Tuesday, March 13, 2012

மதிமுக -20 வது பொதுக்குழு -தீர்மானம் எண் 13 & 14

தீர்மானம் எண் 13

மது ஒழிப்பு!

அறிஞர் அண்ணா ஆட்சிக்காலம் வரையிலும், மது அரக்கனுக்குத் தமிழகத்தில் அனுமதி இல்லை. ஆனால் இன்றைக்கு, மாணவப் பருவத்திலேயே குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்ற பெருங்கேடு தமிழகத்தைச் சூழ்ந்து உள்ளது. ஒரு தலைமுறையே பாழாகிக் கொண்டு இருக்கின்றது.




வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மேல்நாட்டு மது வகைகளையும் குடியுங்கள் என்று, மது அருந்தும் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், எலைட் பார்கள் - சூப்பர் டாஸ்மாக் திறப்போம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

காலம் காலமாகத் தமிழக மக்கள் போற்றி வந்த, உழைப்பே உயர்வு தரும் என்ற நெறியை அழிக்கும் விதத்தில், இலவசங்களை வழங்கி மக்களைச் சோம்பேறிகள் ஆக்கும் கேடு தமிழகத்தில் வளர்ந்து விட்டது.

அரசு மதுக்கடைகளை மூடினால், கள்ளச்சாராயம் பெருகும்; வருமான இழப்பு நேரும் என்று அமைச்சர் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து இருப்பது, ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, இலவச போதையில் இருந்தும், மதுவின் போதையில் இருந்தும் தமிழகத்தை விடுவித்தால்தான் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிபிறக்கும் என்பதால், இனி தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்றும், படிப்படியாகக் குறைத்து, முழுமையான மதுவிலக்கை நிறைவேற்ற வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14

சமச்சீர் கல்வி

அண்ணா தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், தமிழகத்தின் ஒரு கோடியே 22 இலட்சம் மாணவர்களின் கல்வி உரிமையையும், எதிர்கால நலனையும் கெடுக்கின்ற வகையில், சமச்சீர் கல்வியை நிறைவேற்ற மாட்டோம் என அறிவித்தது. ஏற்கனவே பல நூறு கோடிகள் செலவில் அச்சிடப்பட்டு இருந்த பாட நூல்களை மாணவர்களுக்க வழங்காமல் மூலையில் போட்டு விட்டு, புதிய பாட நூல்களை அச்சிடுவதற்காக ஆணை பிறப்பித்தது. அதனால், பள்ளிக்கூடங்களை 15 நாள்கள் திறக்காமல் மூடி வைத்தது.

தமிழக அரசின் இந்த முடிவைத் தவறு எனக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு, திட்டவட்டமான ஒரு தீர்ப்பைத் தந்தது.

அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்த குழு அமைக்கும்படி உச்சநீதிமன்றம் சொன்னது.

கல்வியில் கொள்ளை லாபம் காணும் தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக முடிவு எடுப்பதற்காகவே ஒரு குழுவை அமைத்த தமிழக அரசு, அந்தக் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்த முனைந்தது.

அந்தக் குழு அளித்த அறிக்கையைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், உடனடியாகச் சமச்சீர் கல்வியைச் செயல்படுத்தச் சொல்லித் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும்போதே, சமச்சீர் கல்விக்கு எதிரான பாடப்புத்தகங்களை, மக்கள் வரிப்பணத்தில் தமிழக அரசு அச்சிட்டதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்தது.

அதற்குப்பின்னரும்கூட, தான் எடுத்த முடிவை மாற்ற மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு, தமிழக அரசு, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் காலக்கெடு நிர்ணயித்து, பலமுறை அறிவுறுத்தியபின்னரும், தமிழக அரசு பாடப்புத்தகங்களை வழங்கவில்லை.

கடைசியாக, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளிலும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தவிர, தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

தமிழக அரசின் இத்தகைய போக்கு, தமிழகத்தின் மாணவர்கள், பெற்றோர்களை வேதனைக்கும், பதற்றத்துக்கும் சொல்லொணாத் துயரத்துக்கும் ஆளாக்கியது. ஒன்றேகால் கோடி மாணவர்களின் நலன், அவர்களுடைய படிப்பு இரண்டு மாதங்களாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசின் பிடிவாதப் போக்குதான் காரணம் ஆகும்.

தேர்தலில் ஆட்சிகள் மாறினாலும், புதிதாக வரும் அரசு, மாணவர்களின் நலனைப் பாதிக்கும் விதத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

நடப்பு கல்வி ஆண்டில், இன்னமும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், பொதுமக்கள் நலனுக்கு, மாணவர்களின் உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசின் போக்குக்கு, இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment