Tuesday, July 9, 2013

காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்தி சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழு வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்திற்கு கர்நாடகம் 489 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று 1924-ல் மைசூர் அரசுடன் ஒப்பந்தம் செய்தவன் வெள்ளையன். ஆனால் இன்று 192 டிஎம்சி கர்நாடகம் நீர் தர வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பைக் கூட மத்தியஅரசு நிறைவேற்றித்தர மறுக்கிறது. கர்நாடக அணை களில் இருப்பில் உள்ள நீரில் 46 விழுக்காடு தமிழகத்திற்கும், 54 விழுக்காடு கர்நாடகத்திற்கு என பகிர்ந்து கொள்வதுதான் காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் சாரம். ஆனால் நீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அடாவடிக்கு மத்தியஅரசு கை கொடுக்கிறது.
மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறு சட்டம் (1956) தமிழ்நாட்டிற்கு மட்டும் செயல்படாது. நர்மதை, கிருஷ்ணா உள்ளிட்ட பல ஆறுகளில் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறுகள் இச்சட்டத்தின்படி மத்திய அரசால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் தீர்ப்பாய தீர்ப்புகளை செயல்படுத்தும் மத்தியஅரசு காவிரி தீர்ப்பாய முடிவை மட்டும் தீர்த்து வைக்க மறுக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானில் பாய்கின்றன. அதற்கான ஒப்பந்தம் செயல்படுகிறது. கங்கை ஆறு வங்கதேசத்தில் பாய்கிறது. அதற்கான ஒப்பந்தம் செயல்படுகிறது. ஆனால் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் தாலும், காவிரி தீர்ப்பாயம் தீர்ப்பளித்தாலும் இரு மாநில அரசுகளும் செயல் படுத்தாது. மத்தியஅரசும் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது என கி.வெங்கட்ராமன் தெரிவித்தார்.



ஆர்ப்பாட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் மதிமுக சிதம்பரம் நகரச் செயலாளர் எல்.சீனுவாசன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் பா.ராசாராமன், நிர்வாகிகள் கு.பெருமாள், சவுந்தரராஜன், ரத்தின சொக்கலிங் கம், தமிழக உழவர் முன்னணி நிர்வாகிகள் சி.ஆறுமுகம், மா.கோ.தேவராசன், அ.கோ.சிவராமன், தங்க.கென்னடி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி ஆ.குபேரன், வே.சுப்பிரமணி யசிவா, நாம் தமிழர் கட்சி செ.புகழேந்தி, மனித நேய மக்கள் கட்சி அமீர்பாஷா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் விடுதலைச்செல்வன், முற் போக்கு சிந்தனையாளர் இயக்கம் ரா.ராகவேந்திரன், பாலாஜி, மக்கள் உரிமை கூட்டமைப்பு கீ.செ.பழமலை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment