Wednesday, July 3, 2013

தமிழ்வழிக் கல்வி

தமிழ்நாட்டில் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாகவும் தமிழ் இருந்து
வந்ததை ரத்து செய்து ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தேர்வுமுறையாக வும் மாற்றப்படும் என்று கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவுடன்
தலைவர் வைகோ உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்து தமிழக
அரசின் முடிவை மாற்றிக்கொள்ள கண்டன அறிக்கைகள் விடப்பட்டு போராட் டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

தோழர் மணியரசன் ஏற்பாட்டில்,28.5.2013 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை தலைமையகத்தை தடையை மீறி முற்றுகைப் போராட் டம் கைது, பின்னர் கண.குறிஞ்சி ஏற்பாட்டில் 1.6.2013 அன்று சென்னை லயோ லா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கம், 5.6.2013 அன்று சென்னை
திருவல்லிக்கேணி தொழிலாளர் நல அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக்
கூட்டம், அதனைத் தொடர்ந்து 17.6.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்ற போதிலும், அரசியல் கட்சிகளில் இப்போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரே கட்சி மதிமுக மட்டுமே.


தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா

தமிழ்நாட்டை ஆளும் தகுதியைப் பெற்று இருக்கும் அண்ணா திராவிட முன் னேற்றக்கழகம், அறிஞர் அண்ணா அவர்களின் உயிர் மூச்சு கொள்கையின்
அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் நடந்து கொள்கிறது என்றால் அது
மிகையன்று. 1967 களில் ஆதிக்க இந்தியை வீழ்த்தி இந்தியைத் திணித்த காங் கிரஸ் அரசுக்கு இனி தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று மக்கள் ஒதுக்கி,
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு தமிழ்நாட்டை ஆளும் பொறுப்பை தேர்த லின் மூலமாக வழங்கினார்கள்.

அண்ணா முதலமைச்சரான பின்பு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி அமைத்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இம் மாநிலத் தின் ஆட்சி மொழியாக இனி தமிழ் மட்டுமே இருக்கும். பள்ளி, கல்லூரிகளின் பயிற்று மொழியாக தமிழ் பிறமொழி தொடர்புக்கு ஆங்கிலமும் ஏனைய மொழி சிறுபான்மையினரின் தாய்மொழி அவர்களின் விருப்பப் பாடமாகத் திகழும் என்று ஆட்சிமொழி சட்டத்தைக் கொண்டு வந்து தமிழுக்கு மகுடம் சூட்டினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தினார்.அந்த அண்ணா வின் லட்சியம் அவர் பெயரால் கட்சியும் ஆட்சியும் நடத்துபவர்களிடம் இல் லாமல் போகும் என்றால் அண்ணாவின் லட்சியத்தை வென்றெடுக்கும்கடமை நமக்கு உண்டு.

கடந்த 2012-13 கல்வியாண்டில் மாவட்டத்திற்கு 10 பள்ளிக் கூடங்கள் வீதம் 320 பள்ளிகளில் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கினார்கள். இதனால் 22,000 மாணவர்கள் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறியுள்ளார்கள். 2013-14
கல்வியாண்டில் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3200 பள்ளிகளில் ஆங் கில வழிப்பாடத்தைத் தொடங்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்தே சட்டப்பேரவையில் துறையின் அமைச்சர், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படும் என்று அறி வித்துள்ளார். தமிழக அரசு ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கு வதனால் தனியார் பள்ளிகளை கட்டுப் படுத்த முடியாது, அவர்களுடன் போட்டி போட முடியாது.

பேராசிரியர் க.முத்துக்குமரன் தலைமையில் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக் குழு அளித்த பரிந்துரைகள், பொதுப்பள்ளி, அருகாமைப்பள்ளி,கட்டாயக்கல்வி, சனநாயகக்கல்வி, சமூகக்கல்வி, இலவசக்கல்வி போன்றவையும் தற்போது இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை, தேவையான, திற மையான ஆசிரியர்கள் இல்லை, ஆய்வுக்கூடங்கள் இல்லை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லை, பேருந்து வசதி இல்லை, விளையாட்டுத்திடல் இல்லை என்று இல்லை, இல்லை என்று சொல்லும் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர் களை பெற்றோர்கள் அனுப்புவது இல்லை.தனியார் பள்ளிகளில் இதை போது மான வரை நிறைவேற்றுகிறார்கள். எனவே பெற்றோர்கள் அரசுப் பள்ளி களைத் தவிர்த்து தனியார் ஆங்கில வழிக் கல்விக்கு அனுப்பி வைக்கிறார்கள்
என்பதை ஆராயாமல் இருப்பது அரசின் தவறு, பெற்றோர்களின் தவறு அன்று.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பில் முன் னுரிமை வழங்க வேண்டும், அதை சட்டமாக்க வேண்டும். மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த கூலிக்கு ஆட்களை தயாரித்துக் கொடுத்து தரகு பட்டறை வேலையை அரசு செய்யக்கூடாது. ஆங்கில மொழி பேசும் நாடுக ளில் வேலை இல்லாமல் போராடுவதும், வேலை வாய்ப்பில்லாதவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிலைமை மேலை நாடுகளில் உள்ளது. எனவே தமிழக மாணவர்கள் தமிழையும் படிக்காமல் ஆங்கிலத்தையும் முழு மையாகத் தெரிந்து கொள்ளாமல் இரண்டும் கெட்ட நிலை.

நாடு விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் கழிந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மேல்நிலைப்பள்ளி வரை தரமான இலவசக் கல்வியையும்,மருத்துவத்தையும் அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை காணல் நீராகவே உள்ளது.

1978 ஆம் ஆண்டு 34 ஆங்கிலவழி மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே இருந்தது. 35 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று ஏறக்குறைய 3474 மெட்ரிக் பள்ளிகள்
இயங்குகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதே
இல்லை. மாறாக, மாணவர்கள் மறந்தும் தங்கள் தாய்மொழியில் பேசிவிடக்
கூடாது. பேசினால் தண்டனை, தொடர்ந்து பேசினால் பள்ளியைவிட்டு வெளி யேற்றுவது என்கின்ற நிலைமை.

இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத தமிழறிஞர்கள் தமிழ்நாட்டில் தமி ழில் கற்பிக்க வலியுறுத்தி 101 தமிழறிஞர்கள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 தொடங்கி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்கள். இதன் விளைவு அன்றைய கலைஞர் தலைமையிலான திமுக அரசு நீதியரசர் மோகன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து தாய்வழிக் கல்விக் கூறுகளை ஆராய பணித்தது. அக்குழு 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியில் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தைக் கூறி இதை சட்ட மாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

ஆனால், அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டம் கொண்டு வரு வதற்கு பதிலாக அரசாணையை 13.1.1999 ஆம் ஆண்டு தைத்திங்கள் பரிசாக தமிழுக்கு இதை அறிவிக்கிறேன் என்றதன் விளைவு அதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழக அரசின் ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

தேசப்பிதா காந்தி

தேசப்பிதா காந்தி அவர்கள் நமது தாய்மொழியின் வளர்ச்சிக்கு அந்நியக் கல்வி முறை பெரும் தடையாகும்.உடனடியாகப் பரிகாரம் தேட வேண்டிய மிகப் பெரிய தீமை அந்நிய மொழியில் கல்வி கற்பிப்பதாகும். எனக்கு மட்டும் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரங்கள் அளிக்கப்படுமானால் அந்நிய மொழி கல்வி பயில தடை விதித்து பயிற்று விக்கும் ஆசிரியர்களையும் பேராசிரியர் களை யும் தாய்மொழி கல்விக்கு உடனடியாக மாறச் செய்வேன். இந்தக்கல்வி முறை தொடர்ந்து நீடிக்குமே யானால் தேசத்தின் ஆன்மாவை அவை அழித்துவிடும். அந்நிய மொழிக்கல்வி குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். சொந்தமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்.

எனவே அந்நியக்கல்வி முறை என்ற மாயையிலிருந்து தேசம் எவ்வளவு விரைவில் விடுதலை பெறுகிறதோ அவ்வளவிற்கு நாட்டுக்கும் மக்களுக்கும்
நல்லது என்றார்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக பயிலுவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்
ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தால் எதிர்காலத்தில் தமிழன் என்ற இனம் அவர்களின் தாயக பூமியில் வாழ்கிறார்கள் எனினும் அவர் களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது என்ற நிலை உரு வாகிவிடும்.உலகத்தில் முன்னேறிய நாடுகளான பிரான்ஸ்,ஜெர்மனி, ஜப் பான், சீனா போன்ற நாடுகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு பாட மாக மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர்.

தமிழின் சிறப்பு

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி யாகும். உலக மொழிகளில் வழக்கில் உள்ள பழமையான மொழி தமிழ்மொழி.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை உலகத்தில் ஏறக்குறைய
6,000 மொழிகள் இருந்ததாகவும் அதில் 3,000 மொழிகள் வழக்கொழிந்து அழிந்து விட்டதாக நம்பப்படுகிறது.இதற்கு காரணம் பிற மொழிகளின் படையெடுப் பால் பிற மொழிகளின் திணிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்டது. மீதமுள்ள 3,000 மொழிகளிலும் பெரும்பான்மை மொழி சிலநூறு ஆண்டுகளில் அழிந்துவிடும் என்று ஆரூடம் கணிக்கப்படுவதில் தமிழும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இது கனவோ கற்பனையோ அல்ல. தமிழ் இன்று வரை பயிற்று மொழியாக இருக்கும் போதே நாம் வாழும் காலத்தில் தமிழ் படிக்கத்
தெரியாத, எழுதத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகி இருப்பதை நாம்
எண்ணிப்பார்க்க வேண்டும். பேசும் மொழியும் கலப்பின தமிழ் மொழியாகத்
தான் உச்சரிக்கப்படுவதை உணரலாம்.

உலகத்தில் 6 ஆயிரம் மொழிகள் இருந்தாலும் மொழி வளத்தால் இலக்கண இலக்கியத்தால் பிற மொழிகளின் தாயாக விளங்குவதுடன் அல்லாமல் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான வேர்சொற்கள் இருக்கின்ற 6 மொழிகளை மொழி அறிஞர்கள் தேர்வு செய்து அவற்றை செம்மொழியாக அறிவித்தார்கள். அவை கிரேக்கம், லத்தின், ஈப்ரோ, சீனம்,சமஸ்கிருதம், தமிழ். இவ்வளவு
தொன்மையான மொழி தமிழ். தமிழ் ஆட்சிமொழியாக தமிழ்நாடு, இலங்கை,
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விளங்கி வருகிறது.

தமிழ் மொழியின் மொத்த எழுத்துகள் 247

உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
உயிர்மெய் எழுத்துகள் 216
ஆயுத எழுத்து 1

ஒரு லட்சம் சொற்கள் தமிழ் அகராதியில் உள்ளது. நவீன விஞ்ஞான கண்டு பிடிப்பான கம்ப்யூட்டர், மின்சாரம், பேன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை. ஆனால் அதற்கு கணினி, மின்சாரம், மின்விசிறி என்ற சொல் நம்
தமிழ் அகராதியில் உள்ளது.

கோள்களைப்பற்றி ஆறாயும் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது என்று இப்போது அறிவிக்கிறார்கள்.ஆனால் நமது மூதாதையர்கள் சிவந்த கிரகத்தை பார்த்து சிவந்த வாய் போன்று இருந்ததனால் செவ்வாய் என் றனர்.வெள்ளி கிரகம் வெண்ணிறத்தில் ஒளிவீசியதைப் பார்த்து வெண்ணிற
பளபளக்கும் உலோகம் போல் உள்ளதால் அதற்கு வெள்ளி என்றனர்.

தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்.முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு , சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, திரு முருகாற்றுப்படை என பத்துப்பாட்டும்,

ஐங்குறுநூறு, குறுந்தொகை,நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப் பத்து, கலித்தொகை, பரிபாடல் என எட்டுத் தொகையும்,

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,மணிமேகலை, குண்டலகேசி,வளையாபதி என ஐம்பெருங் காப்பியங்களும்,

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்பால்,பெண்பால் புலவர்களால் தமிழுக்கு தந்த
அரும்கொடை.

பக்தி இலக்கியங்களான, நாலாயிர திவ்விய பிரபந்தத்தை அருளிய பன்னிரு ஆழ்வார்களும், தேவாரம், திருவாசகம், அருளிய நாயன்மார்களும், பெரிய புராணம் தந்த சேக்கிழாரும், ராமாயணம் தந்த கம்பரும், மகாபாரதம் எழுதிய வில்லிபுத்தூராரும், தமிழ் அன்னைக்கு அணி சூட்டினர்.

ஜெர்மானிய கிருத்தவ மத போதகர் மார்டின்லூதர் அவர்கள் அவரவர் தாய் மொழியில் தான் தங்களின் ஆண்டவனை ஆராதிக்க வேண்டும் என்று போரா டியதன் விளைவு இந்துக் களின் கீதையும், கிருத்தவர்களின் வேத நூலான பைபிலும், இஸ்லாமியர்களின் திருமறையான குர்ஆனும் தமிழில் பதிவிறக் கப்பட்டுள்ளது என்றால் தமிழில் முடியாதது எதுவும் இல்லை.

இவ்வளவு சிறப்புகள் தமிழுக்கு இருந்தும், இங்கிலாந்தின் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தேர்வு மொழியாகவும் தமிழகத்தில் அறிவித்து உள்ளதை ஏற்க முடியாது.இங்கிலாந்திற்கு அடிமைப்பட்ட காலனி நாடுகளில் தான் இந்த அடிமை எண்ணம். உலக மக்கள் தொகையில் அதிக மக்கள் பேசும் 20 மொழி களில், சீனம், இரண்டாவது ஸ்பெயின், மூன்றாவது ஆங்கிலம், இந்த வரிசை யில் தமிழும் இடம் பெற்றுள்ளது.

ஆக அந்த செம்மொழி தமிழை தமிழர்கள் வாழுகின்ற உலக நாடுகளில் பயிற்று மொழியாகக் கொண்டு வாருங்கள். இந்தியாவின் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக தமிழைக் கொண்டு வாருங்கள் என்று போராட வேண்டிய தமிழி னம் தமிழாழ்ந்த தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அதற்காக போராடுவது வெட்கக் கேடான ஒன்று.தொல்காப்பியர், திரு வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள்,ஒளவையார்,பாரதி,பாரதிதாசன் வாழ்ந்த பூமியில் இந்த இழி நிலை.

தமிழர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று இரண்டாகப் பகுத்தார்கள். அகம்
என்பது காதலில் தொடங்கி திருமணத்தில் தொடரும். குடும்பம், வாழ்வியல், உழவு, விவசாயம் என்று தன் இல்வாழ்க்கை சார்ந்து ஏர் முனையைபோதிப்பது.

புறம் என்பது குடும்பத்திற்கு வெளியே மற்றவரிடம் பெருமையாக எடுத்துக்
கூறத்தக்க கல்வி, கொடை, அரசியல், புகழ், வீரம் உள்ளடக்கிய புற வாழ்க்கை
கூறுகளை கொண்ட போர் முனையை விவரிப்பது. அகத்திலிருந்து பண்பாடும்
புறத்திலிருந்து நாகரிகமும், அகத்திலிருந்து காதலும், புறத்திலிருந்து வீரமும், காதலும் வீரமும் தமிழர்களின் இருகண்கள். பண்பாடும் நாகரிகமும் தமிழர் களின் அடையாளம் போல் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இன்று சாதியும் மதமும் வாழ்க்கை கூறுகளாக மாறியதன் விளைவு தன்னை தான் ஆளமறந்து அடிமைப்பட்டது. பின் ஒரு தமிழன் மற்றொரு தமிழனை அடிமைப் படுத்தி எனக்கு கீழே நீ என்று ஆள நினைக்கும்; ஆண்டை சமூகம்.

தமிழர்களின் குணநலன் பண்பு நலன் அறிந்த தேசப்பிதா காந்தி அவர்கள் தென் ஆப்பிரிக்கா போர் முனையில் ஏனைய இந்திய மாநில மக்கள் சக்திகள் சரிந்து விட்ட நிலையில் தமிழர்கள் மட்டுமே போராட்டம் சிறை என்று இல்லாவிட் டால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாக கருதினார்கள். எனவே நான் இப் பொழுது தமிழர்களின் தோள் மேல் சுமக்கப்படுகிறேன்,அவர்கள் காட்டிய வீரம் துணிவு உன்னதமானது.நான் இப்பொழுதெல்லாம் என்னை அவர்களில் ஒரு வனாக தமிழனாகக் கருதுகிறேன்.ஆகவே தமிழைப் பயின்று வருகிறேன் நான் மட்டுமல்ல வருங்கால இந்தியா ஒரே தேசிய இனமாக இருக்க வேண்டுமா னால், சென்னை மாகாணத்திற்கு வெளியே இருப்போர் தமிழ் கற்க வேண்டும். இந்திய சமுதாயத்தில் தமிழர்களை தனிமைப் படுத்தி பாராட்டியே ஆக வேண் டும் என்று 1909 களில் கடிதம் எழுதுகிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  அவர்கள் நாட்டின் விடுதலைக்கு இந்திய தேசிய
இராணுவத்தை கட்டி எழுப்பியபோது தமிழர்களின் தன்னலம் இல்லாத பங் களிப்பு அவர் உரையாற்றுகின்ற போது எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமேயானால் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்று சொன்னார்.

எனவே இந்த உணர்வின் அடிப்படையில் இளம் தமிழர்கள் மொழி உணர்வு கொண்டவர்களாக உருவாவது தமிழ்மொழிக்கு நல்லது.

உலக மொழிகளைப் பகுத்துப் பார்க்கின்ற போது

வணிகத்தின் மொழி - ஆங்கிலம்
தூதின் மொழி - பிரஞ்சு
தத்துவத்தின் மொழி - ஜெர்மனி
காதலின் மொழி - இத்தாலி
ஆன்மிக பக்தி மொழி - ஈப்ரு, அரபிக்,சமஸ்கிருதம்

இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற மொழி தமிழ் என்பது நமது சிறப்பு.

இயல் இசை நாடகமாக தமிழ் திகழ்கிறது.இயற்றமிழ் படிப்பது, இசைத்தமிழ்
கேட்பது, நாடகத்தமிழ் பார்ப்பது.

தமிழின் மூன்று இலக்கணம்

வல்லினம் - க,ச,ட,த,ப,ற
மெல்லினம் - ங,ஞ,ண,ந,ம,ன
இடையினம் - ய,ர,ல,வ,ழ,ள

இந்திய மொழிகளில் தமிழ் தவிர மற்றவை சமஸ்கிருதத்தின் உதவியின்றி
வழங்க முடியாத நிலையில் தமிழ் மட்டுமே தனித்தியங்கும் பேராற்றலைக்
கொண்டது. எந்த மொழியிலிருந்தும் கடன் வாங்கப்படாத வேர் சொற்க்கள்
வளமுடைய உயிர் துடிப்புடைய இலக்கியத்தை கொண்டது தமிழ் இந்திய
இலக்கியங்களில் முதன் முதலில் ஏட்டில் பதிவான இலக்கியம் சங்க இலக்கி யம்.

உலக வரலாற்றில் மண்ணுக்காக, பொன்னுக்காக, பெண்ணுக்காக ஏங்கி ஏமாந்து தீக்குளித்து உயிர் இழந்ததைப் படித்திருக்கின்றோம்.

ஆனால் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த பெருமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. ஆதிக்க இந்தி மொழிப்போர் களத்தில் கீழப்பாவூர் சின்னசாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலை பொழுதில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!! இந்தி ஒழிக என்று உயிர் தியாகம் செய்ததும்.

2009 இல் தமிழீழ விடுதலைப் போர்க்களத்தில் தீக்குளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் நீதியரசரின் மரண வாக்குமூலத்தில் எந்த சாதி பிரிவை சார்ந்தவன் என்று கேட்ட போது தமிழ்சாதி என்று மரண வாக்குமூலம் தந்த முத்துக்குமாரின் உன்னதத் தியாகமும், வளரும் தலைமுறையினர் நெஞ் சில் பதிக்கப்பட வேண்டும்.

ஆதிக்க இந்தி மொழிப் போர்களத்தில் தளபதியாக வலம் வந்து இந்திய நாடா ளுமன்றத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாயின் இந்தி வெறியை சுட்டிக்காட்டி
கடைசி தமிழனின் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரையில் இந்தித்
திணிப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று இந்திய அரசின் இந்தி
கடிதத்தை கிழித்து பிரதமரின் முகத்தில் வீசிய ஆளுமையும், ஆண்மையும்
கொண்ட தலைவர் தமிழினக் காவலர் வைகோ மட்டுமே

பத்துப்பாட்டிற்கு திருமுருகாற்றுப் படையை தந்து அணி சேர்த்த நெற்றிக்
கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என்ற சங்கப் புலவன் நக்கீரன் உலவிய
மண்ணில் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த மதுரையில் தமிழன்னைக்கு நூறு கோடி ரூபாயில் மதுரையில் சிலையெழுப்பும் தமிழக அரசு இனி உயர்தனி செம்மொழியான தமிழை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். ஆகாயத்தில் கோட்டை கட்டலாம், அதற்கு அஸ்திவாரத்தை அழுத்தமாக நிலத்தில் பதிய வேண்டும் என்பது நமது மூதுரை.

தாய்த் தமிழகம் தான் ஆற்ற வேண்டிய கடமையை மறந்து சாதி உணர்வால்
பிளவுபட்டு மோதிக்கொண்ட காரணத்தால் தமிழீழ உரிமைப் போராட்டம் பின் னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

சாதி மத பேதங்களுக்கு இரையாகிப் போன தேசிய இனங்கள் இந்திய நாட்டி லேயே இருப்பதை மறந்து விடக்கூடாது. இந்திய மொழிகளில் அதிக மக்கள் பேசும் மொழி வங்கமொழி எண்ணிக்கை 18 கோடி.மொழி அடிப்படையில் ஒன்று பட்டு நின்று இருந்தால் ஆன்மிகத்தில், அரசியலில், இலக்கியத்தில், விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற பெருமக்களை தந்த வங்கதேசம் இந்தியாவை ஒரு கட்டத்தில் ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும்.

ஆனால் மொழியால் ஒன்றுபட்டு மதத்தால் இரண்டு பட்டதன் விளைவு  இஸ் லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி கிழக்கு வங்கமாகவும், இந்துக் கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மேற்கு வங்கமாகவும் வெள்ளையன் பிரித்தான். இதன் விளைவு இந்திய தேசம் விடுதலை பெறும் போது ஒரு நாடா க இல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் என்று இருநாடாகப் பிரிந்து சுதந்திரக்
கொடியை ஏற்றியது.

அப்போது மத அடிப்படையில் இயங்கிய கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடன்
இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. பாகிஸ்தானத்துடன் மத அடிப் படையில் இஸ்லாமியர்களாக இணைந்தாலும் பாகிஸ்தானத்தின் ஆட்சி மொழி உருது என்ற போது வங்க மொழியும் ஆட்சி மொழி என்றிருந்ததால்
ஒன்றுபட்ட பாகிஸ் தான் இல்லையென்றால் தனிநாடு என்ற கிளர்ச்சியின்
விளைவு 1978 ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் வங்கதேசம் தனி நாடாக
மாறியது.ஒன்றுபட்ட வங்காளிகள் பலமானவர்கள்,இன்று பலவீனமானவர் கள்.

அதே போன்று தான் ஐந்து நதிகள் பாய்ந்தோடும் பஞ்சாப் மாநிலம் வெள்ளை யர்களுக்கு சிம்மசொப்பனமாக வடக்கே விளங்கிய பஞ்சாப் மொழி அடிப்படை யில் ஒன்றாக இருந்தது.இந்து, இஸ்லாம், சீக்கியம், பெளத்தம் என்ற மத அடிப் படையில் ஒன்றாக இயங்கியது. நாட்டு விடுதலையின் போது அது நான்கு கூறுகளாக பிரிந்து பலனின்றி போனார்கள்.

இஸ்லாமியர்கள் வாழ்ந்த மேற்கு பஞ்சாப் பாக்கிஸ்தானத்துடனும், சீக்கிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பஞ்சாப் மாநிலமாக, இந்துக்கள்
பெரும் பான்மையாக வாழ்ந்த பகுதி அரியானா மாநிலமாக, பெளத்தர்களும்
இந்துக் களும் இணைந்த மலை மாநிலமாக இமாச்சலபிரதேசமாக இந்தியா வில் இருப்பதையும் இதில் மொழி அடிப்படையில், மத அடிப்படையில் ஒன் றாக இருந்தும் சாதிய ஏற்றத் தாழ்வால் வர்க்கப்போராட்டங்கள் நடைபெறு வதை பார்க்கிறோம்.

எனவே பேசும் மொழியால், வெவ்வேறு மதங்களில் இருந்தாலும் சாதியால்
பிரிந்து கிடக்கின்ற காரணத்தால் தமிழீழ போராட்டம். எப்பொழுதெல்லாம்
பொங்கி பிரவாகம் எடுக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அரசியல் ஆதாயங் களுக்காக சாதி வெறித்தீயை பற்ற வைத்து அதில் குளிர்காய சிங்கள, இந்திய உளவு நிறுவனங்கள் இணைந்து தமிழ் உணர்வை அழித்து வருவதும் அதற்கு சில தலைவர்கள் ஆட்படுவதும் வேதனை.

தமிழர்களின் தாயக பூமியில் தமிழ் படிக்க, எழுதத் தெரியாத இளம் தமிழர்
இருப்பது தமிழர்களுக்கு பெருமை அன்று. தமிழை தமிழ் படைப்புகளை முழு மையாகக் கற்றுணர்ந்து வேற்று இனத்தாருக்கு இதை போதிக்க அரசு கடமை யாற்ற வேண்டும்.

அரசிடம் இருந்த கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு, தனியாரிடம் இருந்த மதுபானக்கடைகளை அரசு நடத்துவது தான் இந்நாளைய அரசின் சாதனை.தமிழக அரசு தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தை முழுமையாக தீவிரமாக
நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்பதே அனைவரின் ஆவல், நிறை வேற்றுமா தமிழக அரசு?

ஊரை தெரியும் முன் உலகை அறியும் முன் உன்னை தெரிந்துகொள் தமிழா,
என்ற பெருஞ்சித்திரனாரின் வார்த்தைக் கொப்ப தமிழை முழுமையாக அறிந்த
பின் வேறு சிறந்த மொழிகளை அறியலாம்.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியைபோல் காணோம்’
என்றார் பாரதியார்

“தமிழின்றி எமக்கேதும் தரணியிலே பெரிதில்லை

ஆம் அன்னை தமிழுக்கு ஊறுவரின் அடுத்த கணம் உயிரில்லை எனக்கல்ல -
எதிரிக்கு”

என்ற கவிஞர் அரங்கநாதனின் கவிதையை மனதில் விதைப்போம்.

நன்றிகள் 

கட்டுரையாளர் :- 
மல்லை சத்யா

வெளியீடு :- சங்கொலி

1 comment:

  1. அற்புதமான கட்டுரை .. அனைவரும் கட்டுரையின் முக்கியத்துவம் படித்து புரிந்து கொள்ள வேண்டும். நன்றி மல்லை சத்யா & சங்கொலி

    ReplyDelete