Friday, April 19, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 16

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


தனி நபரின் அகந்தைக்குத் தீனி போடுவதற்காகவே
ஈழத்தில் இந்தியா போர் நடத்துவதா? -வைகோ 

இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியின் கட்டளையை நிறைவேற்ற,இந்திய அமைதிப்படை, தமிழீழத்தில் கொலை வெறி கொண்டு அலைந்து,மாவீரர் பிரபாகரனையும் அவரது தளகர்த்தர்களையும் கொன்றொழிக்க வேட்டை நடத்திய போது, இந்திய நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ தமிழினத்தின் சார்பாக இந்திய அரசின் அடக்குமுறையை, இனப்படுகொலைகளை அம்பலப் படுத்தி, நமது இனத்திற்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.



1988 ஆகஸ்டு 29 ஆம் நாள், மாநிலங்கள் அவையில் தலைவர் வைகோ, “இலங்கை யில் இன்றைய நிலை” எனும் பொருளில் விவாதத்தைத் தொடங்கி
வைத்து ஆற்றிய பேருரை, வரலாற்றின் பக்கங்களில் கல்வெட்டாகப் பதிந்து
இருக்கின்றது. வைகோ அவர்களின் இந்த உரை ஏற்படுத்திய தாக்கம்தான்,
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு எதிராக,நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பக் காரணமாயிற்று; உரையின் ஒரு பகுதி கடந்த வாரம் வெளிவந்தது. இதோ...வரலாற்றில் இடம்பெற்ற தலைவர் வைகோ உரையின் அடுத்த பகுதி...

அழிவுச்சுழல்... அபாயத்தழல்!

“இரத்தத்தாலும் கண்ணீராலும் நனைக்கப்பட்டுவிட்ட இலங்கைத்தமிழர்களின் சோக வரலாறு விமோசனத்திற்கு வழி இன்றி தொடர்ந்துகொண்டே இருக் கிறது.‘அமைதி’ என்ற போர்வையில்இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகா ணங் களில் மரண பயங்கரம் அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. அழி வின் சுழலுக்கும் அபாயத்தின் தழலுக்கும் மத்தியில் ஈழத்துத்தமிழினத்தின் வீர வாலிபர்கள் தங்கள் இனத்தின் உரிமைக்காக - மானத்திற்காக - மரணத்தின் விளிம்பில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களைவிட நூறு மடங்கு ஆயுத பலத்திலும் எண்ணிக்கையிலும் சக்தி வாய்ந்த இந்திய இராணுவத்தின் மூர்க்கத்தனமானத் தாக்குதலை எதிர்த்து, விடுதலைப்புலிகள் போர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின்
சுதந்திர தாகத்தை - மக்களின் விடுதலை வேட்கையை ஆயுத பலத்தால்
நசுக்கவே முடியாது என்ற சரித்திரம் தந்த மிகப்பெரிய படிப்பினையை இந்திய
அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தியாகமும், போராட்டமும், துன்பமும், துயரமும் விம்மலும்,கண்ணீரும் நிறைந்துள்ள ஈழத்தமிழர்களின் உள்ளங்களில் வெடித்திடும் எண்ணங்களை
ஒரு ஈழத்துக் கவிஞன் கவிதையாக வடித்துள்ளான்.

“உலகின் பார்வையிலிருந்து நாம் சேர்ந்தே
நிரந்தரமாக மறைகின்றோம்;
நமது தாய் நாட்டிற்காக நமது மரணம்
மனதில் துன்பமில்லை; வருத்தமும் இல்லை
இருப்பதெல்லாம்
நம்பிக்கையும் துணிச்சலுமே!
நமது பயணத்தில்
உயிர் நீடிப்பினும் அல்லது உயிர் பிரியினும்
விளைவு ஒன்றுதான்
ஆதிக்கத்திற்கு அழிவும்
விடுதலைக்கு வழியும்
உறுதி! உறுதி! உறுதி!”

திணிக்கப்பட்ட யுத்தம்

நாட்டு மக்களின் கவனத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் கொண்டுவரப்படாத
சில முக்கியமான தகவல்களை இந்த மன்றத்தில் வைக்கிறேன்.  இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான ‘ரா’ அமைப்பின் தலைமை அதிகாரிகளும், விடு தலைப்புலிகளும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத் தொடக்கத்திலிருந்து  (1988) ஜூலை 3 ஆம் வாரம் வரையில் பல சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி னார் கள்.

விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட பல அடிப்படையான
கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்கவில்லை. விடாப்பிடியான வீண்பிடி வாதத்தால் விடுதலைப்புலிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று இந்திய
அரசாங்கம் தொடர்ந்து கூறிவந்த பொய்ப்பிரச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகை யிலும், போர் ஓய்விற்கு வழி காணும் வகையிலும், தங்களின் சில கோரிக்கை களைக்கூட விட்டுக் கொடுத்து, முன் நிபந்தனைகள் விதிக்காமல் இந்திய அரசாங்கத்தின்ஒரு இணக்கமான முடிவிற்கு வர,விடுதலைப்புலிகள் பெரிதும் ஒத்துழைத்தார்கள் என்ற மிக முக்கியமான உண்மையை இந்த அரசாங்கம் வெளியிடவே இல்லை.

பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்று,புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடை யில் சமாதான ஒப்பந்தம் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பும் ஒரு கட்டத்தில் 
ஏற் பட்டது.

இந்தியாவுடன் யுத்தத்தை புலிகள் விரும்பவில்லை என்றும், நடை பெறும் தற்போதைய சண்டை தங்கள் மீது இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றும்,
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் ஏற்ற
முறையில் அமல்படுத்தப்படுமானால் உறுதியாக ஒத்துழைப்போம் என்றும்
புலிகள் தெரிவித்தார்கள்.

தங்களிடமுள்ள 700 ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும், முதல் கட்டத்தில் 300
ஆயுதங்களையும் இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் இடங்களில் ஒப்படைக்கவும், அதை ஒட்டி போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமானால் ஐந்து மாதகால அவகாசத் தில் மீதமுள்ள ஆயுதங்களை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்திய அரசு ஐந்துவார கால அவகாசம்தான் தர முடியும் என்று தெரிவித்தது. புலிகள் ஐந்து மாத கால அவகாசம் கேட்டதற்குக் காரணம் என்ன? முக்கிய மான விடுதலைப்புலிகள் இயக்கத்தளபதிகளும், வீரர்களும் இந்திய ராணுவத் தால் கொல்லப்பட்டுவிட்டதால் அவர்களுக்குத் தெரிந்த ஆயுதங்கள் பற்றிய உண்மைகளை அறிவது கடினமாயிற்று.

தோல்விக்குக் காரணம்

பல்வேறு இடங்களில் புலிகள் சிதறி இருந்த காரணத்தாலும், இந்த ஆயுதங் களைத் தேடிக்கண்டுபிடித்து ஒப்படைப்பதற்காகப் புலிகள் தேவையின் கால அவகாசம் கோரினர்.

இந்திய அரசு இதில் இணக்கம் காட்டாததால்புலிகள் இதில் கூடத் தங்கள் நிலை யை தளர்த்திக் கொண்டு,இதனைப் பிரச்சினையாக்கவில்லை. மாகா ணக் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னால் இடைக்கால
நிர்வாகம் ஏற்படுத்த இந்திய அரசு வழிகாண வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கையைக்கூட இந்திய அரசு ஒப்புக்கொள்ளாதபோதும்கூட ஆயுதங்களை ஒப்படைத்துச் சாமாதானம் காணவே புலிகள் பெரிதும் முயன் றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன? இலங்கையில் சிங்கள, இந்திய இராணுவத் தாக்குதல்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் நிவார ணத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்த யோசனைகளில்தான் முறிவு ஏற்பட்டது

புலிகள் நடத்தி வந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சணல், சோப்பு போன்ற தொழிற்சாலைகளை புனர்நிர்மாணம் செய்தல், புலிகளுக்கு உதவிய காரணத்தால் வீடு, வாசல்,சொத்து இழந்தவர்களுக்கு நிவாரணம் அளித்தல், இதற்காக ஒதுக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தும் அதிகாரம் கொண்ட குழு வில் புலிகளுக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என்று புலிகள் தரப்பில் முதலில் சொல்லப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று வற்புறுத் தப்பட்டது. புலிகள் அதனையும் ஏற்றுக்கொண்டனர்.

ஒரு நல்ல முடிவிற்கு வரும் கட்டத்தில் இலங்கை அரசின் போதனை காரண மாக இலங்கை அரசின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசு ஒரு புதிய நிபந்தனையைத் திணித்தது. புலிகள் இதனை
ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.மறுத்த தற்கான காரணங்கள் மிக மிக நியாயமா னவை.

இலங்கை அரசின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் நுழைவதற்கு இடம் கொடுத் தால் விடுதலைப்புலிகள் இத்தனை ஆண்டுக்காலமும் காப்பாற்றி வந்த பல இரகசியங்களை இலங்கை அரசு அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். தமிழர் இயக்கத்தின் முக்கியமானவர்களின் முகவரிகள் நடமாட்டங்கள், இதுவரை இலங்கை அரசு தெரிந்துகொள்ள முடியாத சில செய்திகள் அனைத்தையும் இலங்கை அரசு அறிந்துகொள்ள வாய்ப்பை உருவாக்குவது தற்கொலைக்கு ஒப்பான காரியமாகும் என்பதால், புலிகள் இதனை ஏற்க மறுத்தனர். பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

இந்திய அரசாங்கம் தனது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைப்
பற்றிக்கூட இந்தியா யோசனை தெரிவித்து இருக்கலாம். பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருந்தாலும்கூட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தம்
அறிவிக்கத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்தது நியாயம்தானா?
இதோ ஆதாரங்கள்

ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு விரோதமாக இலங்கை அரசு தொடக்கத்திலிருந் தே செயல்பட்டு வருகிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன.
‘வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பிற்கு விரோதமாக பிரச்சாரம் செய் வேன்’ என்று ஜெயவர்த்தனே பிரகடனம் செய்ததும், இஸ்ரேலிய உளவு சக்தி கள் இலங்கையில் நீடிக்கும் என்று காமினி தேசநாயகா கூறியதும், வடக்கு -
கிழக்கு மாகாணங்களில், சிங்கள குடியேற்றத்தை அரசாங்கம் முன்னின்று
தீவிரப்படுத்தியதும்,முகாம்களை விட்டு வெளியேவரக்கூடாது என்ற விதியை
மீறி, இலங்கைக் கடற்படையினர் பதினேழு விடுதலைப் புலிகளை கைது செய் ததும், பிரபாகரன் தலைக்கு பத்து இலட்சம் பரிசு என ஜெயவர்த்தனே அறிவித் ததும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மீது இலங்கை அரசு தொடுத்த மரண அடி அல்லவா?

திலீபன் உயிர்த்தியாகம்

கிழக்கு மாகாணத்தில் 9சதவிகிதமாக இருந்த சிங்களமக்கள் தொகை குடியேற் றத்தின் காரணமாக 24 சதவிகிதமாக உயர்ந்ததும், தமிழ் மக்கள் தொகை 20 சதவிகிதமாகக் குறைந்ததும் சிங்களக் குடியேற்றத்தால் நிகழ்ந்தது.

இந்தக் குடியேற்றத்தை எதிர்த்துத்தான் தியாகதீபம் திலீபன் தண்ணீர்கூட பரு காமல் உண்ணாவிரதமிருந்து செப்டம்பர் 26 ஆம் தேதி தனது உயிரை ஈழ மண்ணுக்கு ஒப்படைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து தீட்சித்தும்,பிரபாகரனும் ஒரு உடன்படிக்கை செய்து
கொண்டனர்.அந்த உடன்படிக்கையில் இந்திய அரசு தரப்பில் முதல் செயலா ளர் பூரியும், விடுதலைப்புலிகள் தரப்பில் துணைத் தலைவர் மாத்தையாவும்
கையெழுத்திட்டனர். இதனையே ‘பிரபாகரன்-தீட்சித் ஒப்பந்தம்’ என்று அழைக் கலாம்.

இதனை இந்திய அரசாங்கம் இந்திய -இலங்கை ஒப்பந்தம்போல் சித்தரித்து,
அதில் பிரபாகரன் கையெழுத்திட்டதாக வேண்டும் என்றே பிரச்சாரம் செய் கிறது.பிரபாகரன் - தீட்சித் ஒப்பந்தத்தின் பிரதி இதோ என் கையில் உள்ளது. அதன் முக்கியமான சரத்து ஒன்றை மேற்கொள் காட்டுகிறேன்.

“செப்டம்பர் 13 ஆம் தேதி தீட்சித்திடம்,புலிகள் கொடுத்த தீர்மானத்தில் குறிப் பிட்ட ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், இடைக்கால நிர் வாகம் ஏற்படுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.” இந்த ஐந்து கோரிக் கைகளில் முக்கியமானது,சிங்களர் குடியேற்றத்தைத் தடுப்பது பற்றியதாகும். தமிழ்ப் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவ முகாம்களும் காவல் நிலையங் களும் அகற்றப்பட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகள் என்னவாயிற்று? தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் அகற்றப்பட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும்.இந்தக் கோரிக்கைகள் என்னவாயிற்று? தமிழர் பகுதிகளில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பதைப் பெங்களூர் பேச்சுகளிலேயே இந்திய-இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டிருக்கின்றன. இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் மாகாண கவுன்சில் களுக்குத் தேர்தல் என்பது வெறும் பித்தலாட்டமாகும்.

துரோகத்தின் பட்டியல்

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் பச்சைத்துரோ கத் தையும் நயவஞ்சகப் போக்கினையும் பட்டியல் போட்டுக் காட்ட முடியும்.

13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் -இதன்படி உருவாக்கப்படும் ஆளுநர் பதவி தமிழர்களை வஞ்சிக்கும் திட்டமாகும். ஆளுநர் பதவி என்பது வெறும் அலங் காரப்பதவிதான் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால்,தற்போது இந்தியா வில் ஆளுநர்களுக்கு இல்லாத அதிகாரங்கள், தமிழர் பகுதிகளுக்கு நியமிக்கப் படும் ஆளுநர்களுக்கு இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
எல்லையற்ற அதிகாரங்கள், இலங்கைக் குடியரசுத் தலைவர் நினைக்கின்ற
அதிகாரங்கள் அனைத்தையும் மாகாண கவர்னர்களுக்கு வழங்கலாம் என்ற
நிலையில் தமிழ் வடக்குகிழக்கு மாகாணங்களைச் சிங்களத்தின் அடிமைப் பிரதேசமாக நடத்த ஆளுநர் பயன்படுவார்.

உருவாக்கப்பட இருக்கும் மாகாண கவுன்சில்களுக்கும் எந்த அதிகாரமும்
கிடையாது. குறிப்பாக நிலம், விவசாயம்,மீன்வளம், வேலைவாய்ப்பு போன்ற
முக்கியத் துறைகளுக்கான அதிகாரங்கள் கவுன்சில்களுக்குக் கிடையாது.
குடியரசுத் தலைவர் நினைத்தால் எந்த நேரத்திலும் கவுன்சில்களைக் கலைக் கலாம். இலங்கையில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழும் இடம்பெறும் என்ற வாக்குறுதிக்கு அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் தரப்படவே இல்லை. எதிர்காலப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப் பட்டால்தான் ஆயுதங்களை புலிகள் ஒப்படைப்பார்கள்.

அபாண்டம் - அவதூறு

இலங்கை அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள ஒரு மசோதாவின் சரத்து களை அறிந்தால் இந்த மன்றத்திலுள்ளவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாவார்கள்.
1977 ஜூலை மாதம் முதல் 1987 டிசம்பர் வரை பயங்கரவாதத் தடுப்புச்சட்டத் தின் கீழ் நடத்தப்பட்ட வழக்குகள்,எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்,சிறைச் சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் இவற்றிற்கு இலங்கை அரசு அதிகாரி கள் எந்த வகையிலும் பொறுப்பாளிகள் ஆக மாட்டார்கள் என்றும், நீதிமன்றங் கள் இதுகுறித்து விசாரிக்க முடியாது என்றும் இந்த மசோதா கூறுகிறது.

தமிழின விரோதியாம் லலித் அதுலத் முதலியின் தீவிரமான முயற்சியின்
பின்னணியில் தான் இம்மசோதா வந்துள்ளது.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் படுபயங்கரமாக நடத்தப்பட்ட தமிழினப்படு கொலைகள் வெளிக்கடைச் சிறையில் நடந்த கோரக் கொலைகள் இவற்றிற் குக் காரணமான கொடியவர் களைப் பாதுகாப்பதற்காகவே இந்த மசோதா வந்துள்ளது.



குறுக்கீடும் - பதிலடியும்

விடுதலைப் புலிகளை அழித்திடக் கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய அரசு
செயல்படுகிறது. அவர்களின் பொருட்டு தமிழகத்தில் எழும் அனுதாபம் எரி மலையாய் வெடித்திடக்கூடாதே என அஞ்சி, அபாண்டமான பழிகளை அவர் கள் மீது சுமத்தி, அவதூறுப் பிரச்சாரத்தில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

ரத்தி னாகர் பாண்டே(இ.காங்): விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள்;பயங்கர
வாதிகள் எங்கே இருந்தாலும் அவர்களை நசுக்க வேண்டும்.

வைகோ:நேதாஜி சுபாஷ்சந்திரபோசைக்கூட பிரிட்டிஷ்காரர்கள் பயங்கரவாதி என்றுதான் குற்றம் சாட்டினார்கள்.

ரத்தினாகர் பாண்டே: பிரபாகரன்,சுபாஷ்சந்திர போஸ் அல்ல.

வைகோ: ஈழத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் ஒரு சுபாஷ்சந்திர
போசாகத்தான் காட்சி அளிக்கிறார்.

பாண்டே: இந்திய இராணுவம் தற்போது நடத்துகின்ற தாக்குதல்களுக்கு நாம்
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

வைகோ: படுகொலைசெய்யும் பாவிகளாக இந்திய இராணுத்தினர் இயங்கு கின்றனர்.

பாண்டே: சிங்களவர்களும் யாழ்ப்பாணத்தில் வசித்தார்கள்.

வைகோ: யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் வாழவில்லை.
உங்கள் முட்டாள்தனத்தை ஏன் வெளிப்படுத்துகிறீர்கள்?

ஆனந்த் சர்மா(இ.காங்): வேறு சில போராளி இயக்கங்களும் உள்ளன.

வைகோ: அவைகளில் சில இயக்கங்கள் இந்திய அரசின் கஜானாவிற்குள் முடங்கி விட்டார்கள். சில குவிஸ்லிங்குகள் இந்தியாவுக்குக் கிடைத்துள் ளார்கள்.இராஜீவ்காந்தி ஒரு புதிய பாஸிஸ்டாகி உள்ளார்.

பி.வி.நரசிம்மராவ் (உள்துறை அமைச்சர்):1983 ஆம் ஆண்டில் நண்பர் கோபால்சாமி இன்று பேசியதைவிட, உணர்ச்சி கொப்பளிக்க இதய பூர்வமாக பேசிய பேச்சை நினைவு கூர்கிறேன்.இந்திய இராணுவத்தை அனுப்பச் சொல்லி அன்று அவர் கேட்டார். அதன் பிறகு பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு
விட்டன. பிரபாகரன் விருப்பத்தின் பேரில் கடந்த ஆண்டு ஜூலை இறுதியில்
புதுடெல்லிக்கு, இந்திய இராணுவ விமானத்தில் வந்தார். ஜூலை 28 இல்
பிரதமரைச் சந்தித்தார். ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கொடுத்தார்.

வைகோ: அப்படியானால் எதற்காக அவரை எவரையும் சந்திக்க விடாமல்
அடைத்து வைத்தீர்கள்?

பி.வி.நரசிம்மராவ் : அது ஒரு விஷயமல்ல;பிரபாகரனைச் சந்திக்க கோபால் சாமி ஏன் அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு நான் பதில்சொல்ல முடியாது.

வைகோ: கோபால்சாமியை மாத்திரமல்ல,பத்திரிக்கையாளர்களையும், வேறு
எவரையுமே சந்திக்க விடாதது ஏன்?

பி.வி.நரசிம்மராவ் : இருக்கலாம்; அது ஒரு பெரிய விஷயமல்ல. பிரபாகரன்
ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டார் என்பது தான் எனது வாதமாகும்.

வைகோ:ஆகஸ்டு 4 ஆம் தேதி சுதுமலையில் பிரமாண்டமான மக்கள் கூட்டத் தில் பிரபாகரன் பேசும்போது, ஒரு மிகப்பெரிய வல்லரசான இந்தியா தங்கள்
மீது ஒப்பந்தத்தை திணித்துள்ளது.இந்தியாவை எதிர்த்து ஆயுதம் எடுக்க நாங்கள் தயாரில்லை என்றுதானே கூறினார்.

பி.வி.நரசிம்மராவ் : இதனை நான் ஏற்றுக்கொள்ளமுடியாது.

வைகோ: தனியொரு நபரின் அகந்தையையும் பிடிவாதத்தையும் திருப்திப் படுத்துவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த வெறித்தனமான போரை உடனடி யாக நிறுத்திட வேண்டும்.

இந்தியா பதில்சொல்ல வேண்டிய காலம் வரும்

தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத சூழலில் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வற்புறுத்தி இந்தியா போர் நடத்துவது நியாயம் தானா? இதற்காகவா புலிகள் இத்தனை ஆண்டுகள் போராடினார்கள்? இதற்கா கத்தானா விலைமதிக்க முடியாதத் தியாகங்களைச் செய்தார்கள்? ஏமாற்றம், அழிவு என்ற பிரளயத்திலே தங்களை அமிழ்த்திக் கொள்வதற்காகவா எண்ணற்ற உயிர்ப்பலிகளைத் தந்தனர்.

நீங்காத பெருந்துன்பத்திற்கும், காலா காலாத்திற்கும் நிலைக்கும் அந்த காரத் திலும் தங்களை அழித்துக்கொள்ளுவதற்காகவா புலிகள் இத்தனைஆண்டுகள் இரத்தம் சிந்தினார்கள்?சிங்கள இனவெறிக் கொடியவர்கள் நடத்தியகொள்ளை, கொலை, கற்பழிப்பு இவற்றை எதிர்த்து பிரமிக்கத்தக்க வீரம் செறிந்த யுத்தத் தை புலிகள் நடத்தியது எல்லாம் கடைசியில் அடிமைச் சங்கிலிகளை அணைத்துக் கொள்ளுவதற்காகவா? இல்லை...ஒருக்காலும் இல்லை. அப்படி இந்திய அரசு எதிர்பார்த்தால் ஏமாந்து போகும்.

இந்தியா செய்து வரும் இராணுவக்குற்றங்களுக்கு ஒரு நாள் உலக அரங்கில்
பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தே தீரும். நான் பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் வவுனியாக் காடுகளில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட
இந்தியத் துருப்புகள் விடுதலைப்புலிகளைச் சுற்றி வளைத்து கடுமையான
தாக்குதலை நடத்துகிறார்கள்.விஷவாயுக் குண்டுகளை ஹெலிக்காப்டர்கள் மூலம் வீசுகிறார்கள். பிரபாகரனையும் மாத்தையாவையும் முக்கிய தளபதி களையும் குறிவைத்து விட்டோம் என்று இந்தியத் தளபதிகள் தெரிவித்து விட்டனர்.

இரக்கமற்ற இந்திய அரசாங்கம்,புலிகளுக்குப் போய்ச்சேரவேண்டிய உணவுப் பொருள்களை நீங்கள் பறிமுதல் செய்யலாம்.மருந்துகளைப் பறிமுதல் செய்ய லாம். ஆயுதங்களைப் பறிமுதல் செய்யலாம். பூமிக்கடியில் புலிகள் அமைத் துள்ள பாதுகாப்பு முகாம்களை நிர்மூலம் செய்யலாம்.ஆனால்,ஒன்றை மட்டும் இந்திய அரசு கவனத்தில் கொள்ளட்டும்.

பாடுபட்டுப் பல ஆண்டுகளாக தமிழர்கள் உருவாக்கிய பாதுகாப்புக் கோட்டை யை நீங்கள் நாசமாக்குகிறீர்கள். தமிழர்களின் காவல் கவசத்தை நீங்கள் உடைக் கிறீர்கள்.என் இதயத்தின் அடித்தளத்தில் எழும் வேதனையோடு
வேண்டுகிறேன். இந்த யுத்தத்தை நிறுத்துங்கள்.இந்த யுத்தத்தை நிறுத்துங்கள். புலிகள் உங்களுடைய விரோதிகள் அல்லர். இந்தியாவின் பிரஜைகளாக உள்ள ஐந்துகோடித் தமிழர்களுடன் இரத்த பந்தம் கொண்டவர்கள் இவர்கள். அவர் களை அழிக்க முற்படாதீர்கள் என்று மன்றாடுகிறேன்.

இந்திய ஒருமைப்பாடு அழியும்

மகாத்மா காந்தியைக் கொடியவன் கோட்சே சுட்டுக் கொன்றதை உலகம் பார்த் தது. மகாத்மாவின் கொள்கைகள் இலங்கையில், இராஜீவ்காந்தியின் அரசாங் கத்தால் கொலை செய்யப்படும் கொடுமையையும் இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது.

மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டால்,இந்திய ஒருமைப்பாட்டிற்கு அழிவு
ஆரம்பம் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறேன்”.

தலைவர் வைகோ அவர்களின் முயற்சியில், மாநிலங்களவையில் 1988, ஆகஸ்டு 29 இல், 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து இலங்கைப் பிரச் சினைக்காக ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வைகோவின் உணர்ச்சி
பெருக்கான இந்த உரை நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் சிந்திக்கச் செய்தது.இதன் விளைவாக பல நாடாளுமன்ற உறுப்பினர் கள், தலைவர் வைகோவின் கருத்துகளை ஆதரித்துப்பேசினார்கள்.

பி. உபேந்திரா (தெலுங்கு தேசம்): இந்திய அரசின் இலங்கைக் கொள்கை
என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கக்கூடிய மாபெரும் தோல்வியாகும்.
இந்த உடன்பாட்டில் இந்தியா ஏன் ஒரு தரப்பாக ஆகியது என்றுதான் புரிய வில்லை. இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரே வழி, போர் நிறுத்தம்
செய்து தமிழ்ப் போராளிகளை அழைத்து அவர்களுடன் விவாதித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான்.

இ.பாலானந்தன் (இந்திய கம்யூனிஸ்ட்):தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண
இலங்கை அரசு மீது இந்தியா நிர்பந்தம் செலுத்த வேண்டும்.

ஜஸ்வந்த் சிங் (பாரதிய ஜனதாகட்சி): 13 மாத காலமாக இலங்கையில் இந்திய அமைதிப்படைகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் இராணுவத் தோல்வி யை மட்டுமன்றி, ராஜதந்திரத் தோல்வியையுமே குறிக்கின்றன.இதனால் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் பாதிக்கப்படுகின்றன.வியட்நாம், கம்பூசியா, லெபனான் சண்டைகளிலிருந்து இந்திய அரசு எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லைஎன்றே தோன்றுகிறது. வெளிவிவகாரத் துறையில் நமக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வியானது, உள்நாட்டு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள தோல்விகளைவிட தீவிரமான விளைவுகளை உருவாக்கக் கூடி யவை என்பதை இந்த அரசு உணர்ந்து இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்தியப் படைகள் நாடு திரும்புவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக இந்த சர்க்கார் ஏதாவது ஒரு காலவரையறையை நிர்ணயித்துக்
கொண்டிருக்கிறதோ?

ஷமீம் ஹாஷ்மி (லோக்தளம்) : தமிழர்களுக்குச் சிங்களவர்கள் அட்டூழியங் கள் இழைத்து வரும் நிலைமையில்,விடுதலைப்புலிகளுக்குப் பதிலடி கொடுப் பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய் விட்டிருக்கிறது. 

இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். இந்தப் பிராந்தியத் தின் பாது காப்புக்கு அதுதான் உகந்ததாகும். எம்.பி.க்கள், தமிழர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொள்ளும் உயர் அதிகாரக் குழு ஒன்றை அமைத்தாக வேண்டும்.

ரேணுகா சவுத்ரி (தெலுங்கு தேசம்) :இவ்வளவு முக்கியமான பிரச்சினை மீது
விவாதம் நடக்கும்போது ஆளும்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லையே என்பது வேதனை தருகிறது.

1988 ஆகஸ்டு 29-ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விவாதத் தையும், அதனைத் தொடங்கி வைத்து தலைவர் வைகோ ஆற்றிய ஆவேச உரையையும், வைகோவின் கருத்துகளை நியாய உணர்வுடன் ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவாகப் பேசிய அனைத்துக்கட்சித் தலைவர்களின்
உரைகளையும் மீளாய்வு செய்கிறபோது நமது இதயத்தின் அடித்தளத்தில் ஒரு
சோகம் படருகிறது.

ஆம்! இப்படிப்பட்ட நமது தலைவர்,தமிழ் ஈழத்தில் முள்ளி வாய்க்கால் கொடுமை கள் நடைபெற்றபோது -தமிழினப் படுகொலையைச் சிங்கள அரசு
இந்திய அரசாங்கத்தின் துணையுடன் நடத்தியபோது - நாடாளுமன்றத்தில்
அதிகாரப் பீடத்தில் இருப்போரின் பிடரியைப் பிடித்து உலுக்குவதற்கு இடம்
பெறாமல் போய்விட்டாரே என்ற ஆதங்கமும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.
இருந்தாலும், பத்துக் கோடி தமிழர்களுக்கும் இனமான உணர்வை ஊட்டக் கூடிய தமிழ்த் தேசிய இனத் தலைவராக இலட்சியத் தலைவர் வைகோ ஒருவர் தான் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு நம்பிக்கையைத்தருகிறது .

தொடரும்..................
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment