Wednesday, April 17, 2013

தமிழக மக்கள் ,என்ன ,பரிசோதனைப் பொருட்களா ? - வைகோ

கல்பாக்கம் அணுஉலை விபத்து ஒரு அபாய அறிவிப்பு

தமிழக அரசு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் அப்பகுதிவாழ் மக்களைக் காக்க வேண்டும்

வைகோ அறிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலையம் 35 ஆண்டுகள் பழமையானது. இந்த அணு உலையில் இருந்து குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் (15.04.2013) காலை ஏழு மணி அளவில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக, அணு உலையை இயக்கிய சற்று நேரத்தில் மின்மாற்றி பயங்கர சத்தத்துடன் வெடித் துச் சிதறியது. உடனடியாக அணுஉலையின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டு, தீ அணைப்பு வீரர்களும் விஞ்ஞானிகளும் விரைந்து சென்று, இரண்டு மணி நேரத் துக்கும் மேலாகப் போராடி, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.



இதனால் பெரிய அளவிலான கதிர்வீச்சு, சுற்றுப் புறத்தில் பரவி இருக்கக்கூடும். ஆனா;ல/ அணுஉலை நிர்வாகத்தினர், வழக்கம்போல,முழு பூசணியை சோற்றில் மறைப்பதைப் போன்று, மறைக்க முயல்கின்றனர். இது கல்பாக்கத் தைச் சுற்றிலும் உள்ள மக்களின் பிரச்சினை மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் உயிர்ப் பிரச்சினை ஆகும்.

தமிழக மக்களை, சர்வதேச மரண வியாபாரத்தின் பரிசோதனைப் பொருட் களாக மத்திய காங்கிரஸ் அரசு நினைக்கிறது. அமெரிக்காவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் செர்னோபில், ஜப்பானின் புகுஷிமா அணுஉலைகளின் விபத்துகளுக்குப் பின்னால், உலகம் மின்சார உற்பத்திக்கான மாற்றுப் பயன் பாட்டை கண்டு அறிந்து கொண்டு இருக்கின்ற வேளையில், இந்தியா மட்டும் கண்ணை மூடிக்கொண்டு அணுஉலையைச் சார்ந்து இருக்க நினைப்பது அபாயகரமான ஒன்று.

உலகத்திற்கே அகிம்சையைப் போதித்த காந்திய தேசம், மனித குலத்தின் அவமானகரமாண அறிவியல் கண்டுபிடிப்பான, அணுகுண்டு அணுக்கதிர்வீச்சு அணுஉலைகளைத் திறக்கலாமா? 

அதனால்தான், தெற்குச் சீமையில் கூடங்குளத்தில் பேரழிவு அணுஉலைக் கூடம் அமைப்பதை எதிர்த்து, இடிந்தகரையைக் களமாகக் கொண்டு 600 நாட் களுக்கும் மேலாக இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் நடத்தின வருகின்றனர்.

வடதமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கும் பேராபத்தைத் தரக்கூடிய கல்பாக்கம் அணுமின் நிலையம் பெரும் அச்சுறுத்தலாக இயங்குகிறது.

கல்பாக்கம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்து, பகல் பொழுதில் நடந்து இருக்கு மேயானால் அணுஉலையில் பணியாற்றும் மக்களுக்குப் பெருமளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும். 

எனவே, கல்பாக்கம் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தினை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை அணுஉலை நிர்வாகமும், மத்திய அரசும் உடனடியாக மக்களுக்குத் தெரிவித்திட வேண்டும்.

இது தமிழக மக்களின் உயிர்ப் பிரச்சினை என்பதால், முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக நிபுணர் குழுவை அமைத்து, கல்பாக்கம் அணுஉலைக்குச் சென்று ஆய்வு செய்து, பாதுகாப்பையும், அதற்கான தீர்வையும் கண்டு அறிந்திட வேண்டும்.

இந்தியாவில் உள்ள 21 அணு உலைகளில் கதிர்வீச்சு அபாயம் உள்ள அணுக் கழிவுகளை ஏனைய மாநிலங்கள் பாதுகாக்க மறுத்து எதிர்ப்புத் தெரிவித்ததைப் போன்று, கல்பாக்கத்தில் பாதுகாக்கும் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வலியுறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஈணுலைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.



எரிந்து கொண்டு இருக்கின்ற தீபத்துக்குக் கீழே இருள் சூழ்ந்து இருப்பதைப் போன்று, அணுக் கதிர்வீச்சின் காரணமாக நீர், நிலம், காற்று மாசு அடைந்து விஷமாகிப் போனதால், தீர்க்க முடியாத புற்றுநோய்கள் உருவாகி மரணங்கள் நேர்கிறது.

கூடங்குளம் அணுஉலையைத் திறந்திடக்கூடாது என்று நீண்ட நாட்களாகப் போராடி வரும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கூடங்குளம் அணுஉலையையும் இயக்கிட அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவின் பகை நாடுகள் ஏவும் ஏவுகணைகள், கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுஉலைகளைக் குறிவைத்தே தூரங்கள் கணக்கிட்டு, பாரிசோதனை நடத்துவதை மறந்துவிடக் கூடாது.

வாழ்வதற்கு மின்சாரம் அவசியம்தான். ஆனால், நமது மரணத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்கு அல்ல!

No comments:

Post a Comment