Thursday, December 12, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 1

வட்ட வடிவமான பரந்தமுகம்; அகலமான நெற்றி; காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்ட வெட்டுக் காயத்தின் தழும்பு; அன்பினை விளக்கும் அழகுமிகு விழி கள்; அரும்பு மீசை; கனிவு பேசும் இதழ்கள்; குள்ளமான உருவம்; பருமனான உடல்; காலர் இல்லாமல் வட்ட வடிவ கழுத்துப்பட்டியுடன் கூடிய சில்க் ஜிப்பா;
அதன்மேல் தோளின் ஒரு பக்கத்தில் கம்பீரமாகத் தவழும் கருப்புச்சால்வை, இத்தனையும் இணைந்த எழில்மிகு உருவத்திற்கு உரியவர் தான் கொங்குச் சீமை தந்த திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் கே.ஏ.மதியழகன்.

“குறுகியதோர் உருவம்; எனிற் பரந்த உள்ளம்!
குறள்போலும் எனக்கூறின் மிகையாகாது!
அறிவினிலே வளங்கொண்டோன்; அன்பில்வளர்ந்து
அடந்தடந்து நம் உள்ளில் இடம் பிடித்தோன்!
இடக்கையில் புகைமணக்கும் வெண்சுருட்டில்
எரிதீயும் சிந்தனையில் பகைசுருங்கும்!
நடக்கையில் பின்னின்று பார்த்தால் ஆகா!
நம் வீட்டுப் பிள்ளை நடைபோலிருக்கும்
நிதியென்னில் குவையென்னில் குறைவே - அண்ணா
நெஞ்சில் மதியே! நிறைவான தம்பி”

என்ற கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் மதியழகனின் தோற்றப் பொலிவை எந்நாளும் பேசிக் கொண்டிருக்கும்.


“பெரியாரின் நாட்டுக்குள் சுவாசம் செய்து
பேரறிஞர் செந்தமிழை உரக்கப்பேசி
விரிவான சமுதாயப்பணிகள் ஆற்றி
வெளிச்சத்தை சுவடுகளில் மதக்கி வைத்து
செறிவான வரலாற்றைத் தேடிக்கொண்ட
சீர்த்தமதி யழகனெனும் திராவிடத்து
விரிவான கற்பனையின் விளைச்சல்”

என்ற புலவர் புலமைப்பித்தனின் பாடல் வரிகள், மதியழகனின் திராவிடர் இயக்கப் பணியின் செழுமையை அகிலத்திற்கு எடுத்து விளக்கும்!

கோவை மாவட்டம் உடுமலை அருகில் உள்ள கணியூரில் தொ.அ.அருணா சலம் - ஆவுடையம்மாள் (எ) லட்சுமி அம்மாள் ஆகியோரின் நான்காவது மக வாக 07.12.1926 அன்று நம் மதியழகன் பிறந்தார். சோம சுந்தரம் என்பதுதான் மதியழகனுக்கு பெற்றோர் இட்ட பெயர்! நாராயணசாமி நெடுசெழியனாக,சீனி வாசன் செழியனாக, திருஞானசம்பந்தம் நன்னனாக, ராமையா அன்பழகனாக, சின்னராசு சிற்றரசாக, தண்டபாணி வில்லாளனாக தனித்தமிழில் பெயர் வைத்
துக் கொண்டதன் வரிசையில் தான் சோமசுந்தரம் மதியழகனாக மாற்றம் பெற் றதும்! கே.ஏ.அருணாசலம், கே.ஏ.சீதையம்மாள், கே.ஏ.முருகேசன், கே.ஏ.
கிருஷ்ணசாமி ஆகியோர் மதியழகனின் உடன்பிறந்தோர் ஆவர்.
மதியழகனின் அண்ணன் கே.ஏ.முருகேசன் நீதிக்கட்சியின் காலம் முதலே திராவிடர் இயக்கத்தொண்டர், குடியரசு, ஜஸ்டிஸ்,திராவிடன் ஆகிய இதழ் களை வாங்கி இயக்கம் வளர்த்தவர்.பெரியார், அண்ணா, நாவலர்,சி.பி.சிற்றரசு, என்.வி.நடராசன் ஆகிய இயக்கத்தலைவர்களை அழைத்து கணியூரில் கூட்டம்
நடத்தியவர். இந்தப் பின்னணியில் மதியழகனும் திராவிடர் இயக்கத்தில் ஈடு பட்டதில் வியப்பில்லை. கணியூரில் சின்னப் பிள்ளை வாத்தியார் துவக்கப்
பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரையும், வெங்கட கிருஷ்ணய்யர் நடுநிலைப்பள்ளி யில் 6,7 வகுப்புகளிலும், உடுமலைப்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் படித்த காலத்திலேயே திராவிடர் இயக்க பொதுக்கூட் டங்களைக் கேட்கவும், இயக்க ஏடுகளைப் படிக்கவும் வாய்ப்பு பெற்றார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1943 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண் டு வரை இண்டர் மீடியட் வகுப்பும் இளங்கலை பட்டப் படிப்பும், தொடர்ந் து
சென்னை சட்டக்கல்லூரியில் படித்த காலத்தில் திராவிடர் இயக்க மாணவர் தலைவரானார்.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதியழகன் கல்வி கற்ற
காலம் திராவிடர் இயக்கத்தின் எழுச்சிக் காலமாக அமைந்தது.முத்தமிழ் மன் றத் தின் தலைவரான மதியழகன், வி.வி.சாமி நாதன், இராஜகோபால், நன்னன்,
சோலை அரசு, அரங்கண்ணல்,தில்லைவில்லாளன், வைகோ விந்தன், பூவை. இராமானுசம் முதலான மாணவர்களுடன் இணைந்து அண்ணாமலை பல் கலைக் கழகத்தை திராவிடர் இயக்க கோட்டையாக உருவாக்கினார். பேராசி ரியர் வி.சி.இரத்தினசாமி அவர்கள்தான் அப்போதைய துணைவேந்தர்.

அறிஞர் அண்ணா அவர்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உரை யாற்ற மதியழகன் எடுத்த முயற்சிக்கெல்லாம் தடைபோட்டு அனுமதி மறுத் தார்.ஒட்டுமொத்த மாணவர் எழுச்சிப்போராட்டம் காரணமாக அண்ணாவின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கினாலும், கூட்டத்திற்கு தலைமை ஏற்க துணை வேந்தர் இரத்தினசாமி வரவில்லை.

இந்தச் சூழலில் மதியழகன் தலைமையில் சாஸ்திரி ஹால் என்ற பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ‘நிலையும் நினைப்பும்’ என்ற தலைப்பில் அரியதோர்
உரையை அறிஞர் அண்ணா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து திராவிடர் இயக்கத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் முகாமிட, மாணவர் அமைப்பு வலுப்பெற்று பேருரு கொண்டது.

சிதம்பரம் பல்கலைக்கழகத் தில் பயின்ற மதியழகன் நாடு முழுக்க நடைபெற்ற திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று எழுச்சி உரையாற்றினார். கும்ப
கோணத்தில் அரசினர் கலைக்கல்லூரியில் உ.வே.சாமிநாதஅய்யர் நினைவாக நடைபெற்ற பேச்சுப் போட்டியில், தென்னிந்திய நாகரிகம் ஆரிய நாகரிகமா?
திராவிட நாகரிகமா? என்ற தலைப்பில் பேசும்போது திராவிடநாகரிகமே என்று அறிவார்ந்த முறையில் வாதிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றார் மாணவர்
தலைவர் மதியழகன்.

திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றத் தின் அழைப்பினை ஏற்று மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் சிறப்பு உரையாற்றியஏ.டி.பன்னீர் செல் வம் நினைவு நாள் கூட்டத்தில் பார்வையாளராகக்கலந்து கொண்ட மதியழகன் அவர்களை பெரியார் அவர்களே மேடைக்கு அழைத்து பேசச்செய்து பெருமைப்
படுத்தினார்.

1944 ஆம் ஆண்டில் லால்குடி,கோபிச்செட்டிப்பாளையம்,தஞ்சை, புதுப்பேட் டை (பண்ருட்டி) ஆகிய ஊர்களில் எல்லாம் திராவிட மாணவர் கழக மாநாடு கள் நடைபெற்றன. 1946 பிப்ரவரி 23,24 ஆகிய நாட்களில் நீடாமங்கலத்தில் திரா விட மாணவர் கழக மாநாடு எழுச்சி யுடன் நடந்தது.இவைகளில் எல்லாம் மதி யழகன் வீரமுழக்க மிட்டு மாணவர்களை இயக்கத்தில் இணைக்க அரும்பாடு
பட்டார். புவனகிரி அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டத்தில் அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆவேசமாய் உரையாற்றிக் கொண்டு இருக் கிறார். அவரது இடிமுழக்கப் பேச்சினால் அதிர்ந்துபோன எதிரிகள் கூட் டம், கல்வீசி கூட்டத்தில் ரகளை செய்தார்கள். பல்கலைக் கழக மாணவரான
மதியழகன் கலவரம் செய்தவர்களை அடக்கியது மட்டு மல்ல, மேடையேறி அழகிரியின் வீரவரலாற்றையும்,எதிர்ப்பில் வளர்ந்த இயக்கத்தின் தனித் தன் மையையும் விளக்கி 15 நிமிடங்கள் அரிமாவாய் வீர முழக்கமிட்டார்.

மதியழகனை அழகிரி பாராட்டியது மட்டுமல்ல, உற்ற தோழராகவும் ஏற்றுப் போற்றினார். இறுதி நாட்களில் மரணப் படுக்கையில் கிடந்த அழகிரியிடம், அண்ணா அளித்த ஆயிரம் ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுக்கச் சென் றவரும் மதியழகன்தான்! “நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன், இதை அண்ணாவிடம் சொல்லுங்கள்” என்று மர ணசாசனமாய் கண்ணீர் மல்க அழகிரி கதறி அழுததும் மதியழகனிடம்தான்!” 144 தடை ஆணையை மீறி உடுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாருடன் மாணவர் தலைவர் மதியழகனும் பேசியதால் இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.அப்போது தொடரப்பட்ட வழக்கு திமுகழகம் தொடங் கப்பட்ட பிறகும் தொடர்ந்து பின்னர் அரசினரால் திரும்பப் பெறப்பட்டது.

06.10.1947 அன்று அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் பட்டம் அளிப்பு விழா நடை பெற்றது.அப்போது கழக மாணவர்கள் திராவிடர் கழகக் கொடியை பல் கலைக் கழக மாடியில் உயர்த்தி வைத்து மகிழ்ந் தார்கள். நமது கொடியை காங் கிரசு கட்சி மாணவர்கள் அகற்ற முயன்றபோது நமது தோழர்களுக்கும் அவர் களுக்கும் பெரும் சச்சரவு மூண்டு பின்னர் சமாதானமும் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் சிதம்பரம் நகரில் உள்ள காங்கிரசு கட்சியினர்,மாணவர் விடுதிக் குள் அத்துமீறி நுழைந்து நம் கழக மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்கு தலை நடத்தினார்கள். மதியழகன் நெற்றியில் பலத்த வெட்டுக் காயம் பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.

அன்றைக்கிருந்த காங்கிரசு அரசு காங்கிரசு மாணவர்கள் 12 பேர் மீது ஒப்புக்கு வழக்குப் போட்டு அவர்களை விட்டுவிட்டது. ஆனால், கழக மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கு சிதம்பரம், பறங்கிப்பேட்டை நீதிமன்றங் களில் 2 ஆண்டு களாக நடைபெற்றது.கழக மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்டனர். மதியழகன் அவர்கள் பல்கலைக் கழகத்தின் உள்ளே நுழையவே தடைவிதிக்கப்பட்டார். தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை.

இதனை எதிர்கொள்ள அறிஞர் அண்ணா அவர்கள் மாணவர் வழக்கு நிதி எனும் பெயரில் ‘திராவிட நாடு’ இதழ் மூலம் திரட்டி மாணவர் களுக்கு உதவினார். 30
முறைகளுக்கு மேல் மாணவர்கள் நீதிமன்றம் வரவேண்டி இருந்தது. ஆறுமாத கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பும் அளிக்கப் பட்டது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப் பட்டபோது தந்தை பெரியார் அவர்களும் மாணவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர்.

இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பு நியாயமான தீர்ப்பு அல்ல என்று, மாணவர் களும் வக்கீல்களும் கருதுவதாலும், அத்தீர்ப்பு மாணவர் களின் பின் வாழ்க்கை யை பாதிப்பதாலும் தீர்ப்பின்மீது அப்பீல் செய்ய வேண்டி இருக்கிறது. மாணவர் கள் இந்த வழக்குகளுக்காக சொந்தகைப்பொறுப்பில் இதுவரை 2,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால், தற்காலம் அவர்களது நிலைமை அப்பீல் வகையில் செலவுக்குக் கண்டிப்பாய் பொதுமக்கள் ஆதரவு தேட வேண்டியதாக இருக்கிறது. எனவே
பொதுமக்கள் அப்பீலுக்கு அருள்கூர்ந்து பொருளுதவி செய்ய வேண்டியது மிகவும் தேவையான காரியம் என்று கருதுவதால் பொதுமக்கள் தங்களால் ஆன உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்” என்று பெரியார் அவர்கள் தந்தையாய் பொறுப்புடன் அறிக்கை வெளியிட்டார் (திராவிட நாடு( 20.02.1949).

தன்னுடைய பங்காக நூறு ரூபாயை வழக்கு நிதிக்காக அய்யா அவர்கள் அளித் தார்கள். பின்னர் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது. தடைதகர்த்த தளபதி மதி யழகன் பி.ஏ. தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தனது அறிவின் ஆற்றலை அகிலத்திற்கு உணர்த்தினார்.

மாணவர் தலைவர் மதியழகனின் மகத்துவம் கண்ட தந்தை பெரியார், திராவி டர் கழகத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற உயரிய பொறுப்பை இவருக்கு அளித்து சிறப்பு செய்தார். பி.ஏ.தேர்வு எழுதிய மாணவர் மதியழகனை, தந்தை பெரியார் அவர்கள் தந்தி கொடுத்து செங்கற்பட்டுக்கு வர வழைத்தார். தேர்வு முடிந்தவுடன் தன்னுடன் பணியாற்ற வருமாறு அன்புடன் அழைத்தார். சட்டக் கல்வி படிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தயக்கத்துடன் மதியழகன்
குறிப்பிட்டதையும் அய்யா அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 1948 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் மதியழகன் கல்வி பெற நுழைந் தார்.

அறிஞர் அண்ணா அவர்களும் மதியழகனுடன் பாசத்துடன் பழகி அன்பு செலுத் தினார். சென்னை யில் அண்ணாவுக்கு என சொந்த வீடு இல்லாத அந்த காலத் தில், சென்னைக்கு வந்தால் பேராசிரியர் அன்பழகன்,நடிப்பிசைப் புலவர் கே. ஆர்.இராமசாமி, மதியழகன் ஆகியோர் வீட்டில்தான் உரிமையுடன் தங்குவது வழக்கம். பிராட்வே செம்புதாஸ் தெருவில் உள்ள கார்னர் எஸ்டேட் என்ற கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள அறையில்தான் மதியழகன் தங்கிக் கொண்டு சட்டக்கல்வி படித்தார். அந்த அறையில் நண்பர்கள் குழுவுடன் அண் ணா,விவாதிப்பதும்; உறங்குவதும்; எழுதுவதும்; தங்குவதும் வழக்கம். நாவலர்
நெடுஞ்செழியன் அவர்களின் “மன்றம்” இதழின் அலுவலக முகவரியும் இந்த அறைதான்.

தி.மு.கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்க முடிவு செய்த போது, மதியழ கன் அவர் களின் சட்டக்கல்லூரி நோட்டில் தான் முதன் முதலாக எழுதி பதிவு செய்தார் அண்ணா! 17.09.1949 தந்தை பெரியார் பிறந்தநாளில் சென்னை பவளக் கார தெரு எண் 7 இல் நடைபெற்ற தி.மு.க. அமைப்புக்குழு கூட்டத்தில் சட்டத் திட்டக்குழு, அமைப்புக் குழு செயலாளராக மதியழகன் அவர்களை பொதுக்குழு நியமித்தது.

இந்த பணியை சிறப்பாக நிறைவேற்றியமைக்காக மதியழகன் அவர்களை, “தவழும் குழந்தை எழுந்து நடப்பதற்கு நடைவண்டி தேவை. குழந்தைப் பருவ மான கழகம், பணிகள் பல புரிய சட்டதிட்டம் தேவை. தி.மு.கழகம் நன்முறை யில் நடை போடு வதற்கான சாதனங்களில் ஒன்று சட்டதிட்டங்கள்.அதை மிகத்திறமையோடு செய்து தந்தவர் சட்டதிட்ட குழுச் செயலாளர் மதியழகன் அவர்கள்” என்று அண்ணா மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

தி.மு.கழகத்தின் முதல் பொதுச் செயலாளராக அறிஞர் அண்ணா தேர்ந்தெடுக் கப் பட்டபோது,மதியழகன் துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு 1956 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் பணியாற்றினார். மீண்டும்
அண்ணா பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டபோது, தலைமை நிலை யச் செயலாளராக மதியழகன் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1950 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை திராவிட மாணவர் முன்னேற் றக் கழக பொதுச் செயலாளராக பணியாற்றிய மதியழகன், மாணவர் களை கழ கத்தில் இணைத்து முதன்மையான அணியாக மாணவர் அணியை உருவாக் கினார்.மாவட்டந் தோறும் மாணவர் அணி சார்பில் மாநாடுகளை நடத்தி மாண வர் தலைவர்களையே மாநாட்டின் தலைவர்,திறப்பாளர், கொடி ஏற்றுபவர் என அவர்களை முன்னிலைப்படுத்தினார்.

22.08.1959 அன்று சென்னை மெமோரியல் மண்டபத்தில் மாணவர் தி.மு.க. சார் பில் மதியழகன் தலைமையில் இந்தி எதிர்ப்பு போராட்ட அறிவிப்பினை பறை சாற்றிய மாநாடு சரித்திரச் சிறப்புமிக்க ஒன்றாகும். மதியழகனுக்குப் பிறகு
டி.கே. பொன்னு வேலு எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் மாணவர் அணியை முன்னெடுத்துச் சென்றனர்.

அரங்கண்ணல், பழ.நெடுமாறன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், கோவை செழி யன், நாஞ்சில் கி.மனோகரன், எம்.எஸ்.வெங்கடாசலம், ஆலடி அருணா, விரு துநகர் பெ.சீனிவாசன், கே.ஏ.கிருஷ்ணசாமி, கவிஞர் நா.காமராசன், கணபதி
இராம சுப்பையா, எஸ்.பி. சற்குணம், எல்.கணேசன்,கா.காளிமுத்து, வை.கோ பால்சாமி, எனும் நம் தலைவர் வைகோ. ரகுமான்கான், துரைமுருகன் ஆகிய தலைவர் களை உருவாக்கித் தந்த திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் அண்ணா மறைவுக்குப் பின் ஒதுக்கி வைக்கப்பட்டு, அந்த இடத்தில் மு.க.ஸ்டா லின் இளைஞர் அணி முக்கிய இடத்தில் நடத்தப்பட்டதையும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும்.


தி.மு.கழகம் உருவான அடுத்த ஆண்டில், இந்தித்திணிப்பை எதிர்த்து இரயில் நிலையங்களில் இந்திப் பெயர்களை அழிக்கும் போராட்டத்தினை கழகம் அறி வித்தது. கடலூர் புது நகரான திருப்பாப் புலியூர் இரயில் நிலையத்தில் நடந்த இந்திப் பெயர் அழிக்கும் கிளர்ச்சியில் மதியழகன் கலந்து கொண்டு கைதானார்.

இதனை அடுத்து 1953 ஆம் ஆண்டு தி.மு.கழகம் மும்முனைப் போராட்டத்தை அறிவித்த போது அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் முன்னரே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.அப்போது சட்டப்படிப்பு தேர்வு எழுத மதியழகன் பரோலில் சென்ற தால், அண்ணாவும் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்ட பின் தனியாக பல
நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.அவருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்தான் அறிஞர் அண்ணா அவர்கள், “தி.மு.கழகம் கண்ணீரோடு பிறந் தது. ஆகவே சாகிற நேரத்திலே கூட அது நிச்சயம் சிரித்துக் கொண்டு சாகும்.
சாகுமென்றால், தன்னுடைய இலட்சியத்தில் முழுவெற்றி கண்ட பின்புதான் கண்டுமூடும்” என்று தளராத நம்பிக்கையுடன் பிரகடனம் செய்தார்.

தி.மு.கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக வளர்ந்து வந்த மதிய ழகன் அவர்கள் ஆனைமலையில் 9.9.59 அன்று ராஜசுந்திரி அவர்களை அறிஞர் அண்ணா தலைமையில் மணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முதல் நாள் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிஞர் அன்ணா வுடன் கலந்து கொண்டு விட்டு கோவை திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிர வில் காரின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. இரவு முழுவதும் காரிலேயே அண்ணா வுடன் உறங்கிவிட்டு, காலையில் காரை சரி செய்து விட்டு திருமண மண்டபத் திற்கு மணமகன் மதியழகன் வந்த போது, காலை மணி 10.45.அறிஞர் அண்ணா தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட மதியழகன் தாலி
என்பது பெண்ணடிமையின் சின்னம் என்ற பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்.எனவே மண விழாவில் வரவேற்புரை நடக்கும் போதே, தன் தாயாரிடம் இருந்த தாலியை வாங்கி மணமகன் தன் ஜிப்பா பையில் வைத்துக் கொண்டார்.

அண்ணாவிடமும் மணமகளிடமும் சாதுர்யமாகப் பேசி, பரபரப் பான சூழலை “திறமையுடன் சமாளித்த” மதியழகன், தன் அண்ணன் (கே.ஏ.முருகேசனின்)
மகள் ராஜா மணியின் அரைபவுன் மோதிரத் தை வாங்கி மணமகள் விரலில் அணிவித்தார். மணமகள் தன் கையில் இருந்த மோதிரத்தை மணமகன் மதிய ழகனுக்கு அணிவித்தார்.

மணமக்கள் வாழ்க என்று அண்ணா வாழ்த்தக் கேட்டுக் கொள்ள அனைவரும் வாழ்த்தினார்கள். திருமணம் புரட்சித் திருமணமாக அனைவரின் ஒப்புதலுடன் நடந்தேறியது. புது மணமக்கள் விருந்திற்கு சென்ற போது, கரூர் சோமசுந்தரம் - இராஜமாணிக்கம் சகோதரர்களும்,திருமதி சுலோச்சனா சம்பத் அவர்களும், தாலிக்கு பதில் ஒரு டால ராவது அணிந்து கொள்ளலாமே என்று வற்புறுத் தினார்கள்.

இந்நிலையில் 07.12.1959 பிறந்த நாள் அன்று, தன் துணை வியாரை பூக்கடை காவல்நிலையம் அருகில் உள்ள நகைக்கடைக்கு மதியழகன் அழைத்துச்சென் றார். “மதியழ கன் - ராஜசுந்தரி “ என்ற பெயர் பொறிக்கப் பட்ட ஒருபவுன் டால ரை, 5 சவரன் சங்கிலியில் இணைத்து செய்யப்பட்ட பொன் ஆபரணத்தை கடை யிலேயே தன் வாழ்க்கைத் துணைவிக்கு அணிவித்து அவரை மகிழ்ச்சியில்
ஆழ்த்தினார் மதியழகன்.

தி.மு.கழகம் 1962 ஆம் ஆண்டு நடத்திய விலைவாசி எதிர்ப்பு போரில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மறியல் செய்தும், அதன் அடுத்த ஆண்டில் இந்தி எதிர்ப்பு போரில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இந்தி பெயர்ப் பலகையை தார்பூசி அழித்தும் கைது செய்யப்பட்டு சிறையில் மதியழகன் அடைக்கப்பட்டார்.

தி.மு.கழகத்தின் போர்ப்படைத் தளபதியாக சிறை சென்றது மட்டுமல்ல, தி.மு. கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக 1962 முதல் 1967 வரை பொறுப்பேற்ற
காலத்திலும் ஓராண்டிற்கும் மேல் கழகப் போராளியாய் சிறை சென்று சாத னைச் சரிதத்தை நமது மதியழகன் உருவாக்கிக் காட்டினார்.

1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலுக் கான தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையை மதியழகன் அவர்கள்தான் தயா ரித்துத் தந்தார். தேர்தல் காலத்தில் எழுச்சி மிக்க பேச்சாளராகவும், கருத்து வளம் நிறைந்த எழுத்தாளராகவும் பணியாற்றி தி.மு. கழகம் அரியணையில் ஏறிட அரும்பணியாற்றினார். பேச்சில் மணிப் பிரவாள நடையில் கேட்போர் மனம் கவர்ந்தார்.

1967 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா தலைமையில் கழக ஆட்சி மலர்ந்த போது, மதியழகன் உணவு அமைச்சராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்
றினார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நிதித்துறை, வருவாய்த் துறை, திட்டம் அகதிகள் மறு
வாழ்வுத்துறை ஆகிய துறைகளில் அமைச்சராக சிறப்புடன் பணியாற்றினார்.

தன் மீது காங்கிரசு கட்சி களங்கச்சேற்றை வாரி இறைத்து ஊழல் குற்றச் சாட் டை சுமத்தியபோது,அமைச்சர் பதவியிலிருந்து விலகிசிறந்த முன்னுதாரணம் படைத்த மதியழகன் மூன்றாவது முறையாக ஆயிரம்விளக்கு தொகுதி யில் போட்டியிட்டு வாகை சூடினார்.

இந்தமுறை முதல்வரான கருணாநிதி, மதியழகனுக்கு அமைச்சர் பதவிக்கு பதிலாக சட்டப் பேரவைத் தலைவர் பதவியை வழங்கினார். ஆருயிர்ப் புதல் வன் மு.க.முத்துவுக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை வெளியேற் றிட கருணாநிதி சதிவலை விரித்தபோது மதியழகன் கண்டனக்குரல் எழுப்பி னார். இதன் காரணமாக சட்டமன்றத்தில் சபாநாயகர் மதியழகனுக்குப் பக்கத் தில் பெ.சீனிவாசனை போட்டி சபாநாயகராக்கிய கேலிக்கூத்தும்; செருப்பு வீச் சும் சட்டமன்றத்திலேயே நிகழ்த்தப்பட்டது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் பக்கம் மதியழகன் நின்றார்.அவரது‘தென் னகம்’ ஏடு அண்ணா தி.மு.க.வின் போர்வாளாக கடமையாற்றியது.அங்கேயும் மதியழகனுக்கு அவமானம் தொடர்ந்தது. நிலைமையை அறிந்த கருணாநிதி,
மதியழகன் இல்லம் சென்று சந்தித்து மீண்டும் தி.மு.கழகத்தில் இணைத்தார். அதன் பின்னரும் அமைச்சர் பதவி அளிக்காமல் திட்டக்குழுவின் துணைத் தலைவராக்கி மீண்டும் ஓரம் கட்டப்பட்டார் மதியழகன் என்ற அண்ணாவின் ஆருயிர்த் தம்பி.

“தம்பி மதியழகன் துடிப்பும்,துணிவும், தொய்வில்லாத கொள்கைப் பற்றும் கொண்ட இலட்சிய வீரர். அவருடைய இலட்சியம் இயக்கத்திற்கு துணையாக அமைந்தது பற்றி இயக்க வீரர்கள் அனைவரின் வாழ்த்துக்கும், பாராட்டுத லுக் கும் உரித்தாகிவிட்டது” என்ற அண்ணா வின் புகழ் வரிகளை விருதாகப்பெற்ற மகத்தான மாமனிதர்மதியழகன் வாழ்க! வாழ்க! என அவர் பிறந்தநாளில்
(07.12.1926) வாழ்த்தி மகிழ்வோம்.

தொடரும் .....

கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன் மதிமுக  வெளியீட்டுச் செயலாளர்

No comments:

Post a Comment