதற்கு நாங்கள் இருக்கின்றோம்;இது ஒரு கூட்டு ஆட்சி என்று சொன்னால், அந்தக் கொள்கையில் முடிவு எடுப்பதற்கு, எனக்கும் ஒரு அதிகாரம் உண்டு’ என்று கூறி, அதை ஒரு மக்கள் போராட்டமாக நடத்திக்காட்டியதற்குப் பிறகுதான், மத்திய இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள்
நிகழ்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம்.

மத்திய இந்தியாவில் அதுவரை வாழ்ந்த,தமிழ் ஈழத்துக்கு எதிரான கருத்து களைத் தொடர்ந்து பரப்பி வந்த, ஆரிய அரசினுடைய அறிவுஜீவிகள், அதிகாரி கள், அரசியல்வாதிகள், செய்தி ஊடகங்கள், செய்தியாளர்கள், இப்போது இந்தப் பிரச்சினையைக் கையாள முடியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றார்கள். (கைதட்டல்).

எங்களுடைய மே 17 இயக்கம், ஐயாவின் நகர்வுகளை எல்லாம் எந்தக் கோணத் தில் கவனிக்கின்றோம் என்றால், இந்தியாவின் கொள்கை களிலான தவறு களை, பிரச்சினைகளை ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டி,அதற்கான சான்று ஆவணங்களை முன்வைத்து, அதை மக்கள் போராட்ட மாக மாற்றக்கூடிய போராட்டங்களை,ஐயா அவர்களும், ம.தி.மு.க.வும் தொடர்ச்சியாகச் செய்து கொண்டு இருக்கின்றது. (கைதட்டல்).

இந்த வேளையில் ஒரு நிகழ்வை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மீனவர்கள் படுகொலைகள் குறித்து ஒரு
ஆவணப்படத்தை எடுப்பதற்காக,நாங்கள் இராமேஸ்வரம் பகுதிக்குச்சென்று இருந்தோம். இலங்கையைத் தோற்கடித்து இந்தியா உலகக் கோப்பையை வென்ற அந்த இரவில்,சிங்களக் கடற்படை நான்கு தமிழக மீனவர்களைச்சுட்டுப் படுகொலை செய்தது. இறந்து போன ஒரு மீனவருடைய வீட்டுக்கு நாங்கள்
சென்று இருந்தோம். அவரது மனைவியைச் சந்தித்துப் பதிவு எடுத்துக்கொண்டு இருந்தோம். அவர்களுக்கு,மூன்று வயதில் ஒரு குழந்தை. நாங்கள் அங்கே சென்று இருந்த அந்த நாள், அவர்களுடைய திருமண நாள். அது,எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அது துக்ககரமான நிகழ்வாக மாறி இருந்தது. மிகுந்த வேதனையோடு, எங்களுக்கு மனம் இல்லாமல் அந்த ஒளிப்பதிவை நாங்கள் செய்து கொண்டு இருந்தோம்.

தாத்தா எப்போது வருவார்?

அந்தக் குழந்தைக்கு, தன் தந்தை இறந்தது தெரியாது. அப்பா திரும்ப வருவார் என்ற மனநிலையில்தான் அந்தக் குழந்தை இருந்தது. நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபொழுது,‘அம்மா, தாத்தா எப்போது என்னைப் பார்க்க வருவார்? அவரை நான் பார்க்கணும்’ என்று அந்தக் குழந்தை கேட்டது. அந்தத் தாய், தனது துக்கத் தைக் குழந்தைக்குக் காட்டாமல்,எங்களோடு பேசி பதிவு செய்து கொண்டு இருந்தார்.

அந்தக் குழந்தையின் தாத்தாவும் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தார்.ஆனால், இந்தக் குழந்தை தாத்தா எங்கே? என்று கேட்கிறது. எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.

எனவே, குழந்தை யாரைப் பற்றிக் கேட்கிறது? என்று நாங்கள் அந்தத் தாயிடம் கேட்டோம்.

அதற்கு அவர் சொன்னார்: வைகோ தாத்தா எப்போ வருவார்? என்று தாத்தா எப்போ வருவார்? கேட்கிறது என்றார். (பலத்த கைதட்டல்).

எங்களுக்கு அது வியப்பாக இருந்தது.ஏனென்றால், அந்த மீனவர் இறந்த பிறகு, அடுத்து என்ன செய்வது என ஆதரவு அற்ற நிலையில் நின்ற அந்த இளம் பெண்ணுக்கு, ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்து, வாழ்க்கை நடத்து வதற்கான வசதிகளையும், மிக அமைதியாக, யாருக்கும் தெரியாமல்,தன்னை எந்த இடத்திலும் முன்னிறுத்தாமல் செய்து கொடுத்து இருக்கிறார் ஐயா வைகோ அவர்கள்.(பலத்த கைதட்டல்). ஐயா, உங்களைச் சந்திக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை காத்துக் கொண்டு இருக்கின்றது.

இது, களத்தில் நாங்கள் சென்று பார்த்த நிகழ்வு. இதுபோல, அவரைப் பற்றிய
பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேடையாகவே இதை நான் பார்க்கின்றேன்.

தன்னலம் அற்ற தலைவர்

ஒரு மனிதர், தன்னை முன்னிலைப் படுத்தாமல், கொள்கை அடிப்படையில்,
பிரச்சினைகளை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டு இருக்கின்றது என்பதைச்
சுட்டிக்காட்டக்கூடியவராக இருப்பதைத் தான் நாங்கள் பார்க்கின்றோம்.

மூன்று தமிழர் தூக்கு குறித்த பிரச்சினையில், கோயம்பேடு அருகே,தொடர் உண்ணா நிலை அறப்போர் நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும், உண்ணா நிலை மேற்கொள்கின்ற தோழர்களுக்குப் பாதுகாப்பாக உடன் இருந்து விட்டு, இரவு இரண்டு,மூன்று மணிக்கு நாங்கள் அங்கிருந்து கிளம்பிச் செல் வோம்.

அந்த வேளையில், இரவு இரண்டு மணிக்கு, திடீரென ஐயா வைகோ அவர் களுடைய கார் அங்கே வந்து நிற்கும். இப்படி ஒரு தலைவரை,தமிழ்நாட்டு 
அரசி யலில் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால், எந்த ஒரு இடத்துக்கு வரும் பொழுதும், பத்து இருபது பேர்களோடு வந்து, தான் வந்து சென்றதைப் பதிவு செய்து போகின்ற தலைவர்களைத்தான் நாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால், ஐயா வைகோ அவர்கள், இரவு இரண்டு மணிக்குத் தனியாக வந்து செல்கிறார்.

புகழ்பெற்ற வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி அவர்கள், இந்த வழக்கை எடுத்து நடத்தப் போகிறார் என்ற தகவலை,  முன் கூட்டியே எங்களிடம் தெரிவித்து விட்டு, அதை வெளியில்சொல்ல வேண்டாம் என்றும் எங்களிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.

ஒரு போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும்?

இப்படிப்பட்ட ஒரு வழிகாட்டுதல்,தமிழ்ச்சமூகத்தின் அவலங்களுக்காக வாதிடக் கூடிய வழக்குரைஞர், அது மட்டும் அல்லாமல், தமிழ் ஈழத்தின் அரசியல் கோரிக்கையை, தர்க்க அடிப்படையில், பல்வேறு தளங்களில் பதிவு செய்யக் கூடிய ஐயா வைகோ அவர்களுடைய துணை, எங்களுடைய போராட்டங் களுக்குத் தொடர்ந்து கிடைத்து வருவது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

இன்றைக்கு ஆசியக் கண்டத்தின் அரசியல், பல்வேறு தேசிய இனங்களின் பிரச் சினையாக மாறி இருக்கின்றது.உலகில், ஒவ்வொரு கண்டமும், வெவ்வேறு விதமான பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது.உலகப் பொரு ளாதாரத்தில் ஒரு முக்கியமான மையமாக உருவாகிக் கொண்டு இருக்கின்ற ஆசியக் கண்டத்தில் மட்டும், பல்வேறு தேசிய இனப்பிரச்சினைகள் கிளர்ந்து எழுந்து உள்ளன.

அதில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம், கிழக்குத் தைமூர் விடுதலை, பர்மா வில் கட்சின் இன மக்களின் விடுதலைப் போராட்டம்,கேலடோனியா, திபெத், பலுசிஸ்தான்,குர்திஸ்தான் என இப்படிப் பல்வேறு இன மக்களின் விடுதலைப் போராட்டங்களின் களமாக ஆசியக் கண்டம் திகழ் கின்றது. அதில் மிகவும் முதிர்ச்சி அடைந்த ஒரு விடுதலைப் போராட்டமாக, தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் திகழ்கிறது.

அதற்காக, ஒரு ஜனநாயக நாட்டுக்கு உள்ளே எப்படிப் போராட வேண்டும் என் கின்ற ஒரு முக்கியமான விதியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை,
ஐயா வைகோ அவர்களுடைய வாதங்களின் மூலமாகவும், நாடாளுமன்ற செயல்பாடுகளின் மூலமாகவும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

நமது கடமை என்ன?

ஒரு கூட்டு ஆட்சி நாட்டில், வெளி உறவுக் கொள்கை எப்படி வகுக்கப்பட வேண் டும் என்பதை, ஒவ்வொரு முறையும் இந்த ஆட்சிக்கு, அரசியல்வாதிகளுக்கு, செய்தி ஊடகங்களுக்கு,அரசியல் அறிஞர்களுக்கு, முற்போக்குக் கொள்கை களைப் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில், ம.தி.மு.க. வின் போராட்டங்கள் அமைந்து இருக்கின்றன. அது சாஞ்சிப் போராட் டமாக இருந்தாலும் சரி, பீகார்,திருப்பதி வருகைக்கு எதிராக நடந்த போராட்ட மாக இருந்தாலும் சரி.

மத்திய இந்தியாவுக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு சென்றது போல, அதையும் தாண்டி அயல்நாடுகளுக்கும் இந்தப் பிரச்சினையைக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கின்றது. பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில்
வைகோ அவர்கள் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கை யை முன்வைத்ததற்குப் பிறகு, அதை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல வேண்டிய கடமை, நம் அனைவருக்கும் உண்டு.

எங்களுக்கு அடுத்து வந்து இருக்கின்ற மாணவர் தலைமுறை என்பது, ராஜீவ்
காந்தி மரணத்துக்குப் பிறகு வந்தவர்கள். அவர்களுக்கு, ராஜீவ்காந்தி என்றால் யார் என்றே தெரியாது. ஆனால், பிரபாகரனைத் தெரியும்; தமிழ் ஈழ மக்களின் பிரச்சினை என்ன என்பது அவர்களுக்குப் புரியும். கிட்டத்தட்ட கடந்த மூன்று தலைமுறைகளாக,அதையும் தாண்டி, அடுத்த தலைமுறை வரைக்கும், இந்த விடுதலைப் போராட்டத்துக்கான வாதங்களை,தர்க்க ரீதியாக எடுத்து வைத்துக் கொண்டு இருப்பவர் ஐயா வைகோ. இந்தப் புத்தகத்திலே அதை நாம் பார்க்கின் றோம்.

அடுக்கடுக்கான வாதங்கள்

தமிழ் ஈழத்துக்கான வட்டுக்கோட்டைப் பிரகடனத்தைச் சுட்டிக் காட்டி, அதற்கு
அடுத்து அங்கே நடைபெற்ற தேர்தல் களின் அந்தக் கோரிக்கையை முன்
வைத்தது, அதை மக்கள் ஆதரித்ததையும் அவர் பட்டியல் போட்டுக் காண்பிக் கின்றார்.

அண்மையில், 2004 இல் கூட, தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைமை ஏற்றுக்
கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து 23 தொகுதிகளில் போட்டி யிட்டு , 22 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கின்றன; 98 விழுக்காடு மக்கள் ஆதரித்து இருக்கின்றனர் என்ற மிக முக்கியமான குறிப்பைத் தந்து இருக் கின்றார். ஒரு அரசியல் நிகழ்வை,விடுதலைப் போராட்டமாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை நாம் பார்க்கின்றோம். இது, உணர்ச்சிகரமான அரசியல் அல்ல. வாதங்களை முன் வைக்கின்ற அரசியல்.

அடுத்து, 2005 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், வாக்கு அளிக்க வேண்டாம் என்று விடுதலைப்புலிகள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்டு, 98 விழுக்காடு மக்கள்,வாக்கு அளிக்கவில்லை. இதையும், ஒரு பொது வாக்கெடுப்பாகத்தான் பார்க்கவேண்டும்.

ஒரு சமூகம் தனது கருத்துகளை எப்படி வெளிப்படுத்துகிறது? அதை எப்படிப்
பார்க்க வேண்டும்? என்பதை, தனது பேச்சு ஆற்றலால், எளிய சொற்களால்
மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றார் ஐயா வைகோ அவர்கள்.


அடுத்த தலைமுறைக்கு...

இப்படிப்பட்ட, அறிவுபூர்வமான, தர்க்க அடிப்படையிலான விவாதத்தை, இந்தச்
சமூகத்தின் முன்பு தொடர்ச்சியாக வைத்து, அதைப் பதிவும் செய்து, அதை
எங்களுக்கு அடுத்து வந்து இருக்கின்ற மாணவச் சமூகத்துக்கும், அவர்களுக்கு
அடுத்து வருகின்ற குழந்தைகள் வரையிலும் கொண்டு சேர்க்கக்கூடிய பெருமை, ஐயா வைகோ அவர்களையே சாரும்.

இந்தக் கருத்துகளை இங்கே முன் வைப்பதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த தற்காக, ஐயா அவர்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

திருமுருகன் காந்தி இவ்வாறு உரை ஆற்றினார்.

நன்றி :- சங்கொலி 

No comments:

Post a Comment