Monday, February 11, 2013

தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள்- வைகோ

திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மறைந்த மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் திருச்சி மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ம.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்ணச்சநல்லூர் நடராஜனின் உருவ சிலையை திறந்து வைத்தும், கட்சி அலுவலகத்துக்கு நடராஜன் பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன் பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-


மரண தண்டனை என்பது கூடாது என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒன்றரை மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம். இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

இந்தியாவுக்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து ம.தி.மு.க. போராட்டம் நடத்தி உலகத்தின் பார்வையை தமிழகத்திற்கு திரும்ப செய்துள்ளோம். தமிழக மக்களாகிய நீங்கள் எங்களை வாழ்த்துங்கள். நாங்கள் நடத்தும் கிளர்ச்சி போராட்டத்தை வெற்றி பெற செய்யுங்கள். ஈழத்தமிழர்களுக்கான பிரச்சினையில் எங்களது நிலைப்பாட்டை நாங்கள் எப்போதும் மாற்ற மாட்டோம்.

தமிழக மக்களின் சுயமரியாதையை நிலை நாட்டுவதற்காக போராடுகிற ஒரே இயக்கம் ம.தி.மு.க. தான். தமிழர்களின் வாழ்வுரிமைக்காக முதலில் குரல் கொடுப்பது ம.தி.மு.க.தான். தேர்தலில் தோற்பது தோல்வி அல்ல. நாங்கள் போராளிகள். போராடிக் கொண்டு தான் இருப்போம். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த மாற்று கட்சியை மக்கள் தேட ஆரம்பித்துவிட்டனர். அந்த தேடல் ம.தி.மு.க. தான். எதிர்காலத்தில் வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment