Sunday, July 14, 2013

கட்டாய இலவச கல்வி சட்டம் ?

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்று #மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியருக்கு 12.07.13 அன்று  எழுதிய கடித விவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி 33 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக மெட்ரிக் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4135 இடங்களில் 2163 இடங்கள் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

மாணவர் சேர்க்கை எவ்விதத்தில் நடந்தது என்பதை ஆய்வு செய்யாமலும் விண்ணப்பங்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யாமலும் பள்ளிகள் அளித்த கணக்கை கல்வித்துறை அப்படியை ஏற்றுள்ளது வியப்பை அளிக்கிறது.

இச்சட்டப்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று அரசு ஆணையில் கூறப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் அதற்கு முன்பே மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.

அதன்பின் பல பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்வில்லை. சி.பிஎஸ். இ. பள்ளிகளுக்கு தகவல்களை கல்வித் துறை தெரிவிக்கவில்லை.

தமிழக அரசாணைப்படி மே 14-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்
யும் மாணவர்கள் குறித்த விவரங்கள் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். இதை எந்தப் பள்ளியும் செய்ததாகத் தெரியவில்லை. கல்வித்துறையும் இதை ஆய்வு செய்யவில்லை. மே 20-ஆம் தேதிக்குள் பள்ளிகள் முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் தேர்வானவர்கள் பட்டியலை சமர்ப்பித்திருக்க வேண்டும். இதையும் செய்யவில்லை.

அதன்பின் ஜூன் 20-ஆம் தேதி வரை இச்சட்டப்படி மாணவர்களைச் சேர்க்க கால நீட்டிப்புச் செய்தனர். அப்போது எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர், இன்னும் எத்தனை இடங்கள் மீதியுள்ளன என்பதையும் பள்ளிக் கல்வித்துறை பெற்றோர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

பள்ளிகளில் விண்ணப்பம் தரும்போது பதிவுக்கான அத்தாட்சி தர வேண்டும். ஆனால் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்குக் கூட அத்தாட்சி தரவில்லை.

அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டப்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை.

கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கைக்காக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எத்தனை மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள் என்பதை கோவை முதன்மைக் கல்வி அலுவலகம் வெளியிட வேண்டும்.

மாணவர் சேர்க்கை முறையாக நடந்ததா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான ஏழை மாணவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்றுத் தர வேண்டும்.

No comments:

Post a Comment