Monday, July 1, 2013

சீனம் சிவந்தது ஏன்? - 2

இந்திய மண்ணை ஆக்கிரமித்த சீனா

1962 அக்டோபர் 20 இந்தியா மீது சீனா போர் தொடுத்து 50 ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. இந்திய-சீனப்போரின் விளைவாக, எல்லையில் மேற்கே காஷ் மீரின் அக்சாய்சின் பகுதியில் 43,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், கிழக்கே அருணாசலப் பிரதேசத்தில், சீனாவுக்குச் சொந்தமான 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை இந்தியா கைவசப்படுத்திக் கொண்ட தாக சீனா அக்கிரமமான குற்றச்சாட்டை முன்வைத்தது.
ஆக, எல்லைப் பிரச்சினை சீனாவுடன் இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல், போர் முடிந்து ஐம்பது ஆண்டுகளாகியும் தீர்க்கப்படவில்லை. சீனாவுடனான
போரில் இந்தியா, கிழக்கு அரங்கிலும் (Eastern Frontier) (அருணாசலப் பிரதேசம்) மேற்கு அரங்கிலும் (Western Frontier) (அக்சாய்சின்-லடாக்) படுதோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2013 லும் இந்தோ-சீனா எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே போவது இந்தியாவின் புவிசார் நலனுக்கு உகந்ததா? இல்லை.

ஆசியக் கண்டத்திலும், குறிப்பாக இந்துமாக் கடலிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டு உள்ள சீனா, இலங்கைத் தீவிலும் தன் ஆக்டோபஸ்
கரங்களைத் திணித்து, சிங்களவனுக்குத் துணைநிற்பதால், தமிழ் ஈழத்துக்குப்
பேரபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆசியாவின் சக்தியான சீனா, உலக சக்திமிக்க பலவானாக மாறிக் கொண்டு
இருக்கும்போது, இந்தியா மிகவும் நுட்பமாக சீனாவுடனான சிக்கல்களைத்
தீர்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல், இந்தியா அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிவிடும் என்று வரலாறு எச்சரிக்கிறது.

இது குறித்து வரலாற்று ஆய்வாளரான ஏ.ஜி.நூரணி ஒரு ஆங்கில இதழில்,
(Frontline, November 30, 2012, The truth of 1962) கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.

இந்திய-சீன போர் ஏற்பட்டதற்கான மையப்புள்ளியாக அவர் சுட்டிக்காட்டுவது, நீண்ட நெடிய காலமாக வெள்ளையர்கள் காலத்திலிருந்து சீனாவுடன் எல்லைப்பிரச்சினை இருந்தபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர பண்டித நேரு சில முடிவுகளை எடுத்தார். சீனா போரில் குதித்தது. இந்தியா இழப்பைச்
சந்தித்தது என்று வரலாற்று நிகழ்வுகளைப் பட்டியல் இட்டு உள்ளார்.

மக்மகான் எல்லைக்கோடு

ஆங்கிலேயர்கள், 1913 இல் சிம்லாவில் சீனா, திபெத், பிரிட்டன் பங்குபெறும்
ஒரு மாநாட்டை நடத்தினர். இதில், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் வெளி நாட்டுத்துறைச் செயலாளர் சர்.ஹென்றி மக்மகான் (Sir Henry Mcmahon ) கலந்து கொண்டார்.

இம்மாநாட்டில் திபெத்தை இரு பகுதிகளாகப் பிரித்து உட்புற திபெத், வெளிப் புறத் திபெத் என்று உருவாக்க வேண்டும். உட்புற திபெத்தில் சீனாவுக்கு முழு அதிகாரம், அரசுரிமை உண்டு எனவும்; வெளிப்புறத்தில் அரசு உரிமையோ, நிர்வாக உரிமையோ சீனா கோரக்கூடாது எனவும்; இதற்கு ஈடாக திபெத் முழு மை மீதும் சீனாவின் பொதுமேலாண்மை அங்கீகரிக்கப்படும் என்ற திட்டத்தை மக்மகான் முன் வைத்தார்.

1914 ஏப்ரலில்தான் சீன அதிகாரி இவான்சென் என்பவரை,இத்திட்டத்தில் கை யொப்பம் இடச் செய்தார் மக்மகான். ஆனால், சீன அரசாங்கம் இதை உடனடி யாக மறுத்து நிராகரித்தது.

திபெத் பிரச்சினை

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவான காலத்திலிருந்தே திபெத் பிரச்சினை
இருந்து வந்தது. 1846 இல் காஷ்மீரை பிரிட்டன் கைப்பற்றிக்கொண்ட பிறகு,
லடாக்கில் திபெத்துடனான தனது வட எல்லையை சிந்து நதியின் மேற்புறப்
பள்ளத்தாக்கில் நிர்ணயித்துக்கொள்ள பிரிட்டன் முற்பட்டது. இது கடல்
மட்டத்திலிருந்து சுமார் 17,000 அடிக்கு மேலே உயரமான மலைப் பிரதேசம்
ஆகும்.

1847 இல் பிரிட்டிஷ் ஆணையர்கள், பாங்காங் ஏரிக்கு வடக்கிலிருந்து கார கோரம் கணவாய் வரை தங்களது பகுதி என்று முடிவு செய்தனர்.சீனாவோ, திபெத்தோ பிரிட்டனுடன் ஒத்துழைக்கவில்லை.

லடாக்கில் அக்சாய்சின் பகுதி இமயமலையின் உச்சியில் புல்பூண்டு மனித வாடை இல்லாத பூமியாகும்.ஆங்கிலத்தில் இதனை (Barren land) பொட்டல் என்று அழைப்பார்கள். இந்த ‘அக்சாய்சின்’ தான் சீனா-இந்தியாவிற்கு இடை யேயான எல்லைத் தகராறுக்கு உட்பட்ட பிரதேசமாகும். பண்டைக்காலத்தில் சீனாவின் ‘சின்கியாங்கி’ பகுதியிலிருந்து திபெத்திற்கு வாணிபர்கள் மலை எருமை மாடுகள் (Yaks) மீது பாரம் ஏற்றி பண்டங்களை அனுப்பி வைக்கும் பாதையாக அக்சாய்சின் இருந்திருக்கின்றது. இதற்கு ‘காரவான் பாதை’ என்று பெயர்.

பிரிட்டிஷ் இந்தியாவின் மேலாதிக்கத்தின் கீழ் காஷ்மீர் மன்னர், காஷ்மீரை ஆட்சி செய்தபோது, 1865 இல் பிரிட்டிஷ் நில அளவையர் (Surveyar) டபுள்யு.எச். ஜான்சன் என்பாரை அழைத்து எல்லையை வரையறுத்தார்.

பிரிட்டிஷ் நில அளவையர் ஜான்சன் அக்சாய்சின் மலைப்பிரதேசத்தை காஷ் மீரின் பகுதியாக்கிக் கோடிட்டு வரையறுத்தார். இதை ஜான்சன் கோடு என்று அழைத்தனர். ஆனால், சீனா இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அக்சாய்சின்

1892 ல் சீனா தனது எல்லை அடையாளங்களை காரகோரம் கணவாயிலிருந்து சிங்கியாங்கிற்கும் லடாக்கிற்கும் தொடர்புகொள்ளும் ‘காரவான்’ பாதையில் அமைத்துக் கொண்டது. இந்த எல்லை, ‘மக்கார்ட்னி- மக்டனால்ட் கோடு’ என்று - மக்டனால்ட் கோடு’ கூறப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவின் வரைபடத்தில் ஜான்சன் கோடே அதாவது, அக்சாய் சின் இந்தியாவின் பகுதியாகக் குறிப்பிடப் பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைக் கோட்டை அசாமின் இமாலய உச்சிவரை
கோடு போட்டு காட்டினார் மக்மகான்.இதுதான், ‘மக்மகான் எல்லைக்கோடு’
(Mcmahon Line) என்று அழைக்கப் படுகிறது.

இந்த எல்லைக்கோடுதான் இந்தியாவின் கிழக்கு எல்லையில், அருணாச்சலப்
பிரதேசம் வரை பிரிட்டிஷ் இந்தியா வரையறுத்தது.இதன் அடிப்படையில் தான் இந்தியாவின் வரைபடங்களை ஆங்கிலேயர்கள் வெளியிட்டனர்.

சீனா ஏற்க மறுப்பு

பிரிட்டன் வரைந்த எல்லைக்கோட்டை ஏற்க முடியாது என்று சீனா மறுத்து
விட்டது. 1919 இல் மீண்டும் பிரிட்டன் சீனாவை பேச்சுவார்த்தைக்கு வருமாறு
அழைத்தது. ஆனால், சீனா மறுத்து விட்டது.

1947 ஆகஸ்டு 15 இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது. இந்தியாவை விட்டு வெளியேறிய ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தின் எல்லைப் பிரச்சி னைகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் சுதந்திர இந்தியாவின் அரசிடம் ஒப்படைத்து விட்டனர்.

1949 தொடக்கத்தில் சீனாவின் தேசியவாத அரசின் சார்பில்,பிரதிநிதிகள் டெல் லி வந்து பிரதமர் நேருவைச் சந்தித்து, மீண்டும் 1914 சிம்லா மாநாட்டு ஆவ ணங்களை நிராகரிப்பதாகக் கூறினர்.

பிரிட்டன் தயாரித்துக் கொடுத்த இந்திய வரைபடத்தை, இந்தியாவின் சட்டப் பூர்வ எல்லையாக பண்டித ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் படேலும் கருதினர்.

நேருவின் பிரகடனம்

நாடாளுமன்றத்தில் 1950 நவம்பர் 20 ஆம் தேதி பிரதமர் நேரு, சீன-இந்திய எல்லை குறித்த அறிக்கையை வெளியிட்டார். அதில், 

“The McMahon Line is our boundary map or no map. We will not allow anybody to come across that
boundary” -Frontline, November 30, 2012

“மக்மகான் கோடுதான் இந்தியாவின் எல்லைக்கோடுதான் இந்தியாவின் எல் லைக்கோடு, இந்தியாவின் எல்லை இதை எவரும் மீறுவதை நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு வெளியிட்ட பிரகடனத்தை அப்போது சீன அரசு பொருட்படுத்தவில்லை.

இருப்பினும் 1951 செப்டம்பரில் சீனப் பிரதமர் சூ என் லாய் இந்தியத் தூதரிடம்
மக்மகான் எல்லைக்கோடு பற்றிய நேருவின் அறிவிப்பிற்கு எவ்வித ஆட்சே பனையும் எழுப்பாமல், இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் கூடி, பேச்சு வார்த்தை நடத்தி, திபெத் தெற்கு எல்லை பற்றி உடன்பாடு காண வேண்டும் என்று மட்டும் தெரிவித்தார்.

1952 இல் இந்தியத் தூதராக கே.எம்.பணிக்கர் சீனாவில் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவருக்கு 1952 ஜனவரி 25 இல் பிரதமர் நேரு அனுப்பிய குறிப்பில், எல்லை உள்ளிட்ட இந்திய நலன்கள் பற்றி சீனப் பிரதமர் சூ என் லாய் கவனத் திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பணித்திருந்தார்.

ஆனால், கே.எம்.பணிக்கர், சூ என் லாயிடம் எல்லை குறித்து குறிப்பிடவில் லை. இது பற்றி அறிந்த பிரதமர் நேரு, 1952, ஜூன் 6 இல் பணிக்கருக்கு எழுதிய கடிதத்தில், “உங்களுடன் திபெத் பற்றி பேசும்பொழுது சூ என் லாய் நமது எல்லை பற்றி குறிப்பிடாதது விந்தையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

சீனாவின் இந்தியத் தூதர் கே.எம்.பணிக்கர், “எல்லைப் பிரச்சினையை நாமாக வே சீன அரசிடம் எழுப்பக் கூடாது. அது முடிந்த முடிவாக மக்மகான் கோட்டை ஏற்றுக் கொண்டதாகவே இருக்க வேண்டும்” என்று நேருவுக்கு ஆலோசனை கூறினார். அதை ஏற்றுக் கொண்ட நேரு, இந்திய வெளியுறவுச் செயலாள ருக்கு அனுப்பிய குறிப்பில், ‘பணிக்கரின் ஆலோசனையைப் பின்பற்றுவோம்’ என்று தெரிவித்து இருந்தார்.

வெளியுறவுச் செயலாளருக்கு 1953 டிசம்பர் 3 இல் பிரதமர் நேரு அனுப்பிய
குறிப்பில், “எல்லை பற்றி உமது அணுகுமுறையுடன் நான் உடன்படுகிறேன். இப்பிரச்சினையை நாம் எழுப்பக் கூடாது. சீனா எழுப்பினால், நமது ஆச்சரியத் தைத் தெரிவித்து, இது முடிவாகிவிட்ட விஷயம்” என்று பணித்தார்.

மாற்றப்பட்ட வரைபடம்

இந்தியா மக்மகான் எல்லைக்கோட்டை பிரிட்டிஷ் இந்தியா வரைந்ததை அப்ப டியே ஏற்றுக்கொண்டிருந்த வேளையில், சீனா அதை மறுத்து வந்தது.

1954 இல் பிரதமர் நேரு சீனப் பயணம் மேற்கொண்டார்.அப்போது,சீனப் பிரதமர் சூ என் லாயிடம் சீன வரைபடங்கள் குறித்து நேரு கேட்டபோது, அவர் இந்த படங்கள் பழையவை என்றும், இந்த பிரச்சினையை நட்பு ரீதியில் பின்னர் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், செயல் ரீதியில்
சீனா, இந்தியாவுக்கு உரிய எல்லைகளை அப்படியே ஒப்புக்கொண்டதில்லை.
இதைப் பிரதமர் நேரு 1956 மே 6 இல் மத்திய அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேன னுக்கு எழுதிய விரிவான கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பிரதமர் நேருவின் சீனப் பயணத்தின் போதுதான், 1954 ஏப்ரல் 29 இல், சரித்திரம் பேசுகின்ற பஞ்ச சீல உடன்பாடு ஏற்பட்டது.

இதனிடையில், சீனப் பிரதமர் சூ என் லாய், புதுடெல்லிக்கு வருகை தந்து, 1954 ஜூன் 25 முதல் 28 வரை நேருவுடன் ஐந்து சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், இருவருமே எல்லைப் பிரச்சினையை எழுப்பவில்லை.

சீனா அமைத்த நெடுஞ்சாலை

இந்தியாவின் பகுதியான அக்சாய் சின்னில், சீனா 1952 இல் அக்சாய் சின்னில், சிங்கியாங் பிரதேசத்தையும் திபெத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையை அமைத்து வந்தது.இந்தச் சாலை உலகிலேயே மிக உயரமான மலைப்பகுதி யில் 13,000 அடி உயரத்தில் மிகக் குளிர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. சீனா வின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கு, இதுவே முதல் கட்ட வேலை ஆகும்.

இந்தச் சாலை மூலமாக, அக்சாய்சின் சீனாவிற்கு தொடர்புகொள்வது மிக எளி தாகவும், இந்திய காரகோரம் கணவாய் மலைத் தொடர்களைக் கடந்து அக்சாய் சின் செல்வது கடினமான ஒன்றாகவும் இருந்தது.

சீனா 1952 இல் அமைக்கத் தொடங்கிய சாலையின் நீளம் 1,200 கிலோ மீட்டர்.
1957 இல் இதைத் தெரிந்துகொண்ட இந்தியா 1958 அக்டோபரில் தனது ஆட்சேப னையையும், கண்டனத்தையும் தெரிவித்தது.

சூ என் லாய்க்கு நேரு கடிதம்

1958 டிசம்பரில் பிரதமர் நேரு, சீனப் பிரதமர் சூ என் லாய்க்கு நட்பு ரீதியாக ஒரு கடிதம் எழுதினார். அதில், “1956 இல் சூ என் லாய் டெல்லி வந்திருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைத் தகராறு கிடையாது என்றே புரிந்து கொள்ளப்பட்டது” என்பதை நேரு சுட்டிக் காட்டியிருந்தார். இதற்கு பதில் எழுதி ய சூ என் லாய், “சீன-இந்திய எல்லை, சம்பிரதாய வழக்கப்படி ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை என்றும், வரலாற்று ரீதியாக எந்த உடன்பாடோ அல்லது ஒப்பந்தமோ சீன-இந்திய அரசுகளுக்கு இடையில் எக்காலத்திலும் முடிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய-சீன முழு எல்லை (அதாவது மேற்கில் அக்சாய்சின், கிழக்கில் மக் மகான் கோடு) பற்றி மிகத் தெளிவாகத் தீர்மானமாக பிரதமர் நேரு பிரகடனம் செய்திருந்தார். ஆனால், சூ யென் லாய் அக்சாய்சின் பற்றி, “எப்பொழுதுமே சீனாவின் அதிகார வரம்பிற்குள் (Jurisdiction) இருந்து வந்துள்ளது” என்று தீர்மான மாகக் கூறினார். ஆனால், மக்மகான் எல்லைக்கோடு குறித்து சூ என் லாய்
எந்தக் கருத்தையும் கூறவில்லை.

சூ என் லாய் பிரதமர் நேருவுக்கு அக்சாய்சின் சீனாவின் பகுதி என்று கடிதம் எழுதிய உடனே, சீன இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது.

இந்திய மண்ணில், சீனப் படைகளைக் கொண்டு வந்து குவித்து ஆக்கிர மித்த தால், அக்சாய்சின்னை விட்டு சீனாவின் துருப்புகள் வெளியேறிவிட வேண் டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு இது முன் நிபந்தனை என்றும் நேரு உறுதி படக் கூறிவிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கீழ்க்காணும் முடிவுகளில் உறுதியாக நின்று விட்டது.

1. மேற்கே அக்சாய்சின், கிழக்கே நீண்ட நெடிய மக்மகான் கோடு ஆகியவை
களில் சீனாவுடனான இந்திய எல்லைகள் வரையறுக்கப்பட்டு விட்டன.

2. தங்களது எல்லைகளுக்குள் தங்களது நிர்வாக இராணுவ நிலையங்களை
இந்தியா அமைத்துக்கொள்ளும்.

3. இதை ஏற்றுக்கொண்டால், எல்லைப் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா இணங்கும்.

4. தனது எல்லைகள் எவை என்று இந்தியா தீர்மானித்துள்ளவை பற்றி எவ்வித பேச்சுவார்த்தைகளும் உட்படுத்தாது.

அக்சாய்சின் பிராந்தியத்தில் இந்தியா 1954 இல் ‘ஜான்சன் கோடு’ அடிப்படை யில் எல்லை வரை படங்களை வெளியிட்டது. இதில், அக்சாய்சின் முழுமை யும் இந்தியாவைச் சார்ந்த நிலப்பரப்பு எனக் காட்டப்பட்டது.இந்திய-சீன எல்லை யில் போர் மூண்டது.

தொடரும்......

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


நன்றிகள் 



கட்டுரையாளர் :- ஈழ வாளேந்தி

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment