Sunday, March 4, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 5

அமராவதி, பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில் கேரளம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துக!

அமராவதி ஆற்றின் உபநதியான பாம்பாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டுவதற்கும், பவானி ஆற்று நீரைத் தடுக்கும் விதத்தில், முக்காலியில் ஒரு புதிய அணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டு உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே, 170 மீட்டர் நீளம்; 30 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுவதற்கு, 230 கோடியில் திட்டம் தயாரித்து உள்ளதாகவும், அதற்காக 110 ஏக்கர் நிலத்தைக் கையப்படுத்தி விட்டதாகவும், 40 மெகாவாட் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையும், நீர்வளம் மற்றும் மின்சாரத் துறைகளின் அனுமதியும் கேட்டு, கேரள அரசு கோப்புகளை டெல்லிக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

05.02.2007 ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அளித்த தீர்ப்பில், அமராவதி நதியின் உபநதியான பாம்பாற்றில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் கேரளாவுக்குக் கொடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவிரிப் பிரச்சினையில், அமராவதி ஆறு தமிழக அரசால் கைவிடப்பட்ட அநாதையாக உள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்து உள்ள மேல்முறையீட்டு மனுவில், பாம்பாறு பிரச்சினை தொடர்பாக எவ்வித எதிர்ப்புக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

2010 ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்தில் உரை ஆற்றிய, அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி, மின்சாரம் தயாரிக்கவே கேரளம் அணை கட்டுகிறது; அதற்குப் பின்னர், அந்தத் தண்ணீர் மீண்டும் பாம்பாற்றின் வழியாகவே அமராவதி அணைக்கு வருகின்ற வகையில்தான் தள அமைப்பு உள்ளது என்று கூறி, அமராவதி பாசன விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் இழைத்து உள்ளார்.

பாம்பாற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுமானால், அதனால் பாசன வசதி பெற்றுக்கொண்டு இருக்கின்ற பழைய, புதிய ஆயக்கட்டுகள், 60 ஏக்கர் பாலைவெளியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்; 50 க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் மூடப்படும் நிலை ஏற்படும்.

எனவே, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவில், கூடுதலாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து, பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதுபோலவே, பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீரைத் தடுக்க முக்காலியில் அணை கட்டுவதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


No comments:

Post a Comment