Sunday, November 30, 2014

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறை -வைகோ கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம் #வைகோ கண்டனம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு முதல் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 48 ஆண்டுகால கல்வி முறையை மாற்றி அமைத்து புதிய கல்வி கொள்கையை புகுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் செயற்படும் பாரதிய ஷிக்ஸான் மண்டல் (BMS) என்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்திருக்கிறது.

கோத்தாரி கல்வி ஆணையம் 1966 இல் வகுத்து அளித்த 10+2+3 (அதாவது பள்ளிக் கல்வி 10 ஆண்டுகள், மேற்சான்றிதழ் கல்வி 2 ஆண்டுகள், பட்டப்படிப்புக் கல்வி 3 ஆண்டுகள்) என்ற கல்வி முறைதான் செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பி.எம்.எஸ். அளித்துள்ள அறிக்கையின்படி 8+4+3 என்று முறைசார் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். இதன்படி பள்ளிக் கல்வியில் 8 ஆண்டுகள் தாய்மொழியுடன் கூடுதலாக இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகள் செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், அரபி, கிரீஸ், லத்தின் மற்றும் ஹீபுரு ஆகியவற்றின் ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயமாக பயில வேண்டும்.

செவ்வியல் மொழி என்ற பெயரில் சமஸ்கிருத மொழியை வலிந்து திணிப்பதற்காகவே இந்த திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பு தயாரித்து இருக்கிறது. மேலும் தற்போது 10+2+3 முறையில் மாணவர்கள் இடைநிற்காமல் தொடர்ச்சியாக பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும். இந்த முறையை மாற்றி 8 ஆண்டுகள் பள்ளிக் கல்விக்கு பிறகு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) தொழிற்கல்வியை முடித்துவிட்டு, அதன் பின்னர் பட்டப்படிப்பை முடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பட்டப்படிப்பில் 4 ஆண்டுகள் வரை முழுமையாக பயில வேண்டிய அவசியமும் இல்லை. முதலாம் ஆண்டு படிப்பை மட்டும் முடித்தால் சான்றிதழும், இரண்டாம் ஆண்டு வரை முடித்தால் பட்டயமும், மூன்று ஆண்டுகள் படித்தால் பட்டமும், நான்காம் ஆண்டுவரையிலும் படித்து முடித்தால் “ஹானர்Þ பட்டம்” வழங்கலாம் என்று பரிந்துரை அளிக்கப்பட்டு இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவருவது மட்டுமல்ல, காவிமயம் ஆக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நரேந்திர மோடி பிரதமராக ஆன பிறகு ஷிஸா ஷான்Þகிரிட் உத்தன் நியாஸ்  (SSUN) எனும் அமைப்பின் தேசியத் தலைவர் தீனநாத் பத்ரா, அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இனி கல்வி அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் குழந்தைகள் மனிதகுல மாண்புகளை அறிந்துகொள்ளும் வண்ணம் பள்ளிப் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். பா.ஜ.க.வில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், மோடியின் தலைமையை ஏற்பவர்கள் இந்துத்துவாவை பின்பற்றிதான் ஆக வேண்டும் என்று கூறி இருக்கிறார். இவையெல்லாம் எத்தகைய பேராபத்தை நோக்கி நாடு போய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு சான்றுகளாகும். 

இந்துத்துவா கல்வியை மதம் சார்ந்து திணிப்பதும், சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டு, பிற்போக்குத்தனமான கல்வி முறையைக் கொண்டுவந்து சமஸ்கிருத மொழி கற்பதை கட்டாயமாக்குவதும், கல்வி முறையில் மாற்றங்களை கொன்டுவர வேண்டும் என்பதும், ஆர்.எÞ.எÞ. அமைப்பின் நீண்டகால திட்டமாகும். மத்திய அரசு கல்வித் துறையில் ஆர்.எÞ.எÞ. அமைப்பின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது வன்மையான கண்டனத்து உரியது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கோத்தாரி ஆணையம் வகுத்து அளித்த கல்வி முறையில் மாற்றம் கொண்டுவருவதோ, ஆர்.எஸ்.எஸ்.இன் புதிய கல்வி முறையில் செயற்படுத்த முயற்சிப்பதோ கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                      வைகோ
சென்னை - 8                                                பொதுச்செயலாளர்
30.11.2014                                                        மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment